பாடல் #1523

பாடல் #1523: ஐந்தாம் தந்திரம் – 19. தீவிரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி விரைவாக வருகின்ற தன்மை)

கன்னிக்கும் பெண்பிள்ளை யப்பனார் தோட்டத்தி
லெண்ணிக்கு மேழேழ் பிறவி யுணர்விக்கு
முண்ணிற்ப தெல்லா மொழிவ முதல்வனைக்
கண்ணுற்று நின்ற கனியது வாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கனனிககும பெணபிளளை யபபனார தொடடததி
லெணணிககு மெழெழ பிறவி யுணரவிககு
முணணிறப தெலலா மொழிவ முதலவனைக
கணணுறறு நினற கனியது வாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கன்னிக்கும் பெண் பிள்ளை அப்பனார் தோட்டத்தில்
எண்ணிக்கும் ஏழ் ஏழ் பிறவி உணர்விக்கும்
உள் நிற்பது எல்லாம் ஒழிவது முதல்வனை
கண் உற்று நின்ற கனி அது ஆகுமே.

பதப்பொருள்:

கன்னிக்கும் (எப்போதும் இளமையுடன் இயங்கிக் கொண்டே இருக்கின்ற) பெண் (பெண் தன்மை கொண்ட) பிள்ளை (பிள்ளையாகிய இறைவியின் அருட் சக்திக்கு) அப்பனார் (அப்பாவாக / தந்தையாக இருக்கின்ற இறைவனுக்கு சொந்தமாகிய) தோட்டத்தில் (அண்ட சராசரங்கள் எனும் தோட்டத்தில் இருக்கும்)
எண்ணிக்கும் (எண்ணிலடங்காத அளவிற்கு இருக்கின்ற பிறவிகளை) ஏழ் (ஏழும்) ஏழ் (ஏழும் கூட்டி வரும் மொத்தம் பதினான்கு உலகங்களிலும்) பிறவி (பல விதமாக எடுக்கின்ற அனைத்து பிறவிகளையும்) உணர்விக்கும் (சாதகருக்கு உணர வைத்து)
உள் (சாதகருக்குள்) நிற்பது (நிற்கின்ற) எல்லாம் (மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஆகிய அனைத்தையும்) ஒழிவது (அழிய வைக்கின்ற) முதல்வனை (ஆதி மூலமாகிய இறைவனை அடைய செய்து)
கண் (சாதகரின் கண்ணிற்கு) உற்று (உள்ளே) நின்ற (நின்று) கனி (அனைத்தையும் உணர வைக்கின்ற பேரின்ப ஞானமாக) அது (அந்த அருள் சக்தியே) ஆகுமே (இருக்கின்றாள்).

விளக்கம்:

எப்போதும் இளமையுடன் இயங்கிக் கொண்டே இருக்கின்ற பெண் தன்மை கொண்ட பிள்ளையாகிய இறைவியின் அருட் சக்திக்கு தந்தையாக இருக்கின்ற இறைவனுக்கு சொந்தமாகிய அண்ட சராசரங்கள் எனும் தோட்டத்தில் இருக்கும் எண்ணிலடங்காத அளவிற்கு இருக்கின்ற மொத்தம் பதினான்கு உலகங்களிலும் பல விதமாக எடுக்கின்ற அனைத்து பிறவிகளையும் சாதகருக்கு உணர வைத்து, சாதகருக்குள் நிற்கின்ற மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஆகிய அனைத்தையும் அழிய வைக்கின்ற ஆதி மூலமாகிய இறைவனை அடைய செய்து சாதகரின் கண்ணிற்கு உள்ளே நின்று அனைத்தையும் உணர வைக்கின்ற பேரின்ப ஞானமாக அந்த அருள் சக்தியே இருக்கின்றாள்.

பாடல் #1524

பாடல் #1524: ஐந்தாம் தந்திரம் – 19. தீவிரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி விரைவாக வருகின்ற தன்மை)

பிறப்பை யறுக்கும் பெருந்தவ நல்கு
மறப்பை யறுக்கும் வழிபட வைக்குங்
குறப்பெண் குவிமுலைக் கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பிறபபை யறுககும பெருநதவ நலகு
மறபபை யறுககும வழிபட வைககுங
குறபபெண குவிமுலைக கொமள வலலி
சிறபபொடு பூசனை செயயநின றாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பிறப்பை அறுக்கும் பெரும் தவம் நல்கும்
மறப்பை அறுக்கும் வழி பட வைக்கும்
குற பெண் குவி முலை கோமள வல்லி
சிறப்போடு பூசனை செய்ய நின்றாளே.

