பாடல் #398

பாடல் #398: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவருங்
காரிய காரண ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்
தாணவம் நீங்கா தவரென லாகுமே.

விளக்கம்:

சதாசிவமூர்த்தியாகிய பரம்பொருளின் திருவிளையாடலால் ஆணவ மாயையில் நின்று உயிர்களைப் படைக்கும் தொழிலை பிரம்மனும் காக்கும் தொழிலை திருமாலும் அழிக்கும் தொழிலை உருத்திரனும் மாயையால் மறைக்கும் தொழிலை மகேசுவரனும் கருணையால் அருளும் தொழிலை சதாசிவனும் செய்கின்றனர். இவர்களும் உடலெடுத்து உயிர்களாகப் பிறந்து இறைவனை வேண்டித் தவமிருந்து இறைவனது அருளால் இந்த ஐந்து தொழில்களையும் பெற்று அவரவர்களுக்கு உரிய தொழிலைச் செய்தாலும் ஆணவம் முற்றிலும் நீங்காமல் இருப்பவர்கள் தான்.

குறிப்பு: பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகிய ஐந்து தேவர்களும் சிறிதளவு ஆணவம் இருப்பதினால் தான் அவர்கள் ஐந்து பெயர்களில் குறிக்கப்பட்டு தனியாக ஐந்து தொழில்களை செய்து கொண்டிருக்கின்றனர். அந்த சிறிதளவு ஆணவமும் இல்லையெனில் அவர்கள் அசையா சக்தியாக இருக்கும் சதாசிவமூர்த்தியுடன் கலந்திருப்பார்கள். இவர்களும் உடலெடுத்து உயிர்களாக பிறப்பெடுத்து சிவனடியார்களாக இருந்தவர்கள் தான் என்பதை திருமந்திரம் பாடல் எண் 302, 380 பாடல்களின் மூலம் அறியலாம்.

பாடல் #397

பாடல் #397: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.

விளக்கம்:

உலகத்தை அழிக்கும் உருத்திரனும் சங்கு சக்கரத்தைத் தரித்து காக்கின்ற திருமாலும் தாமரை மலரின் மேல் அமர்ந்து படைக்கின்ற பிரம்மனும் தாங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை தமக்குள் புகுந்து தம்மோடு கலந்து நிற்கும் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியை உணர்ந்து அறிந்து கொள்வதனால் பரம்பொருளின் விருப்பத்தை செய்லாக்கும் கருவிகளாகவே இவர்கள் மூவரும் இருக்கின்றார்கள்.

உட்கருத்து: உயிர்கள் சென்று அடைய வேண்டியது அழிக்கின்ற உருத்திரனையோ காக்கின்ற திருமாலையோ படைக்கின்ற பிரம்மனையோ இல்லை. இவர்கள் மூவரையும் தம் விருப்பத்தை செயலாக்கும் படி வைத்து இயக்கும் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியை அடைந்தால் மட்டுமே பாடல் #396 இல் கூறியுள்ளபடி உயிர்களின் உலகச் சுழற்சி முற்றுப் பெறும்.

Related image

பாடல் #396

பாடல் #396: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.

விளக்கம்:

பரம்பொருள் அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தால் சிவமாகவும் சக்தியாகவும் வெளிப்பட்டு இருவரின் திருவிளையாடலால் அனைத்தும் உருவாகும். அப்படி உருவாகிய அனைத்தும் காலத்திற்கு ஏற்ற மாதிரியும் அவைகள் அடைந்த பக்குவத்திற்கு ஏற்ற மாதிரியும் பலவகையான வினைப் பயன்களைப் பெறும். எப்போது இறைவனது திருவிளையாட்டால் உருவாகிய ஒன்று இறைவனிடமே சென்று சேர்கின்றதோ அப்போது அதன் உலக வாழ்க்கை முற்றுப் பெற்றுவிடும்.

உட்கருத்து: உலகத்தில் அனைத்தும் இறைவனது திருவிளையாட்டால்தான் உருவாகின்றது. அவை பிறந்து, வாழ்ந்து, இறந்து மீண்டும் பிறக்கும் உலகச் சுழற்சி அந்தந்த ஆன்மாக்களின் காலத்திற்கு ஏற்ற பக்குவத்தைப் பொறுத்து வினைப் பயனாக அமையும். எப்போது இறைவனிடமிருந்து வெளிவந்த ஆன்மா அதன் வினைப் பயன் முழுவதையும் கழித்து இறைவனிடமே சென்று கலந்து விடுகின்றதோ அப்போது அதன் உலகச் சுழற்சி முற்றுப் பெற்றுவிடுகிறது.

பாடல் #395

பாடல் #395: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

ஆகின்ற தன்மையி லக்கணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துட லாயுளன்
ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே.

விளக்கம் :

எலும்புகளை அணிந்து கொன்றை மலரைச் சூடியிருக்கும் சிவபெருமான் உலகத்தில் நிகழும் அனைத்து தொழிலின் தன்மையாக இருக்கின்றான். உருகுகின்ற தங்கம் போன்ற மினுமினுப்பான உடல் கொண்டவன் அவன். பிறவிக்கு செல்லும் உயிர்கள் வாழும் உடலாயும் இருக்கின்றான். பிறவி எடுத்த உயிருக்கு நிகழும் தன்மையிலும் அவனே கலந்திருந்து துணையாக இருப்பான்.

Image result for சதாசிவ மூர்த்தி

பாடல் #394

பாடல் #394: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்துய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுஉயிர்ப் பானே நடுவுநின் றானே.

விளக்கம் :

உடலில் ஆன்மாவை வைத்து உயிராக மாற்றுபவன் என் ஆருயிர் இறைவனே உயிர்களிடத்தில் கொண்ட மாபெரும் கருணையினால் உடலில் இணைந்த ஆன்மாவுடன் உயிராகக் கலந்து இருக்கின்றான். முன்பிறவியின் வினைகளைத் தீர்க்க வேண்டிப் பிறவி எடுத்த அந்த உயிரின் காலம் முடியும் வரை அந்த உயிர் செய்யும் எந்த செயலிலும் தலையிடாமல் நடு நிலையாக நின்று கவனித்துக் கொண்டு அந்த உயிர் வாழ வேண்டிய காலம் வரை அந்த உயிரின் உடலோடு ஒன்றாகக் கலந்து நன்றாகக் காத்துக் கொண்டு நிற்கின்றான் இறைவன்.

பாடல் #393

பாடல் #393: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்
தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்
தாக்குங் கலக்குந் தயாபரன் தானே.

விளக்கம்

உலகத்தில் இருக்கும் அனைத்தையும் தனது அருளால் படைத்து காத்து பின்பு அழிக்கின்றான் இறைவன். இந்த மூன்று தொழிலையும் செய்யும் இறைவன் எதனாலும் பாதிக்காமல் புனிதனாக இருந்து எண்ணங்களுக்கு எட்டாத உயரத்தில் எட்டுத்திசைகளில் உள்ள எல்லாவற்றிலும் அவன் கலந்து பரவியிருக்கிறான்.

Related image