அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #39

28-6-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்

கேள்வி: இறைவனின் நாமத்தை தொடர்ந்து கூறுவதன் பலன் என்ன?

இறைவனும் நாமமும் வேறல்ல. தெய்வ நாமத்தை நாம் முதலில் வசப்படுத்துகின்றோம். இதனை குருவிடம் பெற்றும் இல்லையெல் நாமாக நாடியும் இவ்வாக்குகளை ஓதிக்கொண்டே இருக்கின்றோம். நல்வழியில் சிரத்தையுடன் இவ்விதம் செய்துவர பின்பு அந்நாமம் நம்மை வசப்படுத்துகின்றது. இவ்விதம் இருக்கும் போது தெய்வம் நம்மை வசப்படுத்தியதாக கண்டு கொள்ளலாம். இதுவே நாம மந்திரத்தின் விஷேசமாகும்.

கேள்வி: இவ்வுலகில் சிறந்த மந்திரம் எது?

ராம நாமம் ஆகும். இதிலும் குறிப்பாக சிறப்பான அதிர்ச்சிகள் உருவாக்குவது ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் என்கின்ற மந்திரமாகும். இதன் முன் ஓர் ஓம் சேர்த்தல் வேண்டும். அப்பொழுதே இம்மந்திரம் முழுமையாகிறது. இது பெரும் அமைதியை அளிக்கவல்ல மந்திரம் மட்டுமல்லாது தொடர்ச்சியாக சிரத்தையுடன் ஜெபிக்க முக்தியை அளிக்க வல்லது. இதனை நன்கு உணர்தல் வேண்டும். சாதாரண நிலையில் இருக்கும் மக்கள் ஜெபித்து வர அவர்களை இது முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லும். ஏற்கனவே நல்நிலையில் இருக்கின்றவர் பெருமுக்திக்கு சிவநாமம் கூறுவது நலம். இதன் பொருள் என்னவென்றால் ஹரிதனிலிருந்து ஹரனுக்கு சென்று ஹரன்தனிலிருந்து பரம்பொருளில் கலத்தல் வேண்டும் என்பதாகும். இதற்கு காரணம் உண்டு ஹரி என்பவர் காக்க வல்லவர் சாதாரண லௌகீக காரியங்கள் என்பதை தொட்டு அனைத்தும் அவர் சிரத்தையாக கூர்ந்து கவனிக்கிறார். இவ்விதம் இருக்க செல்வங்கள் கொடுப்பதும் அவனே சுக வாழ்வது அளிப்பவனும் அவனே. முக்தியை அளிப்பது ருத்திரன் என்றும் முதன்மையில் ஓர் முக்தி நிலைக்கு ஹரி அழைத்துச் செல்ல ஹரன் அங்கிருந்து பெருமுக்திக்கும் பிறவி இல்லா நிலைக்கும் அழைத்துச் செல்வான் என்பதே பொருளாகின்றது.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #38

4-5-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

காலமதன் முக்கியத்துவம் இங்கும் உணர்த்திட உள்ளோம்
காலத்தில் அனைத்தும் நடத்துதல் வேண்டும் என்றும்
காலமே அனைத்திற்கும் விதி என்றும்
காலமே பிறப்பிற்கும் இறப்பிற்கும் மத்தியத்தில் நிற்பதென்றும்
காலமே அனைத்திலும் முக்கியத்துவம் காண்பது என்பேன்
காலமதில் முக்கியம் என்றிட்ட போதிலும்
காலமதை எவரும் பொருட்படுத்துவதில்லை
காலத்தில் ஓர் இடம் செல்ல வேண்டுமென்றால்
காலத்திற்குள் செல்லுதல் வேண்டும்
காலம் கடந்து செல்லுதல் பெருமையென்ற நிலை நவீன நிலையாக உள்ளது
காலம் தவிர்த்து செல்லுதல் தவிர்த்தல் வேண்டும் நீங்களும்
காலத்தின் முக்கியத்துவத்தை பொதுவாக கூறினோம்
காலத்தின் முக்கியத்துவம் ஆன்மீக நிலையில் கூறிட
காலமது சென்றிட்டால் ஞானமும் சென்றிடுமே
காலமது சென்றிட்டால் பிராப்தங்கள் விலகிடுமே
காலமது சென்றிட்டால் கிடைக்கக் கூடிய பாக்கியமும் விலகிடுமே
காலமதன் முக்கியத்துவம் பூஜை விதிகள் என்கின்ற வகைகளில் பார்த்தால்
காலத்தில் வராதோர் பயனற்ற நிலையும் காண்பரே
காலம் காலம் காலம் காலம் ஒன்றே காக்கும் ஏனெனில்
காலமும் சிவனும் ஒன்றே
காலத்திற்கும் மதிப்பினை கொடுக்கா விட்டால்
சிவனை அவமதிக்கும் நிலையும் காண்போம்.

