பாடல் #1296

பாடல் #1296: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

வேண்டிய வாறு கலகமு மாயிடும்
வேண்டிய வாறினுள் மெய்யது பெற்றபின்
வேண்டிய வாறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகுங் கருத்தே.

விளக்கம்:

பாடல் #1295 இல் உள்ள முறைகளின் படி பைரவரை பூஜித்து வழிபாட்டின் மூலமாகவும் பாடல் #1293 இல் உள்ளபடி ஏற்கனவே பெற்ற ஆறு விதமான அருள்களின் மூலமாகவும் சாதகர்கள் தம்மை நாடி வருகின்ற தீமைகளையும் நன்மைகளாக மாற்றி விட முடியும். அந்த ஆறு விதமான அருள்களுக்கு உள்ளிருக்கும் பேருண்மையான பரம்பொருளையும் தமக்குள் பெற்று உணர்ந்த பிறகு சாதகர்களுக்குள்ளிருந்து பரம்பொருள் கொடுக்கின்ற வழியைப் பின்பற்றி அவர்கள் சாதகம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் அவர்கள் என்ன நினைத்தாலும் அது அப்படியே நடக்கும்.

பாடல் #1280

பாடல் #1280: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

விளைந்த வெழுத்தது விந்துவும் நாதம்
விளைந்த வெழுத்தது சக்கர மாக
விளைந்த வெழுத்தவை மெய்யினு ணிற்கும்
விளைந்த வெழுத்தவை மந்திர மாமே.

விளக்கம்:

பாடல் #1279 இல் உள்ளபடி அனைத்தையும் உருவாக்கி இருக்கின்ற மூல விதையாகிய எழுத்துக்களே மந்திர வெளிச்சமாகவும் (எழுத்து வடிவம்) மந்திர சத்தமாகவும் (ஒலி வடிவம்) சக்கரமாகவும் (எழுத்தும் சத்தமும் சேர்ந்த சக்கர வடிவம்) இருக்கின்றது. இதுவே தர்மத்தின் வழி செயல்படும் உலகத்தின் அனைத்து செயல்களுக்கும் மூல காரணமாக நின்று செயலாற்றுகின்றது. இந்த மூல விதையாகிய எழுத்துக்களே அனைத்து மந்திரங்களாகவும் இருக்கின்றது.

பாடல் #1281

பாடல் #1281: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

மந்திர சக்கர மானவை சொல்லிடிற்
தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமா
தந்திரத் துள்ளு மிரேகையி லொன்றில்லை
பந்தமு மாகும் பிரணவ முன்னிடே.

விளக்கம்:

பாடல் #1280 இல் உள்ளபடி மூல விதையாக இருக்கின்ற எழுத்துக்களே மந்திரங்களாகவும் சக்கரங்களாகவும் ஆகின்ற விதத்தை சொல்லப் போனால் ஏரொளிச் சக்கரத்தின் மூலம் வெளிச்சமும் சத்தமும் வெளிப்பட்டு அதுவே மூல விதையாக இருக்கின்ற வழி வகைக்கு உள்ளே இருக்கின்ற எழுத்துக்களின் பலவிதமான வெளிச்ச வடிவங்களில் ஒன்றில் இருந்து எரிகின்ற நெருப்பு மயமாக ஒரு வட்டம் இருக்கின்றது. இந்த வட்டத்திற்கு உள்ளே இருக்கின்ற வடிவத்திற்கு ஏற்ற கோடுகளில் வெளிச்சத்தையும் சத்தத்தையும் ஒன்றாக பிணைக்கின்ற சக்திகள் ஒன்றும் இல்லை. ஓமெனும் பிரணவத்தின் சக்தியே வெளிச்சத்திற்கும் சத்தத்திற்கும் உள்ளிருக்கும் தியானப் பொருளாக இருந்து இரண்டையும் பிணைத்து வைத்திருக்கின்றது.

பாடல் #1282

பாடல் #1282: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

உன்னிட்ட வட்டத்தி லொத்தெழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை
தன்னிட் டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப்
பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே.

விளக்கம்:

பாடல் #1281 இல் உள்ளபடி ஓமெனும் பிரணவமே தியானப் பொருளாக உள்ளிருந்து பிணைத்திருக்கும் வெளிச்சத்திற்கும் சத்தத்திற்கும் உள்ளிருக்கும் எரிகின்ற நெருப்பு வட்டத்தோடு ஒன்றாகச் சேர்ந்து எழுகின்ற மந்திரங்கள் நிலைத்து நிற்பதனால் சக்கர வடிவத்திற்கு ஏற்ப பின்னிப் பிணைந்து இருக்கின்ற கோடுகள் நிலைத்து நிற்காமல் தாமாகவே மறைந்து போய்விடும். நெருப்பு வட்டத்திலிருந்து தானாகவே வெளிப்பட்டு எழுகின்ற மந்திரம் தளர்ச்சி இல்லாமல் சக்கரத்திற்குப் பின்னால் நிலையாக நிற்கும். அப்போது தானாகவே முறைப்படுத்திக் கொண்டு நிலையாக நிற்கின்ற அந்த மந்திரத்தை ஒளி வடிவமாக தரிசிக்க முடியும்.

