பாடல் #1450

பாடல் #1450: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

சமயம் பலசுத்தி தன்செய லற்றிடு
மமையும் விசேடமு மரன்மந்திர சுத்தி
சமய நிருவாணங் கலாசுத்தி யாகு
மமைமன்னு ஞானமார்க் கம்மபி டேகமே.

பதம் பிரித்தது:

சமயம் பல சுத்தி தன் செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன் மந்திர சுத்தி
சமய நிருவாணம் கலா சுத்தி ஆகும்
அமை மன்னு ஞான மார்க்கம் அபிடேகமே.

பதப்பொருள்:

சமயம் (சமயம் சொல்கின்ற முறைப்படி அமைக்கப்பட்ட) பல (பலவிதமான கோயில்களுக்கு) சுத்தி (சென்று அவற்றை சுற்றி வந்தால்) தன் (தன்னுடைய முயற்சியால்) செயல் (எல்லா செயல்களும்) அற்றிடும் (நடக்கின்றன என்ற எண்ணம் நீங்கி விடும்)
அமையும் (அதன் பிறகு அந்த கோயில்களில் அமைந்து இருக்கின்ற) விசேடமும் (சிறப்பானதும்) அரன் (பாதுகாக்க கூடியதும் ஆகிய) மந்திர (மந்திர உச்சாடனங்களால்) சுத்தி (தம்மை தூய்மை படுத்தி விடும்)
சமய (அதன் பயனால் சமயம் என்று சொல்லப்படுகின்ற எந்த விதிமுறைகளும்) நிருவாணம் (அதனைச் சார்ந்த எண்ணங்களும் நீங்கும் படி) கலா (அறிவை) சுத்தி (சுத்தம்) ஆகும் (ஆக்கி விடும்)
அமை (அதன் பிறகு தன்னுடை சுத்தமான அறிவில்) மன்னு (இறைவனை நிலைபெறும் படி செய்து) ஞான (இறையருளால் பெற்ற ஞானத்தின்) மார்க்கம் (வழியில்) அபிடேகமே (தாம் செய்கின்ற அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றார்).

விளக்கம்:

சமயம் சொல்கின்ற முறைப்படி அமைக்கப்பட்ட பலவிதமான கோயில்களுக்கு சென்று அவற்றை சுற்றி வந்தால் தன்னுடைய முயற்சியால் எல்லா செயல்களும் நடக்கின்றன என்ற எண்ணம் நீங்கி அனைத்தும் இறைவனாலே நடக்கின்றது என்ற எண்ணம் வந்து விடும். அதன் பிறகு அந்த கோயில்களில் அமைந்து இருக்கின்ற சிறப்பானதும் பாதுகாக்க கூடியதும் ஆகிய மந்திர உச்சாடனங்கள் தம்மை தூய்மை படுத்தி விடும். அதன் பயனால் சமயம் என்று சொல்லப்படுகின்ற எந்த விதிமுறைகளும் அதனைச் சார்ந்த எண்ணங்களும் நீங்கும் படி அறிவை சுத்தம் செய்து விடும். அதன் பிறகு தன்னுடை சுத்தமான அறிவில் இறைவனை நிலைபெறும் படி செய்து இறையருளால் பெற்ற ஞானத்தின் வழியில் தாம் செய்கின்ற அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றார்.

குறிப்பு: இந்தப் பாடல் சுவடிகளில் இல்லாததால் பிற்சேர்க்கை பாடலாக இருக்கலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.