பாடல் #1752

பாடல் #1752: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

இலிங்க நற்பீட மிசையு மோங்கார
மிலிங்கம் நற்கண்டம் நிறையு மகார
மிலிங்கத்து வட்ட முறையு முகார
மிலிங்க வுகாரம் நிறைவிந்து நாதமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இலிஙக நறபீட மிசையு மொஙகார
மிலிஙகம நறகணடம நிறையு மகார
மிலிஙகதது வடட முறையு முகார
மிலிஙக வுகாரம நிறைவிநது நாதமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இலிங்க நல் பீடம் இசையும் ஓங்காரம்
இலிங்கம் நல் கண்டம் நிறையும் அகாரம்
இலிங்கத்து வட்டம் உறையும் உகாரம்
இலிங்க உகாரம் நிறை விந்து நாதமே.

பதப்பொருள்:

இலிங்க (இலிங்க வடிவத்தில்) நல் (நன்மை தருகின்ற) பீடம் (பீடப் பகுதியானது) இசையும் (அனைத்தோடும் சேர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கின்ற) ஓங்காரம் (ஓங்காரத்தின் தத்துவமாகும்)
இலிங்கம் (இலிங்க வடிவத்தில்) நல் (நன்மை தருகின்ற) கண்டம் (நடுவில் இருக்கின்ற பாணமானது) நிறையும் (அனைத்திலும் பரவி நிறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின்) அகாரம் (‘அ’கார எழுத்தின் தத்துவமாகும்)
இலிங்கத்து (இலிங்க வடிவத்தில் இருக்கின்ற) வட்டம் (வட்டமானது) உறையும் (அனைத்திற்கு உள்ளும் உறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின்) உகாரம் (‘உ’கார எழுத்தின் தத்துவமாகும்)
இலிங்க (இலிங்க வடிவத்தில்) உகாரம் (‘உ’கார எழுத்தாக) நிறை (நிறைந்து இருப்பதுவே) விந்து (வெளிச்சமும்) நாதமே (சத்தமுமாகிய பரம்பொருளின் விந்து நாத தத்துவமாகும்).

விளக்கம்:

அரூபமாக இருக்கின்ற சதாசிவ மூர்த்தியின் இலிங்க வடிவத்தில் நன்மை தருகின்ற பீடப் பகுதியானது அனைத்தோடும் சேர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கின்ற ஓங்காரத்தின் தத்துவமாகும். அதில் நடுவில் இருக்கின்ற பாணமானது அனைத்திலும் பரவி நிறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின் ‘அ’கார எழுத்தின் தத்துவமாகும். அதில் இருக்கின்ற வட்டமானது அனைத்திற்கு உள்ளும் உறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின் ‘உ’கார எழுத்தின் தத்துவமாகும். இலிங்க வடிவத்தில் ‘உ’கார எழுத்தாக நிறைந்து இருப்பதுவே வெளிச்சமும் சத்தமுமாகிய பரம்பொருளின் விந்து நாத தத்துவமாகும்.

கருத்து:

நன்மையே வடிவான இலிங்க வடிவத்தில் மேல் பாகம், நடுப் பாகம், கீழ் பாகம் என்று மூன்று பாகங்களாக பிரிந்து இருப்பது நாத வடிவாகிய நடராஜ தத்துவமாகும். அதில் மேல் பாகம் ஓங்காரத்தில் உள்ள ‘அ’காரத்தையும், நடுப் பாகம் ஓங்காரத்தில் உள்ள ‘உ’காரத்தையும், கீழ் பாகம் ஓங்காரத்தில் உள்ள ‘ம’காரத்தையும் குறிக்கின்றது. ஓங்காரத்தின் எழுத்து வடிவமே விந்து தத்துவமாகும். ஓங்காரத்தின் ஒலி வடிவமே நாத தத்துவமாகும்.