பதப்பொருள்:

பிறப்பை (இனிமேல் எடுக்க வேண்டிய அனைத்து பிறவிகளையும்) அறுக்கும் (அறுத்து விடக் கூடிய) பெரும் (மிகப் பெரும்) தவம் (தவத்தை) நல்கும் (அருளுபவளாகவும்)
மறப்பை (இறைவனிடமிருந்தே பிரிந்து வந்திருக்கின்றோம் என்பதை மறந்து விட்டு மாயையில் இருக்கின்ற நிலையை) அறுக்கும் (அறுக்கின்ற) வழி (வழியில்) பட (சாதகர்களை செல்ல) வைக்கும் (வைக்கின்றவளாகவும்)
குற (அதற்கு தேவையான அனைத்து ஞானங்களையும்) பெண் (அருளுகின்ற சக்தியாகவும்) குவி (குவிந்த) முலை (மார்பகங்களின் மூலம் அமிழ்தத்தை வழங்குபவளாகவும்) கோமள (அடியவர்களை தன் பால் ஈர்க்கின்ற பேரழகுடன்) வல்லி (என்றும் இளமையானவளாகவும் இருக்கின்ற இறைவியானவள்)
சிறப்போடு (சிறப்பு பொருந்தியவளாக) பூசனை (அவர்களை பூஜைகள்) செய்ய (செய்ய வைத்துக் கொண்டே) நின்றாளே (அருட் சக்தியாக எப்போதும் சேர்ந்தே நிற்கின்றாள்).

விளக்கம்:

இனிமேல் எடுக்க வேண்டிய அனைத்து பிறவிகளையும் அறுத்து விடக் கூடிய மிகப் பெரும் தவத்தை அருளுபவளாகவும் இறைவனிடமிருந்தே பிரிந்து வந்திருக்கின்றோம் என்பதை மறந்து விட்டு மாயையில் இருக்கின்ற நிலையை அறுக்கின்ற வழியில் சாதகர்களை செல்ல வைக்கின்றவளாகவும் அதற்கு தேவையான அனைத்து ஞானங்களையும் அருளுகின்ற சக்தியாகவும் குவிந்த மார்பகங்களின் மூலம் அமிழ்தத்தை வழங்குபவளாகவும் அடியவர்களை தன் பால் ஈர்க்கின்ற பேரழகுடன் என்றும் இளமையானவளாகவும் இருக்கின்ற இறைவியானவள் சிறப்பு பொருந்தியவளாக அவர்களை பூஜைகள் செய்ய வைத்துக் கொண்டே அருட் சக்தியாக எப்போதும் சேர்ந்தே நிற்கின்றாள்.

பாடல் #1525

பாடல் #1525: ஐந்தாம் தந்திரம் – 19. தீவிரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி விரைவாக வருகின்ற தன்மை)

தாங்குமின் னெட்டுத் திசைக்குந் தலைமகள்
பூங்கமழ் பொய்கைப் புரிகுழ லாளோடு
மாங்கது சேரு மறிவுடை யாளர்க்குத்
தூங்கொளி நீலந் தொடர்தலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தாஙகுமின னெடடுத திசைககுந தலைமகள
பூஙகமழ பொயகைப புரிகுழ லாளொடு
மாஙகது செரு மறிவுடை யாளரககுத
தூஙகொளி நீலந தொடரதலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தாங்குமின் எட்டு திசைக்கும் தலை மகள்
பூம் கமழ் பொய்கை புரி குழலாளோடும்
ஆங்கு அது சேரும் அறிவு உடையாளர்க்கு
தூங்கு ஒளி நீலம் தொடர்தலும் ஆமே.

