பாடல் #1561

பாடல் #1561: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

ஆமா றுரைக்கு மறுசமை யாதிக்குப்
போமாறு தானில்லைப் புண்ணிய மல்லதங்
காமார் வழியாக்கு மவ்வே றுயிர்கட்கும்
போமா றவ்வாதார பூங்கொடி யாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆமா றுரைககு மறுசமை யாதிககுப
பொமாறு தானிலலைப புணணிய மலலதங
காமார வழியாககு மவவெ றுயிரகடகும
பொமா றவவாதார பூஙகொடி யாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆம் ஆறு உரைக்கும் அறு சமைய ஆதிக்கு
போம் ஆறு தான் இல்லை புண்ணியம் அல்லது அங்கு
ஆம் ஆர் வழி ஆக்கும் அவ் வேறு உயிர்கட்கும்
போம் ஆறு அவ் ஆதார பூங் கொடியாளே.

பதப்பொருள்:

ஆம் (அவரவர்களின் நிலைக்கு ஏற்றபடியே) ஆறு (இறைவனை அடைவதற்கான வழியை) உரைக்கும் (எடுத்துக் கூறுகின்ற) அறு (ஆறு விதமான) சமைய (சமயங்களுக்கும்) ஆதிக்கு (ஆதிப் பரம்பொருளாகிய இறைவனிடம்)
போம் (போய் சேருகின்ற) ஆறு (வழி) தான் (தானாக) இல்லை (இருப்பது இல்லை) புண்ணியம் (புண்ணியம்) அல்லது (இல்லாத எதனாலும்) அங்கு (அவ்வாறு இறைவனிடம் போய் சேருவதற்கு வழியாக இருக்காது)
ஆம் (ஆகவே புண்ணியத்தினால்) ஆர் (இறைவனை அடைகின்ற) வழி (வழியை) ஆக்கும் (உருவாக்கிக் கொடுத்து) அவ் (அதனால்) வேறு (பல வகையான) உயிர்கட்கும் (உயிர்களுக்கும்)
போம் (இறைவனிடம் போய் சேருகின்ற) ஆறு (வழியாக) அவ் (அவர்களுக்குள் இருக்கின்ற) ஆதார (ஆறு ஆதார சக்கரங்களின்) பூங் (பூவிதழ்களை) கொடியாளே (இணைக்கின்ற கொடியாக இருந்து ஏழாவது சக்கரமாக இருக்கின்ற இறைவனிடம் இணைப்பது இறைவியே ஆகும்).

விளக்கம்:

அவரவர்களின் நிலைக்கு ஏற்றபடியே இறைவனை அடைவதற்கான வழியை எடுத்துக் கூறுகின்ற ஆறு விதமான சமயங்களுக்கும் ஆதிப் பரம்பொருளாகிய இறைவனிடம் போய் சேருகின்ற வழி புண்ணியத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகவே புண்ணியத்தினால் இறைவனை அடைகின்ற வழியை உருவாக்கிக் கொடுத்து அதனால் பல வகையான உயிர்களுக்கும் இறைவனிடம் போய் சேருகின்ற வழியாக அவர்களுக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களின் பூவிதழ்களை இணைக்கின்ற கொடியாக இருந்து ஏழாவது சக்கரமாக இருக்கின்ற இறைவனிடம் இணைப்பது இறைவியே ஆகும்.

பாடல் #1562

பாடல் #1562: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

அரனெறி யாவ தறிந்தேனு நானுஞ்
சிவநெறி தேடித் திரிந்த வன்னாளு
முரைநெறி யுள்ளக் கடல் கடந்தேறுந்
தரநெறி யாய தனிச்சுடர் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அரனெறி யாவ தறிநதெனு நானுஞ
சிவநெறி தெடித திரிநத வனனாளு
முரைநெறி யுளளக கடல கடநதெறுந
தரநெறி யாய தனிசசுடர தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அரன் நெறி ஆவது அறிந்தேனும் நானும்
சிவ நெறி தேடி திரிந்த அந் நாளும்
உரை நெறி உள்ள கடல் கடந்து ஏறும்
தர நெறி ஆய தனி சுடர் தானே.