பாடல் #1726

பாடல் #1726: ஏழாம் தந்திரம் – 3. பிண்ட லிங்கம் (உயிர்களின் உடலில் இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

மானிட ராக்கை வடிவு சிவலிங்க
மானிட ராக்கை வடிவு சிதம்பர
மானிட ராக்கை வடிவு சதாசிவ
மானிட ராக்கை வடிவு திருக்கூத்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மானிட ராககை வடிவு சிவலிஙக
மானிட ராககை வடிவு சிதமபர
மானிட ராககை வடிவு சதாசிவ
மானிட ராககை வடிவு திருககூததே.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மானிடர் ஆக்கை வடிவு சிவ இலிங்கம்
மானிடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானிடர் ஆக்கை வடிவு சதா சிவம்
மானிடர் ஆக்கை வடிவு திரு கூத்தே.

பதப்பொருள்:

மானிடர் (உயிர்களின்) ஆக்கை (உடம்பின்) வடிவு (வடிவமானது) சிவ (இறைவனின் அடையாளமாகிய) இலிங்கம் (இலிங்கமாகவே இருக்கின்றது)
மானிடர் (உயிர்களின்) ஆக்கை (உடம்பின்) வடிவு (வடிவமானது) சிதம்பரம் (சித் (சித்தமாகிய) + அம் (ஆகாயத்தில்) + பரம் (வீற்றிருக்கின்ற பரம்பொருள்) = சிதம்பரம் என்று எண்ணங்களாக இருக்கின்றது)
மானிடர் (உயிர்களின்) ஆக்கை (உடம்பின்) வடிவு (வடிவமானது) சதா (அசையாத சக்தியாகிய) சிவம் (பரம்பொருளின் அம்சமான ஆன்மாவாக இருக்கின்றது)
மானிடர் (உயிர்களின்) ஆக்கை (உடம்பின்) வடிவு (வடிவமானது) திரு (இறைவன் ஆடுகின்ற) கூத்தே (திருக்கூத்தின் அசைவுகளாக இருக்கின்றது).

விளக்கம்:

இறைவனின் அடையாளமாகிய சிவ இலிங்கமே உயிர்களின் உடம்பின் வடிவமாகவும், சித் (சித்தமாகிய) + அம் (ஆகாயத்தில்) + பரம் (வீற்றிருக்கின்ற பரம்பொருள்) = சிதம்பரமே உயிர்களின் உடலுக்குள் இருக்கின்ற எண்ணங்களாகவும், அசையா சக்தியாகிய பரம்பொருளே உயிர்களின் உடம்பிற்குள் இருக்கின்ற ஆன்மாவாகவும், இறைவன் ஆடுகின்ற திருக்கூத்தே உயிர்களின் உடலில் இருக்கின்ற அசைவுகளாகவும் இருக்கின்றது.

பாடல் #1727

பாடல் #1727: ஏழாம் தந்திரம் – 3. பிண்ட லிங்கம் (உயிர்களின் உடலில் இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

உலந்தனர் பின்னு முளரென நிற்பர்
நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப்
புலந்தரு பூதங்க ளைந்து மொன்றாக
வலந்தரு தேவரை வந்தி செயீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உலநதனர பினனு முளரென நிறபர
நிலநதரு நீரதெளி யூனவை செயயப
புலநதரு பூதஙக ளைநது மொனறாக
வலநதரு தெவரை வநதி செயீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உலந்தனர் பின்னும் உளர் என நிற்பர்
நிலம் தரும் நீர் தெளி ஊன் அவை செய்ய
புலம் தரும் பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக
வலம் தரும் தேவரை வந்தி செயீரே.