ஓர் நாள் ஊதியம் சென்று விடும் என்றால் காலத்திற்குள் வேலை செய்யும் இடத்திற்கு ஓடுவதை அனைவரும் காண்கிறோம். இருப்பினும் தெய்வத்தை காக்க வைப்பது சகஜ நிலை ஆயிற்று. இவ்விதம் இருப்பது ஆன்மீக நிலைக்கும் சீரானதல்ல.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #37

7-4-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: மந்திரத்திற்கும் பலன் உண்டு என பலரும் அறிந்ததே. இறைவனின் நாமம் தனியென கூறினால் அதற்கு என்ன பலன்?

இறைவனும் அவன் நாமமும் தனியல்ல என்றும் இறைவனே நாமம் நாமமே இறைவனும் என்பதே விதியாகும். அவன் நாமத்தை எப்பொழுதும் கூறிக்கொண்டே இருக்க அவனே அருகில் இருக்கும் நிலையும் உண்டு. மந்திரங்கள் தந்திரங்கள் என்பதெல்லாம் அவசியமற்றதாகும். வெறும் நாமம் ஒன்றே ஜெபித்து வர அதிலிருந்து மாறாமல் இருந்தால் இறைவனை நாம் அங்கு சென்று வழிபட்ட பலன் உண்டாகி முக்திக்கும் வழி தானென உண்டாகும். பின்பு மந்திரம் தந்திரம் எல்லாம் என்பதெல்லாம் எதற்கு? மன சிரத்தை மனம் ஓர் நிலைப் படுத்தவே அனைத்தும். மாற்றாக சில காரியங்கள் சாதித்தல் வேண்டுமென்றால் இதற்கு மந்திரங்கள் தேவையானது. இறைவனை அடைதல் வேண்டும் என ஓர் நோக்கம் மட்டும் நிலைத்திருந்தால் தெய்வ நாமம் சதா (எப்பொழுதும்) உரைப்பது மட்டுமின்றி சதா தெய்வ எண்ணத்துடன் வாழ்வதே போதுமானது.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #36

11-3-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: சுகம் ஏன் நிலைப்பதில்லை?

சுகம் எது? துயரம் எது? என நாம் சிந்தித்தல் வேண்டும். சுகமது வந்து விட்டால் பின் துயரமும் வரும் என்பது உறுதி. ஏனெனில் இரண்டும் நம் சிருஷ்டியின் (உருவாக்கியது) விளைவே. சத்யத்தின் நிலையில் பார்த்திட்டால் சுகமும் இல்லை துயரமும் இல்லை. துயரமது நமது தோற்றத்தின் விளைவால் மேல் ஓங்கிட அதுவும் நம் தீமையை நீக்கிடவே வந்துள்ளது என கண்டு கொண்டால் துயரமும் சுக நிலையாகும். துயரம் என்பது நமது கர்ம விதிகளை நீக்கிட என்றென நன்கும் உணர்ந்திட அதிலும் சுகம் காணக்கூடும். இதற்கு உதாரணமாக குழந்தைகளின் சேஷ்டைகள் அனைத்தும் தாயவள் துயரமாக காண்பதுண்டா? அனைத்தும் அக்குழந்தைக்காக தியாகம் செய்து எவ்வித துயரமும் தாங்கி கொள்வதை எண்ணி பாருங்கள். இதுவே துயரத்தை சுகமாக ஏற்றுக் கொள்ளும் நிலை இவ்விதமே இறைவன் என அழைக்கும் தாய் நாம் அப்அப்பொழுது கேட்கும் வினாவிற்கும் சேஷ்டைகள் அனைத்தும் ஆனந்தமாகவே பொறுத்துக் கொள்கின்றாள். ஆண்டவன் என் மேல் கோபம் கொள்கின்றார் என கூறுவது தவறாகின்றது. ஆண்டவன் தண்டிப்பதில்லை என மீண்டும் மீண்டும் கூறுகின்றோம். அனைத்தும் நம்மை நாமே தண்டிக்கும் நிலையாகும் ஏனெனில் நாம் பயிரிட்டது நாம் உறுதியாக அறுவடை செய்திடல் வேண்டும் என்பதே இயற்கையின் விதி சுகம் வரும் காலங்களில் உறுதியாக பின்பு துயரம் வரும் என உறுதி காண்பீர். அத்துயரத்தை நல்வழியில் ஸ்விகரித்தல் (எடுத்துக்கொள்ள) வேண்டும் அதையே வாய்ப்பாக ஏற்று நம்முடைய கர்மவிதிகளை மாற்றிட ஓர் மார்க்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #35

