பாடல் #566

பாடல் #566: மூன்றாம் தந்திரம் -5 பிராணாயாமம்

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்
கள்ளுண்ணவும் வேண்டாந் தானே களிதருந்
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.

விளக்கம்:

பறவையை விட வேகமாகச் செல்லக்கூடிய சுவாசத்தை பிராணாயாம் செய்து தலையிலுள்ள சகஸ்ரதளத்தை நோக்கி எடுத்துச் சென்றால் கள் (போதைப்பொருள்) அருந்தாமலேயை மனம் மகிழ்ச்சி (தன்னை மறந்த நிலை) அடையும். உடல் சுறுசுறுப்புடன் இருக்கும். உடல் சோர்வு நீங்கும். இறைவனை உணர வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கே இந்த உண்மையை கூறுகிறோம்.

பாடல் #565

பாடல் #565: மூன்றாம் தந்திரம் -5 பிராணாயாமம்

ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.

விளக்கம்:

மனம் என்னும் ஆரியன் மிகவும் நல்லவன் அவனிடம் இடகலை ( மூக்கின் இடது நாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படும்) பிங்கலை (மூக்கின் வலதுநாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படும்) என இரண்டு சுவாசங்கள் உள்ளது. அந்த சுவாசத்தை வெளியே விட்டு உள்ளே நிறுத்தி வைக்கும் திறமையை அறிபவர் யாரும் இல்லை. சீடனைப் பற்றி அனைத்தும் அறிந்த குருவின் அருள் பெற்றால் இடகலை, பிங்கலை ஆகிய இரண்டு சுவாசங்களையும் அடக்கி மனதை ஒருநிலைப்படுத்தி நிலையாக வைக்கலாம்.

பாடல் #564

பாடல் #564: மூன்றாம் தந்திரம் -5 பிராணாயாமம்

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக் கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திவிடுந் தானே.

விளக்கம்:

உடலின் ஐம்புலன்களான 1. பார்த்தல், 2. கேட்டல், 3. முகர்தல், 4. சுவைத்தல், 5. தொடு உணர்ச்சி ஆகிய ஐந்து புலன்களையும் வைத்துள்ள உடம்பின் தலைவனாக இருக்கக்கூடிய ஆத்மாவானது இறைவனை அடைய மேல் நிலைக்கு செல்ல மனதுடன் மூச்சுக்காற்று ஒன்று உள்ளது, அந்த மூச்சுக்காற்று பயிற்சி செய்து உண்மையான இறைவனை அடைய எண்ணம் கொண்டோர்க்கு மனதை ஒருநிலைப்படுத்த நன்கு உதவும். இறைவுணர்வு இல்லாமல் தேவையில்லாதவறை நினைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மூச்சுக்காற்று அடங்காமல் அவர்களை கீழ் நிலைக்கு கொண்டு செல்லும்.

பாடல் #563

பாடல் #563: மூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும்)

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே.

விளக்கம்:

  1. பத்திரம் (பத்திராசனம்) 2. கோமுகம் (கோமுகாசனம்) 3. பங்கயம் (பத்மாசனம்) 4. கேசரி (சிங்காசனம்) 5. சொத்திரம் (குக்குட ஆசனம்) 6. வீரம் (வீராசனம்) 7. சுகாதனம் ஆகிய ஏழு ஆசனங்களோடு மிகவும் சிறப்பான சுவத்திகாசனம் சேர்த்து எட்டு ஆசனங்கள் இறைவனை அடைய உதவும் அட்டங்க யோகத்திற்கு முக்கியமானவை ஆகும். மற்ற ஆசனங்கள் எட்டும் சேர்ந்து பதினாறு அவற்றோடு நூற்றிப் பத்தும் சேர்ந்து மொத்தம் 126 ஆசனங்கள் உள்ளது.

பாடல் #562

பாடல் #562: மூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும்)

பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.

விளக்கம்:

பாத நுனிகள் தரையில் அழுந்தும்படி வைத்து முழந்தாளிட்டு காலின் மேல் அமர்ந்து கைகளை பின்புறமாக பாதங்களில் படும்படி நீட்டி வைத்து ஆதரவாக இருக்க வாயை ஆவெனப் பிளந்து கொண்டு அழகாக கண்களை வேறெங்கும் சுழற்றாமல் மூக்கின் நுனியை நோக்கி பார்த்துக் கொண்டு இருப்பது புகழ் பெற்ற சிங்காசனம் என்று கூறப்படும்.

சிங்காசனம் ஆசனத்தின் பயன்கள்:

நன்கு பசியெடுக்கும். முகதாடை நாக்கு தொண்டையை ஒட்டிய நாக்கின் தொடக்கப்பகுதி ஆகியவற்றிற்கு நன்கு பயிற்சி கிடைக்கிறது. கண்களுக்கு நல்ல கூர்மையான நோக்கும் சக்தி கிடைக்கிறது. காது, மூக்கு தொண்டைக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. வயிற்றில் ஜீரண சுரப்பிகள் வேலை செய்யும். நாக்கை வெளியில் இழுப்பதால் தொண்டை மூக்கில் சுத்த ரத்தம் பாயும். உணவு நன்கு ஜீரணமாகும். நாக்கை வெளியில் நீட்டுவதால் நரம்புகள் இழுக்கப்பட்டு தாடைகள் இறுக்கம் குறைந்து பலப்படுகின்றன. விக்கல் வியாதி தடுக்கப்படுகிறது. சிங்காசனத்தை தொடர்ந்து செய்து பழகிய பின் முழங்கால் தொடை சதைபிடிப்பு நீங்கி பலமுள்ளதாக ஆகின்றன. தன்னுள் சிங்கத்தின் பலம் வருவது போல பாவனை செய்தால் எல்லா அங்கங்களும் வலிமை பெற்றுவிடும். இவ்வாறு தியானம் செய்தால் மன உறுதி கிடைக்கும். சக்தி பெருகும்.

