மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #38

23-5-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: நான் என்றால் என்ன?

நான் என்பது என்ன? இதனைத் தேடி நாடிப் பல காலங்களில் தவம் இருந்தவர்களுள் யாமும் ஒருவனே. இவ்விதம் இருக்க நான் என்பதைத் தேடுவதில் தீவிர முயற்சிகள் வேண்டும் என்று சொல்வோம். இங்கு யாம் சொல்வது என்னவென்றால் நான் என்கின்ற அகங்கார நிலை மாறுதல் வேண்டும் என்பதேயாகும். இவ்வாண்டு தொட்டு நான் செய்தேன் என்பதற்கு வழியே எங்கும் இருத்தல் ஆகாது. நான் என்கின்றது அகங்காரம் மட்டுமல்லாது உண்மையான நிலை இல்லை. நாம் என்பதே சரியானது ஆகும். ஏன் என்றால் ஒவ்வொரு செயலிலும் முயற்சியிலும் இறைவன் நம்முடன் இருக்கின்றான் என்பதை மறக்கக்கூடாது.

இறைவன் உடன் இருக்கும் இந்த நிலையை அடையவே ஞானிகளும் துறவிகளும் யாம் செய்கின்றோம் யாம் பார்க்கின்றோம் என இறைவனையும் சேர்த்துக் சொல்கின்றனர். ஏன் என்றால் உடன் இறைவனையும் சேர்க்கின்றனர். இவ்விதம் வெறும் வார்த்தையில் சேர்ந்தால் மட்டும் போதாது அன்பர்களே. உண்மையாகவே இறைவன் கூட நின்று ஒவ்வொரு செயல்களிலும் ஈடுபடுகின்றான் என்பதை பரிபூரணமாக நீங்கள் நம்புதல் வேண்டும். ஏன் எனில் இதுவே உண்மையான நிலை. என் செயலால் இனி ஆவது ஒன்றுமில்லை என்பதைப் பரிபூரணமாக ஏற்றுக் கொண்டால் அனைத்தும் நல்வழியில் நீங்கும் என்பது மட்டுமல்லாது அமைதியையும் காண இயலும் என்றும் விளக்கிட்டோமே. இக்காலத்தில் கலியுகத் தன்மையில் பிரதானமாக எவ்வளவு செலவு செய்தாலும் கிடைக்காத பொருள் அமைதியே. அந்த அமைதி வேண்டும் எனில் அனைத்தையும் இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்து இனி அனைத்தும் உமது செயலே என ஒப்புக் கொள்வதுதான். இதற்கு பொருள் நாம் யாதும் செய்வது வேண்டாம் என்பதல்ல. எதிர்பார்ப்பின்றி செயல்படுவீர்களாக. அனைத்தும் தானாக கைகூடும்.

பாடல் #699

பாடல் #699: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்
முன்னுறும் ஐம்பத்தொ டொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயுவின் முடிவகை யாமே.

விளக்கம்:

தலையுச்சியின் முன்னே வீற்றிருக்கும் இறைசக்தியுடன் கீழிருந்து மேலெழுந்து சென்ற மூச்சுக்காற்று ஒன்றாகச் சேர்ந்து கலக்கும் விதத்தை சொன்னால் அடியிலிருந்து சுழுமுனை நாடி வழியே மேலே எழும்பும் வாயுவானது உயிர் சக்தியாகிய குண்டலினியை எழுப்பி மூலாதாரத்திலிருந்து ஒவ்வொரு சக்கரங்களாக அவற்றின் ஐம்ப்தத்தோரு இதழ்களின் வழியே சக்தியூட்டி (பாடல் #696 இல் கொடுத்துள்ளபடி) ஐந்து புலன்களுக்கும் செயல் திறனை அளித்து மொத்தமாய் மேலே சென்று அங்கிருக்கும் சகஸ்ரார தளத்தில் முடிவடைகின்றது. உயிர்சக்தி அங்கிருக்கும் இறை சக்தியோடு கலக்கும் முறை இதுவே ஆகும்.

பாடல் #698

பாடல் #698: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஒன்றது வாகிய தத்துவ நாயகி
ஒன்றது கால்கொண்டு ஊர்வகை சொல்லிடில்
ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்றது காலம் எடுத்தருளும் முன்னே.

