மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #13

22-3-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

வானம் போல் தியானம் செய் என்று கூறுகின்றனர் அதன் பொருள் என்ன?

பொதுவாக மானிடன் வழிபடும் போது வானத்தை நோக்கி கை கூப்புகின்றான். இதற்குக் காரணம் என்ன என அறிதல் வேண்டும். மற்ற மதத்தோர் வானகத் தந்தை என்றும் அழைக்கின்றனர். இறைவன் வானத்திலிருந்து இறங்கி வருகின்றவனா என்றெல்லாம் குழப்பம் காண்பது நியாயமே. இதற்கு யோக நெறியில் விளக்கம் கண்டால் எளிதாகப் புரியும் என்று கூறுகின்றோம். மனித உடல் எனக் கண்டு கொண்டால் வானமானது சகஸ்ரரத்தின் மேலாகும். எப்பொழுது மனிதனின் எண்ணங்கள் அச்சகஸ்ரர நிலையை எட்டுகின்றதோ அன்று அவன் இறைவனை அடைந்தான் எனக் கூற இயலும். இத்தகைய நிலையில் வானத்தில் இறைவன் இருக்கின்றான் என்றும் அவ்வானத்தை நோக்கி மக்கள் வழிபடுகின்றனர் என்றும் எடுத்துரைத்தோம். இதற்கு மற்றொரு காரணம் உண்டாம் ஆதி காலங்களில் வெளிச்சம் தரும் சூரியனே தெய்வம் என்று மக்கள் எண்ணிட மேல் நோக்கியே வணங்கினர். இச்சம்பிரதாயமானது இக்காலத்தில் தொடங்கியது என்றும் கூறுகின்றோமே. இன்று யாம் இதை மட்டும் கூறுவோம். இருப்பினும்ம் இங்கு கூடியுள்ளோர் இதற்கு மேலான விளக்கங்களை சிந்தித்தல் வேண்டும் என்றென ஆர்வமாக இருக்கின்றோம்.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #12

26-1-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கர்ம வினை என்று சொல்கிறார்கள், கர்மம் என்றால் செயல், செயலுக்கு உண்டான வினை, அதற்குரிய விளைவு உடனடியாக இருக்கிறது இந்தக் கலிகாலத்தில். இருந்த போதிலும், வேதங்கள் சொல்லுவதாவது, நீங்கள் போன ஜென்மத்தில் செய்தது தான் இந்த ஜென்மத்தில் கஷ்டப்படுகிறீர்கள் என்று. அது ஏன்? வேதம் சொல்வது சரியா? அல்லது நாம் பார்ப்பது சரியா?

ஒரே நேரத்தில் மூன்று விதைகள் விதைக்கின்றோம். ஒன்று கீரை, இரண்டாவது நெல், மூன்றாவது பனை. மூன்றும் ஒரே நேரத்தில் தான் விதைக்கின்றோம். கீரையானது பதினைந்து நாட்களிலிருந்து ஒரு மாதத்திற்குள் அதனுடைய பலனைக் கொடுக்கிறது. நெல்லானது அதனுடைய பலனை ஆறு மாதத்தில் கொடுக்கிறது. ஆனால் பனையானது மூன்று தலைமுறைகள் கழித்துத் தான் அதனுடைய பலனைக் கொடுக்கிறது. அதனால் நாம் என்ன வினையைச் செய்கின்றோமோ அதனைப் பொறுத்துத்தான் அதனுடைய விளைவுகள் இருக்கும். ஆதலால் இந்த ஜென்மத்தில் செய்வது உடனடியாக கிடைக்கின்றது, ஜென்மாந்திரமாக வருவது பெரிய வினை. இக்காலத்தில் கிடைப்பது உடனடியாக மாற்றக்கூடிய வினைகள். இதை வைத்துத்தான் அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று வினையை வைத்துப் பொதுவாகச் சொல்லியிருக்கின்றார்கள். பெரும் வினையென்றால் தாமதித்துத்தான் விளைவுகள் இருக்கும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #11

30-12-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்

நமக்குள் இறைவன் குடிகொண்டிருக்கிறான் எனில், நாம் எதற்கு ஆலயங்களிலிலும் உருவங்களிலிலும் இறைவனை நாட வேண்டும்?