12-2-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஆன்மீகம் இல்லை தெய்வத்தை நாடி செல்லும் காலங்ளில் உடலை அடக்க வேண்டுமா?

ஆம் அடக்க வேண்டியது உடலே என்றும் கூற இயலும். ஏனெனில் உணர்ச்சிகள் பொதுவாக ருசி கண்கள் வழியே காணுதல் காது வழி கேட்டல் ஸ்பரிசம் (தொடு உணர்ச்சி) உணர்வுகள் அனைத்தும் அடக்குதல் வேண்டும். இருப்பினும் இவையாவும் அடங்குவதற்கு எது உபயோகம் என சிந்தித்தால் மனமே என நன்கு உணர்தல் வேண்டும். மனமதை முழுமையாக அடக்குதல் வேண்டும். ஓர் பொருள் உட்கொள்ள தகாது என உணர்ந்தும் நாக்கின் ருசிக்கு அடிமையாகி அதை சாப்பிடுகின்றோம். அதன் விளைவுகளை அனுபவிக்கின்றோம் குறிப்பாக கொழுப்பு சக்தி அதிகமா இருக்கும் நபர் இதை நன்கு உணர்வார். வேண்டாம் என மனம் கூறிய பின்பும் மீறி ருசிக்கு அடிமையாகி சாப்பிடுகின்றனர். மனதில் திடமிருந்தால் இது நேரிட்டிருக்காது இந்நிலை காண மனதை உறுதிப்படுத்த வேண்டும். மனதை திடப்படுத்த வேண்டும் மனம் நம் வசம் இருத்தல் வேண்டும் நம் மனம் கட்டுக்குள் அடங்கி விட்டால் உடல் நம் கட்டுக்குள் அடங்கி விடும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #34

16-1-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஏகன் என்றால் என்ன? ஏகனை அடைய என்ன வழி? அதாவது ஏகனுக்குள் செல்ல என்ன வழி?

இதற்கு விடையானது வினாவைப் போல் எளிதாகவும் கடினமாகவும் உள்ளதாம். ஏனெனில் ஏகன் என்னவென வினாவிட்டால் அதற்கு விடை எளிதாக ஒன்று கூறுவோம். இவ்வொன்று என்பது என்னவென்றால் இது கடினமான விடையும் ஆகின்றது. ஒன்று ஏகம் என்பது பரம்பொருள் பரம்பொருள் என்பது என்னவென வினாவிட்டால் அது சத்தியம் அதுவே தூய்மை அதுவே மாசற்றது என்பதெல்லாம் விளக்கிக் கொண்டே போக இயலும். இருப்பினும் கேள்வி இதல்ல. ஏகனை அடைய என்ன வழி என்பதேயாகின்றது.

ஏகன் எங்கு இருக்கின்றான் என்பதை முதன்மையில் உணர்தல் வேண்டும். ஏகன் அனைத்திலும் உள்ளான் என்பதை உணர்ந்து அத்தகைய ஏகன் நமக்குள்ளும் உள்ளான் என்பதை உறுதியாக நம்புதல் வேண்டும் என்பதே முதல் படியாகின்றது. அந்த உள்ளிருக்கும் ஏகனை அடைதல் வேண்டுமென்றால் நாம் எங்கு செல்ல வேண்டுமென சிந்தித்தால் உள்ளுக்குள் செல்லுதல் வேண்டும் என விடையும் எளிதாக கிடைக்கின்றது. இதுவரைக்கும் எளிதாகவே உள்ளது இதற்கும் மேலாகவே கடினம் எவ்விதம் அடைகின்றது என்பது இதற்கு எளிதான வழிகள் இல்லை என்பதும் இங்கு யாம் எடுத்துரைக்கின்றோம். உள் செல்லுதல் வேண்டும் மனம் முழுமையாக உள்தனில் நிலைத்தல் வேண்டுமென்றல் நம் எண்ணம் வெளியாக செல்லுதலாகாது என்பதே இதற்கு விளக்கமாகின்றது. எண்ணம் வெளியாக செல்லுதல் வேண்டாம் என்றால் கட்டுப்பாடு வேண்டும் என்றும் வெளியாக நாம் கண்பது அநித்யமானது (உண்மையில்லாதது) என்றும் நித்யமாக நிலைப்பது ஏகன் மட்டுமே என்றும் மனதில் உறுதியாக நிறுத்தி இயன்ற அளவிற்கு மனமதை உள் நிறுத்தல் வேண்டும் என்றும் விளக்கமாக இங்கு அளித்தோம்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #33

