பாடல் #724

பாடல் #724: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

விளக்கம்:

உயிர்களின் உடல் அழிந்துவிட்டால் அதனுள்ளிருக்கும் உயிர் நீங்கிவிடும். உறுதியான உடல் வலிமை சீர்குலைந்தால் ஞானத்தை அடைய உடலை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியாது. உடலை உறுதியாக வைத்து வளர்க்கும் வழியை இறையருளால் அறிந்து கொண்டு அதன் மூலம் உடலை வளர்த்து அதனுள்ளிருக்கும் உயிரையும் வளர்த்தேன்.

கருத்து: இறைவனை அடைவதற்கு கருவியாக பயன்படும் உடலையும் உயிரையும் உறுதியாக நீண்ட காலம் அழியாமல் வளர்த்து இறைவனை அடையலாம்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #66

22-4-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பயம் எங்கிருந்து வருகின்றது? அதனை எவ்விதம் எதிர்ப்பது?

பொதுவாக நமக்குத் தெரியாத காரியங்களைக் கண்டு பயம் காண்கின்றோம் என்பதே உண்மை. இதற்கு உதாரணமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டக் கற்றுக் கொள்ளும் காலங்களில் செல்லும் வழியில் ஓர் கல்லைக் கண்டாலும் பயம் கொண்டு இறங்கி விடுகின்றோம் அல்லது விழுந்து விடுகின்றோம் அடிபடுகின்றோம். ஆனால் பழகிய பின்பு இவ்வளவு தானா என்கிற உணர்வு வந்துவிடப் பயம் போகின்றது. இவ்விதமே குழந்தைகள் நடக்க முயற்சிக்கும் காலங்களில் முதலில் பல முறைகள் விழுந்து எழுந்து பின்பு ஓட ஆரம்பிக்கின்றது. அப்படி ஓட ஆரம்பித்தபின் அது நடக்க முயற்சித்த காலத்தை மறந்து விடுகின்றது தான் விழுந்ததை எல்லாம் மறந்து விடுகின்றது அல்லவா? இவ்விதம் அறிந்த பின்பு பயம் விலகும் என்பதே உண்மையாகின்றது. அதனால் எதைக்கண்டு பயப்படுகின்றோமோ அக்காரியத்தை மீண்டும் மீண்டும் செய்தால் பயம் நீங்கும். சில நபர்கள் பயத்தால் ஓடி ஒளிகின்றனர். பயத்தால் பல காரியங்கள் செய்யாமல் இருக்கின்றனர். அவ்விதம் இருந்தால் நஷ்டப்படுவது நீங்களே என்பதை உணர வேண்டும். எது அச்சத்தைத் தருகின்றதோ அதனை மீண்டும் மீண்டும் செய்யுங்கள் பயத்தை வெல்லுங்கள். மேலும் எதிலும் நிதானம் வேண்டும். அதற்காக யாம் கூறிவிட்டோம் என்று நாகத்தைக் கையில் பிடிக்க முயற்சித்தல் கூடாது. சாதாரண நிலைகளில் பொதுவாக இளைஞர்களுக்கு நேரிடும் சில சம்பவங்கள், தேர்வுகள் (பரிட்சை) கணக்கு தொழிலுக்குச் செல்லும் போது நேர்முகத் தேர்ச்சிகள் இவையாவும் பயத்தைத் தரும். இதற்காக நாம் தொழிலுக்குச் செல்லவில்லை வீட்டிலேயே இருந்துவிடுகின்றோம் என்கின்ற கருத்து தவறானதாகும். இவையாவும் நீக்கிக்கொண்டால் உங்கள் வாழ்வில் பயம் என்பது காணாமல் சென்று விடும். ஏனெனில் மற்ற ஒருவரால் நம்மிடமிருந்து பறிக்க இயன்றதில் உச்ச பட்சத்தில் இருப்பது நமது உயிர் மட்டுமே அந்த உயிரை இறைவனிடம் அர்ப்பணித்து விட்டால் பின்பு பயம் ஏது? இதை மனதில் வைத்து செயல்படுவீர்களாக.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #65

26-3-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பிரார்த்தனை என்பது என்ன?

பொதுவாக பிரார்த்திக்கும் காலத்தில் இறைவா எமக்கு இதைக் கொடு அதைக் கொடு அனைத்தும் வேண்டும் இது வேண்டாம் என்பதே பிரார்த்தனையாக இருக்கின்றது. இவ்விதம் இல்லாமல், இறைவா எமக்கு எது நலம் தருமோ அதையே நடத்தி வைப்பாய் என்பதே சிறப்பான பிரார்த்தனை ஆகும். இதைப் பலரும் மறந்துவிட்டு நித்யம் (எப்பொழுதும்) மேலும் சிறிது சிறப்பாக ஆண்டவா எமக்கு இதைச் செய் நான் உனக்கு அதைச் செய்கிறேன் என்று கூறுகின்றனர். இது மாபெரும் தவறாகும். ஏனெனில் இறை சக்திக்கு நாம் அளிப்பது எதுவும் தேவையற்றது. ஏன் என சிந்தித்தால் இவ்வுடலில் நம் ஆத்மாவை அடைத்து வைப்பதே அவன் அருள்தான் என்பதை உணர வேண்டும். இவ்வுடலிலிருந்து நமது ஆத்மாவானது பிரிந்து நல்ல நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால் அவனருள் தேவைப்படுகின்றது. இந்நிலையில் ஆண்டவனிடம் எமக்கு எது நலம் தருவதோ அதனை அளிப்பாய் என்று மட்டும் வேண்டுதலே சிறந்ததாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #64