பதப்பொருள்:

தாங்குமின் (சாதகர்கள் தங்களின் உள்ளத்திற்குள் தாங்கிக் கொண்டால்) எட்டு (எட்டு விதமான) திசைக்கும் (திசைகளுக்கும்) தலை (தலைவியாக) மகள் (வீற்றிருக்கின்ற இறைவி)
பூம் (நறுமணமிக்க மலரில் / சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில்) கமழ் (இருந்து வருகின்ற நறுமணம் பரந்து விரிகின்ற / இருந்து அருளானது உடல் முழுவதும் பரந்து விரிகின்ற) பொய்கை (ஊற்று பெருகும் குளத்தில் / அமிழ்தம் ஊறி பெருகுவதில்) புரி (அருள் புரிகின்ற) குழலாளோடும் (கூந்தலைக் கொண்ட இறைவியோடு)
ஆங்கு (அவள் இருக்கின்ற குளத்தில் / சகஸ்ரதளத்தில்) அது (தமது குண்டலினி சக்தியை) சேரும் (கொண்டு சேர்க்கின்ற) அறிவு (ஞானத்தை) உடையாளர்க்கு (அறிந்து கொண்டவர்களுக்கு)
தூங்கு (இது வரை நெற்றிக்கு நடுவில் தூங்கிக் கொண்டு இருந்த) ஒளி (ஜோதியாகிய) நீலம் (நீல நிற ஒளியானது விழிப்பு பெற்றதால் உருவாகும் பேரறிவு ஞானமானது) தொடர்தலும் (சாகதருக்கு எப்போதும் தொடர்ந்து) ஆமே (கொண்டே இருக்கும்).

விளக்கம்:

எட்டு விதமான திசைகளுக்கும் தலைவியாக வீற்றிருக்கின்ற இறைவியை சாதகர்கள் தங்களின் உள்ளத்திற்குள் தாங்கிக் கொண்டால் சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் இருந்து அருளானது உடல் முழுவதும் பரந்து விரிகின்ற அமிழ்தம் ஊறி பெருகுவதில் அருள் புரிகின்ற கூந்தலைக் கொண்ட இறைவியோடு அவள் இருக்கின்ற சகஸ்ரதளத்தில் தமது குண்டலினி சக்தியை கொண்டு சேர்க்கின்ற ஞானத்தை அறிந்து கொண்டவர்களுக்கு இது வரை நெற்றிக்கு நடுவில் தூங்கிக் கொண்டு இருந்த ஜோதியாகிய நீல நிற ஒளியானது விழிப்பு பெற்றதால் உருவாகும் பேரறிவு ஞானமானது சாகதருக்கு எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

பாடல் #1526

பாடல் #1526: ஐந்தாம் தந்திரம் – 19. தீவிரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி விரைவாக வருகின்ற தன்மை)

நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவ
னணுகிய வொன் றறியாத வொருவ
னணுகு முலகெங்கு மாவியு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நணுகினு ஞானக கொழுநதொனறு நலகும
பணிகிலும பனமலர தூவிப பணிவ
னணுகிய வொன றறியாத வொருவ
னணுகு முலகெஙகு மாவியு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நணுகினும் ஞான கொழுந்து ஒன்று நல்கும்
பணிகிலும் பல் மலர் தூவி பணிவன்
அணுகிய ஒன்று அறியாத ஒருவன்
அணுகும் உலகு எங்கும் ஆவியும் ஆமே.

பதப்பொருள்:

நணுகினும் (அருள் சக்தியை நெருங்கிச் சென்று அடைந்தால்) ஞான (ஞானத்தின்) கொழுந்து (உச்சமாக இருக்கின்ற) ஒன்று (பேரறிவு ஞானத்தை) நல்கும் (அந்த அருட் சக்தியே வழங்குவாள்)
பணிகிலும் (அப்படி இல்லாமல் அருள் சக்தியை ஞானத்தால் நெருங்கி அடைய முடியாவிட்டாலும்) பல் (பல விதமான) மலர் (மலர்களை) தூவி (தூவி) பணிவன் (வணங்கி வழிபடும் போது அந்த வழிபாட்டின் பயனால்)
அணுகிய (நம்மை நெருங்கி வரும்) ஒன்று (அருட் சக்தியை) அறியாத (தன் அறிவால் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாத) ஒருவன் (சாதகனாக ஒருவன் இருந்தாலும் அருள் சக்தி வழங்கும் ஞானத்தால் அறியும் போது)
அணுகும் (அவன் இருக்கின்ற) உலகு (உலகம் மட்டுமின்றி அனைத்து உலகங்கள்) எங்கும் (எங்கும்) ஆவியும் (இருக்கின்ற அனைத்து பொருள்களிலும் நிற்கின்ற ஆன்மாவாக) ஆமே (அந்த அருட் சக்தியே இருக்கின்றாள் என்பதை அறிந்து கொள்ளலாம்).

