பாடல் #1515

பாடல் #1515: ஐந்தாம் தந்திரம் – 17. சத்தி நிபாதம் (அருள் சக்தி மேலிருந்து கீழ் இறங்கி வருகின்ற தன்மை)

தீம்புன லான திகையது சிந்திக்கி
லாம்புன லாய்வறி வார்க்கமு தாய்நிற்குந்
தேம்புன லான தெளிவறி வார்கட்குக்
கோம்புன லாடிய கொல்லையு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தீமபுன லான திகையது சிநதிககி
லாமபுன லாயவறி வாரககமு தாயநிறகுந
தெமபுன லான தெளிவறி வாரகடகுக
கொமபுன லாடிய கொலலையு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தீம் புனல் ஆன திகை அது சிந்திக்கில்
ஆம் புனல் ஆய் அறிவார்க்கு அமுதாய் நிற்கும்
தேம் புனல் ஆன தெளிவு அறிவார்கட்கு
ஓம் புனல் ஆடிய கொல்லையும் ஆமே.

பதப்பொருள்:

தீம் (நல்ல சுவையோடு இனிமையான / மூலாதார அக்னியில் இருக்கின்ற) புனல் (தண்ணீர் / அமிழ்தம்) ஆன (ஆனது) திகை (எந்த திசையில் இருக்கின்றது) அது (என்பதை) சிந்திக்கில் (சிந்தித்து பார்த்தால்)
ஆம் (மேலிருந்த வருகின்ற / சகஸ்ரதளத்தில் இருந்து வருகின்ற) புனல் (ஆற்றுத் தண்ணீர் / அமிழ்த நீர்) ஆய் (ஆகவே) அறிவார்க்கு (அதை அறிந்தவர்களுக்கு) அமுதாய் (நல்ல நீராக / நன்மை தரும் அமிழ்தமாக அதுவே) நிற்கும் (நிற்கும்)
தேம் (அப்போது சேர்ந்து இருக்கின்ற / சகஸ்ரதளத்திலிருந்து இறங்கி வந்து அன்னாக்கில் தங்கி இருக்கின்ற) புனல் (ஆற்றுத் தண்ணீர் / அமிழ்தம்) ஆன (ஆகிய) தெளிவு (கிணற்றில் / ஞானத்தை தெளிவாக)
அறிவார்கட்கு (சேமித்து வைக்கும் முறை அறிந்தவர்களுக்கு / அறிந்து உணர்ந்தவர்களுக்கு)
ஓம் (ஓடுகின்ற / அன்னாக்கிலிருந்து உடல் முழுவதும் பரவுகின்ற) புனல் (ஆற்றுத் தண்ணீரினால் / அமிழ்த நீரினால்) ஆடிய (பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்து / உடலுக்கு சக்தியும் பேரின்பமும் கொடுத்து) கொல்லையும் (விவசாய நிலத்தில் பயிர்களை வளர்க்கும் முறை / ஞானத்தை வளர்க்கின்ற முறை) ஆமே (அது ஆகும்).

உவமை விளக்கம்:

நல்ல சுவையோடு இனிமையான தண்ணீரானது எந்த திசையில் இருக்கின்றது என்பதை சிந்தித்து பார்த்தால் மேலிருந்த வருகின்ற ஆற்றுத் தண்ணீராகவே அதை அறிந்தவர்களுக்கு நல்ல நீராக அதுவே நிற்கும். அப்போது சேர்ந்து இருக்கின்ற ஆற்றுத் தண்ணீராகிய கிணற்றில் சேமித்து வைக்கும் முறை அறிந்தவர்களுக்கு ஓடுகின்ற ஆற்றுத் தண்ணீரினால் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்து விவசாய நிலத்தில் பயிர்களை வளர்க்கும் முறை அதுவாகும்.

கருத்து விளக்கம்:

மூலாதார அக்னியில் இருக்கின்ற அமிழ்தமானது எந்த திசையில் இருக்கின்றது என்பதை சிந்தித்து பார்த்தால் சகஸ்ரதளத்தில் இருந்து வருகின்ற அமிழ்த நீராகவே அதை அறிந்தவர்களுக்கு நன்மை தரும் அமிழ்தமாக அதுவே நிற்கும். அப்போது சகஸ்ரதளத்திலிருந்து இறங்கி வந்து அன்னாக்கில் தங்கி இருக்கின்ற அமிழ்தமாகிய ஞானத்தை தெளிவாக அறிந்து உணர்ந்தவர்களுக்கு அன்னாக்கிலிருந்து உடல் முழுவதும் பரவுகின்ற அமிழ்த நீரினால் உடலுக்கு சக்தியும் பேரின்பமும் கொடுத்து ஞானத்தை வளர்க்கின்ற முறை அதுவாகும்.