26-2-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இறை சக்தி ஒன்று மட்டுமே இருக்கும் போது, நான் ஏன் காலத்தை வீணாக்கி மனிதர்களை நாடி அவர்களிடமிருந்து ஆன்மீகம் கற்றுக்கொள்ள வேண்டும்?

தெய்வம் நேரடியாக வந்து யாதும் உபதேசிப்பதில்லை இதை நன்கு உணர்தல் வேண்டும். இறைவனிடம் நேரடியாக ஆன்மீகம் கற்றுக்கொள்ள வேண்டுமெனில் மகத்தான தியாகங்கள் மகத்தான சாதனைகள் (தியானம்) செய்தல் வேண்டும். கலியுகத்தில் தெய்வ சக்தியானது நாம் கேட்கும் வினாக்களுக்கு மனித ரூபம் இல்லையேல் வேறு ஏதேனும் வழியில் விளக்கங்களை உணர்த்துவார். உண்மையாக வழிபாட்டில் ஈடுபடும் மகான்கள் வழியிலும் விளக்கங்கள் கிடைக்கக்கூடும். இதற்கு ஒருவர் நமக்கு உகந்த ஓர் குருவை தேடிக்கொள்ளுதல் வேண்டும் என்பது விதியாகும். இத்தகைய நிலையில் நாம் சாதனைகளைத் தெய்வத்தை நோக்கிச் செய்திட்டால் பின்பு அத்தெய்வத்தின் அருளால் நமக்கு ஓர் நல்ல வழிகாட்டியும் (குரு) கிடைத்திடுவார்.

பாடல் #725

பாடல் #725: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

விளக்கம்:

உடம்பை முன்பு குறையுடையது என்று எண்ணியிருந்தேன். உடம்புக்குள்ளே உரிமையாளர் இல்லாமல் தானே வந்தடையும் பொருள் ஒன்று இருப்பதை கண்டேன். அந்த பொருள் பரம்பொருளாகிய இறைவன் என்பதையும் அவன் இந்த உடம்புக்குள்ளே கோவில் கொண்டுள்ளான் என்பதை தெரிந்து கொண்டு இந்த உடம்பை யாம் பேணி பாதுகாத்து வருகின்றோம்.

கருத்து: உடம்புக்குள் பரம்மொருளாகிய இறைவன் இருப்பதினால் பிராணாயமம் யோகப்பயிற்சிகள் செய்து உடம்பை பாதுகாத்து வரவேண்டும்.

பாடல் #726

பாடல் #726: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

சுழற்றிக் கொடுக்கவே சுற்றிக் கழியும்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்
துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்
கழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே.

விளக்கம்:

சுவாசிக்கும் மூச்சுக்காற்றை மூலாதாரத்திற்கு அனுப்பி மூலாதாரத்திலுள்ள அக்கினியால் மூச்சுக்காற்றை சுத்தம் செய்து சுழுமுனை நாடியின் கீழ்புறத்திலிருந்து மேலாகச் செலுத்தினால் சுழுமுனையை நாடி சுத்தம் அடையும். பின்பு அந்த காற்றை சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரோடு சேர்த்து அந்த மலரை விரியச் செய்த பிறகு அந்த வாயுவை உடம்பிலுள்ள அனைத்து நாடிகளுக்குள்ளும் செலுத்தும் அகயோகப் பயிற்சியை அறிந்து கொண்டு அதைச் செய்பவர்களின் உடல் நெருப்பில் கருகி வெந்துபோகாமல் என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும்.

கருத்து: சுவாசிக்கும் மூச்சுக்காற்றை மூலாதாரத்திற்கு அனுப்பி சுழுமுனை நாடியை சுத்தப்படுத்தி சகஸ்ரதளத்தில் சேர்த்து பின்பு உடலில் உள்ள அனைத்து நாடிகளுக்கும் அனுப்பும் பயிற்சியை செய்பவர்களின் உடல் நெருப்பினால் சுட்டாலும் அழியாமல் இருக்கும்.

திருமூலர் அருளிய மூச்சுப்பயிற்சி

பாடல் #727

பாடல் #727: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில்
வஞ்சக வாத மறுமத்தி யானத்திற்
செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.

