பாடல் #1656

பாடல் #1656: ஆறாம் தந்திரம் – 8. அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)

ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை
யீனம தேசெய் திரந்துண் டிருப்பினு
மான நலங்கெடு மப்புவி யாதலா
லீனவர் வேடங் கழிப்பித்த லின்பமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானமில லாரவெடம பூணடிநத நாடடிடை
யீனம தெசெய திரநதுண டிருபபினு
மான நலஙகெடு மபபுவி யாதலா
லீனவர வெடங கழிபபிதத லினபமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டு இடை
ஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும்
மானம் நலம் கெடும் அப் புவி ஆதலால்
ஈன அவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.

பதப்பொருள்:

ஞானம் (உண்மையான ஞானம்) இல்லார் (இல்லாதவர்கள்) வேடம் (தவசிகள் போல வேடம்) பூண்டு (அணிந்து கொண்டு) இந்த (அவர்கள் இருக்கின்ற) நாட்டு (நாட்டிற்கு) இடை (நடுவிலேயே திரிந்து கொண்டு)
ஈனம் (இழிவான) அதே (செயல்களே) செய்து (செய்து கொண்டு) இரந்து (மற்றவர்களிடம் பிச்சை எடுத்து) உண்டு (உணவு சாப்பிட்டு கொண்டு) இருப்பினும் (இருந்தாலும்)
மானம் (அவர்களின் செயலால் நாட்டிற்கு அவமானமும்) நலம் (நன்மை) கெடும் (கெடுதலும்) அப் (அவர்கள் இருக்கின்ற நாடு இந்த) புவி (பூமியில் இருப்பதால் உலகம் அனைத்திற்குமே கெடுதலும் நடக்கும்) ஆதலால் (ஆகவே)
ஈன (இழிவான) அவர் (அவர்களின்) வேடம் (வேடத்தை) கழிப்பித்தல் (நீக்கி அவர்களை உண்மையை உணர செய்து) இன்பமே (அதன் பயனால் உலகம் இன்பம் அடையும் படி செய்வது உண்மை ஞானிகளின் கடமையாகும்).

விளக்கம்:

உண்மையான ஞானம் இல்லாதவர்கள் தவசிகள் போல வேடம் அணிந்து கொண்டு, அவர்கள் இருக்கின்ற நாட்டிற்கு நடுவிலேயே திரிந்து கொண்டு, இழிவான செயல்களே செய்து கொண்டு, மற்றவர்களிடம் பிச்சை எடுத்து உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தாலும், அவர்களின் செயலால் நாட்டிற்கு அவமானமும், நன்மை கெடுதலும், அவர்கள் இருக்கின்ற நாடு இந்த பூமியில் இருப்பதால் உலகம் அனைத்திற்குமே கெடுதலும் நடக்கும். ஆகவே இழிவான அவர்களின் வேடத்தை நீக்கி அவர்களை உண்மையை உணர செய்து அதன் பயனால் உலகம் இன்பம் அடையும் படி செய்வது உண்மை ஞானிகளின் கடமையாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.