பதப்பொருள்:

அரன் (அனைத்தையும் காத்து நிற்கின்ற இறைவனை அடைவதற்கான) நெறி (வழி முறைகளாக) ஆவது (இருப்பவற்றை) அறிந்தேனும் (அறிந்து கொண்டேன்) நானும் (யானும்)
சிவ (அந்த இறைவனை அடைவதற்கான) நெறி (வழி முறைகளை) தேடி (தேடி) திரிந்த (யான் திரிந்து கொண்டு இருந்த) அந் (முன்னொரு) நாளும் (நாட்களில்)
உரை (எமக்குள் பல விதமான எண்ணங்கள் அலை மோதிக் கொண்டு இருக்கின்ற) நெறி (வழி முறைகளில்) உள்ள (எமது உள்ளமாகிய) கடல் (பெரும் கடலை) கடந்து (கடந்து) ஏறும் (மேல் நிலைக்கு செல்லுவதற்கு)
தர (இறைவன் எமக்குத் தந்து அருளிய) நெறி (வழி முறைகள்) ஆய (ஆக இருந்து வழி காட்டுவது) தனி (தமக்கு சரிசமமாக எதுவும் இல்லாத) சுடர் (பேரொளிச் சுடராக) தானே (எமக்குள் இருக்கின்ற இறைவனே என்பதை அறிந்து கொண்டேன்).

விளக்கம்:

அனைத்தையும் காத்து நிற்கின்ற இறைவனை அடைவதற்கான வழி முறைகளாக இருப்பவற்றை அறிந்து கொண்டேன் யானும். அந்த இறைவனை அடைவதற்கான வழி முறைகளை தேடி யான் திரிந்து கொண்டிருந்த முன்னொரு நாட்களில் எமக்குள் பல விதமான எண்ணங்கள் அலை மோதிக் கொண்டு இருக்கின்ற வழி முறைகளில் எமது உள்ளமாகிய பெரும் கடலை கடந்து மேல் நிலைக்கு செல்லுவதற்கு இறைவன் எமக்குத் தந்து அருளிய வழி முறைகளாக இருந்து வழி காட்டுவது தமக்கு சரிசமமாக எதுவும் இல்லாத பேரொளிச் சுடராக எமக்குள் இருக்கின்ற இறைவனே என்பதை அறிந்து கொண்டேன்.

பாடல் #1563

பாடல் #1563: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

தேர்ந்தவர் தன்னை யடைந்த சிவநெறி
பேர்ந்தவ ருன்னிப் பெயர்ந்த பெருவழி
யார்ந்தவ ரண்டத்து புக்க வருநெறி
போந்து பிணைந்து புணர்நெறி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தெரநதவர தனனை யடைநத சிவநெறி
பெரநதவ ருனனிப பெயரநத பெருவழி
யாரநதவ ரணடதது புகக வருநெறி
பொநது பிணைநது புணரநெறி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தேர்ந்தவர் தன்னை அடைந்த சிவ நெறி
பேர்ந்தவர் உன்னி பெயர்ந்த பெரு வழி
ஆர்ந்தவர் அண்டத்து புக்க அருள் நெறி
போந்து பிணைந்து புணர் நெறி ஆமே.

பதப்பொருள்:

தேர்ந்தவர் (இறைவனை தமக்குள் உணர்ந்து தெளிவு) தன்னை (பெற்றவர்கள்) அடைந்த (அடைந்த) சிவ (இறைவனை அடைவதற்கான) நெறி (வழி முறைகளை)
பேர்ந்தவர் (அவர்கள் அடைந்த படியே வெளிப்புறமாக தேடுவதை விட்டு விட்டு) உன்னி (மனதை ஒருநிலைப் படுத்தி தமக்குள் இறைவனையே நினைத்துக் கொண்டு) பெயர்ந்த (ஆசைகளையும் பற்றுக்களையும் விட்டு விட்டு அடைகின்ற) பெரு (மிகப் பெரும்) வழி (வழி முறைகளை)
ஆர்ந்தவர் (நன்றாக ஆராய்ந்து அறிந்து கொண்டவர்கள்) அண்டத்து (அண்ட சராசரங்களில் உள்ள அனைத்திலும்) புக்க (புகுந்து இருக்கின்ற) அருள் (இறையருளை) நெறி (அடைவதற்கான வழி முறைகள் தமக்குள்ளே இருப்பதை உணர்ந்து)
போந்து (அதற்குள் புகுந்து) பிணைந்து (அதனோடு பின்னிப் பிணைந்து) புணர் (ஒன்றாக கலந்து இறைவனை அடைகின்ற) நெறி (வழி முறை) ஆமே (இதுவே ஆகும்).

விளக்கம்:

இறைவனை தமக்குள் உணர்ந்து தெளிவு பெற்றவர்கள் அடைந்த இறைவனை அடைவதற்கான வழி முறைகளை அவர்கள் அடைந்த படியே வெளிப்புறமாக தேடுவதை விட்டு விட்டு, மனதை ஒருநிலைப் படுத்தி தமக்குள் இறைவனையே நினைத்துக் கொண்டு, ஆசைகளையும் பற்றுக்களையும் விட்டு விட்டு, அடைகின்ற மிகப் பெரும் வழி முறைகளை நன்றாக ஆராய்ந்து அறிந்து கொண்டவர்கள், அண்ட சராசரங்களில் உள்ள அனைத்திலும் புகுந்து இருக்கின்ற இறையருளை அடைவதற்கான வழி முறைகள் தமக்குள்ளே இருப்பதை உணர்ந்து, அதற்குள் புகுந்து அதனோடு பின்னிப் பிணைந்து ஒன்றாக கலந்து இறைவனை அடைகின்ற வழி முறை இதுவே ஆகும்.

பாடல் #1564

பாடல் #1564: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

ஈரு மனத்தை யிரண்டற வீசுமி
னூருஞ் சகாரத்தை யோதுமி னோதியை
வாரு மரனெறி மன்னிய முன்னியத்
தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஈறு மனததை யிரணடற வீசுமி
னூருஞ சகாரததை யொதுமி னொதியை
வாரு மரனெறி மனனிய முனனியத
தூருஞ சுடரொளி தொனறலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஈரு மனத்தை இரண்டு அற வீசுமின்
ஊரும் சகாரத்தை ஓதுமின் ஓதியை
வாரும் அரன் நெறி மன்னிய முன்னியத்து
ஊரும் சுடர் ஒளி தோன்றலும் ஆமே.

பதப்பொருள்:

ஈரு (பொருளும் போகமும் வேண்டும் அருளும் ஞானமும் வேண்டும் என்று இரண்டு விதமாக அலைகின்ற) மனத்தை (மனதை) இரண்டு (அந்த இரண்டு ஆசைகளும்) அற (இல்லாமல் போகும் படி) வீசுமின் (வெளியே எடுத்து வீசிவிடுங்கள்)
ஊரும் (அப்போது கிடைக்கின்ற பேரமைதியான நிலையில் சாதகருக்குள் ஊருகின்ற) சகாரத்தை (சக்தியின் ஒலி வடிவமாகிய ஒரு மந்திர எழுத்தை) ஓதுமின் (அசபையாக ஓதிக் கொண்டே இருங்கள்) ஓதியை (அவ்வாறு ஓதிக் கொண்டு இருப்பவரை)
வாரும் (அணைத்துக்) அரன் (காப்பாற்றுகின்ற) நெறி (வழி முறையில்) மன்னிய (மனதை நிலை பெற வைத்திருந்தால்) முன்னியத்து (தமக்குள்ளே)
ஊரும் (உருவாகும்) சுடர் (சுடரானது) ஒளி (பேரொளியாக) தோன்றலும் (தோன்றுவதை) ஆமே (நீங்கள் உணரலாம்).