இறைவன் அனைவருக்குள்ளும் உள்ளான் என்பது உறுதியானது. எந்த அளவிற்கு உள்ளான் என்பதே வினாவாகும். இதனை யாம் நன்கு ஆராய்ந்த பின் இவ்விடையையும் இங்கு அளிக்க சித்தம் கண்டோம். தூய்மை வேண்டும் நல்வழியில் பல ரூபங்கள் வேண்டும் என்கிறது மானிடனின் நிலை. ஏனெனில் அகக்கண் திறக்கும் வரை புறக்கண்ணே மேலானது என்கின்ற நிலைதான். தமது கண்களில் காண்பதே உண்மை என எண்ணுகின்றான் மானிடன். இவ்விதமே வேள்விகள் ஹோமங்கள் என்பதெல்லாம் துவங்கின. கண்ணால் காணும் சூரிய பகவானைத் தெய்வமாகக் கண்டு அவன் உண்ணும் வகைகளை அவனுக்கும் படைத்தான். சிறிது நேரம் சென்ற பின் பார்க்கும் போது படைத்தது அங்கேயே இருக்கக்கண்டு திகைத்தனர்.

அச்சூரிய பகவானின் அனல் தரும் வடிவத்திற்கு இங்கு ஈடானது அக்னி எனக் கண்டு அக்கினியை வளர்த்து அதில் படைத்ததை இட்டனர். இதன் வழியாக தெய்வம் ஏற்றுக் கொண்டது என ஓர் கணக்கு கண்டு வேள்விகள் துவங்கின. இதுவே உண்மை நிலையாகும். இதற்குப் பிறகு பலப்பல வடிவங்கள் மனதில் தோன்ற அவ்வித வடிவங்களை உருவாக்கிப் பிரதிஷ்டை என்கின்ற ஒரு சக்தியையும் அளித்து வணங்கத் துவங்கினர். இவ்விதம் இருக்க மனதில் பலப்பல உருவங்களைக் குறைத்து ஒன்று அல்லது இரு உருவமாக்கிப் பின் அதுவும் மறைந்து மனிதன் தனக்குள் சென்று அவன் ஆத்மாவுடன் கலந்து ஆனந்தம் காணுதல் வேண்டும். இதுவே இறைநிலை என்பது உண்மை நிலையாகும். அந்த உண்மை நிலை வர பல காலங்கள் பல ஜென்மங்கள் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. அக்காலம் வரும் வரை உறுதியாக மனிதனும் மூர்த்திகளை வணங்கிப் படிப்படியாக அம்மூர்த்திகளை விட்டு விலகுதல் வேண்டும்.

இது பாசம் கொடுத்து பின்பு பாசத்தை அறுத்தல் வேண்டும் என்கின்ற தத்துவமாகின்றது. அதாவது மனிதன் பிறக்கும் பொழுதே சிறு நாட்களிலேயே பாசமதன் உணர்வை அறிகின்றான். பிறவியில் அன்னையின் நாமத்தைக் கூறுகின்றான் பின்பு அன்னையுடன் ஒட்டுகின்றான் பின்பு பெற்றவரை அறிகின்றான் பின்பு சகோதரர்கள் பெற்றவர்களின் தாய் தந்தையர் என அனைவரையும் அறிந்து அப்பாசத்தில் தழுவுகின்றான். சிறிது காலம் செல்ல தெய்வம் என்கின்ற ஓர் நிலையை அறிந்து தெய்வத்துடன் பாசத்தைக் காட்டுகின்றான். இப்பாசமதை அறுத்து வெளி பூசைகள் அனைத்தையும் அகற்றி உள் செல்லுதல் வேண்டும் என்பது எளிதான காரியம் அல்ல. அந்நிலை அடைந்தோர்க்கு சீராகும் அனைத்தும் அந்நிலை அடையும் வரை வெளி பூஜைகள் அவசியம் என்றும் இங்கு செப்புவோம். ஆலயங்கள் என்பது முன்பு கூறியது போல் குருடர்களுக்கு உள்ள கொம்பைப் போல ஆன்மீகத்தில் சில குருடு நிலை உள்ளோர்க்கு ஆலயங்கள் அவசியம் என்றும் இங்கு யாம் உறுதியாகக் கூறிக் கொண்டோமே.