பாடல் #1516

பாடல் #1516: ஐந்தாம் தந்திரம் – 17. சத்தி நிபாதம் (அருள் சக்தி மேலிருந்து கீழ் இறங்கி வருகின்ற தன்மை)

இருணீக்கி யெண்ணில் பிறவி கடத்தி
யருணீங்கா வண்ணமே யாதி யருளு
மருணீங்கா வானவர் கோனோடுங் கூடிப்
பொருணீங்கா வின்பம் புலம்பயில் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருணீககி யெணணில பிறவி கடததி
யருணீஙகா வணணமெ யாதி யருளு
மருணீஙகா வானவர கொனொடுங கூடிப
பொருணீஙகா வினபம புலமபயில தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருள் நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள் நீங்கா வண்ணமே ஆதி அருளும்
மருள் நீங்கா வானவர் கோனோடும் கூடி
பொருள் நீங்கா இன்பம் புலம் பயில் தானே.

பதப்பொருள்:

இருள் (மாயையை) நீக்கி (நீக்கி விட்டு) எண்ணில் (தாம் எடுக்க வேண்டிய எண்ண முடியாத) பிறவி (பிறவிகளை) கடத்தி (அந்தந்த பிறவிகளை எடுக்காமலேயே கடந்து போகும் படி செய்து)
அருள் (இறையருளானது) நீங்கா (எப்போதும் தம்மை விட்டு நீங்கி விடாத) வண்ணமே (படியே) ஆதி (ஆதிப் பரம்பொருள்) அருளும் (அருளி)
மருள் (தனக்கென்று ஒரு பெயருடன் அகங்காரம்) நீங்கா (நீங்காமல் இருக்கின்ற) வானவர் (வானவர்களின்) கோனோடும் (அரசனாக இருக்கின்ற இறைவனோடு) கூடி (எப்போதும் சேர்ந்தே இருக்கும் படி செய்து)
பொருள் (என்ன வேண்டுமென்றாலும் அதை பெற்றுக் கொண்டே இருக்கின்ற நிலையில் இருந்து) நீங்கா (நீங்கி விடாத படி) இன்பம் (பேரின்பத்திலேயே) புலம் (இந்த உலகத்தில் தாம் இருக்கின்ற இடத்திலேயே) பயில் (தாம் செய்து கொண்டு இருக்கின்ற சாதகத்தை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் படி செய்து) தானே (அருளுகின்றது இறை சக்தி).

விளக்கம்:

மாயையை நீக்கி விட்டு தாம் எடுக்க வேண்டிய எண்ண முடியாத பிறவிகளை அந்தந்த பிறவிகளை எடுக்காமலேயே கடந்து போகும் படி செய்து, இறையருளானது எப்போதும் தம்மை விட்டு நீங்கி விடாத படியே ஆதிப் பரம்பொருள் அருளி, தனக்கென்று ஒரு பெயருடன் அகங்காரம் நீங்காமல் இருக்கின்ற வானவர்களின் அரசனாக இருக்கின்ற இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கும் படி செய்து, என்ன வேண்டுமென்றாலும் அதை பெற்றுக் கொண்டே இருக்கின்ற நிலையில் இருந்து நீங்கி விடாத படி பேரின்பத்திலேயே இந்த உலகத்தில் தாம் இருக்கின்ற இடத்திலேயே தாம் செய்து கொண்டு இருக்கின்ற சாதகத்தை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் படி செய்து அருளுகின்றது இறை சக்தி.

பாடல் #1517

பாடல் #1517: ஐந்தாம் தந்திரம் – 17. சத்தி நிபாதம் (அருள் சக்தி மேலிருந்து கீழ் இறங்கி வருகின்ற தன்மை)

இருள்சூ ழறையி லிருந்தது நாடில்
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாப்போல்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
யருள்சூ ழிறைவனு மம்மையு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருளசூ ழறையி லிருநதது நாடில
பொருளசூழ விளககது புககெரிந தாபபொல
மருளசூழ மயககதது மாமலர நநதி
யருளசூ ழிறைவனு மமமையு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருள் சூழ் அறையில் இருந்தது நாடில்
பொருள் சூழ் விளக்கு அது புக்கு எரிந்தால் போல்
மருள் சூழ் மயக்கத்து மா மலர் நந்தி
அருள் சூழ் இறைவனும் அம்மையும் ஆமே.

பதப்பொருள்:

இருள் (மாயையால்) சூழ் (சூழப் பட்டு இருக்கின்ற) அறையில் (அறையாகிய உடம்பிற்குள்) இருந்தது (மறைந்து இருக்கின்ற உண்மை பொருளை) நாடில் (தேடி அடைந்தால்)
பொருள் (இருண்ட அறையில் பொருள்கள்) சூழ் (சுற்றி இருப்பதை) விளக்கு (காண்பிக்கும் விளக்கு) அது (அது போலவே) புக்கு (மூலாதாரத்தில் இருக்கின்ற சோதியை) எரிந்தால் (சாதகத்தின் மூலம் விளக்கு ஏற்றி வைத்தது) போல் (போல எரிய செய்தால்)
மருள் (மாயை) சூழ் (சூழ்ந்த) மயக்கத்து (மயக்கத்தில் இதுவரை வெளிப்படாமல்) மா (இதயத் தாமரையாகிய மாபெரும்) மலர் (மலரில் வீற்றிருக்கின்ற) நந்தி (குருநாதராகிய இறைவன் வெளிப்பட்டு)
அருள் (அவரே அருள்) சூழ் (சூழ்ந்து இருக்கின்ற) இறைவனும் (தந்தையாகவும்) அம்மையும் (தாயாகவும்) ஆமே (இருப்பார்).

