பாடல் #425

பாடல் #425: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாம்
சுத்தசங் காரத் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.

விளக்கம்:

நித்த சங்காரம் என்பது உயிர்கள் உறங்கும் போது தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முற்றிலும் அறியாத நிலையாகும். வைத்த சங்காரம் என்பது உயிர்கள் இளைப்பாற வேண்டும் என்று உறங்கும்போது ஏற்படும் கனவு நிலையாகும். சுத்த சங்காரம் என்பது உயிர்கள் உடலை விட்டு உயிர் பிரிந்த ஆன்மா ஆணவ மலத்திலேயே இருந்து பிறக்கவும் முடியாமல் இறைவனிடமும் செல்ல முடியாமல் எந்தச் செயலும் செய்ய முடியாமல் கிடக்கும் கேவலமான நிலையாகும். உய்த்த சங்காரம் என்பது இறைவனது திருவருளால் ஆன்மா உண்மைப் பொருளான இறைவனுடனே சென்று இரண்டறக் கலந்துவிடுகின்ற நிலையாகும்.

உள்விளக்கம்: நித்த சங்காரம் – தூங்கும் போது நான் என்ற எண்ணம் அழிந்திருந்த நிலை.
வைத்த சங்காரம் – தூங்கும் போது கனவில் எல்லாம் தன்னுடையது போல் இருக்கும் ஆனால் விழித்ததும் எதுவும் தனது இல்லை என்று அனைத்தும் அழிந்த நிலை.
சுத்த சங்காரம் – உடல் அழிந்த பின் ஆத்மா தான் என்ற அகங்காரத்தினால் உடலெடுக்கவும் முடியாமல் இறைவனுடன் கலக்கவும் முடியாத நிலை. இதனை கேவலமான நிலை என்று பாடலில் கூறுகிறார்.
உய்த்த சங்காரம் – உடல், உயிர் அனைத்தும் அழிந்து இறைவனுடன் கலக்கும் நிலை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.