பாடல் #1309

பாடல் #1309: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ஏகப் பராசத்தி யீசற்கா மங்கமே
யாகப் பராவித்தை யாமுத்தி சித்தியே
யேகப் பராசத்தி யாகச் சிவகுரு
யோகப் பராசத்தி யுண்மை யெட்டாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எகப பராசததி யீசறகா மஙகமெ
யாகப பராவிததை யாமுததி சிததியெ
யெகப பராசததி யாகச சிவகுரு
யொகப பராசததி யுணமை யெடடாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏகப் பராசத்தி ஈசற்கு ஆம் அங்கமே
ஆகப் பராவித்தை ஆம் முத்தி சித்தியே
ஏகப் பராசத்தி ஆகச் சிவ குரு
யோகப் பராசத்தி உண்மை எட்டாமே.

பதப்பொருள்:

ஏகப் (ஒன்றாகிய) பராசத்தி (பரா சக்தியே) ஈசற்கு (இறை) ஆம் (அவருக்கு) அங்கமே (சரி பாதி அங்கமாக இருக்கின்றாள்)
ஆகப் (அவளே தனது திருமேனியில்) பராவித்தை (சாதகர்கள் அனுபவத்தில் உணருகின்ற பரா வித்தையாகவும்) ஆம் (இருக்கின்றாள்) முத்தி (முக்தியாகவும்) சித்தியே (சாதகர்கள் அடையக்கூடிய சித்திகளாகவும் அவளே இருக்கின்றாள்)
ஏகப் (ஒன்றாகிய) பராசத்தி (பரா சக்தியே) ஆகச் (பார்க்கின்ற) சிவ குரு (குருவாக இருக்கும் இறைவனாகவும் இருக்கின்றாள்)
யோகப் (யோகத்தினால் அடையக் கூடிய எட்டுவிதமான சித்திகளில்) பராசத்தி (பரா சக்தியானவள்) உண்மை (பேருண்மையின்) எட்டாமே (எட்டு விதமான சக்திகளாகவும் இருக்கின்றாள்).

விளக்கம்:

பாடல் #1308 இல் உள்ளபடி சாதகர்கள் அறிந்து கொண்ட சிவ உருவமாக இருப்பவள் ஒன்றாகிய பரா சக்தியே. அவளே இறைவனுக்கு சரி பாதி அங்கமாகவும் இருக்கின்றாள். தனது திருமேனியில் சாதகர்கள் அனுபவத்தில் உணருகின்ற பரா வித்தையாகவும், சாதகர்களுக்கு கிடைக்கும் முக்தியாகவும், அவர்கள் அடையக் கூடிய சித்திகளாகவும் அவளே இருக்கின்றாள். ஒன்றாகிய பரா சக்தியே சாதகர்கள் பார்க்கின்ற குருவாக இருக்கும் இறைவனாகவும் இருக்கின்றாள். சாதகர்கள் தங்களின் யோகத்தினால் அடையக் கூடிய எட்டு விதமான சித்திகளில் பேருண்மையாக இருக்கின்ற எட்டு விதமான சக்திகளாகவும் பரா சக்தியே இருக்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.