பாடல் #405

பாடல் #405: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம்இறை
மஞ்சார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்துக்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்து
மைந்தார் பிறவியை அமைந்துநின் றானே.

விளக்கம்:

சிவந்த தாமரை மலரின் நிறத்தைப் போன்ற பிரம்மனும் கொழுந்து விட்டு எரியும் தீப் பிழம்பின் நிறத்தைக் கொண்ட எமது இறைவன் சிவபெருமானும் நீர் நிறைந்த மேகங்களைப் போன்ற கருமை நிறம் கொண்ட திருமாலும் சேர்ந்து மாயையால் பாசப்பிணைப்புகளை உண்டாக்கி உயிர்களை மயக்கி பூக்களை தங்களது கூந்தலில் சூடியிருக்கின்ற பெண்கள் கூட்டத்துடன் ஆண்களை கூடுமாறு செய்து அவர்களின் கூடுதலில் பிறவியை அமைத்து நிற்கின்றான் இறைவன்.

பாடல் #406

பாடல் #406: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

தேடும் திசைஎட்டுஞ் சீவன் உடலுயிர்
கூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம துள்ளத்தி னுள்நின்று
நாடும் வழக்கமும் நானுமறிந் தேனே.

விளக்கம்:

உயிர்கள் தேடிப் பார்க்கக்கூடிய எட்டுத் திசைகளிலும் உடலோடு உயிராக ஆன்மா கூடித் தனது வினையின் பயனாக பிறவி எடுக்கும்படி செய்த மாபெரும் குருவான இறைவன் ஆணாகவும் பெண்ணாகவும் பிறவி பெற்ற அந்த உயிர்களின் உள்ளத்துக்குள் நின்று காதல் மயக்கத்தினால் ஒருவரை ஒருவர் நாடிச் சென்று மேலும் பிறவிகளை உருவாக்க காரணமாகவும் இருப்பதை இறைவனது திருவருளால் யான் அறிந்துகொண்டேன்.

பாடல் #407

பாடல் #407: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

ஓராய மேஉல கேழும் படைப்பதும்
ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
ஓராய மேஉல கேழும் துடைப்பதும்
ஓராய மேஉட லோடுஉயிர் தானே.

விளக்கம்:

தேவர்கள் உடல் கொண்ட மூர்த்தியாகவும் தேவியர்கள் உயிர்கொண்ட சக்தியாகவும் கூடி நின்று ஏழு உலகங்களையும் படைத்து காத்து அழிக்கின்றனர்.

பாடல் #408

பாடல் #408: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இவர்கட்கு
ஆதி இவனேதான் அருளுகின் றானே.

விளக்கம்:

அனைத்திற்கும் தலைவனாகிய சிவம் ஒருவனும் அவனிடமிருந்து நன்மை புரியத் தோன்றிய சிவன் சக்தியாகிய இருவரும் சேர்ந்து அசுத்த மாயையில் பிறக்கும் மனித பிறப்பினரோடு சுத்தமாயையை கூட்டிச் சேர்த்து தேவர்களைப் படைத்தனர். இந்த தேவர்கள் இறைவனிடம் வந்து எங்களுக்கு இடும் பணி என்ன என்று கேட்டுப் பெற்று அப்படியே செய்வதாக ஏற்றுக்கொண்டு அதை செயல் படுத்துகின்றனர். இந்த தேவர்கள் அனைவருக்கும் தத்தமது பணிகளை கருணையால் அருளுபவன் ஆதியிலிருந்தே இருக்கின்ற இறைவன் ஆவான்.

உட்கருத்து:

தேவர்கள் அனைவருமே முதலில் மனிதர்களாகப் பிறந்து பிறகு தவம் செய்து இறைவனிடம் தமக்கு கொடுக்கும் வேலைகளைக் கேட்டு அவனது அருளால் பெற்று அதை நடத்துபவர்களாகும். இதை 302, 380, 398 பாடல்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பாடல் #409

பாடல் #409: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
அப்பரி சேதென்று புகலும் மனிதர்
அப்பரி சேஇருளாய் மூடிநின் றாரே.

விளக்கம்:

இறைவன் உலகத்தில் பரிசாகக் கொடுத்தது என்பத்து நான்கு இலட்சம் வகை உயிரினங்களாகும். இந்த அனைத்து உயிர்களிலும் உண்மையான பரிசாக அவற்றுடன் கலந்து உயிராக நிற்பது இறைவனே ஆகும். ஆனால் இறைவனை தமக்குள் அறியாமல் ஆணவத்தால் அவன் எங்கே இருக்கின்றான் என்று கேட்கும் மனிதர்களை மாயை என்னும் ஆணவ இருளாய் உயிர்களுக்கு பரிசாய் இருக்கும் இறைவனே மூடியிருகின்றான்.

பாடல் #410

பாடல் #410: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

ஆதித்தன் சந்திரன் அங்கி எண்பாலர்கள்
போதித்த வானொலி பொங்கெரி நீர்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே.

விளக்கம்:

சூரியன், சந்திரன் மற்றும் அக்கினி, இந்திரன், இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டுத்திசைகளுக்கான காவலர்களும் போதனை செய்யும் ஆகாயம், ஒலியை பரப்பும் காற்று, சுட்டெரிக்கும் நெருப்பு, நீர் இருக்கும் பூமி ஆகிய பஞ்ச பூதங்களும், கேட்டல், ருசித்தல், முகர்தல், பார்த்தல், உணர்தல் ஆகிய ஐந்து ஞானேந்திரியங்களும் வாக்கு, கைகள், கால்கள், உடல்கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் பிறப்புறுப்புக்கள் ஆகிய ஐந்து கர்மேந்திரியங்களும். செயல், புத்தி, சித்தம், அஹங்காரம் என நான்கு அந்தக்கரணங்கள் இவை அனைத்தும் அசையா சக்தி அசையும் சக்தியினால் தோன்றிய சுத்தமாயை அசுத்த மாயையில் இருந்து தோன்றியவையாகும்.