பாடல் #1283

பாடல் #1283: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

பார்க்கலு மாகும் பகையறு சக்கரங்
காக்கலு மாகுங் கருத்திற் றடமெங்கும்
நோக்கலு மாகு நுணுக்கற்ற நுண்பொருள்
ஆக்கலு மாகு மறிந்துகொள் வார்க்கே.

விளக்கம்:

பாடல் #1282 இல் உள்ளபடி சாதகர்கள் தரிசிக்கின்ற மந்திரத்தின் ஒளி வடிவமாகிய ஏரொளிச் சக்கரமே உலகத்திற்கும் உடலுக்குமான பந்தங்களாகிய பசி தூக்கம் சோர்வு இயற்கை உபாதைகள் ஆகியவற்றை அறுக்கின்றது. ஆனாலும் சாதகர்கள் இந்த உலகத்திலேயே தங்களின் உடலை அழியாமல் நீண்ட காலம் பாதுகாக்க முடியும். சாதகர்கள் தங்களின் எண்ணங்கள் செல்கின்ற அனைத்து இடங்களையும் தாங்கள் அமர்ந்து இருக்கின்ற இடத்திலிருந்தே பார்க்க முடியும். இது மட்டுமின்றி ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு நுண்ணியது பெரியது என்கிற அளவுகள் இல்லாத மிகவும் அதிநுட்பமான பொருளாக இருக்கின்ற இறைவனையும் சாதகர்கள் தங்களுக்குள் அறிந்து கொள்ள முடியும். ஏரொளிச் சக்கரத்தை தமக்குள்ளிருந்து மேல் நோக்கி எழும்பச் செய்து அதன் ஒளி வடிவத்தை தரிசித்த சாதகர்களால் தான் இவை அனைத்தையும் செய்ய முடியும்.

பாடல் #1284

பாடல் #1284: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

அறிந்திடும் சக்கர மாதி யெழுத்து
விரிந்திடும் சக்கர மேலெழுத் தம்மை
பரிந்திடும் சக்கரம் பாரங்கி நாலும்
குவிந்திடும் சக்கரம் கூறலு மாமே.

விளக்கம்:

பாடல் #1283 இல் உள்ளபடி பரம்பொருளான இறைவனை தமக்குள் அறிந்து கொண்ட சாதகர்களால் ஏரொளிச் சக்கரத்தின் சக்தி மயங்களில் மூல மந்திரமான ஓங்காரத்தின் முதல் எழுத்தாகிய அகாரத்தில் இறைவனும் இரண்டாவது எழுத்தான உகாரத்தில் இறைவியும் மூன்றாவது எழுத்தாகிய மகாரத்தில் நிலம் நீர் காற்று அக்னி ஆகிய நான்கு பூதங்களும் ஒன்றாகக் குவிந்து இருப்பதை அறிந்து உணர்ந்து அதை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறவும் முடியும்.

பாடல் #1285

பாடல் #1285: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

கூறிய சக்கரத் துள்ளெழு மந்திரம்
மாறியல் பாக வமைந்து விரிந்திடுந்
தேறிய வஞ்சுடன் சேர்ந்தெழு மாரண
மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே.

விளக்கம்:

பாடல் #1284 இல் உள்ளபடி சக்தி மயங்களை நன்கு உணர்ந்து தெளிந்த சாதகர்கள் எடுத்துக் கூறிய ஏரொளிச் சக்கரத்தின் உள்ளிருந்து மேலெழுந்து வருகின்ற மந்திரமானது ஆறு விதமான இயல்புகளைக் கொண்டு ஒரு தன்மையில் சக்கரமாக அமைந்து அண்ட சராசரங்கள் அனைத்திற்கும் விரிந்து பரவுகின்றது. அதனுடைய இயல்பிற்கு சரிசமமான நிலையை அடைகின்ற நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களும் ஒன்றாகச் சேர்ந்து எழுகின்ற போது இயல்பிலேயே அழியக்கூடிய தன்மையைக் கொண்ட சாதகரின் உடலானது அவர் இந்த சாதகத்தை இடைவிடாமல் செய்து கொண்டே இருக்கின்ற போது தனது தன்மையில் இருந்து மாறி என்றும் அழியாத இயல்பைப் பெறுகின்றது.