விளக்கம்:

மாயையால் சூழப் பட்டு இருக்கின்ற அறையாகிய உடம்பிற்குள் மறைந்து இருக்கின்ற உண்மை பொருளை தேடி அடைந்தால், இருண்ட அறையில் தம்மை சுற்றி இருக்கின்ற பொருள்களை காண்பிக்கும் விளக்கைப் போலவே மூலாதாரத்தில் இருக்கின்ற சோதியை சாதகத்தின் மூலம் ஏற்றி வைத்தால், மாயை சூழ்ந்த மயக்கத்தில் இதுவரை வெளிப்படாமல் இதயத் தாமரையாகிய மாபெரும் மலரில் வீற்றிருக்கின்ற குருநாதராகிய இறைவன் வெளிப்பட்டு அவரே அருள் சூழ்ந்து இருக்கின்ற தந்தையாகவும் தாயாகவும் இருப்பார்.

பாடல் #1512

பாடல் #1512: ஐந்தாம் தந்திரம் – 16. சாயுச்சியம் (இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருப்பது)

சைவச் சிவனுடன் சம்பந்த மாவது
சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல்
சைவச் சிவந்தன்னைச் சாராமல் நீவுதல்
சைவச் சிவானந்தஞ் சாயுச்சிய மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சைவச சிவனுடன சமபநத மாவது
சைவந தனையறிந தெசிவஞ சாருதல
சைவச சிவநதனனைச சாராமல நீவுதல
சைவச சிவானநதஞ சாயுசசிய மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சைவ சிவனுடன் சம்பந்தம் ஆவது
சைவம் தனை அறிந்தே சிவம் சாருதல்
சைவ சிவம் தன்னை சாராமல் நீவுதல்
சைவ சிவ ஆனந்தம் சாயுச்சியம் ஆமே.

பதப்பொருள்:

சைவ (சைவம் என்று அறியப்படுகின்ற தர்மத்தில்) சிவனுடன் (இறைவனுடன்) சம்பந்தம் (நெருங்கிய உறவினர் போல) ஆவது (தாமும் ஆவது சாலோகம் எனும் முதல் நிலையாகும்)
சைவம் (இந்த நிலையை அடைவதற்கு சைவம் என்று அறியப்படுகின்ற தர்மத்தின்) தனை (வழி முறையின் மூலம்) அறிந்தே (இறைவனை அறிந்து கொண்டு) சிவம் (இறைவனை) சாருதல் (மிகவும் நெருங்கி அவரையே சார்ந்து இருப்பது சாமீபம் எனும் இரண்டாவது நிலையாகும்)
சைவ (சைவம் என்று அறியப்படுகின்ற தர்மத்தில்) சிவம் (சிவப் பரம்பொருளை அறிந்து அடைந்த பிறகு) தன்னை (தாம் எனும் எண்ணத்தை) சாராமல் (சார்ந்து இருப்பதை) நீவுதல் (நீக்கி விட்டு தாமே சிவமாக இருப்பதை உணர்ந்து சிவ உருவத்திலேயே இருப்பது சாரூபம் எனும் மூன்றாவது நிலையாகும்)
சைவ (சைவம் என்று அறியப்படுகின்ற தர்மத்தின் பயனால்) சிவ (சிவப் பரம்பொருளின்) ஆனந்தம் (மேலான பேரின்பத்தை பெற்று அதிலேயே மூழ்கி) சாயுச்சியம் (இறைவனுடனே எப்போதும் சேர்ந்தே) ஆமே (இருப்பது சாயுச்சியம் எனும் நான்காவது நிலையாகும்).

விளக்கம்:

சைவம் என்று அறியப்படுகின்ற தர்மத்தில் இறைவனுடன் நெருங்கிய உறவினர் போல தாமும் ஆவது சாலோகம் எனும் முதல் நிலையாகும். இந்த நிலையை அடைவதற்கு அந்த வழி முறையின் மூலம் இறைவனை அறிந்து கொண்டு இறைவனை மிகவும் நெருங்கி அவரையே சார்ந்து இருப்பது சாமீபம் எனும் இரண்டாவது நிலையாகும். அந்த தர்மத்திலேயே சிவப் பரம்பொருளை அறிந்து அடைந்த பிறகு தாம் எனும் எண்ணத்தை சார்ந்து இருப்பதை நீக்கி விட்டு தாமே சிவமாக இருப்பதை உணர்ந்து சிவ உருவத்திலேயே இருப்பது சாரூபம் எனும் மூன்றாவது நிலையாகும். அந்த தர்மத்தின் பயனால் சிவப் பரம்பொருளின் மேலான பேரின்பத்தை பெற்று அதிலேயே மூழ்கி இறைவனுடனே எப்போதும் சேர்ந்தே இருப்பது சாயுச்சியம் எனும் நான்காவது நிலையாகும்.