மேலாக முன்பு ஒன்று கூறியுள்ளோம் ஆலயங்கள் ஆகமவிதியில் கட்டப்படுவதால் அங்கு சில விசேஷமான கதிர் ஒளிகள் பரவும் இதில் அமர்ந்தால் பல வகையில் நமக்கு ரோக மாற்றங்கள் மனநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றது. இதை மறுக்க இயலாது. இதன் காரணமாகவே கிராமத்தில் அனைவரும் ஆலயத்தில் சிறிது நேரம் போய் அமர்ந்து கொண்டு வருவது உண்டு. இக்காலத்தில் இதை யாம் காணவில்லை இருப்பினும் விசித்திரமாக இக்கால இளைஞர்கள் படிப்படியாக மீண்டும் இறைவனை நாடத் துவங்கி உள்ளனர். இவர்களுக்கு யாம் கூறுவது மெதுவாக படிப்படியாக முதலில் ஓர் மூர்த்தி என்கின்றதை அடையச் செய்து அதனை ஆராதனை புரிந்து அதற்குரியதை அளித்துச் சிறப்பாக பூசித்து வர நன்மைகள் உண்டாகும் என்றும் இங்கு விளக்கினோம். அதனை விட்டு விட்டு இது ஏன்? எதற்கு? என வினா கேட்டுக் கொண்டிருந்தால் காலங்கள் செல்லுமே தவிர ஞானம் கிட்டாது என்கின்ற ஓர் நிலையும் உண்டு.

சாஸ்திரங்கள் கூறுவது போல ரூபத்திலிருந்து அரூபம் செல்லுதல் வேண்டும். ஸ்தூலத்தை முதலில் அறிந்து, பின்பு சூட்சுமத்தை அறிதல் வேண்டும். முதலில் உன் உடலை அறிந்து பின்பு உள்ளிருக்கும் இறைவனை அறிதல் வேண்டும். மண்ணை அறிந்து அதனுள் உள்ள சத்தை அறிதல் வேண்டும். இந்த தத்துவம் விளக்கிடவே மசானம் என்பது நம் புராணங்களிலும் இக்காலத்திலும் மகத்துவம் காண்கிறது. மண்ணால் படைக்கப்பட்டது மீண்டும் மண்ணாகிறது என்கின்றது ஒரு தத்துவம். இதில் எதுவும் நித்யம் இல்லை அவ்விதம் இருக்கும் போது அம் மண் கல் என்கின்றதால் தீட்டப்பட்ட மூர்த்திகள் எவ்விதம் நித்யமாக இருத்தல் கூடும்? மனிதன் பூசிக்கும் வரை நித்யம் பின்பு அநித்யம். இதை நிரூபிக்கும் வகையில் பல பாழடைந்த ஆலயங்கள் நம் நாட்டில் உள்ளன. இது இத்தத்துவத்திற்கு எடுத்துக் காட்டாக உள்ளது. இந்நிலையில் யாம் கூறும் பூஜைகள் வீணாகுவதில்லை இவை அனைத்தும் நம் மனம் ஒருநிலைப்படுத்த உபயோகிக்கப்படும் பல வழிகள் முழுமையான நம்பிக்கையுடன் செய்தவர்களுக்கு எவ்வித குறைகளும் நேரிடாது நன்மைகள் பெரிதாகும் என்றும் இங்கு எடுத்துரைத்தோம்.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #10