விளக்கம்:

அருள் சக்தியை நெருங்கிச் சென்று அடைந்தால் ஞானத்தின் உச்சமாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தை அந்த அருட் சக்தியே வழங்குவாள். அப்படி இல்லாமல் அருள் சக்தியை ஞானத்தால் நெருங்கி அடைய முடியாவிட்டாலும் பல விதமான மலர்களை தூவி வணங்கி வழிபடும் போது அந்த வழிபாட்டின் பயனால் நம்மை நெருங்கி வரும் அருட் சக்தியை தன் அறிவால் முழுவதுமாக அறிந்து கொள் முடியாத சாதகனாக ஒருவன் இருந்தாலும் அருள் சக்தி வழங்கும் ஞானத்தால் அறியும் போது அவன் இருக்கின்ற உலகம் மட்டுமின்றி அனைத்து உலகங்கள் எங்கும் இருக்கின்ற அனைத்து பொருள்களிலும் நிற்கின்ற ஆன்மாவாக அந்த அருட் சக்தியே இருக்கின்றாள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கருத்து:

யோகத்தாலும் ஞானத்தினாலும் இறைவியை அடைய முடியாதவர்கள் கூட சரியை மற்றும் கிரியையின் மூலமே இறைவியை அடைந்து விட முடியும்.

பாடல் #1518

பாடல் #1518: ஐந்தாம் தந்திரம் – 18. மந்த தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி படிப்படியாக வருகின்ற தன்மை)

மருட்டிப் புணர்ந்து மயக்கமு நீக்கி
வெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
யருட்டிகழ் ஞான மதுபுரிந் தாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மருடடிப புணரநது மயககமு நீககி
வெருடடி வினையறுத தினபம விளைததுக
குருடடினை நீககிக குணமபல காடடி
யருடடிகழ ஞான மதுபுரிந தாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மருட்டி புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினை அறுத்து இன்பம் விளைத்து
குருட்டினை நீக்கி குணம் பல காட்டி
அருள் திகழ் ஞானம் அது புரிந்தாளே.

பதப்பொருள்:

மருட்டி (சாதகர்கள் தன்னை நினைந்து உருகும் படி செய்து) புணர்ந்து (அவர்களோடு எப்போதும் சேர்ந்தே இருந்து) மயக்கமும் (மாயையாகிய மயக்கத்தை) நீக்கி (நீக்கி விட்டு)
வெருட்டி (விரைவாக நீங்கிச் செல்லும் படி மிரட்டி) வினை (வினைகளை) அறுத்து (அறுத்து விட்டு) இன்பம் (பேரின்பத்தை) விளைத்து (அனுபவிக்கும் படி செய்து)
குருட்டினை (மாயையினால் உண்மையை அறியும் ஞானக்கண் இல்லாத குருட்டுத் தன்மையை) நீக்கி (நீக்கி விட்டு) குணம் (இறைவனின் தன்மைகளை) பல (பல விதங்களில்) காட்டி (கண்டு உணரும் படி செய்து)
அருள் (பேரருள்) திகழ் (திகழ்கின்ற) ஞானம் (உண்மை ஞானத்தை) அது (சாதகர்கள் அடையும் படி) புரிந்தாளே (செய்து அருளுகின்றாள் இறை சக்தி).

விளக்கம்:

சாதகர்கள் தன்னை நினைந்து உருகும் படி செய்து அவர்களோடு எப்போதும் சேர்ந்தே இருந்து மாயையாகிய மயக்கத்தை நீக்கி விட்டு விரைவாக நீங்கிச் செல்லும் படி மிரட்டி வினைகளை அறுத்து விட்டு பேரின்பத்தை அனுபவிக்கும் படி செய்து மாயையினால் உண்மையை அறியும் ஞானக்கண் இல்லாத குருட்டுத் தன்மையை நீக்கி விட்டு இறைவனின் தன்மைகளை பல விதங்களில் கண்டு உணரும் படி செய்து பேரருள் திகழ்கின்ற உண்மை ஞானத்தை சாதகர்கள் அடையும் படி செய்து அருளுகின்றாள் இறை சக்தி.

பாடல் #1519

பாடல் #1519: ஐந்தாம் தந்திரம் – 18. மந்த தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி படிப்படியாக வருகின்ற தன்மை)

கன்னித் துறைபடிந் தாடிய வாடவர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேல்
பின்னைப் பிறவி பிறிதில்லைத் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கனனித துறைபடிந தாடிய வாடவர
கனனித துறைபடிந தாடுங கருததிலர
கனனித துறைபடிந தாடுங கருததுணடெல
பினனைப பிறவி பிறிதிலலைத தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கன்னி துறை படிந்து ஆடிய ஆடவர்
கன்னி துறை படிந்து ஆடும் கருத்து இலர்
கன்னி துறை படிந்து ஆடும் கருத்து உண்டேல்
பின்னை பிறவி பிறிது இல்லை தானே.