பதப்பொருள்:

உலந்தனர் (இந்த பிறவிக்கான வினைகள் தீர்ந்து இறந்து போன) பின்னும் (பிறகும்) உளர் (இனியும் பிறவி வேண்டும்) என (என்று) நிற்பர் (இன்னமும் தீர்க்க வேண்டிய வினைகளை அனுபவிக்க நிற்பார்கள்)
நிலம் (அவர்களுக்கு தேவையான உடலை நிலத்தை) தரும் (தருகின்ற) நீர் (நீரினால்) தெளி (தெளிந்து உருவாகிய உணவினால்) ஊன் (வளர்கின்ற தசையும்) அவை (அவர்களுக்கு ஏற்ற வடிவத்தை) செய்ய (செய்ய)
புலம் (அவர்களின் உயிர் இருக்கின்ற இடமாகிய உடம்பை) தரும் (தருகின்ற) பூதங்கள் (பூதங்கள்) ஐந்தும் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து) ஒன்று (ஒன்று) ஆக (சேர்ந்து கொடுக்க)
வலம் (அந்த உடம்பிற்குள் நிகழ்கின்ற அனைத்து இயக்கங்களையும்) தரும் (தருகின்ற) தேவரை (தேவர்களை) வந்தி (வணங்கி வழிபடுவதை) செயீரே (செய்யுங்கள்).

விளக்கம்:

இந்த பிறவிக்கான வினைகள் தீர்ந்து இறந்து போன பிறகும் இனியும் பிறவி வேண்டும் என்று இன்னமும் தீர்க்க வேண்டிய வினைகளை அனுபவிக்க நிற்பார்கள். அவர்களுக்கு தேவையான உடலை நிலத்தை தருகின்ற நீரினால் தெளிந்து உருவாகிய உணவினால் வளர்கின்ற தசையும் அவர்களுக்கு ஏற்ற வடிவத்தை செய்து கொடுக்கும். அவர்களின் உயிர் இருக்கின்ற இடமாகிய உடம்பை தருகின்ற பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் ஒன்று சேர்ந்து கொடுக்கும். அந்த உடம்பிற்குள் நிகழ்கின்ற அனைத்து இயக்கங்களையும் தருகின்ற தேவர்களை வணங்கி வழிபடுவதை செய்யுங்கள்.

கருத்து:

உயிர்களின் உடம்பாக இருப்பதே இறைவனின் சிவ இலிங்கமாகும். அதற்குள் இறைவனாகவே இருக்கின்ற அனைத்து தேவர்களும் இருக்கின்றார்கள். ஆகவே உயிர்களின் உடம்பையே கோயிலாக வணங்கி வந்தால் இனி பிறவி இல்லாத நிலையை அடையலாம். பாடல் #1823 இல் வருகின்ற “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்கிற வாசகம் இந்த பொருளையே குறிக்கின்றது.

பாடல் #1728

பாடல் #1728: ஏழாம் தந்திரம் – 3. பிண்ட லிங்கம் (உயிர்களின் உடலில் இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

கோயில்கொண் டன்றே குடிகொண்ட தைவரும்
வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்
தாயில்கொண் டாப்போற் றலைவனென் னுள்புக
வாயில்கொண் டீசனும் வாழவந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொயிலகொண டனறெ குடிகொணட தைவரும
வாயிலகொண டாஙகெ வழிநின றருளுவர
தாயிலகொண டாபபொற றலைவனென னுளபுக
வாயிலகொண டீசனும வாழவந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கோ இல் கொண்ட அன்றே குடி கொண்டது ஐவரும்
வா இல் கொண்டு ஆங்கே வழி நின்று அருளுவர்
தா இல் கொண்டால் போல் தலைவன் என் உள் புக
வா இல் கொண்டு ஈசனும் வாழ வந்தானே.

பதப்பொருள்:

கோ (உயிர்கள் பிறப்பு எடுக்கும் போதே இறைவன் இருக்கின்ற கோயிலுக்கு) இல் (உயிர்களின் உடலை இடமாக) கொண்ட (கொண்ட) அன்றே (அந்த பொழுதே) குடி (உயிர்களின் உடம்புக்குள் குடி) கொண்டது (புகுந்து கொண்டது) ஐவரும் (ஐந்து தெய்வங்களும் தத்தமது தொழில்களுடன் ஐந்து பூதங்களாகவும் புலன்களாகவும் நின்று)
வா (அந்த புலன்கள் நுழைகின்ற) இல் (இடமாக) கொண்டு (கொண்டு) ஆங்கே (அந்த) வழி (வழியாகவே) நின்று (நின்று) அருளுவர் (அருளுகின்றனர்)
தா (எப்போது புலன்களை விட்டு விட்டு குழந்தை தாயை தேடி அழுவது போல இறைவனை தேடுகின்றோமோ அப்போது) இல் (குழந்தை இருக்கும் இடம் தேடி) கொண்டால் (தாய் தானாகவே வருவது) போல் (போலவே) தலைவன் (இறைவனும் தலைவனாகவே) என் (அடியவரின்) உள் (உள்ளே) புக (புகுந்து)
வா (தமது அருள் நுழைகின்ற) இல் (இடமாக) கொண்டு (அடியவரை ஆட்கொண்டு) ஈசனும் (இறைனும்) வாழ (அடியவரின் உடலையே தாம் வாழுகின்ற இடமாக கொண்டு) வந்தானே (வந்து வீற்றிருந்து அருளுவான்).

விளக்கம்:

உயிர்கள் பிறப்பு எடுக்கும் போதே அவற்றை தாம் இருக்கும் கோயிலாகவே படைக்கின்றான் இறைவன். அப்படி உயிர்கள் கோயிலாக உடலெடுத்து பிறக்கும் போதே ஐந்து தெய்வங்களும் தத்தமது தொழில்களுடன் ஐந்து பூதங்களாகவும் புலன்களாகவும் நின்று அந்த புலன்கள் நுழைகின்ற இடமாக உயிர்களின் உடலை ஏற்றுக் கொண்டு அதன் வழியாகவே நின்று அருளுகின்றனர். உயிர்கள் எப்போது புலன்களின் வழியே வாழ்வதை விட்டு விட்டு குழந்தை தாயை தேடி அழுவது போல இறைவனை தேடுகின்றார்களோ அப்போது குழந்தை இருக்கும் இடம் தேடி தாய் தானாகவே வருவது போல இறைவனும் தலைவனாகவே அந்த அடியவரின் உடலுக்கு உள்ளே இருந்து அடியவரை ஆட்கொண்டு அடியவரின் உடலையே தாம் வாழுகின்ற இடமாக கொண்டு வீற்றிருந்து அருளுவான்.

ஐவர்கள்:

ஐந்து தெய்வங்கள் – ஐந்து தொழில்கள் – பஞ்ச பூதங்கள் – ஐந்து பொறிகள் – ஐந்து புலன்கள்

  1. பிரம்மன் – படைத்தல் – நிலம் – மூக்கு – நுகர்தல்
  2. திருமால் – காத்தல் – நீர் – நாக்கு – சுவைத்தல்
  3. உருத்திரன் – அழித்தல் – நெருப்பு – கண் – பார்த்தல்
  4. மகேஸ்வரன் – மறைத்தல் – காற்று – தோல் – உணர்தல்
  5. சதாசிவன் – அருளல் – ஆகாயம் – காது – கேட்டல்

பாடல் #1729

பாடல் #1729: ஏழாம் தந்திரம் – 3. பிண்ட லிங்கம் (உயிர்களின் உடலில் இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

கோயில்கொண் டானடி கொல்லைப் பெருமுறை
வாயில்கொண் டானடி நாடிகள் பத்துள
பூசைகொண் டானடி புனைந்தும் புற்கிட்டு
வாயில்கொண் டானெங்கள் மாநந்தி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொயிலகொண டானடி கொலலைப பெருமுறை
வாயிலகொண டானடி நாடிகள பததுள
பூசைகொண டானடி புனைநதும புறகிடடு
வாயிலகொண டானெஙகள மாநநதி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கோ இல் கொண்டான் அடி கொல்லை பெரும் உறை
வா இல் கொண்டான் அடி நாடிகள் பத்து உள
பூசை கொண்டான் அடி புனைந்தும் புற்கு இட்டு
வா இல் கொண்டான் எங்கள் மா நந்தி தானே.