விளக்கம்:

பாடல் #726 ல் உள்ளபடி மூச்சுசுழற்சிப் பயிற்சியை சூரியன் மறையும் சாயந்திர நேரத்தில் செய்தால் கபம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். இந்தப் பயிற்சியை சூரியன் உச்சியிலிருக்கும் மத்தியான நேரத்தில் செய்தால் வாதம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். இந்தப் பயிற்சியை சூரியன் தோன்றும் காலை நேரத்தில் செய்தால் பித்தம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். உடலில் விஷமாக இருக்கும் மூன்றுவிதமான வியாதிகளையும் நீக்கும் வழியாகவே இந்த பயிற்சியை அருளினோம். இந்தப் பயிற்சியை நாள் முழுவதும் செய்துகொண்டே இருந்தால் முடிகள் நரைக்காமல் உடலும் முதுமையடையாமல் இளமையாகவே எப்போதும் நிலைத்து நிற்கும்.

கருத்து: கபம் பித்தம் வாதம் ஆகிய மூன்றும் உடலுக்கு வரும் அனைத்து வியாதிகளுக்கும் காரணம். சரியான நேரத்தில் பாடல் #726 ல் உள்ளபடி அகயோகம் செய்வதன் மூலம் கபம் பித்தம் வாதம் மூன்றையும் நீக்கலாம். அதே யோகத்தை நாள் முழுவதும் செய்தால் உடலில் நோய் இல்லாமல் எப்போதும் இளமையாகவே இருக்கும்.

பாடல் #728

பாடல் #728: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றவிழ் முட்டை யிரண்டையுங் கட்டியிட்
டூன்றி யிருக்கவே உடலழி யாதே.

விளக்கம்:

மூன்று வளைவுகளை உடைய இடகலை பிங்கலை எனும் நாடிகளாக இரண்டு பாம்புகள் எட்டு அங்குல நீளத்திற்கு இருக்கின்றன. இயல்பான சுவாசமானது நாசியிலிருந்து இந்த இரண்டு நாடிகளின் வழியே கீழ் நோக்கி எட்டு அங்குல அளவு செல்லும். இந்த இரண்டு நாடிகளின் அடியிலிருந்து தலை உச்சி வரை செல்லும் பன்னிரண்டு அங்குல அளவிற்கு சுழுமுனை நாடி இருக்கிறது. முதுகெலும்பு ஆரம்பிக்கும் கழுத்து அது முடியும் இடுப்பு ஆகிய இரண்டு மூட்டுக்களையும் நேராக வைத்து இரண்டு கால்களையும் மடக்கி உடம்பை நேராக வைத்து அசையாமல் அமர்ந்து மூச்சுக்காற்றாகிய இயந்திரத்தை இடகலை பிங்கலை வழியாக எட்டு அங்குலம் கீழ் நோக்கி பயணிக்க வைத்து அதன் முடிவில் தொடங்கும் சுழுமுனை நாடி வழியே திசை மாற்றி பன்னிரண்டு அங்குலம் மேல் நோக்கி பயணிக்க வைத்து அதன் முடிவில் இருக்கும் சகஸ்ரதள ஆயிரம் தாமரை இதழ்களோடு கலக்க வைக்கும் சுழற்சியான அகயோகத்தை எப்போதும் செய்து கொண்டு இருந்தால் உடல் எவ்வளவு காலம் ஆனாலும் அழியாமல் இருக்கும்.

கருத்து: கழுத்தையும் இடுப்பையும் வளைக்காமல் நேராக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்து மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி சகஸ்ரதளத்தோடு கலந்து மறுபடியும் உடல் முழுவதும் பரவும் சுழற்சியை செய்து கொண்டிருந்தால் உடல் எவ்வளவு காலம் ஆனாலும் அழியாமல் இருக்கும்.

பாடல் #729

பாடல் #729: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபது மாறும் புகுவரே.

விளக்கம்:

பிங்கலை இடகலை நாடிகளின் வழியே மூச்சுக்காற்றை அறுபது மாத்திரை அளவிற்கு (30 வினாடிகள்) வலதும் இடதுமாக உள்ளிழுத்து நூறு மாத்திரை அளவிற்கு (50 வினாடிகள்) அடக்கி வைத்து ஆறு மாத்திரை அளவிற்கு (3 வினாடிகள்) சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி எடுத்துச் சென்று சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரோடு அறுபது மாத்திரை அளவிற்கு (30 வினாடிகள்) வைத்திருந்து பிறகு நூறு மாத்திரை அளவிற்கு (50 வினாடிகள்) உடலிலுள்ள அனைத்து நாடிகளுக்கும் கொண்டு செல்லும் சுழற்சியைத் தொடர்ச்சியாக செய்தால் ஆயுளை எப்போதும் கூட்டிக்கொண்டே இருக்கலாம்.

கருத்து: அகயோகப் பயிற்சியை முறைப்படி தொடர்ச்சியாக செய்ய ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம்.