3-12-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

குடிக்க நீர் அல்லவா கேட்டோம், ஏன் இவ்விதம் வெள்ளப் பெருக்கு உண்டாகிறது?குடிக்க நீர் கேட்டது உண்மை, இதை யாம் மறுக்க வில்லை. இருப்பினும், மானிடர்கள் இயற்கையிடம் பெருமளவில் விளையாட்டு காட்டுகின்றனர். காரணமின்றி மரங்களை அழிப்பது, பூமியிலிருக்கும் கால்வாய்கள், நீர் செல்லும் வழிகள், அடைத்து வீடுகள் கட்டுவது, இவையாவும் பூமிக்கும், அதாவது பஞ்ச பூதங்களுக்கும் பொறுக்கவில்லை என அறிந்து கொள்ளுங்கள். இக்காலம் வரை பொறுமை கண்ட அவர்கள், திருப்பி அவர்களின் வலிமையை காட்டத் துவங்கினர். இதன்வழி உலகெங்கும், இந்நாட்டில் மட்டுமல்ல, பூமியால், அக்கினியால், வெள்ளத்தால், ஏன், இனி வருங் காலங்களில் ஆகாயம், வாயு, வழியாகவும் பல தீமைகள் உண்டாக உள்ளது இயற்கையின் விதி என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

அனைவரும் பிரார்த்தனை செய்திருந்தால் இயற்கையின் வலிமையை குறைத்திருக்கலாம். இதன் முக்கியத்துவத்தை எவரும் அறியாது, இதற்கென பிரார்த்தனை செய்ததாக யாம் காணவில்லை. மக்களை காக்குங்கள் என்கின்ற ஓர் அலறலோ யாம் இன்று வரை கேட்கவில்லை. இது வருந்துதலுக்குரிய ஒர் காரியமாகிறது. ஏனெனில், நாம் மிருகங்களை பார்த்துக் கொண்டாலும், பூச்சிகளை பார்த்துக் கொண்டாலும், இவை மற்றொன்றுக்கு ஆபத்து என்றால் உடனடியாக சேர்ந்து காக்க முயற்சிக்கின்றது. தீனி கிடைத்திட, அனைவரையும் அழைத்து பங்கிடுகிறது. இறைவன் படைப்பில் மானிடன் மட்டும் மாறிவிட்டான். இவன் பங்கிடுவதில்லை, ஏனெனில், இன்று பங்கிட்டால் மீண்டும் பங்கிற்கு வருவானோ என்கின்ற அச்சம். இதுவும் உண்மை தான், கலிகால தன்மை, அவ்விதமே உதவி செய்தால், உதவி செய்கின்றவன் ஏமாளி எனக்கருதி அவனிடம் எவ்வளவிற்கு வசூல் செய்யலாம் என பார்க்கின்றனர். இத்தகைய நிலையில், எவரை யாம் குற்றம் சூட்டுவது என எமக்கே அறியவில்லை. எல்லாம் இறைவனின் விளையாட்டு என்றே எடுத்துக் கொண்டோம்.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #9

5-11-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நாகம் ஒன்றில் தவக்களையை வாயில் இருப்பதைக் கண்டால், தவக்களையை காப்பாற்றினால் நாகத்தின் உணவை பறித்த பாவமும், அப்படியே விட்டு விட்டால் தவக்களையின் உயிரை போக்கிய பாவமும் உண்டு, இந்நிலையில் பாவ புண்ணிய நிலைகளை எவ்விதம் அறிவது?

இயற்கையின் வழியில் ஓர் ஜீவனுக்கு மற்றோர் ஜீவன் இரையாகின்றது. நாம் உண்ணும் போது செடி, கொடி, கீரை வகைகள், பழ வகைகள், மரக்கறி வகைகள் நமக்கு உணவாகின்றன. பெரும் மிருகங்களுக்கு சிறு மிருகங்கள் இரையாகின்றது. இது இயற்கையின் விதி என்பதால் அவ்விதம் நடக்கட்டும், இதில் நமது குறிக்கீடு தேவையற்றதாம். நாம் செய்யும் பணிகள் சீராகவும், நலம் தரும் வகையிலும், செய்வதே போதுமானது. இதுவே எமது விளக்கம் ஆகின்றது.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #8

9-10-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

குருவாக்கு சில சமயங்களில் தவறுகின்றதே இது ஏன்?