விளக்கம்:

பொருளும் போகமும் வேண்டும் அருளும் ஞானமும் வேண்டும் என்று இரண்டு விதமாக அலைகின்ற மனதை அந்த இரண்டு ஆசைகளும் இல்லாமல் போகும் படி வெளியே எடுத்து வீசிவிடுங்கள். அப்போது கிடைக்கின்ற பேரமைதியான நிலையில் சாதகருக்குள் சக்தியின் ஒலி வடிவமாகிய ஒரு மந்திர எழுத்து தோன்றும். அப்படி தானாகவே தோன்றுகின்ற மந்திர எழுத்தை அசபையாக ஓதிக் கொண்டே இருங்கள். அவ்வாறு ஓதிக் கொண்டு இருப்பவரை அணைத்துக் காப்பாற்றுகின்ற வழி முறையில் மனதை நிலை பெற வைத்திருந்தால், தமக்குள்ளே உருவாகும் சுடரானது பேரொளியாக தோன்றுவதை நீங்கள் உணரலாம்.

பாடல் #1565

பாடல் #1565: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

மினக்குறி யாளனை வேதியர் வேதத்
தினக்குறி யாளனை ஆதிப் பிரானை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின்
நயக்குறி காணிலர னெறியா குமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மினககுறி யாளனை வெதியர வெதத
தினககுறி யாளனை யாதிப பிரானை
நினைககுறி யாளனை ஞானக கொழுநதின
நயககுறி காணிலர னெறியா குமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மினல் குறி ஆளனை வேதியர் வேதத்தின்
அக் குறி ஆளனை ஆதி பிரானை
நினை குறி ஆளனை ஞான கொழுந்தின்
நய குறி காணில் அரன் நெறி ஆகுமே.

பதப்பொருள்:

மினல் (மின்னல் போன்ற ஒளியும் ஒலியும் சேர்ந்த) குறி (வடிவமாக) ஆளனை (இருப்பவனை) வேதியர் (அந்தணர்கள்) வேதத்தின் (ஓதுகின்ற வேதத்தின்)
அக் (உட்பொருள்) குறி (வடிவமாக) ஆளனை (இருப்பவனை) ஆதி (ஆதியிலிருந்தே) பிரானை (இருக்கின்ற தலைவனை)
நினை (அடியவர்கள் நினைக்கின்ற) குறி (வடிவமாகவே) ஆளனை (வந்திருந்து அருளுபவனை) ஞான (ஞானத்தின்) கொழுந்தின் (உச்சியான நிலையில்)
நய (அன்பின்) குறி (வடிவமாகவே) காணில் (கண்டு தரிசித்தால்) அரன் (அதுவே அவனை அடைவதற்கான) நெறி (வழி முறையாக) ஆகுமே (ஆகி விடும்).

விளக்கம்:

மின்னல் போன்ற ஒளியும் ஒலியும் சேர்ந்த வடிவமாக இருப்பவனை அந்தணர்கள் ஓதுகின்ற வேதத்தின் உட்பொருள் வடிவமாக இருப்பவனை ஆதியிலிருந்தே இருக்கின்ற தலைவனை அடியவர்கள் நினைக்கின்ற வடிவமாகவே வந்திருந்து அருளுபவனை ஞானத்தின் உச்சியான நிலையில் அன்பின் வடிவமாகவே கண்டு தரிசித்தால் அதுவே அவனை அடைவதற்கான வழி முறையாக ஆகி விடும்.

கருத்து:

இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளில் எந்த வழி முறையில் சென்றாலும் அனைத்திற்கும் பொதுவாக இருப்பது அன்பின் வழியாக இறைவனை அடைவதே ஆகும்.

பாடல் #1566

பாடல் #1566: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

ஆய்ந்துணர் வார்களான சாத்திரம் பல
வாய்ந்துணரா வகை நின்ற வரனெறி
யாய்ந்துணர் வாரரன் சேவடி கைதொழு
தேய்ந்துணரச் செய்வ தோரின்பமு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆயநதுணர வாரகளான சாததிரம பல
வாயநதுணரா வகை நினற வரனெறி
யாயநதுணர வாரரன செவடி கைதொழு
தெயநதுணரச செயவ தொரினபமு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆய்ந்து உணர்வார்கள் ஆன சாத்திரம் பல
ஆய்ந்து உணரா வகை நின்ற அரன் நெறி
ஆய்ந்து உணர்வார் அரன் சேவடி கை தொழுது
ஏய்ந்து உணர செய்வது ஓர் இன்பமும் ஆமே.

