பாடல் #838

பாடல் #838: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

எழுகின்ற தீயைமுன் னேகொண்டு சென்றிட்டால்
மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே
உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே.

விளக்கம் :

மூலாதாரத்திலிருந்து சுவாதிட்டானம் வழியாக காமாக்கினியை புருவ நடுவுக்கு கொண்டு சென்று அங்குள்ள சிவனை அறிந்த பின் அனலின் முன் மெழுகு உருகுவது போன்று சாதகர்க்கு உடம்பு ஜோதியாய் மாறிவிடும். ஜோதியாய் ஆன பின் புருவ நடுவைத் தாண்டி தலைக்கு மேல் பெருவெளியை அறிந்தவர்களுக்கு உடல் உலகியலில் வீழ்வது இல்லை.

பாடல் #839

பாடல் #839: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

வெளியை அறிந்து வெளியி னடுவே
ஒளியை அறிவி னுளிமுறி யாமே
தெளிவை அறிந்து செழுநந்தி யாலே
வெளியை அறிந்தனன் மேலறி யேனே.

விளக்கம்:

பரவெளியாகிய ஆகாயத்தை அறிந்து அதன் நடுவில் உள்ள அருள் ஒளியை உணர்ந்து அதில் விளங்குகின்ற அருளொளியையும் அவ்வொளியால் தெளிவான மெய்ப்பொருளையும் குரு நந்தி பெருமான் அருளால் உணர்ந்தேன். பரியாங்க யோகத்தில் இதற்கு மேல் அறியத் தக்கது ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

பாடல் #840

பாடல் #840: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

மேலாந் தலத்தில் விரிந்தவ ராரெனின்
மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர்
நாலா நிலத்தி னடுவான வப்பொருள்
மேலா யுரைத்தனர் மின்னிடை யாளுக்கே

விளக்கம் :

இல்லறத்தில் இருப்பவர்களில் பரியாங்க யோகத்தின் மூலமாக அனைத்தும் இறைவன் ஒருவனே என்ற உணர்வைப் பெற்றிருந்தவர்கள் யாரவது உள்ளார்களா என்றால் திருமால், பிரம்மா, உருத்திரன், நந்தி, சிவகணங்கள் இவர்கள் எல்லாம் துய தலைவனாகிய சிவனை உணர்ந்து அவனே பரம்பொருள் என்று தங்களது துணைவியருக்கு உணர்த்தினர்.

பாடல் #841

பாடல் #841: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

மின்னிடை யாளுமின் னாளனுங் கூட்டத்துப்
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லிரேல்
மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே.

விளக்கம் :

பரியாங்க யோகத்தின் மூலம் மின்னல் போன்ற இடையை உடைய சக்தியையும் அவளை ஆள்பவனாகிய சிவனையும் அவர்கள் கூட்டத்துடன் பொன்னொளி கொண்ட ஆகாயத்தில் நிலை பெறும்படி செய்து அக்கூட்டத்தில் யோகி ஆன்மாவாகிய தன்னையும் பார்த்தால் இவ்வுலகத்தில் நெடுங்காலம் வாழ்வார்.

பாடல் #842

பாடல் #842: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

வாங்க லிறுதலை வாங்கலில் வாங்கிய
வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளரும்
ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே.

விளக்கம்:

துணைவி பெற்றுக்கொள்ளும் துணைவனின் சுக்கிலத்தை வெளியே நீக்காமல் பரியங்க யோகத்தின் மூலம் உள்வாங்கிக் கொள்ளும் முறையில் சுக்கிலத்தை உடம்பினுள் ஆற்றலாய் மாற்றுகின்ற வழியை அறிகின்றவர் ஒருவரும் இல்லை. அவ்வழியை அறிந்தவர் இறைவனை அடையும் வழியை அறிந்தவராவார்.

பாடல் #843

பாடல் #843: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற்
கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்
இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி
பதமறிந் தும்முளே பார்கடிந் தாளே.

