பாடல் #1438

பாடல் #1438: ஐந்தாம் தந்திரம் – 4. கடுஞ் சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் நான்காவது)

வேடங் கடந்து விகிர்தன்றன் பால்மேவி
யாடம்பர மின்றி யாசாபாசஞ் செற்றுப்
பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடுஞ் சிவபோதகர் சுத்த சைவரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெடங கடநது விகிரதனறன பாலமெவி
யாடமபர மினறி யாசாபாசஞ செறறுப
பாடொனறு பாசம பசுததுவம பாழபடச
சாடுஞ சிவபொதகர சுதத சைவரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வேடம் கடந்து விகிர்தன் தன் பால் மேவி
ஆடம்பரம் இன்றி ஆசா பாசம் செற்று
பாடு ஒன்று பாசம் பசுத்துவம் பாழ் பட
சாடும் சிவ போதகர் சுத்த சைவரே.

பதப்பொருள்:

வேடம் (வெளிப்புற வேடங்கள்) கடந்து (எதுவும் இன்றி) விகிர்தன் (உலக நியதிகளைக் கடந்து இருக்கின்ற இறைவன்) தன் (அவனின்) பால் (மேல் மட்டும்) மேவி (எண்ணங்களை வைத்து)
ஆடம்பரம் (எந்தவிதமான ஆடம்பரங்களும்) இன்றி (இல்லாமல்) ஆசா (ஆசைகளையும்) பாசம் (பாசங்களையும்) செற்று (நீக்கி விட்டு)
பாடு (பதியாகிய இறைவனை அடைவது மட்டுமே) ஒன்று (ஒரே குறிக்கோளாக கொண்டு) பாசம் (பாசத் தளைகளும்) பசுத்துவம் (இறைவனிடமிருந்து ஆன்மா தனித்து இருக்கும் பசு தத்துவமும்) பாழ் (அழிந்து) பட (போகும் படி செய்து)
சாடும் (இறைவனை மட்டுமே சார்ந்து இருந்து) சிவ (இறைவன் அருளிய) போதகர் (போதனைகளை முறைப்படி கடை பிடிப்பவரே) சுத்த (கடும் சுத்த) சைவரே (சைவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

வெளிப்புற வேடங்கள் எதுவும் இன்றி உலக நியதிகளைக் கடந்து இருக்கின்ற இறைவனின் மேல் மட்டும் எண்ணங்களை வைத்து எந்தவிதமான ஆடம்பரங்களும் இல்லாமல் ஆசைகளையும் பாசங்களையும் நீக்கி விட்டு பதியாகிய இறைவனை அடைவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பாசத் தளைகளும் இறைவனிடமிருந்து ஆன்மா தனித்து இருக்கும் பசு தத்துவமும் அழிந்து போகும் படி செய்து இறைவனை மட்டுமே சார்ந்து இருந்து இறைவன் அருளிய போதனைகளை முறைப்படி கடை பிடிப்பவரே கடும் சுத்த சைவர்கள் ஆவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.