விளக்கம்:

தனக்கு நிகராக ஒன்றும் இல்லாமல் தானே தனிப்பொருளாய் இருக்கும் இறை சக்தியானது ஒன்றே ஆகும். அந்த சக்தி மூச்சுக்காற்றை இயக்கி யோக நிலையில் நடுநாடியாகிய ஒன்றன் வழியே செலுத்தி மேல் ஏறுகின்ற முறையைக் கூறினால் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்று ஆயிரமாயிரம் நாடி நரம்புகளைக் கடந்து உடல் முழுவதற்கும் சக்தியூட்டி அதில் ஒவ்வொரு சக்கரங்களாக வெற்றி கொண்டு மேலெழுந்து அங்கே சுழுமுனை நாடியில் கவிழ்ந்த சகஸ்ரதளத்தை நிமிர்ந்த சகஸ்ரதளமாய் மாற்றி அமைத்து காலத்தையும் கடக்கச் செய்யும்.

பாடல் #697

பாடல் #697: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்தருளும் ஒன்றே.

விளக்கம்:

பத்துத் திசைகளையும் பத்து முகங்களாகக் கொண்டிருக்கும் சதாசிவசக்திக்கு உயிரின் மூச்சிக்காற்றுடன் உடலில் இருக்கும் பத்து வாயுக்களும் பத்து ஆயுதங்களாகும். இந்த பத்து ஆயுதங்களும் கீழே பார்த்த சகஸ்ரதளம் மேலே பார்த்த சகஸ்ரதளம் என்று இரண்டு ஆயுதங்களான அச்சக்தியுடன் உருவமற்ற நிலையில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலராக இருக்கும் சகஸ்ரார தளத்தில் என்றும் ஒடுங்கியே இருந்து பலகாலங்கள் பேரின்பத்தில் திளைத்திருக்க வைத்து அருளுவது சதாசிவமூர்த்தியாகிய ஒரு சக்தியே ஆகும்.

கருத்து: ஆயிரம் இதழ்கள் கொண்ட மலர்ந்த தாமரை மலராத தாமரை ஆகிய இரண்டுவித சக்திகளையும் பத்து திசைகளாகிய முகங்களையும் பத்து வாயுக்களாகிய ஆயுதங்களையும் கொண்டிருக்கும் சதாசிவமூர்த்தியாகிய இறை சக்தி ஒன்றுதான் எட்டுவிதமான சித்திகள் அடைந்தவர்களுக்கு அனைத்தையும் அருளுகின்றது.

பத்துவித காற்றுக்கள்:

  1. பிராணன் – உயிர்க்காற்று
  2. அபாணன் – மலக் காற்று
  3. வியானன் – தொழிற்காற்று
  4. உதானன் – ஒலிக்காற்று
  5. சமானன் – நிரவுக்காற்று
  6. நாகன் – விழிக்காற்று
  7. கூர்மன் – இமைக்காற்று
  8. கிருகரன் – தும்மற் காற்று
  9. தேவதத்தன் – கொட்டாவிக் காற்று
  10. தனஞ்செயன் – வீங்கல் காற்று

பாடல் #696

பாடல் #696: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதொ டொன்றாய்த்
திரண்டது காலம் எடுத்தது அஞ்சே.

விளக்கம் :

இடைகலை பிங்கலை நாடிகளின் மேல் சுழுமுனைத் தலையில் இருக்கும் சிவசத்தி இடைகலை பிங்கலை இரண்டு நாடிகள் வழியாக மூச்சுக்காற்று செயல் புரிகின்ற முறையைக் கூறினால் உடலில் உள்ள மண்டலங்களையும் நரம்புத் தொகுதிகளையும் தாண்டி ஆறு சக்கரங்களில் உள்ள ஐம்பத்தொன்று கைகள் வழியாக கலந்து ஆயிரம் தாமரை இதழ்களைக் கொண்ட சகஸ்ரதளத்தை அடைகின்றன. காலத்தைக் கடப்பதற்குத் துணை செய்வது ஐம்முகச் சக்தி ஆகும். இந்நிலையில் உயிரின் காலத்தைக் கடக்கச் செய்வதும் ஐம்முகங்களோடு கூடிய சதாசிவனின் நாயகியாகும்.

பாடல் #695

பாடல் #695: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிர முந்நூற் றொடைஞ்சுள
ஆறது வாயிர மாகு மருவழி
ஆறது வாக வளர்ப்ப திரண்டே.

விளக்கம் :

தலைக்கு உள்ளே ஆறு போல உண்டாகின்ற அமுதம் ஆயிரத்து முந்நூற்று ஐந்து நரம்புத் தொகுதிகள் வழியாக செல்கின்றன. அவ்வாறு செல்லும் அமுதம் அந்த நரம்புத் தொகுதிகளின் மறுபகுதியில் உள்ள சகஸ்ரதளத்தை அடைந்து உயிரை பக்குவப்படுத்தி மேல்நிலைக்கு கொண்டு செல்வது சிவசத்திகளே ஆகும்.

