பாடல் #749

பாடல் #749: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர்
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு
கடிந்தனல் மூளக் கதுவவல் லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே.

விளக்கம்:

முறையாகச் செய்யும் அகயோகப் பயிற்சினால் சாதிக்கக்கூடிய விஷயங்களை அறியாமல் வேறு பல வழிகளில் அதை சாதிக்க வேண்டி முயற்சி செய்பவர்கள் கையில் அகல் விளக்கு இருந்தாலும் அதை அறியாமல் தீப்பந்தத்தை தேடி அலையும் மூடர்களைப் போன்றவர்களே. உயிர்களின் உடலுக்குள்ளேயே குண்டலினி சக்தி எனும் நெருப்பு மூலாதாரம் எனும் அகலில் தூங்கிக் கொண்டு இருக்கின்றது. அதை எழுப்பி சுழுமுனை நாடியின் வழியே எடுத்துச் சென்று சகஸ்ரதளத்தில் இருக்கும் ஜோதியில் பொருத்தி பெரிய விளக்காகப் பற்ற வைத்து அஞ்ஞானம் எனும் இருளை அகற்றி உண்மை ஞானத்தை உணர முடிந்த சாதகர்களுக்கு காலம் சக்கரம் போல் ஓடிக் கொண்டே இருக்கும் இந்த உலகத்தில் எதனாலும் பாதிக்கப் படாமல் என்றும் நீடித்து வாழும் வல்லமை கிடைக்கும்.

கருத்து: அகயோகப் பயிற்சிகளை முறையாகக் கடைபிடித்து ஞானத்தை உணர முடிந்த சாதகர்கள் நீடித்தகாலம் வாழலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.