பாடல் #1445

பாடல் #1445: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

நாடு நகரமு நற்றிருக் கோயிலுந்
தேடித் திரிந்து சிவபெருமா னென்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நாடு நகரமு நறறிருக கொயிலுந
தெடித திரிநது சிவபெருமா னெனறு
பாடுமின பாடிப பணிமின பணிநதபின
கூடிய நெஞசததுக கொயிலாயக கொளவனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நாடும் நகரமும் நல் திரு கோயிலும்
தேடி திரிந்து சிவ பெருமான் என்று
பாடுமின் பாடி பணிமின் பணிந்த பின்
கூடிய நெஞ்சத்து கோயில் ஆய் கொள்வனே.

பதப்பொருள்:

நாடும் (உலகமெங்கும் இருக்கின்ற அனைத்து நாடுகளிலும்) நகரமும் (அதிலுள்ள நகரங்களிலும்) நல் (உயிர்களின் நன்மைக்காக அமைக்கப் பட்டுள்ள) திரு (இறைவன் வீற்றிருக்கும்) கோயிலும் (கோயில்களையும்)
தேடி (தேடி அலைந்து) திரிந்து (திரிந்து கண்டு பிடித்து) சிவ (அங்கு வீற்றிருக்கின்ற இறை சக்தியை சிவம்) பெருமான் (எனும் பரம்பொருள்) என்று (என்று எண்ணி)
பாடுமின் (இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடுங்கள்) பாடி (பாடி கொண்டே) பணிமின் (இறைவனைப் பணிந்து தொழுது வணங்குங்கள்) பணிந்த (அவ்வாறு வணங்கிய) பின் (பிறகு)
கூடிய (அந்தக் கோயிலில் வீற்றிருக்கும் இறை சக்தியும் பக்தர்களோடு ஒன்றாக சேர்ந்து) நெஞ்சத்து (பக்தர்களின் நெஞ்சத்தையே) கோயில் (தமக்கு விருப்பமான கோயிலாக) ஆய் (ஆட்கொண்டு) கொள்வனே (அங்கே வீற்றிருக்கும்).

விளக்கம்:

உலகமெங்கும் இருக்கின்ற அனைத்து நாடுகளிலும் அதிலுள்ள நகரங்களிலும் உயிர்களின் நன்மைக்காக அமைக்கப் பட்டுள்ள இறைவன் வீற்றிருக்கும் கோயில்களை தேடி அலைந்து திரிந்து கண்டு பிடித்து அங்கு வீற்றிருக்கின்ற இறை சக்தியை சிவம் எனும் பரம்பொருளாகவே எண்ணி இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடி கொண்டே இறைவனைப் பணிந்து தொழுது வணங்குங்கள். அவ்வாறு வணங்கிய பிறகு அந்தக் கோயிலில் வீற்றிருக்கும் இறை சக்தியும் வணங்கித் தொழுத பக்தர்களோடு ஒன்றாக சேர்ந்து அந்த பக்தர்களின் நெஞ்சத்தையே தமக்கு விருப்பமான கோயிலாக ஆட்கொண்டு அங்கே வீற்றிருக்கும்.

கருத்து: ஆலயங்களுக்கு சென்று பக்தியால் போற்றி வணங்கித் தொழுது இறைவனை அடையும் சரியை எனும் முறை இதுவே ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.