பதப்பொருள்:

ஆய்ந்து (ஆராய்ந்து) உணர்வார்கள் (உணர்ந்தவர்கள்) ஆன (அதற்கான) சாத்திரம் (விதி முறைகளை) பல (பல விதமாக கூறுகின்றார்கள்)
ஆய்ந்து (ஆனால் இந்த விதி முறைகளை ஆராய்ந்து) உணரா (உணர முடியாத) வகை (வகையில் தான்) நின்ற (நிற்கின்றது) அரன் (இறைவனை அடைவதற்கான) நெறி (உண்மையான வழி முறை)
ஆய்ந்து (அதனை தமக்குள் ஆராய்ந்து) உணர்வார் (உணர்ந்து கொண்டவர்கள்) அரன் (இறைவனின்) சேவடி (திருவடிகளை) கை (இரண்டு கைகளும் கூப்பி) தொழுது (தொழுது வணங்கி)
ஏய்ந்து (தம்முடைய தூய்மையான அன்பினால்) உணர (இறைவனை உணர்ந்து) செய்வது (கொள்ளுவதே) ஓர் (ஒரு) இன்பமும் (பேரின்பம்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

இறைவனை அடைய தாங்கள் கடைபிடிக்கும் ஒரு வழி முறையை ஆராய்ந்து உணர்ந்தவர்கள் அதற்கான விதி முறைகளை பல விதமாக கூறுகின்றார்கள். ஆனால் இந்த விதி முறைகளை ஆராய்ந்து உணர முடியாத வகையில் தான் நிற்கின்றது இறைவனை அடைவதற்கான உண்மையான வழி முறை. அதனை தமக்குள் ஆராய்ந்து உணர்ந்து கொண்டவர்கள் இறைவனின் திருவடிகளை இரண்டு கைகளும் கூப்பி தொழுது வணங்கி தம்முடைய தூய்மையான அன்பினால் இறைவனை உணர்ந்து கொள்ளுவதே ஒரு பேரின்பம் ஆகும்.

கருத்து:

இறைவனை அடைவதற்கு சமையங்கள் சொல்லுகின்ற பல விதமான விதி முறைகளை ஆராய்வதால் ஒரு பயனும் இல்லை. அன்பினால் தமக்குள் ஆராய்ந்து உணருவதே இறைவனை அடைவதற்கான உண்மையான வழியாகும்.

பாடல் #1567

பாடல் #1567: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

சைவச் சமையத் தனிநாயக னந்தி
யுய்ய வகுத்த தொருநெறி யொன்றுண்டு
தெய்வ வரனெறி சன்மார்கஞ் சேர்ந்தது
வையத் துள்ளவர்க்கு வகுத்துவைத் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சைவச சமையத தனிநாயக னநதி
யுயய வகுதத தொருநெறி யொனறுணடு
தெயவ வரனெறி சனமாரகஞ செரநதது
வையத துளளவரககு வகுததுவைத தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சைவ சமைய தனி நாயகன் நந்தி
உய்ய வகுத்தது ஒரு நெறி ஒன்று உண்டு
தெய்வ அரன் நெறி சன்மார்க்கம் சேர்ந்தது
வையத்து உள்ளவர்க்கு வகுத்து வைத்தானே.