பதப்பொருள்:

கன்னி (அருள் சக்தி) துறை (வருகின்ற வழியின்) படிந்து (முறையை கடைபிடித்து) ஆடிய (அதன் படியே நடக்கின்ற) ஆடவர் (சாதகர்கள்)
கன்னி (அருள் சக்தி) துறை (வருகின்ற வழியின்) படிந்து (முறையை கடைபிடிப்பதின் மூலம்) கருத்து (பிறவிக்கான வினைகளை அறுத்து பிறவி இல்லாத நிலையை எவ்வாறு பெறுவது எனும் ஞானம்) இலர் (இல்லாதவராக இருக்கின்றார்கள்)
கன்னி (அருள் சக்தி) துறை (வருகின்ற வழியின்) படிந்து (முறையை கடைபிடித்து) ஆடும் (அதன் படியே நடந்து பிறவிக்கான வினைகளை அறுத்து பிறவி இல்லாத நிலையை பெறுகின்ற) கருத்து (ஞானத்தை தமது இடைவிடாத சாதகத்தினால் சாதகர்கள்) உண்டேல் (அறிந்து கொண்டு விட்டால்)
பின்னை (இனி பிறக்க வேண்டிய) பிறவி (பிறவி என்று) பிறிது (வேறு எதுவும் அவர்களுக்கு) இல்லை (இல்லாமல்) தானே (போய் விடும்).

விளக்கம்:

அருள் சக்தி வருகின்ற வழியின் முறையை கடைபிடித்து அதன் படியே நடக்கின்ற சாதகர்கள் அந்த முறையை கடைபிடிப்பதின் மூலம் பிறவிக்கான வினைகளை அறுத்து பிறவி இல்லாத நிலையை எவ்வாறு பெறுவது எனும் ஞானம் இல்லாதவராக இருக்கின்றார்கள். அருள் சக்தி வருகின்ற வழியின் முறையை கடைபிடித்து அதன் படியே நடந்து பிறவிக்கான வினைகளை அறுத்து பிறவி இல்லாத நிலையை பெறுகின்ற ஞானத்தை தமது இடைவிடாத சாதகத்தினால் சாதகர்கள் அறிந்து கொண்டு விட்டால் இனி பிறக்க வேண்டிய பிறவி என்று வேறு எதுவும் அவர்களுக்கு இல்லாமல் போய் விடும்.

பாடல் #1520

பாடல் #1520: ஐந்தாம் தந்திரம் – 18. மந்த தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி படிப்படியாக வருகின்ற தன்மை)

செய்யன் கரியன் வெளியனற் பச்சைய
னெய்த வுணர்ந்தவ ரெய்து மிறைவனை
மையன் கண்ணறப் பகடுரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

செயயன கரியன வெளியனற பசசைய
னெயத வுணரநதவ ரெயது மிறைவனை
மையன கணணறப பகடுரி பொரததவெங
கைய னிவனெனறு காதலசெய வீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

செய்யன் கரியன் வெளியன் நற் பச்சையன்
எய்த உணர்ந்தவர் எய்தும் இறைவனை
மையன் கண் அற பகடு உரி போர்த்த வெம்
கையன் இவன் என்று காதல் செய்வீரே.

பதப்பொருள்:

செய்யன் (சிவந்த மேனியில் அருளை வழங்குபவன்) கரியன் (கரிய மேனியில் மாயையால் மறைக்கின்றவன்) வெளியன் (வெள்ளை மேனியில் அண்ட சராசரங்களிலும் ஜோதியாய் பரவி இருக்கின்றவன்) நற் (நன்மையைத் தந்து) பச்சையன் (பச்சை மேனியில் ஆன்மாக்களை காத்து அருளுகின்றவன்)
எய்த (இப்படி பலவிதமான தன்மைகளை) உணர்ந்தவர் (கண்டு உணர்ந்து கொண்டவர்களுக்கு) எய்தும் (அவர்கள் கண்ட தன்மையிலேயே அருளை வழங்குகின்ற) இறைவனை (இறைவனை)
மையன் (கருமை நிறம் கொண்டு) கண் (அகங்காரத்தை) அற (இல்லாமல் செய்து) பகடு (யானையின் தோல் போன்ற ஆணவத்தை) உரி (உரித்து எடுத்து) போர்த்த (தம்மேல் போர்த்திக் கொண்டு) வெம் (நெருப்புக் கணலை)
கையன் (கையில் கொண்டு பிறவிகளை அறுத்து) இவன் (முக்தியை அருளபவன் இவனே) என்று (என்று உணர்ந்து) காதல் (அவன் மேல் பேரன்பு) செய்வீரே (கொள்ளுங்கள்).