பதப்பொருள்:

கோ (தாம் வீற்றிருக்கும் கோயில்) இல் (இடமாக) கொண்டான் (உயிர்களின் உடலை ஆட்கொண்ட இறைவன்) அடி (தமது திருவடிகளால்) கொல்லை (அழுக்குகளை மட்டுமே கொண்ட) பெரும் (பெரிய) உறை (உறை போல் தசைகளால் மூடி இருக்கும் உடலையே)
வா (தமது அருள் நுழைகின்ற) இல் (இடமாக) கொண்டான் (ஏற்றுக் கொண்டு) அடி (தமது திருவடிகளால்) நாடிகள் (உடலுக்குள் இருக்கின்ற நாடிகள்) பத்து (பத்தும்) உள (இயங்குகின்ற இயக்கத்தையே)
பூசை (தமக்கு செய்யும் பூசையாக) கொண்டான் (ஏற்றுக் கொண்டு) அடி (தமது திருவடிகளால்) புனைந்தும் (அடியவரின் உடலை ஒழுங்கு செய்து) புற்கு (அனைத்து அழுக்குகளையும்) இட்டு (அவரை விட்டு நீக்கி விட்டு சுத்தம் செய்து)
வா (தாம் வாசம் செய்கின்ற) இல் (இடமாக) கொண்டான் (அந்த சுத்தப் படுத்திய உடலை ஏற்றுக் கொண்டான்) எங்கள் (எங்களை வழிநடத்துகின்ற) மா (மாபெரும்) நந்தி (குருநாதனாகிய) தானே (இறைவன்).

விளக்கம்:

அழுக்குகளை மட்டுமே கொண்டு தசைகளால் மூடப்பட்டு இருக்கின்ற உயிர்களின் உடலையே தாம் வீற்றிருக்கும் கோயிலாக ஆட்கொண்ட இறைவன் தமது திருவடிகளால் அந்த உடலில் இருக்கின்ற பத்து விதமான நாடிகளின் இயக்கத்தையே தமக்கு செய்கின்ற பூசையாக ஏற்றுக் கொண்டு தமது திருவடிகளின் அருளாலேயே அந்த உடலில் இருக்கின்ற அனைத்து அழுக்குகளையும் நீக்கி, ஒழுங்கு படுத்தி, சுத்தம் செய்து, அந்த உடலைக் கொண்ட அடியவரை தம்மை நோக்கி வழி நடத்திச் செல்கின்ற மாபெரும் குருநாதனாக அவரின் உடலுக்குள் வீற்றிருக்கின்றான்.

பத்து நாடிகள் – வியாபித்து இருக்கும் இடங்கள்

  1. இடகலை – இடது நாசி
  2. பிங்கலை – வலது நாசி
  3. சுழிமுனை – நடு முதுகெலும்பு
  4. புருஷன் – பிறப்பு உறுப்பு
  5. காந்தாரி – இடது கண்
  6. அத்தி – வலது கண்
  7. அலம்புடை – நாக்கு
  8. சங்கினி – தலை
  9. சிங்குவை – இடது கை
  10. குரு – வலது கை

பாடல் #1712

பாடல் #1712: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

இலிங்கம தாகுவ தாரு மறியா
ரிலிங்கம தாவது எண்டிசை யெல்லா
மிலிங்கம தாகுவ தெண்ணெண் கலையு
மிலிங்கம தாக வெடுத்த துலகே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இலிஙகம தாகுவ தாரு மறியா
ரிலிஙகம தாவது எணடிசை யெலலா
மிலிஙகம தாகுவ தெணணெண கலையு
மிலிஙகம தாக வெடுதத துலகே.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இலிங்கம் அது ஆகுவது ஆரும் அறியார்
இலிங்கம் அது ஆவது எண் திசை எல்லாம்
இலிங்கம் அது ஆகுவது எண் எண் கலையும்
இலிங்கம் அது ஆக எடுத்தது உலகே.