பதப்பொருள்:

சைவ (சைவ) சமைய (சமயத்திற்கு) தனி (தனிப் பெரும்) நாயகன் (தலைவனாகவும்) நந்தி (குரு நாதனாகவும் இருக்கின்ற இறைவன்)
உய்ய (அனைத்து உயிர்களும் முக்தியை அடைவதற்காக) வகுத்தது (வகுத்து அருளிய) ஒரு (ஒரு) நெறி (வழி முறையில்) ஒன்று (அன்பு ஒன்று மட்டுமே) உண்டு (இருக்கின்றது)
தெய்வ (அதுவே தெய்வீகமான) அரன் (இறைவனை அடைவதற்கான) நெறி (வழி முறையாகும்) சன்மார்க்கம் (உண்மை வழி முறைகள் அனைத்தும்) சேர்ந்தது (அதனோடு சேர்ந்தே)
வையத்து (உலகத்தில்) உள்ளவர்க்கு (உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் தகுதிக்கு ஏற்றவாறு) வகுத்து (பல வழி முறைகளாக பிரித்து) வைத்தானே (வைத்து அருளினான் இறைவன்).

விளக்கம்:

சைவ சமயத்திற்கு தனிப் பெரும் தலைவனாகவும் குரு நாதனாகவும் இருக்கின்ற இறைவன் அனைத்து உயிர்களும் முக்தியை அடைவதற்காக வகுத்து அருளிய வழி முறையில் அன்பு ஒன்று மட்டுமே இருக்கின்றது. அதுவே தெய்வீகமான இறைவனை அடைவதற்கான வழி முறையாகும். உண்மை வழி முறைகள் அனைத்தும் அதனோடு சேர்ந்தே உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் தகுதிக்கு ஏற்றவாறு பல வழி முறைகளாக பிரித்து வைத்து அருளினான் இறைவன்.

பாடல் #1568

பாடல் #1568: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

இத்தவ மத்தவ மென்றிரு பேரிடும்
பித்தரைக் காணில னாமெங்கள் பேர்நந்தி
யெத்தவ மாகிலெ னெங்கும் பிறக்கிலெ
னொத்துணர் வார்க்குஒல்லை யூர்புக லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இததவ மததவ மெனறிரு பெரிடும
பிததரைக காணில னாமெஙகள பெரநநதி
யெததவ மாகிலெ னெஙகும பிறககிலெ
னொததுணர வாரககுஒலலை யூரபுக லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இத் தவம் அத் தவம் என்று இரு பேர் இடும்
பித்தரை காண் இலன் ஆம் எங்கள் பேர் நந்தி
எத் தவம் ஆகில் என் எங்கும் பிறக்கில் என்
ஒத்து உணர்வார்க்கு ஒல்லை ஊர் புகல் ஆமே.

பதப்பொருள்:

இத் (இந்த) தவம் (தவம் சிறந்தது) அத் (அந்த) தவம் (தவம் சிறப்பு இல்லாதது) என்று (என்று) இரு (நன்மை தீமை என்று இரண்டு விதமான) பேர் (பெயர்களை) இடும் (வைக்கின்ற)
பித்தரை (பைத்தியக் காரர்களை) காண் (காண்பது) இலன் (இல்லாதவன்) ஆம் (ஆக இருக்கின்றான்) எங்கள் (எங்களின்) பேர் (பெருமை மிக்க) நந்தி (குருநாதனாகிய இறைவன்)
எத் (எந்த) தவம் (தவத்தை) ஆகில் (கடைபிடித்தால்) என் (என்ன?) எங்கும் (இந்த உலகத்தில் எந்த இடத்தில்) பிறக்கில் (எந்த உயிராக பிறந்திருந்தால்) என் (என்ன?)
ஒத்து (அனைத்து உயிர்களிலும் அன்பின் வடிவமாக இறைவன் ஒருவனே இருக்கின்றான் என்பதை) உணர்வார்க்கு (உணருபவர்களுக்கு) ஒல்லை (உடனடியாக) ஊர் (முக்திக்குள்) புகல் (நுழைய) ஆமே (முடியும்).