20-12-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஆன்மீக பாதையில் செல்லும் காலத்தில் அன்பு காட்டுவது விடுதல் வேண்டுமோ?

அடிப்படையாக கூறுவது அன்பே சிவம் என்று அனைத்தும் அன்புக்குரியதாம். குடும்பத்தில் அன்பு காட்ட வேண்டாம் என்று யாம் கூறியதில்லை. குடும்பத்தில் காட்டும் அன்பை உலகத்தில் காட்டுவாய் என்றே கூறுகிறோம். அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்பு காட்டுதல் வேண்டும். குறுகிய குடும்பத்தில் காட்டிய அன்பு வெளியில் உள்ள படைப்புக்கு அணைத்திற்கும் காட்டுதல் வேண்டும் என்பதே உண்மையான ஆன்மீக நிலை. இதனை உணராமல் அன்பு காட்டுவது தவறு. அன்பு காட்டாதிருந்தால் ஆன்மீக வளர்ச்சி உண்டாகும் என எண்ணிக் கொண்டால் இது பாதாளத்திற்கே செல்ல வேண்டிய நிலை உண்டாகும். அன்பு அன்பு அன்பு ஏனெனில் நாம் இன்று இங்கு நிலைப்பதே இறைவனின் அன்பின் விளைவாகும் என்பதை மறவாது அவ்அன்பினை பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும் அனைத்து ஜீவராணிகளும் உமது அன்பை பெறுதல் வேண்டும் என்பதே ஓர் நோக்கமாகக் கொண்டால் அதுவே ஜெயம் என கூறுகின்றோம்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #32

கேள்வி: இறைவன் கொடியவனா நம்மை தண்டிக்க?

தண்டிப்பது இறைவன் அல்ல நீங்களே உங்களை தண்டிக்கிறீர்கள். ஏனெனில் இறைவன் நல்வழியில் நமக்குள் இயங்குகின்றான் என உணர்ந்து கொண்டால் நாம் தவறு செய்ய மாட்டோம் அல்லவா! இவ்விதம் உணர்ந்து தவறுகள் செய்திட அதன் விளைவு நம்மை தண்டிக்கின்றது. இறைவன் வெறும் சாட்சியாக நிற்கின்றான் என்பதை நன்கு உணருதல் வேண்டும். தண்டனைகளை தவிர்த்திட எப்பொழுதும் இறைவன் உள்ளிருந்து நம்மை இயக்குகின்றான் இறைவனை சட்சியாக நிற்கும் போது தீயவை யாதும் செய்தல் கூடாது என்று மட்டுமல்லாது தீயவை சிந்தித்தல் கூடாது என்பதை மனமதில் நிறுத்தி செயல்பட அனைத்தும் நல்வழியில் நீங்கும் பின்பு தண்டனை இல்லை.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #31

26-10-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: மகான்களுக்கு ஜெயந்தியும் (பிறந்த நாள்) ஆராதனையும் (முக்தி அடைந்த நாள்) நல்வழியில் கொண்டாடப்படுகிறது இதில் எது முக்கியத்துமானது?

பொதுவாக ஆதியில்லாது அந்தம் இல்லை. அந்தம் இல்லாமல் ஆதியும் இல்லை என்பது விதியாகும். இவ்விதம் பார்க்க இரண்டும் முக்கியமாகும். இருப்பினும் முக்கியத்துவம் காண்பது பிறப்பே ஆகும். பிறப்பு என்பது மானிடப் பிறப்பாகும். மானிடனாகப் பிறந்து பல பிறவி கண்ட பின்பே முக்தி நிலை அடைய முடிகிறது என்பதால் ஜெயந்தியே முக்கியத்துவம் ஆகும். அந்நாளில் மகான்களிடம் பெறும் வாழ்த்துக்களும் ஆசிகளும் பெருமளவில் நலம் தரும். ஆராதனை என்பதும் முக்தி என்பதும் ஓர் சாதனையின் நாளில் பக்தர்களும் மக்களும் முக்தி பெற்றவர்களை மட்டுமல்லாது அவரின் சாதனையையும் போற்றுகின்றனர். இந்நிலையில் முதன்மையில் வந்தது பிறப்பு, பின்பு வந்தது முக்தி என்பதால் முக்கியத்துவம் காண்பது முதலில் வந்த பிறப்பு ஆகும். சாதனையில் முக்தி பெரிதாக தோன்றினாலும் பிறவி இல்லையெல் முக்தி இல்லை.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #30