பதப்பொருள்:

இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆகுவது (எதுவாக இருக்கின்றது என்பதை) ஆரும் (யாரும்) அறியார் (அறியாமல் இருக்கின்றார்கள்)
இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆவது (ஆக இருப்பது) எண் (எட்டு) திசை (திசைகளில்) எல்லாம் (உள்ள அனைத்தும் ஆகும்)
இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆகுவது (ஆக இருப்பது) எண் (எட்டும்) எண் (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் அறுபத்து நான்கு) கலையும் (கலைகளும் ஆகும்)
இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆக (ஆகவே) எடுத்தது (இறைவன் தமது அடையாளமாக) உலகே (அனைத்து உலகங்களும் உருவாக்கினான்).

விளக்கம்:

இலிங்கம் என்பது எதுவாக இருக்கின்றது என்பதை யாரும் அறியாமல் இருக்கின்றார்கள். எட்டு திசைகளில் உள்ள அனைத்துமே இலிங்கம் ஆகும், அறுபத்து நான்கு கலைகளும் இலிங்கம் ஆகும். இறைவன் தமது அடையாளமாகிய இலிங்கமாகவே அனைத்து உலகங்களையும் உருவாக்கினான்.

பாடல் #1713

பாடல் #1713: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

உலகி லெடுத்தது சத்தி முதலா
யுலகி லெடுத்தது சத்தி வடிவா
யுலகி லெடுத்தது சத்தி குணமா
யுலகி லெடுத்த சதாசிவன் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உலகி லெடுததது சததி முதலா
யுலகி லெடுததது சததி வடிவா
யுலகி லெடுததது சததி குணமா
யுலகி லெடுதத சதாசிவன றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உலகில் எடுத்தது சத்தி முதல் ஆய்
உலகில் எடுத்தது சத்தி வடிவு ஆய்
உலகில் எடுத்தது சத்தி குணம் ஆய்
உலகில் எடுத்த சதா சிவன் தானே.

பதப்பொருள்:

உலகில் (உலகத்தில்) எடுத்தது (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின்) சத்தி (செயலுக்கும்) முதல் (மூல காரணம்) ஆய் (ஆக இருப்பது இலிங்கமாகும்)
உலகில் (உலகத்தில்) எடுத்தது (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின்) சத்தி (செயலுக்கும்) வடிவு (வடிவம்) ஆய் (ஆக இருப்பது இலிங்கமாகும்)
உலகில் (உலகத்தில்) எடுத்தது (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின்) சத்தி (செயலுக்கும்) குணம் (தன்மை) ஆய் (ஆக இருப்பது இலிங்கமாகும்)
உலகில் (உலகத்தில்) எடுத்த (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்துமே) சதா (அசையா சக்தியாகிய) சிவன் (சிவப் பரம்பொருளின்) தானே (அடையாளமாகிய இலிங்கமே ஆகும்).

விளக்கம்:

உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின் செயலுக்கும் மூல காரணமாக இருப்பது இலிங்கமாகும். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின் செயலுக்கும் வடிவமாக இருப்பது இலிங்கமாகும். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின் செயலுக்கும் தன்மையாக இருப்பது இலிங்கமாகும். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்துமே அசையா சக்தியாகிய சிவப் பரம்பொருளின் அடையாளமாகிய இலிங்கமே ஆகும்.

பாடல் #1714

பாடல் #1714: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

போகமு முத்தியும் புத்தியுஞ் சித்தியு
மாகமு மாறாறு தத்துவத் தப்பாலா
மேகமு நல்கி யிருக்குஞ் சதாசிவ
மாகம தத்துவா வாற்சிவ மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொகமு முததியும புததியுஞ சிததியு
மாகமு மாறாறு தததுவத தபபாலா
மெகமு நலகி யிருககுஞ சதாசிவ
மாகம தததுவா வாறசிவ மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறு ஆறு தத்துவத்து அப்பால் ஆம்
ஏகமும் நல்கி இருக்கும் சதா சிவம்
ஆகம தத்துவா ஆல் சிவம் ஆமே.