முதலாவதாக குருவென ஏற்றுக் கொண்டால் அக்கேள்வியை கேட்க எவ்வித அதிகாரமும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஏற்றபின் சந்தேகங்கள் கூடாது என்பதே விதி. ஏற்கும் முன் சந்தேகங்கள் தோன்றுவது சகஜம். இரண்டாவதாக குருவின் வாக்கு தெய்வ வாக்கு என செப்பக் கண்டால் இங்கு சாட்சாத் குருவானவரே தொட்டும் உரைக்க அவர் காரணமின்றி எவ்வாக்கும் உரைப்பதில்லை. இக்காலங்களில் வாக்கு தவறி விட்டதே என சிலர் துக்கம் காண்பது சகஜ நிலையே. பிற்காலத்தில் எதற்கு செப்பினர் ஏது செப்பினர் என தெளிவாகும். மற்ற ஒன்றும் யாம் இங்கு செப்ப விரும்புகின்றோம். குருவை நாடும் காலத்தில் வினாக்களை கேட்கும் காலத்தில் எப்பொழுதும் குரு உங்களுக்கு சாதகமாக விடை அளித்தல் வேண்டும் அருள் புரிதல் வேண்டும் என்பதே தவறாகின்றது. யாருக்கு என்ன தேவையோ அதனை குரு வழங்குவார். இதில் எக்குறையும் இல்லை. உதாரணமாக சிறுவன் ஒருவனுக்கு வயிற்றுப் போக்கு நிலவி வர அன்னை அவள் அவனுக்கு காரம் கொடுப்பதில்லை. இதைப்போல் காலம் சீர் இல்லையேல் குரு எதையும் அருள மாட்டார். இது வெறுப்பாகவோ விருப்பாகவோ அல்ல இதுவே நீதி என்றும் இங்கு எடுத்துரைப்போம். மேலும் குருவை நாட எத்தகைய வினாக்கள் கேட்க வேண்டும் என்கின்ற வினாவுக்கும் ஒன்றை செப்புவோம். நன்றாக இறைவன் அளித்த சுய புத்திகளை உபயோகித்த பின் விடை கிட்டாமல் நிற்கவே அந்நிலையில் குருவை நாடுதல் வேண்டும் என்கின்ற விதி உண்டு. ஏனெனில் இறைவனின் படைப்பில் சுயபுத்தி உள்ள படைப்பு மனிதப் படைப்பே. இவை பூரணமாக உபயோகித்த பின் வழி தெரியாது நிற்க குருவின் அருளை நாட உறுதியாக உங்களுக்கும் தெளிவு கிட்டும்.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #7

12-9-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

எவ்வழியில் ஆண்டவனை அடைய முயற்சித்தல் வேண்டும்? யோக நிலையா, பக்தி நிலையா, இல்லையேல் ஞான நிலையா என்பதே கேள்விகள் ஆகின்றது.

எவர் எவர்க்கு எம் மார்க்கம் எளிதாக தோன்றுகிறதோ அதனை ஏற்றுக் கொள்ளலாம். பொதுவாக, ஓர் கட்டிடம் என்றால் அதற்கு இரண்டு அல்லது மூன்று வழிகள் காணக்கூடும். எவ்வழியில் செல்கின்ற போதிலும் உள்ளே செல்ல முடியும். இருப்பினும், நமக்கு எளிதாக, தொல்லை தராத வழியை நாடிப் பயன் படுத்துவதே நல்ல முறையாகின்றது. அனைவருக்கும் யோக நிலைகள் நலம் தருவதாகக் காணாது. ஏனெனில், உடல்கூறு மனநிலை என்பதெல்லாம் தடையாகக் காணலாம்.