விளக்கம்:

இந்த தவம் சிறந்தது அந்த தவம் சிறப்பு இல்லாதது என்று நன்மை தீமை என்று இரண்டு விதமான பெயர்களை வைக்கின்ற பைத்தியக்காரர்களை எங்களின் பெருமை மிக்க குருநாதனாகிய இறைவன் கண்டு கொள்வது இல்லை. எந்த தவத்தை கடைபிடித்தால் என்ன? இந்த உலகத்தில் எந்த இடத்தில் எந்த உயிராக பிறந்திருந்தால் என்ன? அனைத்து உயிர்களிலும் அன்பின் வடிவமாக இறைவன் ஒருவனே இருக்கின்றான் என்பதை உணருபவர்களுக்கு உடனடியாக முக்திக்குள் நுழைய முடியும்.

பாடல் #1569

பாடல் #1569: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

ஆமே பிரான்முக மைந்தொடு மாருயி
ராமே பிரானுக் கதோமுக மானதா
மாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரரியல் பாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆமெ பிரானமுக மைநதொடு மாருயி
ராமெ பிரானுக கதொமுக மானதா
மாமெ பிரானுககுந தனசிர மாலைககும
நாமெ பிரானுககு நரரியல பாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆமே பிரான் முகம் ஐந்தொடும் ஆருயிர்
ஆமே பிரானுக்கு அதோ முகம் ஆனதாம்
ஆமே பிரானுக்கும் தன் சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரர் இயல்பு ஆமே.

பதப்பொருள்:

ஆமே (ஆமாம் இருக்கின்றது) பிரான் (தலைவனாகிய இறைவனுக்கு) முகம் (முகங்கள்) ஐந்தொடும் (ஐந்தோடு) ஆருயிர் (உலகில் உள்ள உயிர்கள் எல்லாம்)
ஆமே (ஆமாம் இருக்கின்றது) பிரானுக்கு (தலைவனாகிய இறைவனுக்கு) அதோ (கீழ் நோக்கி இருக்கின்ற ஆறாவது) முகம் (முகமான) ஆனதாம் (அதோ முகமாக இருக்கின்றது. ஆகவே அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்து உயிர்களும் இறைவனுக்கு அதோ முகமாகவே இருக்கின்றன)
ஆமே (ஆமாம் இருக்கின்றது) பிரானுக்கும் (தலைவனாகிய இறைவனுக்கும்) தன் (தமது கழுத்தில் அணிந்திருக்கும்) சிர (மண்டையோட்டு) மாலைக்கும் (மாலையாக)
நாமே (உயிர்கள் பலவாறாக அழைக்கின்ற பெயர்களே இருக்கின்றது) பிரானுக்கு (இவையெல்லாம் தலைவனாகிய இறைவனுக்கு) நரர் (மனிதர்களாகிய உயிர்களின்) இயல்பு (இயல்பான மாயையினால்) ஆமே (இருக்கின்றனவே தவிர இறைவனுக்கு என்று தனியாக ஒரு பெயரோ உருவமோ அல்லது தன்மையோ கிடையாது.

விளக்கம்:

அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனுக்கு ஐந்து திரு முகங்களோடு ஆறாவது முகமான அதோ முகமாக அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்து உயிர்களுமே இருக்கின்றன. இந்த உலகத்தில் இருக்கின்ற உயிர்களால் அழைக்கப் படுகின்ற பலவாறான பெயர்களே இறைவன் தனது திருக்கழுத்தில் அணிந்து இருக்கின்ற மண்டையோட்டு மாலையாக இருக்கின்றது. இவையெல்லாம் மாயையை தமது இயல்பாக கொண்ட மனிதர்களால் பாவனை செய்யப் பட்ட உருவகங்களே தவிர இறைவனுக்கு என்று தனியாக ஒரு பெயரோ உருவமோ அல்லது தன்மையோ கிடையாது.

கருத்து:

இறைவனை அடைவதற்கு இருக்கின்ற ஆறு விதமான வழிகளில் செல்லுகின்ற உயிர்கள் தங்களின் மாயையால் இறைவனுக்கு பல விதமான பெயர்களையும் உருவங்களையும் பாவனை செய்து வழி படுகின்றன. அனைத்து பெயர்களும் உருவங்களும் ஒரே பரம் பொருளையே குறிக்கின்றது.