விளக்கம் :

போகத்தை அனுபவிக்கத் தகுதியான வழியை அறிந்து அதை நன்கு பயின்றால் தலையிலுள்ள உரோமம் கறுக்கும் சாதகருக்கு தேவையான நன்மை கருதி சக்தியும் அவனை அறிந்து செயல் புரிவாள். சாதகரின் காலத்தை அறிந்து அவரின் உணர்வில் உள்ள உலகியல் எண்ணத்தை போக்கி அருள்வாள்.

பாடல் #844

பாடல் #844: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே.

விளக்கம் :

தலை உச்சியில் ஆயிரம் இதழ்த் தாமரை ஒன்று உண்டு. அது ஞான வெளியில் இருப்பதால் அங்கு நிலமோ நீரோ இல்லை. இந்தத்தாமரை வேர் இல்லாமல் மலர்ந்தே உள்ளது. அதனால் அதற்கு மொட்டும் இல்லை. அது ஒளியால் நிரம்பி உள்ளது. ஒளி எங்கும் பரவி இருப்பதால் அதற்கு குறிப்பிட்ட இடத்தில் தான் இருக்கும் என்று இல்லை. ஓளிக்கு காரணம் இந்த தாமரையே என்றாலும் அதற்கு அடியும் இல்லை நுனியும் இல்லை.

பாடல் # 799

பாடல் # 799 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

கட்டக் கழன்று கீழ்நான்று விழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணை கோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து
நட்ட மிருக்க நமனில்லை தானே.

விளக்கம்:

மூச்சுக் காற்று கீழே இறங்காமல் அண்ணாக்கில் அதைக் கட்டிவிட வேண்டும். அபான வாயு குதம் வழியாகவோ அல்லது குறி வழியாகவோ வெளியேறாமல் குதத்தைச் சுருக்கி நிறுத்த வேண்டும். இரு கண் பார்வைகளையும் ஒன்றாக்கிவிட வேண்டும். உள்ளத்தைச் சுழுமுனை வழியே பாயும் மூச்சில் கொண்டு நிறுத்த வேண்டும். உடலைத் தாண்டிய இந்த நிலையை ஒருவன் அடைந்து விட்டால் அவன் காலத்தைக் கடந்து விடலாம். அவனுக்கு ஒரு மரணம் இல்லை.

பாடல் # 800

பாடல் # 800 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே.

விளக்கம் :

வண்ணான் (துணி துவைப்பவர்) துணியை கல்லில் அடித்து துவைக்கும் போது ஆடையில் இருக்கும் அழுக்கு போவது போல உயிர் முன் பக்கம் உள்ள தன் மூளையை தியானம் மூலம் வரும் சிவயோக ஒளியினால் மோத வேண்டும். இரண்டு கண்களின் பார்வைகளையும் மாறி மாறிப் பார்ப்பதால் சிரசின் உள்ளே தெரியும் இரண்டு பக்கத்துக்கும் இடையே உள்ள சஹஸ்ரதளம் என்னும் குளத்தை தியானத்தின் மூலம் வந்த ஒளியைக் கொண்டு நிரப்ப வேண்டும். அதற்குப் பிறகு நெற்றிக்கு மேலே நிமிர்ந்து பார்த்தால் அந்த உயிர் தன் குற்றங்கள் அனைத்தும் நீங்கித் தூய்மை அடைந்து விடுவான்.

பாடல் # 801

பாடல் # 801 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டா
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்
கிறக்கவும் வேண்டா இருக்கலு மாமே.

விளக்கம் :

இடகலை பிங்கலை நாடிகள் வழியே மூச்சுக் காற்று இயங்குவதை மாற்றிச் சுழுமுனை வழியே மூச்சுக்காற்றை செலுத்தும் கலையை ஒருவன் அறிந்து கொண்டு விட்டால் அவருக்குத் சோர்வு ஏற்படாது. உறங்கும் காலத்தில் உறக்கத்தை விட்டு பயிற்சி செய்து வந்தால் ஒருவனுக்கு இறப்பு இல்லாமல் நீண்ட காலம் வாழலாம்.