பாடல் #1552

பாடல் #1552: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)

இருந்தழு வாரு மியல்பு கெட்டாரு
மருந்தவ மேல்கொண்டங் கண்ணலை யெண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பிலி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருநதழு வாரு மியலபு கெடடாரு
மருநதவ மெலகொணடங கணணலை யெணணில
வருநதா வகைசெயது வானவர கொனும
பெருநதனமை நலகும பிறபபிலி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும்
அரும் தவம் மேல் கொண்டு அங்கு அண்ணலை எண்ணில்
வருந்தா வகை செய்து வானவர் கோனும்
பெரும் தன்மை நல்கும் பிறப்பு இலி தானே.

பதப்பொருள்:

இருந்து (பிறவி எனும் துன்பத்தில் இருந்து) அழுவாரும் (அழுகின்றவர்களும்) இயல்பு (மனித இனத்திற்கான ஒழுக்கங்கள்) கெட்டாரும் (கெட்டவர்களும்)
அரும் (செய்வதற்கு அரியதான) தவம் (தவங்களை) மேல் (செய்வதையே குறிக்கோளாக) கொண்டு (மேற் கொண்டு) அங்கு (அந்த தவங்களை செய்யும் போதும்) அண்ணலை (தலைவனாகவும் அடியவனாகவும் இருக்கின்ற இறைவனை) எண்ணில் (எண்ணிக் கொண்டே இருந்தால்)
வருந்தா (அவர்களின் துன்பம் நீங்கி இனி எப்போதும் வருந்தாமல் இருப்பதற்கான) வகை (வழி முறையை) செய்து (செய்து கொடுத்து) வானவர் (வானவர்களின்) கோனும் (அரசனாகியவன்)
பெரும் (மாபெரும்) தன்மை (கருணையோடு) நல்கும் (அருளுவான்) பிறப்பு (பிறப்பு) இலி (இல்லாதவனாகிய) தானே (இறைவன்).

விளக்கம்:

பாடல் #1551 இல் உள்ளபடி பிறவி எனும் துன்பத்தில் இருந்து அழுகின்றவர்களும், மனித இனத்திற்கான ஒழுக்கங்கள் கெட்டவர்களும், செய்வதற்கு அரியதான தவங்களை செய்வதையே குறிக்கோளாக மேற் கொண்டு அந்த தவங்களை செய்யும் போதும் தலைவனாகவும் அடியவனாகவும் இருக்கின்ற இறைவனை எண்ணிக் கொண்டே இருந்தால், அவர்களின் துன்பம் நீங்கி இனி எப்போதும் வருந்தாமல் இருப்பதற்கான வழி முறையை செய்து கொடுத்து வானவர்களின் அரசனாகியவன் மாபெரும் கருணையோடு அருளுவான் பிறப்பு இல்லாதவனாகிய இறைவன்.

கருத்து:

பிறவி எனும் துன்பத்தில் சிக்கிக் கொண்டு தவிப்பவர்கள் இறைவனை நினைத்து தவமிருந்தால் இறைவன் மாபெரும் கருணையோடு அவர்களுக்கு வழி காட்டி பிறவி இல்லாத நிலையை கொடுத்து அருளுவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.