விளக்கம்:

சிவந்த மேனியில் அருளை வழங்குபவன் கரிய மேனியில் மாயையால் மறைக்கின்றவன் வெள்ளை மேனியில் அண்ட சராசரங்களிலும் ஜோதியாய் பரவி இருக்கின்றவன் நன்மையைத் தந்து பச்சை மேனியில் ஆன்மாக்களை காத்து அருளுகின்றவன் இப்படி பலவிதமான தன்மைகளை கண்டு உணர்ந்து கொண்டவர்களுக்கு அவர்கள் கண்ட தன்மையிலேயே அருளை வழங்குகின்ற இறைவனை கருமை நிறம் கொண்டு அகங்காரத்தை இல்லாமல் செய்து யானையின் தோல் போன்ற ஆணவத்தை உரித்து எடுத்து தம்மேல் போர்த்திக் கொண்டு நெருப்புக் கணலை கையில் கொண்டு பிறவிகளை அறுத்து முக்தியை அருளபவன் அவனே என்று உணர்ந்து அவன் மேல் பேரன்பு கொள்ளுங்கள்.

பாடல் #1521

பாடல் #1521: ஐந்தாம் தந்திரம் – 18. மந்த தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி படிப்படியாக வருகின்ற தன்மை)

எய்திய காலங்க ளெத்தனை யாயினுந்
தையலுந் தானுந் தனிநாயக மென்பர்
வைகலுந் தன்னை வணங்கு மவர்கட்குக்
கையிற் கருமஞ்செய் கோட்டது வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எயதிய காலஙக ளெததனை யாயினுந
தையலுந தானுந தனிநாயக மெனபர
வைகலுந தனனை வணஙகு மவரகடகுக
கையிற கருமஞசெய கொடடது வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எய்திய காலங்கள் எத்தனை ஆயினும்
தையலும் தானும் தனி நாயகம் என்பர்
வைகலும் தன்னை வணங்கும் அவர்கட்கு
கையில் கருமம் செய் கோட்டு அது ஆமே.

பதப்பொருள்:

எய்திய (சாதகர்கள் இறைவனை எந்த வடிவத்திலும் எந்த தன்மையிலும் தாம் எடுத்துக் கொண்ட எந்த சாதகத்தின் மூலமாகவும் சாதகம் செய்து வழிபடுகின்ற) காலங்கள் (காலங்கள்) எத்தனை (எத்தனை எத்தனை வருடங்களாக) ஆயினும் (இருந்தாலும்)
தையலும் (ஒன்றோடு ஒன்று தைப்பது போல பிண்ணிப் பிணைந்து இருக்கின்ற இறைவியும்) தானும் (இறைவனும்) தனி (சாதகர்கள் வணங்கக் கூடிய அனைத்து வடிவத்திற்கும் அனைத்து தன்மைக்கும் ஒரே) நாயகம் (தலைவராக இருக்கின்றார்) என்பர் (என்பதை தமக்குள் உணர்ந்தவர்கள் சொல்லுவார்கள்)
வைகலும் (ஆகவே தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து எந்த வடிவத்திலும் எந்த தன்மையிலும்) தன்னை (இறைவனை) வணங்கும் (வணங்குகின்ற) அவர்கட்கு (சாதகர்களுக்கு)
கையில் (அவர்களின் கைகளினால்) கருமம் (சாதகங்கள்) செய் (செய்த வழிபாட்டிற்கு) கோட்டு (அவர்களின் கையில் இருக்கின்ற ரேகைகள்) அது (போலவே உடனுக்குடன் பலன்களை) ஆமே (தருபவனாக இறைவன் இருக்கின்றான்).