29-9-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீக நிலை அடைய வேண்டும் என பலரும் எண்ணம் கொண்டும் அந்நிலையில் சிறப்புகள் காணுதல் வேண்டும் என ஏக்கம் கொண்டனர். அதற்குரிய பயிற்சிகள் யாரும் செய்வதில்லை. பயிற்சிகளை கையாளவே அனைத்தும் கைகூடும் என்பதை மறந்தீர்களே. அனைவரும் இன்று ஓடுகின்றனர் செல்வத்தை நாடியே செல்வம் வேண்டும் அதை மறுப்பதற்கில்லை. எந்த அளவிற்கு வேண்டும் என்பதே கேள்வியாகின்றது. மானிட நிலையில் வேண்டியது உடை, உணவு, இருப்பதற்கு ஓர் இடம் இதற்கு மேலாக சொத்துக்கள் சேர்ப்பது ஏன் என கேள்வி கேட்போம். குழந்தைகளுக்கு வேண்டும் என்று கூறினால் தவறாகாது குழந்தைகளால் அச்சொத்துகளை காக்க முடியுமா என கேள்வி கேட்போம் இல்லை அவர்கள் ஏமாற்றப்பட்டால்? என கேள்வி கேட்போம் இவையாவும் உங்களது பொறுப்பல்ல படைத்த இறைவனின் பொறுப்பே பின்பு நீங்கள் ஏன் செல்வத்தை நோக்கி ஓடுகின்றிர்கள். சிறு காலம் தெய்வ சிந்தனையில் ஈடுபடுங்கள்.

இரண்டாவதாக எதிர்காலங்கள் அறிய வேண்டும் என அறிய ஆவல் ஏன்? நடப்பது நன்றாகவே நடக்கும் அதை தடை படுத்த முடியாது. வீணாக ஜாதகத்தை எடுத்து அங்கும் இங்கும் அலைவதை சிறிது நிறுத்துங்கள். இறைவன் மீது பரிபூரணமாக நம்பிக்கை வையுங்கள். ஜாதக நிலைகளில் என்ன நடக்கும் என அறிந்து விட்டால் வருவதை உங்களால் தவிர்க்க முடியுமா? இயலாத நிலையில் அதை அறிந்து கொள்ள நினைப்பது ஏன்? ஜோதிடம் என்பது ஓர் பொய்யான அறிவு என்று யாம் இங்கு எடுத்துரைக்கவில்லை அதில் சத்தியம் உண்டு. ஆனால் அதை தெரிந்து கொண்டு நீ என்ன செய்யப் போகின்றாய் என்பது தான் கேள்வியாகின்றது. இறைவனிடம் அனைத்தும் விட்டு விட்டு சரணடைந்த பின் எதிர்காலம் அவன் பொறுப்பாகின்றது. அதனை அறியாமல் அங்கும் இங்கும் ஓடி பல நூறு பணம் செலவு செய்து அவன் கூறும் பரிகாரங்களும் செய்த பின் இறைவனை குறை சொல்வது ஆகாது. முழுமையாக சரணடைந்தவனுக்கு எவ்வித தோல்விகள் நேரிடாது ஏனெனில் அவன் மனப்பக்குவன் அந்த அளவிற்கு இருக்கும். தன் கர்ம வினை தன்னை தொடர்ந்தது என அவன் அறிவான். இதற்கு இறைவன் பொறுப்பாக மாட்டான் சகிக்கும் தன்மை மட்டும் தருவான் என்பதை முழுமையாக உணர்ந்து சரணடைந்து முழுமையாக இறைவனைஅடையுங்கள் இல்லையேல் அகங்காரத்தின் மறுபக்கமாக நான் செய்கிறேன் என்ற நம்பிக்கையில் செல்லுங்கள் மத்தியில் கிடந்து தவழாதிர்கள்.