பக்தி மார்க்கத்தில், மந்திரங்கள் ஜெபித்து எளிதாக சிலரால் இறைவனை அடைய இயலுகின்றது. இவ்விதமே, இசையும் ஓர் பக்தியின் வழியாகவே யாம் காண்கின்றோம். இறைவனை நன்று துதித்துப் பாடினால் அவன் வராது இருக்க மாட்டான், என்பதே எமது கருத்தாகின்றது. இக்கலியுக தன்மையில், பெரும் யோகங்கள், யோக பயிற்சிகள், தவநிலைகள், என்பதெல்லாம் எளிதில் கடை பிடிக்க இயலாது என்கின்றதால், இக்காலத்திற்கு எளியவழி பக்தி மார்க்கமும், நாம கீர்த்தனமும் என்பதேயாகும் என்று இங்கு எடுத்துரைக்கின்றோம். இருப்பினும், திடமும் நம்பிக்கையும் உயர்ந்திருந்தால், யோக நிலையை கை கொள்வதில் தவறாகாது. எளிதான முறையைச் செப்பிவிட்டோம். இவைகளில் தேர்ச்சி செய்வீர்களாக.

ஞானமார்க்கம் என செப்பிக்கொண்டால், பல குழப்பங்கள் நேரிடல் காணக்கூடும். ஏனெனில், பலர் பலவிதத்தில் உபதேசிப்பர். எது சரி, எது தவறு, என்பதனை தேடிக் கண்டு பயன் அடைவதற்குமுன் இஜ் ஜென்மமும் மூடிவிடும் என்பதே நிலை. இந்நிலையில், யோகம் இல்லையேல் பக்தி மார்க்கங்களில் செல்வதே நலம்தரும் என்றும் செப்பினோமே.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #6

15-8-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஒரே சமயத்தில் ஒரு ஸ்தலம்தனில் அமர்ந்து தியானம் செய்தல் வேண்டும், இல்லையேல் சாதனை புரிதல் வேண்டும் என்பது விதியா? விதியாயிருந்தால் இது ஏன்?

இது ஓர் சிறப்பான வினாவாகிறது. உடல், சூட்சுமம், ஸ்தூலம் பின்பு ஆன்மா என பிரித்துப் பார்த்தால் எளிதாகும். ஸ்தூல உடலுக்கு நாம் உணவு அளிக்கின்றோம், குறிப்பிட்ட காலங்களில் அமர்ந்து உண்ணுகின்றோம், உண்ணும் காலம் நெருங்க வயிற்றினில் பசிக்கின்றது, உண்டபின் பசி மறைகின்றது. இதற்கு காரணம் நாட, அச்சமயத்தில் உடலுக்கு உணவு வேண்டும் என பழக்கம் ஏற்படுகின்றது. இவ்விதமே, ஒரே சமயத்தில் ஓர் ஸ்தலம்தனில் அமர்ந்து தியானம் செய்திட, சூட்சும உடலுக்கும் ஆன்மாவிற்கும் உணவு அளிப்பது போல் ஆகின்றது. இவ்விதமே பழகிட, குறித்த காலங்களில் அமர்ந்தே ஆகுதல் வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும் என்பது மட்டும் அல்லாது, பழகிட்ட ஸ்தலத்தில் அமர்ந்திட்ட போதே மனம் ஒரு நிலைப்பாடு காணும். சதா தியானம், ஜபம் செய்கின்றவர்க்கு இது அவசியமில்லை. அவ்விதம் தியானம் செய்கின்றவர் குறைவே. இது கலியுகத் தன்மை, பொதுவாக ஆன்மீக முன்னேற்றம் நாடுவோர் ஒரு ஸ்தலம் தேர்ந்து எடுத்து, குறித்த சமயங்களில் தியானம் கூட நன்மைகள் ஏற்படும் என அறிவுரை அளித்தோம்.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் # 5

19-7-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பெற்றவர்கள் செய்திடும் குற்றங்களுக்குப் பின்பு அவர்கள் மக்கள் அவதிப்படுவார்கள் என்பது உண்மையான நிலையா என ஒருவர் வினாவக் கண்டோம்.

