பாடல் #1441

பாடல் #1441: ஐந்தாம் தந்திரம் – 4. கடுஞ் சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் நான்காவது)

நானென்றுந் தானென்று நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டிலாத் தற்பதந்
தானென்று நானென்ற தத்துவ நல்கலாற்
றானென்று நானென்றுஞ் சாற்றுகி லேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நானெனறுந தானெனறு நாடிநான சாரவெ
தானெனறு நானென றிரணடிலாத தறபதந
தானெனறு நானெனற தததுவ நலகலாற
றானெனறு நானெனறுஞ சாறறுகி லெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நான் என்றும் தான் என்றும் நாடி நான் சாரவே
தான் என்று நான் என்று இரண்டு இலா தற் பதம்
தான் என்று நான் என்ற தத்துவம் நல்கலால்
தான் என்று நான் என்றும் சாற்றுகிலேனே.

பதப்பொருள்:

நான் (நானாகிய ஆன்மா) என்றும் (எங்கே இருக்கின்றது என்றும்) தான் (தனக்குள் இருக்கும் இறைவன்) என்றும் (எங்கே இருக்கின்றான் என்றும்) நாடி (தேடி அலைந்து) நான் (நான் இறைவனை) சாரவே (சார்ந்து இருக்கவே)
தான் (இறைவன்) என்று (என்றும்) நான் (ஆன்மா) என்று (என்றும்) இரண்டு (தனித்தனியாக இருக்கின்ற இரண்டுவிதமான தத்துவங்களும்) இலா (இல்லாமல்) தற் (தானே அனைத்துமாய் நிற்கின்ற) பதம் (பரம்பொருளாகிய இறைவன்)
தான் (தான்) என்று (என்றும்) நான் (நான்) என்ற (என்றும் ஆகிய அனைத்தும்) தத்துவம் (தாமாகவே இருக்கின்ற தத்துவத்தை) நல்கலால் (எனக்கு தந்து அருளியதால்)
தான் (இனி தான்) என்று (என்றும்) நான் (நான்) என்றும் (என்றும் ஆன்மாவையும் இறைவனையும் வேறு வேறு என்று பார்க்கின்ற தத்துவத்தை) சாற்றுகிலேனே (சார்ந்து நிற்காமல் அனைத்தும் இறைவன் ஒருவனே என்று இருக்கின்றேன்).

விளக்கம்:

நானாகிய ஆன்மா எங்கே இருக்கின்றது என்றும் தனக்குள் இருக்கும் இறைவன் எங்கே இருக்கின்றான் என்றும் தேடி அலைந்து நான் இறைவனை சார்ந்து இருக்கும் போது இறைவன் என்றும் ஆன்மா என்றும் தனித்தனியாக இருக்கின்ற இரண்டுவிதமான தத்துவங்களும் இல்லாமல் தானே அனைத்துமாய் நிற்கின்ற பரம்பொருளாகிய இறைவன் தான் என்றும் நான் என்றும் ஆகிய அனைத்தும் தாமாகவே இருக்கின்ற தத்துவத்தை எனக்கு தந்து அருளியதால் இனி தான் என்றும் நான் என்றும் ஆன்மாவையும் இறைவனையும் வேறு வேறு என்று பார்க்கின்ற தத்துவத்தை சார்ந்து நிற்காமல் அனைத்தும் இறைவன் ஒருவனே என்று இருக்கின்றேன்.

One thought on “பாடல் #1441

Leave a Reply to Vs KrishnanCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.