கருத்து: சாதகர்கள் ஏரொளிச் சக்கரத்தின் சாதகத்தை இடைவிடாமல் செய்வதன் மூலம் எவ்வாறு என்றும் அழியாத உடலைப் பெறுகின்றார் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1286

பாடல் #1286: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

மதித்திடு மம்மையு மாமாது மாகும்
மதித்திடு மம்மையு மங்கன லொக்கும்
மதித்தங் கெழுந்தவை காரண மாகில்
கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே.

விளக்கம்:

பாடல் #1285 இல் உள்ளபடி ஏரொளிச் சக்கரத்திற்கான சாதகத்தை இடைவிடாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்ற சாதகர்களின் உள்ளுக்குள் இருந்து இயக்குகின்ற சக்தியே அண்ட சராசரங்களில் இருக்கின்ற பராசக்தியாகவும் இருக்கின்றது. இந்த சக்தியே சாதகர்களுக்குள் இருக்கின்ற மூலாக்கினிக்கு சரிசமமாக இருக்கின்றது. அதனால் சாதகருக்குள்ளிருந்து மேலெழுந்து வந்த ஏரொளிச் சக்கரம், பாடல் #1285 இல் உள்ளபடி ஐந்து பூதங்கள், பாடல் #1277 இல் உள்ளபடி அண்ட சராசரங்களுக்கும் விரிவடைகின்ற மந்திர ஒலிகள் போன்ற அனைத்திற்கும் இந்த சக்தியே மூல காரணமாகவும் இருக்கின்றது. அதனால் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கின்ற மூலாக்கினியும் வீறு கொண்டு எழுந்து மூலாதாரத்திலிருந்து மேலேறி வருகின்ற அனைத்தினாலும் சாதகரின் உடலுக்கும் உலகத்திற்குமான தொடர்புகளை அறுப்பதாகவும் அதுவே இருக்கின்றது.

பாடல் #1287

பாடல் #1287: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

கூடிய தம்பன மாரணம் வசிய
மாடியல் பாக வமைந்து செறிந்திடும்
பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்
தேடியுள் ளாகத் தெளிந்துகொள் வார்க்கே.

விளக்கம்:

பாடல் #1286 இல் உள்ளபடி ஏரொளிச் சக்கரத்திலிருந்து மேலெழுந்து வந்து ஒன்றாகக் கூடி இருக்கின்ற தம்பனம் மாரணம் வசியம் ஆகியவற்றுடன் மறைந்து இருக்கும் மோகனம் ஆகருடணம் உச்சாடனம் ஆகிய தன்மைகளும் சேர்ந்து மொத்தம் ஆறு விதமான தன்மைகளைக் கொண்ட மந்திரங்களும் அதனதன் இயல்பிலேயே ஏரொளிச் சக்கரத்துடன் அமைந்து செழிப்பான சக்தி மயமாக உருவாகும். இந்த சக்தி மயமானது சாதகரின் உடலுக்கு வெளியில் இருக்கும் ஐந்து பூதங்களின் மூலம் வருகின்ற எந்தவிதமான இடையூறுகளையும் சாதகரின் உடலுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தாதவாறு பாதுகாக்கும். இந்த நிலை ஏரொளிச் சக்கரத்தின் தன்மைகளைத் தமக்குள்ளேயே தேடி தெளிவு பெற்றவர்களுக்கே கிடைக்கும்.

பாடல் #1288

பாடல் #1288: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

தெளிந்திடும் சக்கர மூலத்தி னுள்ளே
யளிந்த வகாரத்தை யந்நடு வாக்கிக்
குளிர்ந்த வரவினைக் கூடியுள் வைத்து
வளிந்தவை யங்கெழு நாடிய காலே.

விளக்கம்:

பாடல் #1287 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள்ளேயே தேடி தெளிந்து கொண்ட ஏரொளிச் சக்கரத்தின் ஆதாரமான மூலாதாரத்திற்கு உள்ளே தமது ஏரொளிச் சக்கர சாதகத்தினால் அருளாகக் கிடைத்த ஓங்கார மந்திரத்தின் அகாரத்தை நடுவில் வைத்து அமைக்க வேண்டும். சாதகருக்குள்ளிருந்து வெளிவந்து அண்ட சராசரங்கள் முழுவதும் பரவி அங்குள்ள அனைத்து உலகத்தில் இருக்கின்ற உயிர்களுக்கும் அருளுவதற்கான சக்தியைப் பெறுவதற்கு மீண்டும் சாதகரின் உள்ளுக்குள் வருகின்ற எப்போதும் மாறாத சுழற்சியை செய்து கொண்டிருக்கும் குண்டலினி சக்தியோடு அந்த அகாரத்தை ஒன்றாகச் சேர்த்து அதற்கு உள்ளே வைத்தால் கிடைக்கும் அமைப்பிலிருந்து எழுகின்ற மந்திரத்தில் ஒரு ஒரு நாழிகையின் சிறிய அளவாகிய கால் பங்கு அளவு கிடைக்கும்.