விளக்கம்:

சாதகர்கள் இறைவனை எந்த வடிவத்திலும் எந்த தன்மையிலும் தாம் எடுத்துக் கொண்ட எந்த சாதகத்தின் மூலமாகவும் சாதகம் செய்து வழிபடுகின்ற காலங்கள் எத்தனை எத்தனை வருடங்களாக இருந்தாலும் ஒன்றோடு ஒன்று தைப்பது போல பிண்ணிப் பிணைந்து இருக்கின்ற இறைவியும் இறைவனும் சாதகர்கள் வணங்கக் கூடிய அனைத்து வடிவத்திற்கும் அனைத்து தன்மைக்கும் ஒரே தலைவராக இருக்கின்றார் என்பதை தமக்குள் உணர்ந்தவர்கள் சொல்லுவார்கள். ஆகவே தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து எந்த வடிவத்திலும் எந்த தன்மையிலும் இறைவனை வணங்குகின்ற சாதகர்களுக்கு அவர்களின் கைகளினால் சாதகங்கள் செய்த வழிபாட்டிற்கு அவர்களின் கையில் இருக்கின்ற ரேகைகள் போலவே உடனுக்குடன் பலன்களை தருபவனாக இறைவன் இருக்கின்றான்.

பாடல் #1522

பாடல் #1522: ஐந்தாம் தந்திரம் – 18. மந்த தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி படிப்படியாக வருகின்ற தன்மை)

கண்டுகொண் டோமிரண்டுந் தொடர்ந் தாங்கொளி
பண்டுகண் டோயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண் டாடும வளர்சடை யண்ணலைக்
கண்டுகொண் டோர்க்கிருள் நீங்கிநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கணடுகொண டொமிரணடுந தொடரந தாஙகொளி
பணடுகண டொயும பரமன பரஞசுடர
வணடுகொண டாடும வளரசடை யணணலைக
கணடுகொண டொரககிருள நீஙகிநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி
பண்டு கண்டு ஓயும் பரமன் பரம் சுடர்
வண்டு கொண்டு ஆடும் வளர் சடை அண்ணலை
கண்டு கொண்டோர்க்கு இருள் நீங்கி நின்றானே.

பதப்பொருள்:

கண்டு (கண்டு) கொண்டோம் (கொண்டோம்) இரண்டும் (இறைவியும் இறைவனும் பிண்ணிப் பிணைந்து) தொடர்ந்து (தொடர்ச்சியாக) ஆங்கு (விளங்குகின்ற ஆகாயத்தில் இருக்கின்ற) ஒளி (ஒளியை)
பண்டு (ஆதிகாலத்திலிருந்தே இருக்கின்ற அந்த ஒளியை) கண்டு (கண்டு) ஓயும் (அந்த ஒளியின் நுணுக்கத்தை உணர்ந்தது என்னவென்றால்) பரமன் (பரம்பொருளாகிய இறைவனே) பரம் (அந்த பரம்) சுடர் (ஜோதியாகவும் இருக்கின்றான் என்பதே ஆகும்)
வண்டு (வண்டுகள்) கொண்டு (நறுமணமிக்க மலர்களில் உள்ள தேனை உண்டு) ஆடும் (களிப்பில் ஆடுவது போல அடியவர்களை தன் அமிழ்தத்தினை உண்டு பேரின்பத்தில் ஆடச் செய்கின்ற) வளர் (நீண்டு வளருகின்ற) சடை (பிண்ணிய சடையை) அண்ணலை (அணிந்து இருக்கின்ற தலைவனும் அடியவனுமாகிய இறைவனை)
கண்டு (தமக்குள் இருக்கும் ஜோதியாக கண்டு) கொண்டோர்க்கு (உணர்ந்து கொண்டவர்களுக்கு) இருள் (மாயையை) நீங்கி (நீங்கி) நின்றானே (இறைவன் எப்போதும் அருள் சக்தியாக நிற்கின்றான்).

விளக்கம்:

கண்டு கொண்டோம் இறைவியும் இறைவனும் பிண்ணிப் பிணைந்து தொடர்ச்சியாக விளங்குகின்ற ஆகாயத்தில் இருக்கின்ற ஒளியை. ஆதிகாலத்திலிருந்தே இருக்கின்ற அந்த ஒளியை கண்டு அந்த ஒளியின் நுணுக்கத்தை உணர்ந்தது என்னவென்றால் பரம்பொருளாகிய இறைவனே அந்த பரம் ஜோதியாகவும் இருக்கின்றான் என்பதே ஆகும். வண்டுகள் நறுமணமிக்க மலர்களில் உள்ள தேனை உண்டு களிப்பில் ஆடுவது போல அடியவர்களை தன் அமிழ்தத்தினை உண்டு பேரின்பத்தில் ஆடச் செய்கின்ற நீண்டு வளருகின்ற பிண்ணிய சடையை அணிந்து இருக்கின்ற தலைவனும் அடியவனுமாகிய இறைவனை தமக்குள் இருக்கும் ஜோதியாக கண்டு உணர்ந்து கொண்டவர்களுக்கு மாயையை நீங்கி இறைவன் எப்போதும் அருள் சக்தியாக நிற்கின்றான்.

