பாடல் #604

பாடல் #604: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவனுமவ னாமே.

விளக்கம்:

இரண்டு கண்களையும் புருவ மத்தியிலுள்ள மூக்கின் நுனியில் வைத்து தியானம் செய்தால் உடலில் இருக்கும் சோர்வு நீங்கிவிடும். உடலுக்கு அழிவும் வராது. மனது ஒரு நிலையாக இருக்கும். உலக உணர்வு இருக்காது. தன்னை மறந்த நிலையில் உடல் இருக்கும். எதன் மீதும் நாட்டம் வராது. இந்த நிலையிலிருப்பவர்கள் சிவ நிலையில் இருப்பவர்களாவர்.

பாடல் #605

பாடல் #605: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்
டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே.

விளக்கம்:

இரண்டு கண்களையும் புருவ மத்தியிலுள்ள மூக்கின் மேல் வைத்து உள்ளிழுத்த மூச்சுக்காற்றை வெளியே விடாமல் அடக்கி வைத்து கர்மாவினால் வரும் உடல் மற்றும் மன துன்பங்கள் நீங்க வேண்டி தியானம் செய்தால் அதன் பயனாக உடலுக்குத் துன்பம் எதுவும் வராது. மனதில் எந்த பயமும் இருக்காது.

பாடல் #606

பாடல் #606: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

மணிகடல் யானை வளர்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே.

விளக்கம்:

தியானம் செய்வதால் உள்ளுக்குள் கேட்கக்கூடிய பத்துவித ஓசைகளாகிய 1. மணியோசை 2. கடல் அலையோசை 3. யானை பிளிறும் ஓசை 4. புல்லாங்குழலோசை 5. இடியோசை 6. வண்டின் ரீங்கார ஓசை 7. தும்பியின் முரலோசை 8. சங்கொலி 9. பேரிகை ஓசை 10. யாழிசை ஆகிய ஓசைகள் அனைத்தும் சிவனை பணிந்து தியானம் செய்பவர்களுக்கு மட்டுமே உருவாகும்.

பாடல் #607

பாடல் #607: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணையும் அண்டரண் டத்துச்
சுடர்மனு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே.

விளக்கம்:

கடலின் அலையோசை மேகத்தின் இடியோசை யானை பிளிறும் ஓசை ஆகிய வன்மையான ஓசைகளில் ஆரம்பித்து வீணையின் ஓசை அண்டமெல்லாம் கலந்து இருக்கும் ஓம் எனும் ஓசை புல்லாங்குழலின் மெல்லிய ஓசை சிறிய துளையுடைய சங்கொலி ஆகிய மென்மையான ஓசைகளில் முடியும் இந்த ஓசைகளை மன உறுதியோடு தியானம் செய்யும் யோகியர்களால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.

பாடல் #608

பாடல் #608: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்
ஓசை யதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசனை உணரவல் லார்க்கே.

விளக்கம்:

மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்து சிவபெருமானை உணரக் கூடியவர்களின் உள்ளிருந்து வெளிவரும் ஓசையானது பூவிலிருந்து வெளிவரும் நறுமணம் போலவும் சிவபெருமானின் ஓசை என்னும் சொரூபமாகவும் தேவர்கள் முதலிய அனைத்து உயிர்களுக்குள்ளும் பாசம் என்னும் உணர்வாகவும் அந்தப் பாசத்தின் கருணையால் உயிருக்கு உயிராகவும் கலந்து நிற்கும்.

பாடல் #609

பாடல் #609: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.

விளக்கம்:

தியானத்தினால் உள்ளிருந்து வெளிவரும் ஓசையின் இறுதியில் உண்மை என்னும் இறை சக்தியை உணரலாம். நல்ல யோகத்தினால் இறைவனுடன் கலந்து இருப்பதை உணரலாம். இறைவனைத் தவிர வேறு சிந்தனை இருக்காது. கர்மங்கள் நீங்கித் தூய்மையான சிவனை உணரலாம்.

பாடல் #610

பாடல் #610: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.

விளக்கம்:

தியானத்தினால் ஆறு சக்கரத்திலும் அடங்கியிருக்கும் குண்டலினி சக்தியிலிருந்து வெளிவரும் ஐந்து வகை அக்கினிகளான மூலாக்கினி, வடவாக்கினி, மின்னல் அக்கினி, கதிராவன் அக்கினி, திங்கள் அக்கினி ஆகியவை பிரகாசிக்கும் போது மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகிய இருள்கள் நீங்கும். அதன்பின் ஐந்து புலன்களாகிய சுவைத்தல், பார்த்தல், கேட்டல், முகர்தல், தொடுதல் ஆகிய உணர்வுகள் நீங்கப் பெற்று சிவபெருமானை அடையலாம்.

பாடல் #611

பாடல் #611: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

பள்ளி அறையிற் பகலே இருளில்லை
கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்
ஒள்ளி தறியிலோ ரோசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவில்லை தானே.

விளக்கம்:

தியானம் செய்பவர்களுக்கு உள்ளம் ஒளிமயமாக இருக்கும். அங்கே இருள் கிடையாது. அவர்களுக்கு மரணம் பற்றிய பயம் இருக்காது. இந்த நுண்ணறிவைப் பெற்ற யோகியர்கள் தங்களுக்குள் காணும் உள்ளொளி ஒரு யோசனை தூரம் பரவியிருக்கும். அந்த ஒளிமயமான வெள்ளி அறையாகிய மனதில் பயத்திற்கு இடமிருக்காது.

பாடல் #612

பாடல் #612: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே.

விளக்கம்:

யோகியர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட வைராக்கியம் குறையாமல் தியானத்தில் ஒன்றியபடி இருந்தால் மூலாதார அக்கினியும், ஆக்ஞா சந்திரனும், சகஸ்ரதள சூரியனும் ஆகிய மூன்றும் ஒரு சேர வளர்ந்து முதுகுத்தண்டு வழியாக குண்டலினியை மேலே ஏற்றினால் அவர்களின் உடல் உயிரை விட்டு பிரியாது நிலைத்து இருக்கும்.

பாடல் #613

பாடல் #613: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு
அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டல மாயமற் றோர்க்கே.

விளக்கம்:

தலை உச்சியிலுள்ள சகஸ்ரதள சூரியனுக்கு பிரம்மாவும் நெற்றிக்கு நடுவிலுள்ள ஆக்ஞா சந்திரனுக்கு விஷ்ணுவும் மூலாதார அக்கினிக்கு உருத்திரனும் தலைவர்களாக இருக்கின்றார்கள். அவர்களை அவர்கள் இருக்கும் இடத்திலேயே வைத்து தியானிப்பவர்களுக்கு தியானம் கைகூட அவர்கள் உதவுவார்கள்.