பாடல் #1440

பாடல் #1440: ஐந்தாம் தந்திரம் – 4. கடுஞ் சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் நான்காவது)

சுத்தஞ் சிவனுரை தானதுட் டோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூல
மத்தகை யான்மா வரனை யடைந்தற்றாற்
சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சுததஞ சிவனுரை தானதுட டொயாமல
முததர பதபபொருள முததிவித தாமூல
மததகை யானமா வரனை யடைநதறறாற
சுதத சிவமாவ ரெசுதத சைவரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சுத்த சிவன் உரை தான் அது உட் ஓயாமல்
முத்தர் பத பொருள் முத்தி வித்து ஆம் மூலம்
அத்தகை ஆன்மா அரனை அடைந்து அற்றால்
சுத்த சிவம் ஆவரே சுத்த சைவரே.

பதப்பொருள்:

சுத்த (மாசு இல்லாத பரம்பொருளாகிய) சிவன் (இறைவன்) உரை (சொல்லி அருளிய போதனைகளை) தான் (தமக்கு) அது (அந்த போதனைகளை) உட் (உள்ளே வைத்து) ஓயாமல் (ஓயாமல் அவற்றை சிந்தித்து ஆராய்ந்து)
முத்தர் (முத்தி நிலைக்கு) பத (இறைவன் அருளிய போதனைகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளின்) பொருள் (பொருளும்) முத்தி (முத்தி நிலைக்கு) வித்து (விதை) ஆம் (ஆக இருக்கின்றதை உணர்ந்து அதன் மூலம்) மூலம் (முக்திக்கு மூலப் பொருளாக இருக்கின்ற இறைவனின்)
அத்தகை (தன்மையை தானும் பெற்ற) ஆன்மா (சாதகரின் ஆன்மாவானது) அரனை (இறைவனை) அடைந்து (சென்று அடைந்து) அற்றால் (அவன் அருளால்)
சுத்த (மாசு இல்லாத) சிவம் (சிவம் எனும் பரம்பொருளாக) ஆவரே (தாமும் ஆகி இருப்பவர்களே) சுத்த (கடும் சுத்த) சைவரே (சைவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

மாசு இல்லாத பரம்பொருளாகிய இறைவன் பாடல் #1438 இல் உள்ளபடி சொல்லி அருளிய போதனைகளை தமக்குள் உள்வாங்கிக் கொண்டு அவற்றையே ஓயாமல் சிந்தித்து ஆராய்ந்து இறைவன் அருளிய போதனைகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளின் பொருளும் முத்தி நிலைக்கு விதையாக இருக்கின்றதை உணர்ந்து அதன் மூலம் முக்திக்கு மூலப் பொருளாக இருக்கின்ற இறைவனின் தன்மையை தானும் பெற்ற சாதகரின் ஆன்மாவானது இறைவனை சென்று அடைந்து அவன் அருளால் மாசு இல்லாத சிவம் எனும் பரம்பொருளாக தாமும் ஆகி இருப்பவர்களே கடும் சுத்த சைவர்கள் ஆவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.