பாடல் #890: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)
தராதல மூலைத் தற்பர மாபரன்
தராதலம் வெப்பு நமவா சியவாந்
தராதலஞ் சொல்லிற் றான்வா சியவாகுந்
தராதல யோகந் தயாவாசி யாமே.
விளக்கம்:
அண்ட சராசரங்களிலுள்ள அனைத்து உயிர்களையும் தாங்கி நிற்கும் ஆதி அந்தமில்லாத பரம்பொருளாகிய இறை சக்தியே இந்த உலகத்திலுள்ள உயிர்களுக்குள் மூலாதாரத்தில் நமசிவாய என்றும் அதைச் சுற்றியுள்ள அக்கினி மண்டலத்தில் நமவாசிய என்றும் உடலைச் சுற்றியுள்ள சூரிய மண்டலத்தில் வாசிய என்றும் உடலைத் தாண்டி யோக நிலையில் பெறும் கருணையான பரவெளியைச் சுற்றியுள்ள சந்திர மண்டலத்தில் வாசி என்றும் மந்திரச் சொற்களாக இருக்கின்றது.