பாடல் #1514

பாடல் #1514: ஐந்தாம் தந்திரம் – 17. சத்தி நிபாதம் (அருள் சக்தி மேலிருந்து கீழ் இறங்கி வருகின்ற தன்மை)

இருட்டறை மூலை யிருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி யவனை மணம்புணர்ந் தாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருடடறை மூலை யிருநத குமரி
குருடடுக கிழவனைக கூடல குறிததுக
குருடடினை நீககிக குணமபல காடடி
மருடடி யவனை மணமபுணரந தாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருட்டு அறை மூலை இருந்த குமரி
குருட்டு கிழவனை கூடல் குறித்து
குருட்டினை நீங்கி குணம் பல காட்டி
மருட்டி அவனை மணம் புணர்ந்தாளே.

பதப்பொருள்:

இருட்டு (இருளில் இருக்கின்ற / மாயை எனும் இருளில் இருக்கின்ற) அறை (அறைக்குள் / உடம்பிற்குள்) மூலை (ஒரு மூலையில் / மூலாதாரத்தில்) இருந்த (வீற்றிருக்கின்ற) குமரி (ஒரு இளம் கன்னியானவள் / அருள் சக்தியானவள்)
குருட்டு (கண் தெரியாத குருடனாகிய / மாயை மறைத்து இருப்பதால் உண்மை தெரியாமல் இருக்கின்ற) கிழவனை (கிழவனோடு / பல பிறவி எடுத்த ஆன்மாவோடு) கூடல் (ஒன்றாக சேருவது) குறித்து (எனும் குறிக்கோளுடன் / எனும் அருள் கருணையுடன்)
குருட்டினை (அவனது குருட்டை / அந்த ஆன்மாவின் மாயையை) நீங்கி (நீக்கி) குணம் (நல்ல அழகுகளை / நன்மையான உண்மைகளை) பல (பல விதங்களில்) காட்டி (காண்பித்து / உணர வைத்து)
மருட்டி (அவளுடைய அழகில் மயங்க வைத்து / பேரின்பத்தில் ஆன்மாவை மயங்க வைத்து) அவனை (அந்த கிழவனோடு / பல பிறவி எடுத்த ஆன்மாவோடு) மணம் (திருமணம் புரிந்து / கலந்து நின்று) புணர்ந்தாளே (எப்போதும் அவனோடு சேர்ந்தே இருந்தாளே / எப்போதும் ஆன்மாவோடு சேர்ந்தே இருந்தாளே).

உவமை விளக்கம்:

இருளில் இருக்கின்ற அறைக்குள் ஒரு மூலையில் வீற்றிருக்கின்ற ஒரு இளம் கன்னியானவள் கண் தெரியாத குருடனாகிய கிழவனோடு ஒன்றாக சேருவது எனும் குறிக்கோளுடன் அவனது குருட்டை நீக்கி நல்ல அழகுகளை பல விதங்களில் காண்பித்து அவளுடைய அழகில் மயங்க வைத்து அந்த கிழவனோடு திருமணம் புரிந்து எப்போதும் அவனோடு சேர்ந்தே இருந்தாளே.

கருத்து விளக்கம்:

மாயை எனும் இருளில் இருக்கின்ற உடம்பிற்குள் மூலாதாரத்தில் வீற்றிருக்கின்ற அருள் சக்தியானவள் மாயை மறைத்து இருப்பதால் உண்மை தெரியாமல் இருக்கின்ற பல பிறவி எடுத்த ஆன்மாவோடு ஒன்றாக சேருவது எனும் அருள் கருணையுடன் அந்த ஆன்மாவின் மாயையை நீக்கி நன்மையான உண்மைகளை பல விதங்களில் உணர வைத்து பேரின்பத்தில் ஆன்மாவை மயங்க வைத்து பல பிறவி எடுத்த ஆன்மாவோடு கலந்து நின்று எப்போதும் ஆன்மாவோடு சேர்ந்தே இருந்தாளே.