பாடல் #1513

பாடல் #1513: ஐந்தாம் தந்திரம் – 16. சாயுச்சியம் (இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருப்பது)

சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல்
சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதல்
சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்
சாயுச் சியமனத் தானந்த சத்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாயுச சியஞசாக கிராதீதஞ சாருதல
சாயுச சியமுப சாநதததுத தஙகுதல
சாயுச சியஞசிவ மாதல முடிவிலாச
சாயுச சியமனத தானநத சததியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாயுச்சியம் சாக்கிர ஆதீதம் சாருதல்
சாயுச்சியம் உப சாந்தத்து தங்குதல்
சாயுச்சியம் சிவம் ஆதல் முடிவு இலா
சாயுச்சியம் மனத்து ஆனந்த சத்தியே.

பதப்பொருள்:

சாயுச்சியம் (இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற நிலையானது) சாக்கிர (இறைவனுடன் இலயித்து இருக்கின்ற ஆழ் நிலையில் மூழ்கி இருந்தாலும்) ஆதீதம் (நினைவு உலகத்திலும்) சாருதல் (விழிப்பு நிலையில் இருப்பது சாலோகம் எனும் முதல் நிலை ஆகும்)
சாயுச்சியம் (இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற நிலையானது) உப (அதற்கு உதவுகின்ற) சாந்தத்து (பேரமைதி எனும் நிலையிலேயே) தங்குதல் (தங்கி இருப்பது சாமீபம் எனும் இரண்டாம் நிலை ஆகும்)
சாயுச்சியம் (இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற நிலையானது) சிவம் (தாமே சிவமாக) ஆதல் (ஆகி இறைவனின்) முடிவு (எல்லை) இலா (இல்லாத ஒளி உருவத்தை பெற்று இருப்பது சாரூபம் எனும் மூன்றாவது நிலை ஆகும்)
சாயுச்சியம் (இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற நிலையானது) மனத்து (மனதிற்குள்) ஆனந்த (இறைவனின் பேரின்பத்தில் மூழ்கி இருந்து) சத்தியே (அவனின் அளவில்லாத சக்தியை அனுபவித்துக் கொண்டே இருப்பது சாயுச்சியம் எனும் நான்காம் நிலை ஆகும்).

விளக்கம்:

இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற நிலையானது இறைவனுடன் இலயித்து இருக்கின்ற ஆழ் நிலையில் மூழ்கி இருந்தாலும் நினைவு உலகத்திலும் விழிப்பு நிலையில் இருப்பது சாலோகம் எனும் முதல் நிலை ஆகும். இந்த நிலைக்கு உதவுகின்ற பேரமைதி எனும் நிலையிலேயே தங்கி இருப்பது சாமீபம் எனும் இரண்டாம் நிலை ஆகும். இந்த நிலையில் தாமே சிவமாக ஆகி இறைவனின் எல்லை இல்லாத ஒளி உருவத்தை பெற்று இருப்பது சாரூபம் எனும் மூன்றாவது நிலை ஆகும். அந்த நிலையில் மனதிற்குள் இறைவனின் பேரின்பத்தில் மூழ்கி இருந்து அவனின் அளவில்லாத சக்தியை அனுபவித்துக் கொண்டே இருப்பது சாயுச்சியம் எனும் நான்காம் நிலை ஆகும்.

பாடல் #1510

பாடல் #1510: ஐந்தாம் தந்திரம் – 15. சாரூபம் (இறைவன் இருக்கின்ற வடிவத்திலேயே இருந்து அவருக்கானதை ஏற்றுக் கொள்வது)

தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந்
தங்குஞ் சன்மார்கந் தனிலன்றிக் கைகூடா
வங்கத் துடல்சித்த சாதன ராகுவ
ரிங்கிவ ராகவிழி வற்ற யோகமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தஙகிய சாரூபந தானெடடாம யொகமாந
தஙகுஞ சனமாரகந தனிலனறிக கைகூடா
வஙகத துடலசிதத சாதன ராகுவ
ரிஙகிவ ராகவிழி வறற யொகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தங்கிய சாரூபம் தான் எட்டாம் யோகம் ஆம்
தங்கும் சன் மார்கம் தனில் அன்றி கை கூடா
அங்கத்து உடல் சித்த சாதனர் ஆகுவர்
இங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே.