பதப்பொருள்:

போகமும் (வினைகளை அனுபவிப்பதற்கான சூழலையும்) முத்தியும் (அந்த வினைகளை அனுபவித்து முடித்த பிறகு முக்தியையும்) புத்தியும் (இறைவனை அறிவதற்கான ஞானத்தையும்) சித்தியும் (அந்த ஞானத்தினால் கிடைக்கின்ற சித்திகளையும்)
ஆகமும் (உடலையும் மனதையும் இயக்குகின்ற) ஆறு (ஆறும்) ஆறு (ஆறும் பெருக்கி வரும் மொத்தம் முப்பத்தாறு) தத்துவத்து (தத்துவங்களையும்) அப்பால் (கடந்து) ஆம் (இருக்கின்ற)
ஏகமும் (அனைத்தும் தாம் ஒன்றே என்கின்ற நிலையையும்) நல்கி (உயிர்களுக்கு கொடுத்து அருளி) இருக்கும் (இருக்கின்ற பரம் பொருளே) சதா (சதா) சிவம் (சிவமாகும்)
ஆகம (அந்த பரம் பொருளை உணர்ந்து கொள்வதற்கு வழியாக ஆகமங்கள்) தத்துவா (அருளுகின்ற தத்துவங்களாக) ஆல் (இருக்கின்ற இலிங்கமே) சிவம் (சிவம்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

வினைகளை அனுபவிப்பதற்கான சூழலையும், அந்த வினைகளை அனுபவித்து முடித்த பிறகு முக்தியையும், இறைவனை அறிவதற்கான ஞானத்தையும், அந்த ஞானத்தினால் கிடைக்கின்ற சித்திகளையும், உடலையும் மனதையும் இயக்குகின்ற முப்பத்தாறு தத்துவங்களையும் (பாடல் #467 இல் உள்ளபடி) கடந்து இருக்கின்ற அனைத்தும் தாம் ஒன்றே என்கின்ற நிலையையும், உயிர்களுக்கு கொடுத்து அருளுகின்ற பரம் பொருளே சதா சிவமாகும். அந்த பரம் பொருளை உணர்ந்து கொள்வதற்கு வழியாக ஆகமங்கள் அருளுகின்ற தத்துவங்களாக இருக்கின்ற இலிங்கமே சிவம் ஆகும்.

பாடல் #1715

பாடல் #1715: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

ஏத்தின ரெண்ணிலி தேவரெம் மீசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தெண்ணல் வள்ளலென்
றார்த்தன ரண்டங் கடந்தப்புற நின்று
காத்தன னவனின் கருத்தறி யாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எததின ரெணணிலி தெவரெம மீசனை
வாழததினர வாசப பசுநதெணணல வளளலென
றாரததன ரணடங கடநதபபுற நினறு
காததன னவனின கருததறி யாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏத்தினர் எண் இலி தேவர் எம் ஈசனை
வாழ்த்தினர் வாச பசும் தெண்ணல் வள்ளல் என்று
ஆர்த்தனர் அண்டம் கடந்து அப்புறம் நின்று
காத்தனன் அவனின் கருத்து அறியாரே.

பதப்பொருள்:

ஏத்தினர் (போற்றி வணங்குகின்றார்கள்) எண் (எண்ணிக்கை) இலி (இல்லாத) தேவர் (தேவர்கள்) எம் (எம்பெருமானாகிய) ஈசனை (இறைவனை)
வாழ்த்தினர் (வாழ்த்துகின்றார்கள்) வாச (நறுமணமாக இருப்பவன் என்றும்) பசும் (பசுமையாக இருப்பவன் என்றும்) தெண்ணல் (மாசு மருவில்லாத பேரழகோடு இருப்பவன் என்றும்) வள்ளல் (பெருங் கருணை கொண்ட வள்ளல்) என்று (என்றும்)
ஆர்த்தனர் (கூவி அழைத்து வழிபடுகின்றார்கள்) அண்டம் (ஆயினும் அண்ட சராசரங்களாகவும் அவற்றை எல்லாம்) கடந்து (கடந்து) அப்புறம் (அதற்கு அப்பாலும்) நின்று (நின்று)
காத்தனன் (அனைத்தையும் காத்து அருளுகின்றவனாகிய) அவனின் (அந்த இறைவனின்) கருத்து (உண்மையான தன்மையை) அறியாரே (அவர்கள் அறிவது இல்லை).