கருத்து : சிவசக்திகளே அமுதத்தை நரம்புத்தொகுதிகளின் வழியாக சகஸ்ரதளத்திற்கு கொண்டு சென்று உயிரை பக்குவப்படுத்துகிறார்கள்.

பாடல் #694

பாடல் #694: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
காலது அக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்ஞூற் றொருபத்து மூன்றையும்
காலது வேமண்டிக் கொண்டஇவ் வாறே.

விளக்கம்:

மூச்சுக்காற்றோடு உயிர் கலக்கும் முறை என்னவென்றால் உடம்பில் மொத்தம் உள்ளதாக யோக நூல்கள் கூறும் எழுபதாயிரம் நாடிகளில் ஐநூறு நாடிகள் சிறப்பானவை. இவற்றில் பத்து நாடிகள் மிகவும் சிறப்பானவை (பாடல் #595 இல் உள்ளபடி). அதிலும் சிறப்பானவை இடைகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளாகும். இந்த ஐநூற்று பதிமூன்று நாடிகளும் சுழுமுனை நாடியிலிருக்கும் சிவசக்தியோடு கலந்து இருந்தால் மூச்சுக்காற்றோடு உயிர் கலந்து இருக்கும்.

கருத்து: சிறப்பான ஐநூற்றி பதிமூன்று நாடிகளும் சிவசக்தியோடு கலந்திருந்தால் மூச்சுக்காற்றோடு உயிர் கலந்து இருக்கும்.

பாடல் #693

பாடல் #693: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

பேரொளி யாகிய பெரியஅவ் வேட்டையும்
பாரொளி யாகப் பதைப்பறக் கண்டவன்
தாரொளி யாகத் தரணி முழுதுமாம்
ஓரொளி யாகிய காலொளி காணுமே.

விளக்கம்:

சகஸ்ரதளத்தின் மேலே இருக்கும் பெரிய தாமரை மலர் போன்ற பேரொளியைத் தரிசிக்கக் கூடிய சக்தியைப் பெற்றவன் தனது மூச்சுக்காற்று ஒரு ஒளியாக மாறி அது பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பதைக் காண முடியும்.

கருத்து: பேரொளியைத் தரிசிக்கும் சக்தியுடையவன் தனது மூச்சுக்காற்றை பிரபஞ்சம் முழுவதும் பரவும் ஒளியாகக் காண முடியும்.

பாடல் #692

பாடல் #692: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டபின்
பேயக மாகிய பேரொளி காணுமே.

விளக்கம்:

பாடல் #691 இல் உள்ளபடி சதாசிவமாகிய ஒளியை உணர்ந்தபின் ஆன்மாவின் பிறப்பிடமாகிய சதாசிவம் தமக்குள்ளேயே தழைத்து இருக்கும். உலகப் பற்றுகள் அனைத்தும் தம்மை விட்டு விலகுவதைக் உணர்ந்தபின் தமக்குள் இருக்கும் இருள் அனைத்தையும் விலக்கும் பேரொளியைக் காணலாம்.

கருத்து: உலகப் பற்றுகள் தம்மை விட்டு விலகுவதை உணர்ந்தபின் அனைத்து இருளையும் அகற்றும் பேரொளியைத் தரிசிக்கலாம்.

பாடல் #691

பாடல் #691: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

காமரு தத்துவ மானது வந்தபின்
பூமரு கந்தம் புவனம தாயிடும்
மாமரு வுன்னிட மெய்திடு மானனாய்
நாமரு வும்ஒளி நாயக மானதே.

விளக்கம்:

பாடல் #690 இல் உள்ளபடி எல்லா உயிர்களையும் தன்வசப்படுத்தும் சக்தியைப் பெற்றபின் உயிர்களைத் தன் விருப்பத்திற்கேற்ப செயல்படுத்தி உலகத்தை மாற்றலாம். ஆனாலும் அனைத்தையும் தன்வசப்படுத்தும் பெருஞ்சக்தியான சதாசிவத்தை ஒளியாக தன் உள்ளத்தில் வைத்திருந்தால் அந்த ஒளியே நம்மை வசப்படுத்தும் சதாசிவமாகிவிடும்.

கருத்து: வசித்துவம் சித்தி பெற்றவர் உலகத்தை தன் எண்ணத்திற்கேற்ப மாற்றும் ஆற்றலைப் பெறுவார்.