பதப்பொருள்:

தங்கிய (நிலை பெற்ற) சாரூபம் (இறை உருவம் என்பது) தான் (சாதகர்கள்) எட்டாம் (அட்டாங்க யோகத்தில் எட்டாவது) யோகம் (யோகமாகிய) ஆம் (சமாதி நிலையில் கிடைப்பதாகும்)
தங்கும் (நிலை பெற்ற) சன் (உண்மை) மார்கம் (வழி முறையாக இருக்கின்ற) தனில் (இறைவனை அடைகின்ற ஞான வழிமுறை) அன்றி (அல்லாமல் வேறு எதனாலும்) கை (சாதகர்களுக்கு) கூடா (இந்த சமாதி நிலை கிடைக்காது)
அங்கத்து (இந்த சமாதி நிலையை அடைந்த சாதகர்களின் உறுப்புகள் இருக்கின்ற) உடல் (உடல் முழுவதும்) சித்த (சித்தமாகிய எண்ணத்தை இறைவனையே நினைத்துக் கொண்டு இருக்கின்ற) சாதனர் (சாதகராக) ஆகுவர் (ஆகி விடுவார்)
இங்கு (இதன் பயனால் இந்த உலகத்திலேயே) இவர் (இந்த சாதகர்) ஆக (தாமே) இழிவு (ஒரு குற்றமும்) அற்ற (இல்லாத தூய்மையான) யோகமே (யோகத்தின் வடிவமாக வீற்றிருப்பார்).

விளக்கம்:

நிலை பெற்ற இறை உருவம் என்பது சாதகர்கள் அட்டாங்க யோகத்தில் எட்டாவது யோகமாகிய சமாதி நிலையில் கிடைப்பதாகும். நிலை பெற்ற உண்மை வழி முறையாக இருக்கின்ற இறைவனை அடைகின்ற ஞான வழிமுறை அல்லாமல் வேறு எதனாலும் சாதகர்களுக்கு இந்த சமாதி நிலை கிடைக்காது. இந்த சமாதி நிலையை அடைந்த சாதகர்களின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இறைவனையே நினைத்து செயலாற்றிக் கொண்டு இருக்கின்ற சித்த நிலை பெற்ற சாதகராக ஆகி விடுவார். இதன் பயனால் இந்த உலகத்திலேயே இந்த சாதகர் தாமே ஒரு குற்றமும் இல்லாத தூய்மையான யோகத்தின் வடிவமாக வீற்றிருப்பார்.

பாடல் #1511

பாடல் #1511: ஐந்தாம் தந்திரம் – 15. சாரூபம் (இறைவன் இருக்கின்ற வடிவத்திலேயே இருந்து அவருக்கானதை ஏற்றுக் கொள்வது)

சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே
தயிலம தாகுஞ் சராசரம் போலப்
பயிலுங் குருவின் பதிபுக்க போதே
கயிலை யிறைவன் கதிர்வடி வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சயிலலொ கததினைச சாரநத பொழுதெ
தயிலம தாகுஞ சராசரம பொலப
பயிலுங குருவின பதிபுகக பொதெ
கயிலை யிறைவன கதிரவடி வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சயில லோகத்தினை சார்ந்த பொழுதே
தயிலம் அது ஆகும் சராசரம் போல
பயிலும் குருவின் பதி புக்க போதே
கயிலை இறைவன் கதிர் வடிவு ஆமே.

பதப்பொருள்:

சயில (இறைவன் இருக்கின்ற தர்ம) லோகத்தினை (உலகத்தை) சார்ந்த (சாதகர் சார்ந்து) பொழுதே (இருக்கும் போதே)
தயிலம் (அங்கே வீற்றிருக்கின்ற இறைவனுக்கு சாந்து பூசியது போல சுற்றி இருக்கின்றது) அது (போலவே) ஆகும் (அங்கு புகுந்த சாதகரையும் சுற்றி இருக்கும் படி ஆகும்) சராசரம் (அண்டத்தில் இருக்கின்ற அனைத்து உலகங்களும்) போல (அது போலவே)
பயிலும் (சாதகர் தமக்கு கற்று கொடுக்கும் இறைவனை உணர்ந்த ஞான) குருவின் (குருவின்) பதி (இடத்திற்குள்) புக்க (நுழைந்த) போதே (போதே)
கயிலை (கயிலாய மலையில்) இறைவன் (வீற்றிருக்கின்ற இறைவனின்) கதிர் (ஒளி பொருந்திய) வடிவு (உருவமாகவே) ஆமே (சாதகரும் ஆகி விடுவார்).

விளக்கம்:

இறைவன் இருக்கின்ற தர்ம உலகத்தை சாதகர் சார்ந்து இருக்கும் போதே அங்கே வீற்றிருக்கின்ற இறைவனுக்கு சாந்து பூசியது போல அண்டத்தில் இருக்கின்ற அனைத்து உலகங்களும் சுற்றி இருக்கின்றது போலவே அங்கு புகுந்த சாதகரையும் சுற்றி இருக்கும் படி ஆகிவிடும். அது போலவே சாதகர் தமக்கு கற்று கொடுக்கும் இறைவனை உணர்ந்த ஞான குருவின் இடத்திற்குள் நுழைந்த போதே கயிலாய மலையில் வீற்றிருக்கின்ற இறைவனின் ஒளி பொருந்திய உருவமாகவே சாதகரும் ஆகி விடுவார்.