பாடல் #561

பாடல் #561: மூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும்)

ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு
முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்
தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்
குக்குட ஆசனமுங் கொள்ளலு மாமே.

விளக்கம்:

பத்மாசனத்தில் உள்ளது போல் பாதங்கள் இரண்டையும் தொடையின் மேல் மாற்றி வைத்து கைகள் இரண்டையும் அத்தொடைகளின் இடைவெளியில் நுழைத்துத் தரையில் ஊன்றி முக்கிக் கொண்டு உடம்பின் பாரத்தைக் கைகளில் தாங்கி உடலைத் தூக்கி நிறுத்தி அசையாமல் இருப்பதே குக்குட ஆசனம் செய்யும் முறை ஆகும்.

குக்குட ஆசனத்தின் பலன்கள்:

தியானம் மற்றும் யோக வழிகளில் செல்பவர்களுக்கு ஏற்படும் செரிமானப் பிரச்சினைகளை சரிசெய்து வயிற்றில் ஏற்படும் சூட்டையும் தணிக்க குக்குட ஆசனம் உதவும்.

பாடல் #560

பாடல் #560: மூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும்)

துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்
தரிய முழந்தாளில் கைகளை நீட்டி
உருகி யிடுமுடற் செவ்வே யிருத்திப்
பரிசு பெற்றிடில் பத்திரா சனமே.

விளக்கம்:

குற்றமில்லாத வலது காலை மேலே தெரியும்படி வைத்து அருமையான கால் முட்டிகளில் இரண்டு கைகளையும் நீட்டி வைத்து தளர்ந்து இருக்கும் உடம்பை நேராக்கி நிமிர்ந்து அமர்ந்து அதனால் ஏற்படும் பயன்களைப் பெறுவதே பத்திராசனம் ஆகும்.

பத்திராசனம் செய்யும் முறை:

முதலில் கால்களை நீட்டி அமரவும். பின்னர் முடிந்தளவு கால்களை அகட்டி கைகளை முன் பக்கம் ஊன்றி அப்படியே குதிகால்களில் அமர்ந்து கால் விரல்களை உயர்த்திக் கொள்ளவும்.

பத்திராசனத்தின் பயன்கள்:

மனதை ஒருமுகப்படுவதற்கு இந்த ஆசனம் உதவும். தியானம் பழக ஏற்ற ஆசனம் இது.

பாடல் #559

பாடல் #559: மூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும்)

ஓரணை யப்பத மூருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே.

விளக்கம்:

ஒரு பக்க காலை எடுத்து மறு பக்க காலின் மேல் அணைத்து வைத்து அது போலவே இன்னொரு பக்க காலையும் செய்து அமர்ந்து அழகாக கைகள் இரண்டையும் மேல் நோக்கி மலர்த்தி இரு தொடைகளின் மேல் வைத்து அமர்ந்திருப்பதே உலகம் புகழும் பத்மாசனம் ஆகும்.

பாடலில் உள்ளவாறு பத்மாசனம் செய்யும் முறை:

  1. முதுகை நேராக வைத்துத் தரையில் இரண்டு கால்களையும் நீட்டி அமர்ந்து கொள்ளவும்.
  2. இடது காலை மடக்கி இடது பாதத்தை வலது தொடையின் மேல் வைக்கவும்.
  3. வலது காலை மடக்கி வலது பாதத்தை இடது தொடையின் மேல் வைக்கவும்.
  4. இரண்டு கைகளையும் நேராக நீட்டி இரண்டு கால்களின் மடங்கிய முட்டியின் மேல் வைக்கவும்.
  5. உள்ளங்கைகள் இரண்டையும் மேல் நோக்கித் திருப்பி ஆட்காட்டி விரலை மடக்கி கட்டை விரலால் பிடித்துக்கொள்ளவும்.

பாடல் #558

பாடல் #558: மூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும்)

பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திகத் தின்மிகத்
தங்க இருப்பவர் தலைவனு மாமே.

விளக்கம்:

பத்மாசனம் முதல் பல ஆசனங்கள் உள்ளன. அவற்றுள் எட்டு ஆசனங்கள் முக்கியமானவை ஆகும். அந்த எட்டில் முதலானது சுவத்திகாசனம் ஆகும் (இதை சுகாசனம் என்றும் கூறுவர்). இதைத் தவறாமல் தினம் செய்து உணர்ந்து இருப்பவர் எட்டு ஆசனங்களின் தலைவராவார்.

பாடல் #557

பாடல் #557: மூன்றாம் தந்திரம் – 3. நியமம் (நன்மைகளைப் பெறுதல்)

தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீ ரைந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.

விளக்கம்:

  1. தவம் செய்தல், 2. ஜெபித்தல், 3. பேரின்பம் அடைதல், 4. தெய்வ நம்பிக்கையோடிருத்தல், 5. தானம் செய்தல், 6. சிவ விரதம் கடைபிடித்தல், 7. ஞானத்தைப் பற்றிய உண்மையைக் கேட்டறிதல், 8. யாகம் செய்தல், 9. சிவ பூஜை செய்தல், 10. எண்ணத்தையும் இறைவனையும் இரண்டறக் கலத்தல் ஆகிய பத்தையும் உணர்ந்து பிறருக்குக் அறியக் கூறவும் செய்பவனே நியமத்தின் வழி நடப்பவனாவான்.