விளக்கம்:

எண்ணிக்கை இல்லாத தேவர்கள் எம்பெருமானாகிய இறைவனை நறுமணமாக இருப்பவன் என்றும், பசுமையாக இருப்பவன் என்றும், மாசு மருவில்லாத பேரழகோடு இருப்பவன் என்றும், பெருங் கருணை கொண்ட வள்ளல் என்றும் போற்றி வணங்கி வாழ்த்தி கூவி அழைத்து வழிபடுகின்றார்கள். ஆயினும் அண்ட சராசரங்களாகவும் அவற்றை எல்லாம் கடந்து அதற்கு அப்பாலும் நின்று அனைத்தையும் காத்து அருளுகின்றவனாகிய அந்த இறைவனின் உண்மையான தன்மையை அவர்கள் அறிவது இல்லை.

பாடல் #1716

பாடல் #1716: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

ஒண்சுட ரோனயன் மால்பிர சாபதி
யொண்சுட ரானவிர வியோ டிந்திரன்
கண்சுட ராகிக் கலந்தெங்குந் தேவர்கள்
தண்சுட ராயெங்குந் தாபர மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒணசுட ரொனயன மாலபிர சாபதி
யொணசுட ரானவிர வியொ டிநதிரன
கணசுட ராகிக கலநதெஙகுந தெவரகள
தணசுட ராயெஙகுந தாபர மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒண் சுடரோன் அயன் மால் பிரசாபதி
ஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன்
கண் சுடர் ஆகி கலந்து எங்கும் தேவர்கள்
தண் சுடர் ஆய் எங்கும் தாபரம் ஆமே.

பதப்பொருள்:

ஒண் (அனைத்திலும் பொருந்தி ஒன்றாகவே இருக்கின்ற) சுடரோன் (ஜோதியான இறைவனே) அயன் (பிரம்மனாகவும்) மால் (திருமாலாகவும்) பிரசா (உயிர்களின்) பதி (தலைவனாகிய உருத்திரனாகவும்)
ஒண் (ஒன்று பட்டு இருக்கின்ற) சுடர் (ஒளி) ஆன (ஆகிய) இரவியோடு (சூரியனாகவும்) இந்திரன் (தேவர்களின் தலைவனாகிய இந்திரனாகவும்)
கண் (அனைத்து உயிர்களின் கண்களில் இருந்து) சுடர் (காண்கின்ற ஒளி) ஆகி (ஆகவே) கலந்து (கலந்து நிற்கின்றவனாகவும்) எங்கும் (அனைத்திலும் இருக்கின்ற) தேவர்கள் (தேவர்களாகவும்)
தண் (குளிர்ந்த) சுடர் (ஒளியைத் தருகின்ற சந்திரன்) ஆய் (ஆகவும்) எங்கும் (எங்கும் பரந்து இருக்கின்றான்) தாபரம் (அவனே இலிங்க வடிவம்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

அனைத்திலும் பொருந்தி ஒன்றாகவே இருக்கின்ற ஜோதியான இறைவனே பிரம்மனாகவும், திருமாலாகவும், உயிர்களின் தலைவனாகிய உருத்திரனாகவும், ஒன்று பட்டு இருக்கின்ற ஒளியாகிய சூரியனாகவும், தேவர்களின் தலைவனாகிய இந்திரனாகவும், அனைத்து உயிர்களின் கண்களில் இருந்து காண்கின்ற ஒளியாகவே கலந்து நிற்கின்றவனாகவும், அனைத்திலும் இருக்கின்ற தேவர்களாகவும், குளிர்ந்த ஒளியைத் தருகின்ற சந்திரனாகவும், எங்கும் பரந்து இருக்கின்றான். அவனே இலிங்க வடிவம் ஆகும்.