பாடல் #1509

பாடல் #1509: ஐந்தாம் தந்திரம் – 14. சாமீபம் (இறைவன் இருக்கின்ற இடத்தில் அவருக்கு அருகிலேயே இருப்பது)

பாசம் பசுவான தாகுமிச் சாலோகம்
பாசம ருளான தாகுமிச் சாமீபம்
பாசஞ் சிவமான தாகுமிச் சாரூபம்
பாசங் கரைபதி சாயுச்சிய மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பாசம பசுவான தாகுமிச சாலொகம
பாசம ருளான தாகுமிச சாமீபம
பாசஞ சிவமான தாகுமிச சாரூபம
பாசங கரைபதி சாயுசசிய மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பாசம் பசு ஆனது ஆகும் இச் சாலோகம்
பாசம் அருள் ஆனது ஆகும் இச் சாமீபம்
பாசம் சிவம் ஆனது ஆகும் இச் சாரூபம்
பாசம் கரை பதி சாயுச்சியம் ஆமே.

பதப்பொருள்:

பாசம் (உலகப் பற்றுக்களானது) பசு (ஆன்மாவாக) ஆனது (இருக்கின்ற உயிர்களுக்குள்) ஆகும் (மாயையால் மறைத்து இருக்கும் போது இறைவனை அடைய வேண்டும் என்று சரியை கிரியை யோகம் ஞானம் ஆகியவற்றின் மூலம் சாதகம் செய்கின்ற உயிர்களுக்கு) இச் (இந்த உலகத்திலேயே) சாலோகம் (இறைவன் இருக்கின்ற இடத்திற்கு அருகில் செல்லுகின்ற நிலை கிடைக்கும்)
பாசம் (அந்த சாதகத்தை தொடர்ந்து செய்யும் போது உலகப் பற்றுக்களானது சிறுது சிறிதாக விலகி) அருள் (இறையருள் பெருகி) ஆனது (தம்மை) ஆகும் (அதுவே) இச் (இந்த உலகத்திலேயே) சாமீபம் (இறைவனுக்கு மிகவும் அருகில் செல்லுகின்ற நிலையை கொடுக்கும்)
பாசம் (அந்த நிலையிலும் தொடர்ந்து சாதகத்தை செய்யம் போது உலகப் பற்றுக்களானது நீங்கி இறைவனின் மேல் பற்று கொள்ளும் படி) சிவம் (சிவமாகவே) ஆனது (தம்மையும்) ஆகும் (ஆகும் படி செய்து) இச் (இந்த உலகத்திலேயே) சாரூபம் (இறைவனின் ஒளி உருவத்தை பெறுகின்ற நிலையை கொடுக்கும்)
பாசம் (அந்த நிலையிலும் மேன்மை பெற்று சாதகத்தை தொடரும் போது பற்றுக்கள் அனைத்தும்) கரை (முழுவதுமாக நீங்கி முக்திக்கு எல்லையாக இருக்கின்ற) பதி (இறைவனிடம் சென்று சேரும் படி செய்து) சாயுச்சியம் (இறைவனுடனே எப்போதும் இருக்கின்ற நிலையை) ஆமே (கொடுக்கும்).

விளக்கம்:

உலகப் பற்றுக்களானது ஆன்மாவாக இருக்கின்ற உயிர்களுக்குள் மாயையால் மறைத்து இருக்கும் போது இறைவனை அடைய வேண்டும் என்று சரியை கிரியை யோகம் ஞானம் ஆகியவற்றின் மூலம் சாதகம் செய்கின்ற உயிர்களுக்கு இந்த உலகத்திலேயே இறைவன் இருக்கின்ற இடத்திற்கு அருகில் செல்லுகின்ற நிலை கிடைக்கும். அந்த சாதகத்தை தொடர்ந்து செய்யும் போது உலகப் பற்றுக்களானது சிறுது சிறிதாக விலகி இறையருள் பெருகி தம்மை அதுவே இந்த உலகத்திலேயே இறைவனுக்கு மிகவும் அருகில் செல்லுகின்ற நிலையை கொடுக்கும். அந்த நிலையிலும் தொடர்ந்து சாதகத்தை செய்யம் போது உலகப் பற்றுக்களானது நீங்கி இறைவனின் மேல் பற்று கொள்ளும் படி சிவமாகவே தம்மையும் ஆகும் படி செய்து இந்த உலகத்திலேயே இறைவனின் ஒளி உருவத்தை பெறுகின்ற நிலையை கொடுக்கும். அந்த நிலையிலும் மேன்மை பெற்று சாதகத்தை தொடரும் போது பற்றுக்கள் அனைத்தும் முழுவதுமாக நீங்கி முக்திக்கு எல்லையாக இருக்கின்ற இறைவனிடம் சென்று சேரும் படி செய்து இறைவனுடனே எப்போதும் இருக்கின்ற நிலையை கொடுக்கும்.