இதற்கு யாம் எளிதாக விடை அளித்திட இயலும். இக்காலத்தில், பெற்றவன் ஒருவன் கள்வனாக மாறி களவு செய்ததற்காக மகனை தண்டிக்க இயலாது, இவ்விதமே கர்ம நிலையும், அவரவர் கர்மங்கள் அவரவர் அனுபவித்துக் கழித்தல் வேண்டும் என்பதே விதி. இருப்பினும், கூட்டுக் குடும்பங்கள் என்கின்ற நிலையில் சில பிரச்சினைகள் உருவாகின்றது. உதாரணமாக, பெற்றவர்கள் நோயுற்றவர்கள் எனக் கண்டு கொண்டால், இதன் விளைவாக மக்களும் சிறிது பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் என்னவென்றால் பந்தமே என்றும் இங்கு எடுத்துரைப்போமே. தனியாக அவதிப்படுவதில்லை, ஆனால் பந்தம் கொள்ள, பாசம் கொள்ள, சிறு வேதனைகள் உருவாகின்றது. இதுவும் தன்னுடைய கர்மங்கள் தீர்த்திடவே, இத்தகைய பெற்றோரின் குடும்பத்தில் வந்து பிறக்கின்றான் என்பதே விதியாகின்றது. இதேபோல, நல்ல பெற்றோர்கள் தீய புத்திரனை பெற்று அவதிப்படுகின்றனர், இதுவும் அதே காரணமாம். பெற்றவர்களின் கர்மங்களை தீர்க்க, அத்தகைய மகன் அக்குடும்பத்தில் பிறக்கின்றான். இருப்பினும், பெற்றவர்களின் தீய கர்மத்தால் புத்திரர்கள் பிற்காலத்தில் அவதிப்படுவார்கள் என கூறுவது தவறாகும். அவரவர் கர்மங்கள் அவரவர் தீர்த்தல் வேண்டும் என்றும் விளக்கிட்டோமே.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் # 4

22-6-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இந்து மதத் தெய்வங்களுக்கு மட்டும் ஏன் எட்டு கரங்கள், பத்து கரங்கள்? அக் கரங்களில் ஆயுதம் எதற்கு? என்ற வினா பொதுவாக கேட்கின்றோம்.

சிந்தித்தால் இதற்கு விடை எளிதாக கிட்டும் என்றும் இங்கு விளக்கிடுவோம். எட்டு திக்குகளும் காக்க வல்லவர்களாக இருப்பதால் எட்டு கரங்கள் அவர்களை சுற்றி இருக்கின்றன என்றும், ஒவ்வொரு கரங்களிலும் ஓர் ஆயுதம் காப்பை (பாதுகாப்பு) குறிக்கின்றது என்றும் இங்கு செப்பிட்டோமே. மற்ற இரண்டு கரங்கள் இருந்தால், அது நன்றாகப் பார்த்தால், மேலும் கீழும் இருக்கும். அது காக்க வல்லதாம் என்றும் இங்கு எடுத்துரைப்போமே. அது பொதுவாக அபயம் என்றும், கொடுத்தல், வாங்கல் என்றும் செப்புவார்கள், உண்மையான நிலை மேலும் கீழும் காக்குதல் என்பதேயாகும்.

இரண்டாவது கேள்வி முக்கியத்துவம் காணும் ஒரு கேள்வியானது, பெரும் அளவில் பெரிதான விநாயகர், சிறு எலி மேல் ஏன் அமர்ந்து கொள்கின்றார் என்பதேயாகின்றது.

இதற்கு விடை ஒன்று, அகங்காரம்தனை சிறிதாக்கி அதற்கு மேல் அமர்ந்து நாமும் அதேபோல் செய்தல் வேண்டும் என முதல் தெய்வம் சுட்டிக் காட்டுகின்றார், ஆதியில் இதை செய்தால் ஒழிய ஞானத்தில் முன்னேற்றம் காணாது என எடுத்துரைக்கின்றார். இரண்டாவது, யோக நெறியில் சிந்திக்க, அஷ்டமா சித்திகள் கை கொண்டால், பெரிய உருவமும் சிறு உருவத்தின் மேல் லேசாக அமர இயலும் என்றும், ஓங்காரம், அதாவது பிராணமும் ஓங்காரமும் இணைந்து உள் அடக்க எதையும் சாதிக்க இயலும் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார். இதனை அனைவரும் நன்கு சிந்தித்து மேலும் இரண்டு விளக்கங்கள் கண்டு பிடிப்பீர்களாக.