பாடல் #568: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நான்கில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகமு மாமே.
விளக்கம்:
ஒரு மடங்கு அளவு (பதினாறு வினாடிகள்) காற்றை இடது மூக்குத்துவாரத்தின் வழியாக இழுத்தல் பூரகம் ஆகும். அந்த மூச்சுக்காற்றை உள்ளுக்குள்ளேயே நான்கு மடங்கு அளவு (அறுபத்து நான்கு வினாடிகள்) அடக்கி வைத்திருத்தல் கும்பகம் ஆகும். அப்படி அடக்கிய மூச்சுக்காற்றை இரண்டு மடங்கு அளவு (முப்பத்து இரண்டு வினாடிகள்) வலது மூக்குத்துவாரத்தின் வழியாக மெல்ல வெளியே விடுதல் இரேசகம் ஆகும். இவ்வாறு செய்வதே பிராணாயமம் செய்யும் வழிமுறையாகும். பிராணாயாமத்தை இவ்வாறு சரியாகச் செய்வதால் உடல் தூய்மை பெற்று ஆற்றல் மிகுந்து நற்பண்புகள் கைகூடும். இவ்வாறு செய்யாமல் வலது மூக்குத்துவாரத்தின் வழியாக முதலில் இழுத்து இடது மூக்குத்துவாரத்தின் வழியாக மாற்றி விடுதல் கெடுதல் ஆகும்.
குறிப்பு: பிராணாயாமம் செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் இடது பக்கம் முதலில் மூச்சுக் காற்றை இழுத்து வலது பக்கம் மூக்குத் துவாரத்தின் வழியாக மாற்றி விட்டு பயிற்சி செய்ய வேண்டும். முதலில் வலது பக்கம் முதலில் மூச்சுக் காற்றை இழுத்து இடது பக்கம் மூக்குத்துவாரத்தின் வழியாக மாற்றி விட்டு பயிற்சி செய்தால் உடலுக்கு தீங்கு உண்டாகும்.