பாடல் #1507

பாடல் #1507: ஐந்தாம் தந்திரம் – 13. சாலோகம் (இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருப்பது)

சாலோக மாதி சரிதாதியிற் பெறுஞ்
சாலோக சாமீபந் தங்குஞ் சரிதையா
மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம்
பாலோக மில்லாப் பரனுரு வாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாலொக மாதி சரிதாதியிற பெறுஞ
சாலொக சாமீபந தஙகுஞ சரிதையா
மாலொகஞ செரில வழியாகுஞ சாரூபம
பாலொக மிலலாப பரனுரு வாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாலோகம் ஆதி சரிதை ஆதியில் பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் சரிதை ஆம்
மாலோகம் சேரில் வழி ஆகும் சாரூபம்
பாலோகம் இல்லா பரன் உரு ஆகுமே.

பதப்பொருள்:

சாலோகம் (இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருக்கின்ற நிலை) ஆதி (முதலாகிய சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நான்கு விதமான முக்திக்கான நிலைகளும்) சரிதை (இறைவனை அடைவதற்கான சரியை) ஆதியில் (முதலாகிய சரியை, கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு விதமான முறைகளால்) பெறும் (பெறப்படும்)
சாலோகம் (இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருக்கின்ற நிலை பெற்று அதன் மூலம்) சாமீபம் (இறைவனுக்கு அருகில் இருக்கின்ற நிலை) தங்கும் (நமக்கு கிடைப்பது) சரிதை (சரியையை தொடர்ந்து முறைப்படி) ஆம் (செய்து கொண்டு இருப்பதால் ஆகும்)
மாலோகம் (இறைவன் இருக்கின்ற மாபெரும் உலகத்தையே) சேரில் (சேர்ந்து இருந்தால்) வழி (அதுவே வழியாக) ஆகும் (இருக்கும்) சாரூபம் (அதற்கு அடுத்த நிலையாகிய இறைவனுடைய உருவத்தையே பெறுகின்ற நிலையை அடைவதற்கு)
பாலோகம் (அப்போது இந்த பரந்த விரிந்த உலகங்கள் அனைத்திலும்) இல்லா (இருக்கின்ற வடிவங்களில் இல்லாத) பரன் (பரம்பொருளின்) உரு (ஒளி உருவத்தோடு) ஆகுமே (அவருடனே எப்போதும் இருக்கின்ற சாயுச்சிய நிலையும் கிடைக்கும்).

விளக்கம்:

இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருக்கின்ற நிலை முதலாகிய சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் ஆகிய நான்கு விதமான முக்திக்கான நிலைகளும் இறைவனை அடைவதற்கான சரியை முதலாகிய சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு விதமான முறைகளால் பெறப்படும். இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருக்கின்ற நிலை பெற்று அதன் மூலம் இறைவனுக்கு அருகில் இருக்கின்ற நிலையானது சரியையை தொடர்ந்து முறைப்படி செய்து கொண்டு இருப்பதால் நமக்கு கிடைக்கும். இறைவன் இருக்கின்ற மாபெரும் உலகத்தையே சேர்ந்து இருந்தால் அதற்கு அடுத்த நிலையாகிய இறைவனுடைய உருவத்தையே பெறுகின்ற நிலையை அடைவதற்கு அதுவே வழியாக இருக்கும். அப்போது இந்த பரந்த விரிந்த உலகங்கள் அனைத்திலும் இருக்கின்ற வடிவங்களில் இல்லாத பரம்பொருளின் ஒளி உருவத்தோடு அவருடனே எப்போதும் இருக்கின்ற சாயுச்சிய நிலையும் கிடைக்கும்.

இறைவனை அடைந்த முக்திக்கான நிலைகள்:

  1. சாலோகம் – இறைவன் இருக்கும் இடத்தில் அவனோடு சேர்ந்து வாழ்வது.
  2. சாமீபம் – இறைவனுக்கு பக்கத்தில் அமர்ந்து நெருக்கமாக வாழ்வது.
  3. சாரூபம் – இறைவனுக்கு பிரதிநிதியாக அவருக்கு செய்வதை ஏற்றுக்கொள்வது.
  4. சாயுச்சியம் – இறைவனோடு எப்போதும் சேர்ந்து இருப்பது.

இறைவனை அடைவதற்கான வழிகள்:

  1. சரியை – கோயில்கள் செல்வது, பூஜைகள் செய்வது.
  2. கிரியை – மந்திரம் சொல்லி சக்கரங்கள் வைத்து வழிபடுவது.
  3. யோகம் – தியானம் தவம் செய்வது.
  4. ஞானம் – அனைத்திற்கும் மேலான நிலையில் சலனங்கள் இன்றி இருப்பது.

பாடல் #1508

பாடல் #1508: ஐந்தாம் தந்திரம் – 13. சாலோகம் (இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருப்பது)

சமயங் கிரிதையிற் றன்மனங் கோயில்
சமய மனுமுறை தானே விசேடஞ்
சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ்
சமயாபி டேகந் தானாஞ் சமாதியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சமயங கிரிதையிற றனமனங கொயில
சமய மனுமுறை தானெ விசெடஞ
சமயதது மூலந தனைததெறன மூனறாஞ
சமயாபி டெகந தானாஞ சமாதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சமயம் கிரிதையில் தன் மனம் கோயில்
சமய மனு முறை தானே விசேடம்
சமயத்து மூலம் தனை தேறல் மூன்று ஆம்
சமய அபிடேகம் தான் ஆம் சமாதியே.