இறைவனுடைய ஆறு முகங்கள்:

  1. ஈசானம்
  2. தற்புருடம்
  3. அகோரம்
  4. வாமதேவம்
  5. சத்யோ ஜாதம்
  6. அதோ முகம்

பாடல் #1570

பாடல் #1570: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

ஆதிப் பிரானுல கேழு மளந்தவ
னோதக் கடலு முயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையி னின்றபரா சத்தி
யாதிகட் டெய்வமு மந்தமு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆதிப பிரானுல கெழு மளநதவ
னொதக கடலு முயிரகளு மாயநிறகும
பெதிப பிலாமையி னினறபரா சததி
யாதிகட டெயவமு மநதமு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆதி பிரான் உலகு ஏழும் அளந்தவன்
ஓத கடலும் உயிர்களும் ஆய் நிற்கும்
பேதிப்பு இலாமையில் நின்ற பராசத்தி
ஆதி கண் தெய்வமும் அந்தமும் ஆமே.

பதப்பொருள்:

ஆதி (ஆதியிலிருந்தே இருக்கின்ற) பிரான் (தலைவனாகிய இறைவனே) உலகு (உலகங்கள்) ஏழும் (ஏழையும்) அளந்தவன் (அவற்றின் தேவைக்கு ஏற்ப அளந்து படைத்தான்)
ஓத (அலைகளால் பேரிரைச்சல் கொண்டு இருக்கின்ற) கடலும் (கடல்களும்) உயிர்களும் (அது சூழ்ந்து நிற்கின்ற உலகத்தில் வாழ்கின்ற உயிர்களும்) ஆய் (ஆகிய அனைத்துமாக) நிற்கும் (அவனே நிற்கின்றான்)
பேதிப்பு (அவை அனைத்தில் இருந்தும் வேறு பட்டு) இலாமையில் (இல்லாதவனாக) நின்ற (ஒன்றாகவே கலந்து நிற்கின்ற இறைவனே) பராசத்தி (அசையும் சக்தியாகவும் இருந்து அனைத்தையும் இயக்குகின்றான்)
ஆதி (ஆதியிலிருந்தே) கண் (அனைத்தையும் பார்க்கின்றவனாகவும் பார்க்கப் படுகின்ற பொருளாகவும் இருக்கின்ற) தெய்வமும் (தெய்வமாகவும்) அந்தமும் (அனைத்தையும் ஊழிக் காலத்தில் அழிக்கின்ற தெய்வமாகவும்) ஆமே (அவனே இருக்கின்றான்).

விளக்கம்:

ஆதியிலிருந்தே இருக்கின்ற தலைவனாகிய இறைவனே ஏழு உலகங்களையும் அவற்றின் தேவைக்கு ஏற்ப அளந்து படைத்தான். அலைகளால் பேரிரைச்சல் கொண்டு இருக்கின்ற கடல்களும் அது சூழ்ந்து நிற்கின்ற உலகத்தில் வாழ்கின்ற உயிர்களும் ஆகிய அனைத்துமாக அவனே நிற்கின்றான். அவை அனைத்தில் இருந்தும் வேறு பட்டு இல்லாதவனாக ஒன்றாகவே கலந்து நிற்கின்ற இறைவனே அசையும் சக்தியாகவும் இருந்து அனைத்தையும் இயக்குகின்றான். ஆதியிலிருந்தே அனைத்தையும் பார்க்கின்றவனாகவும் பார்க்கப் படுகின்ற பொருளாகவும் இருக்கின்ற தெய்வமாகவும் அனைத்தையும் ஊழிக் காலத்தில் அழிக்கின்ற தெய்வமாகவும் அவனே இருக்கின்றான்.

கருத்து:

உயிர்களுக்குள் இருக்கின்ற இறைவனே உயிர்கள் வெளிப்புறத்தில் பார்க்கின்ற அனைத்துமாகவும் இருக்கின்றான் அனைத்தையும் இயக்குகின்றான் என்பதை உணர்ந்து வழி படுதலே அவனை அடைவதற்கு எளிதான வழியாகும்.