பாடல் #1446

பாடல் #1446: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

பத்தர் சரிதைப் படுவார் கிரிகையோ
ரத்தகு கொண்டா ரருள்வேடத் தாகுவோர்
சுத்த வியமாதி சாக்கரத் தூயோகர்
சித்தர் சிவஞானஞ் சென்றெய்து வோர்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பததர சரிதைப படுவார கிரிகையொ
ரததகு கொணடா ரருளவெடத தாகுவொர
சுதத வியமாதி சாககரத தூயொகர
சிததர சிவஞானஞ செனறெயது வொரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பக்தர் சரியை படுவார் கிரியையோர்
அத் தகு கொண்டார் அருள் வேடத்து ஆகுவோர்
சுத்த வியம் ஆதி சாக்கரத்து தூ யோகர்
சித்தர் சிவ ஞானம் சென்று எய்துவோர்களே.

பதப்பொருள்:

பக்தர் (பக்தர்கள் என்பவர்) சரியை (இறைவனை அடையும் வழிமுறையான சரியையை) படுவார் (மேற் கொண்டு) கிரியையோர் (கிரியைகளை செய்கின்றவர்கள்)
அத் (அந்த கிரியையின் செயலின்) தகு (தன்மையையே) கொண்டார் (தாமும் கொண்டவர்கள்) அருள் (அதன் பயனால் அருள்) வேடத்து (வடிவத்தில் இறை தன்மையாகவே) ஆகுவோர் (ஆகின்றார்கள்)
சுத்த (அதனால் மும்மலங்களும் நீங்கி சுத்தமாகிய) வியம் (தமது உடலுக்குள்ளே) ஆதி (ஆதியிலிருந்தே இருக்கின்ற) சாக்கரத்து (ஆன்மாவானது எது என்பதை உணர்ந்து கொண்டு) தூ (தூய்மையான) யோகர் (யோகிகள் ஆகின்றார்கள்)
சித்தர் (அதன் பிறகு சித்தர்கள் என்று) சிவ (பரம்பொருளான சிவத்தின்) ஞானம் (உண்மை ஞானத்தை) சென்று (தமக்குள்ளே சென்று) எய்துவோர்களே (உணர்ந்து அடைபவர்கள் ஆகின்றார்கள்).

விளக்கம்:

இறைவனை அடையும் வழிமுறையான சரியையை மேற் கொண்டு கிரியைகளை செய்கின்றவர்களே பக்தர்கள் ஆவார்கள். அந்த கிரியைகளின் செயலின் தன்மையையே தாமும் அடைந்து அதன் பயனால் அருள் வடிவத்தில் இறை தன்மையாகவே அவர்கள் ஆகின்றார்கள். அதனால் மும்மலங்களும் நீங்கி சுத்தமாகிய தமது உடலுக்குள்ளே ஆதியிலிருந்தே இருக்கின்ற ஆன்மாவானது எது என்பதை உணர்ந்து கொண்டு தூய்மையான யோகிகள் ஆகின்றார்கள். அதன் பிறகு பரம்பொருளான சிவத்தின் உண்மை ஞானத்தை தமக்குள்ளே சென்று உணர்ந்து அடைந்து சித்தர்கள் ஆகின்றார்கள்.

கருத்து: இறைவனை அடையும் வழிமுறையான சரியையை முறைப்படி கடை பிடிப்பவர்கள் அதனாலேயே யோகியர்களாகவும் சித்தர்களாகவும் ஆக முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.