பதப்பொருள்:

சமயம் (சமயம் எனப்படுவது) கிரிதையில் (கிரியையில்) தன் (தன்) மனம் (மனதையே) கோயில் (இறைவன் இருக்கின்ற கோயிலாக மாற்றுவதன் மூலம் இறைவன் இருக்கின்ற இடத்தை சார்ந்தே இருக்கின்ற சாலோக நிலையை அடைவது ஆகும்)
சமய (சமயத்தில்) மனு (மனித உயிர்களுக்கு என்று வகுக்கப்பட்ட) முறை (வழி முறைகளாக இருப்பது) தானே (தானே கோயிலாக வைத்து உள்ளே இருக்கின்ற இறைவனுக்கு செய்கின்ற கிரியைகளின்) விசேடம் (விஷேசத்தினால் இறைவனுக்கு அருகிலேயே இருக்கின்ற சாமீப நிலையை அடைவது ஆகும்)
சமயத்து (அந்த சமயத்தின்) மூலம் (மூலமே) தனை (தாம் யாராக இருக்கின்றோம்) தேறல் (என்று அறிந்து அதில் தெளிவை பெறுவது) மூன்று (சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று விதமான முறைகளாலும் சாலோகம், சாமீபம், சாரூபம் ஆகிய மூன்று முக்திக்கான) ஆம் (நிலைகளை அடைவது ஆகும்)
சமய (சமயத்தில்) அபிடேகம் (அபிஷேகம்) தான் (என்பது தானே) ஆம் (இறைவனாக இருக்கின்றதை உணர்ந்த) சமாதியே (ஞான முறையில் அவருடனேயே எப்போதும் சேர்ந்து இருக்கின்ற சாயுச்சிய நிலையை அடைவது ஆகும்).

விளக்கம்:

சமயம் எனப்படுவது கிரியையில் தன் மனதையே இறைவன் இருக்கின்ற கோயிலாக மாற்றுவதன் மூலம் இறைவன் இருக்கின்ற இடத்தை சார்ந்தே இருக்கின்ற சாலோக நிலையை அடைவது ஆகும். சமயத்தில் மனித உயிர்களுக்கு என்று வகுக்கப்பட்ட வழி முறைகளாக இருப்பது தானே கோயிலாக வைத்து உள்ளே இருக்கின்ற இறைவனுக்கு செய்கின்ற கிரியைகளின் விஷேசத்தினால் இறைவனுக்கு அருகிலேயே இருக்கின்ற சாமீப நிலையை அடைவது ஆகும். அந்த சமயத்தின் மூலமே தாம் யாராக இருக்கின்றோம் என்று அறிந்து அதில் தெளிவை பெறுவது சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று விதமான முறைகளாலும் சாலோகம், சாமீபம், சாரூபம் ஆகிய மூன்று முக்திக்கான நிலைகளை அடைவது ஆகும். சமயத்தில் அபிஷேகம் என்பது தானே இறைவனாக இருக்கின்றதை உணர்ந்த ஞான முறையில் அவருடனேயே எப்போதும் சேர்ந்து இருக்கின்ற சாயுச்சிய நிலையை அடைவது ஆகும்.

கருத்து:

  1. மனதையே இறைவன் இருக்கின்ற கோயிலாக மானசீகமாக அமைத்து சரியை முறையை பின்பற்றுவது இறைவன் இருக்கின்ற உலகத்தையே சார்ந்து இருக்கின்ற நிலை ஆகும்.
  2. மனதுக்குள் இருக்கின்ற இறைவனுக்கு பூஜைகளும் மந்திர உச்சாடனங்களும் செய்து கிரியை முறையை பின்பற்றுவது இறைவனுக்கு அருகிலேயே இருக்கின்ற நிலை ஆகும்.
  3. தமக்குள் இருக்கின்ற ஆன்மாவே இறைவன் என்று அறிந்து கொண்டு அவனையே தியானம் செய்கின்ற யோக முறையை பின்பற்றுவது இறைவனுடைய உருவத்திலேயே இருக்கின்ற நிலை ஆகும்.
  4. தமக்குள் இருக்கின்ற ஆன்மாவாகிய இறைவனை உணர்கின்ற ஞான முறையை அடைவது இறைவனுடனே எப்போதும் சேர்ந்து இருக்கின்ற நிலை ஆகும்.

குறிப்பு:

இந்தப் பாடலில் வருகின்ற சமயம் என்பது என்னவென்றால் தாங்கள் எந்த மதத்தை சார்ந்து எந்த வழிமுறையை பின் பற்றினாலும் அதற்கு என்று வகுத்துக் கொடுக்கப் பட்ட விதிமுறைகளே சமயம் என்று அழைக்கப் படுகின்றது.