பாடல் #548

பாடல் #548: இரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (ஞானம் பெற்ற பெரியவர்களின் துணையைப் பெறுதல்)

அருமைவல் லோன்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன்உணர்ந் தூழி யிருக்குந்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.

விளக்கம்:

கலை ஞானத்தில் சிறந்து இறைவனை அடையக்கூடிய அருமையை உணர்ந்தவர்கள் ஒரு நொடிப் பொழுதும் இறைவனை மறக்காமல் இருப்பதின் பயனால் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கரைசேரும் பெருமையை உடையவர்கள், இறைவனைத் தனக்குள்ளே உணர்ந்து அதிலேயே ஆழ்ந்து அவனது திருவருளைப் பெற்றவர்கள் ஆகியவர்களோடு யாமும் சேர்ந்து இருக்கின்றோம்.

உள்கருத்து: 64 கலைகள் உள்ளது. அதில் ஏதேனும் ஒன்றோ பலவோ கற்று அதில் ஞானம் அடைந்தவர்கள். பக்தி மார்கத்தின் மூலமாக இறைவனை ஒரு நொடிப்பொழுதும் மறக்காமல் இருப்பவர்கள். யோக மார்கத்தின் மூலமாக இறைவனை தனக்குள் உணர்ந்தவர்களுடன் யாம் துணையாக இருக்கன்றோம் என்று அருளுகின்றார்.

பாடல் #539

பாடல் #539: இரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (பொறுமை)

பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையுந்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே.

விளக்கம்:

உண்மை வழியைப் பற்றி அதிலிருந்து விலகாமல் நிற்கும் யோகியர்களின் நெஞ்சில் இறைவனோடு இரண்டறக் கலக்கவேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கின்றது. பல்லி எப்படி தான் பற்றியதை விடாதோ அதுபோல எண்ணமும் தான் எண்ணியதை விடாது. இந்திரியங்களை (மூக்கின் வழியாக பிராணாயாமமும், நாக்கின் வழியாக மந்திரமும்) அடக்கி சிந்தனையை பல எண்ணங்களில் வீணாக சிதறவிடாமல் பொறுமையாக இருப்பவர்களுக்கு வற்றாத அமுதம் சுரக்கும்.

பாடல் #540

பாடல் #540: இரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (பொறுமை)

ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் மன்னவன்
ஞாலத் திவன்மிக நல்லனென் றாரே.

விளக்கம்:

சிவபெருமானின் திருச்சபையைச் சுற்றி இருக்கும் அழிவில்லாத தேவர்கள் அவரின் பால் போன்ற வெண்ணிற உடலின் பாதத்தைப் பணிந்து தாங்கள் முக்தி பெற வேண்டி பொறுமையுடன் காத்திருப்பார்கள். அவ்வாறு பொறுமையுடன் இருக்கும் தேவர்களை திருமாலுக்கும் ஆதிபிரம்மனுக்கும் மன்னராக இருக்கின்ற சதாசிவமூர்த்தி உலகத்தில் மிகவும் நல்லவர்கள் என்று அருளினார்.

பாடல் #541

பாடல் #541: இரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (பொறுமை)

ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்
சேனை வளைந்து திசைதொறுங் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை வளைந்தருள் எட்டலு மாமே.

விளக்கம்:

உண்மை ஞானம் அடைந்தவர்கள் உலகத்தில் இருக்கும் உயிர்களுக்கு மன்னர்கள் ஆவார்கள். படைகள் எவ்வாறு மன்னரைச் சுற்றி நின்று கைகூப்பி வணங்குவார்களோ அதுபோல உண்மை ஞானம் அடைந்தவர்களை ஞானம் பெறவேண்டி பொறுமையுடன் வணங்கி நிற்பவர்கள் தேவர்களுக்குத் தலைவனும் உயிர்களின் உடலை வளர்ப்பவனுமாகிய ஆதி சிவபெருமானின் அருளை அடைவார்கள்.

பாடல் #542

பாடல் #542: இரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (பொறுமை)

வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யுங்
கொல்லையி னின்று குதிகொள்ளுங் கூத்தனுக்
கெல்லையி லாத விலயமுண் டாமே.

விளக்கம்:

ஆன்மாக்களின் பக்குவத்திற்கேற்ப உடலிலும் உள்ளத்திலும் பலவகையில் இன்பங்களையும் துன்பங்களையும் கொடுத்து பக்குவம் செய்யும் சிவபெருமான் பொறுமையுடன் தவமிருப்பவர்களின் மூலாதாரத்தில் இருந்து திருக்கூத்து ஆடுவதின் பயனால் அவர்களின் மனம் இறைவனுடன் ஒன்றுபட்டு நிற்கும்.

பாடல் #537

பாடல் #537: இரண்டாம் தந்திரம் – 23. மாகேசுர நிந்தை

ஆண்டான் அடியவ ரார்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாந்தாம் விழுவது தாழ்நர காகுமே.

விளக்கம்:

உலகத்தவர்களிடம் எந்தப் பற்றும் இல்லாத சிவனடியார்கள் யாருக்கு விரோதிகள்? தங்கள் வயிற்றுப் பசிக்குப் பிச்சை எடுத்து உண்ணும் அந்த அடியவர்களை தான் கொண்ட வெறுப்பினால் இகழ்ந்து பேசுபவர்கள் தமக்குத் தாமே செய்துகொண்ட தீவினையால் நரகத்திலேயே மிகவும் கொடியதான கடைசி நிலை நரகத்தில் சென்று விழுவார்கள்.

பாடல் #538

பாடல் #538: இரண்டாம் தந்திரம் – 23. மாகேசுர நிந்தை

ஞானியை நிந்திப் பவனும் நலனென்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வா ரவன்வயம்
போன பொழுதே புகுஞ்சிவ போகமே.

விளக்கம்:

சிவஞானியை நிந்தித்தலே (திட்டுதலே) நல்லது என்றுத் தவறாக நினைத்து நிந்திப்பவர்களுக்கு இருக்கும் நல்ல வினைகளும் தீய வினைகளாக மாறி துன்புறுவார்கள். சிவஞானியை வந்தித்தலே (வணங்குதலே) நல்லது என்று நினைத்து வணங்கியவர்களுக்கு இருக்கும் தீய வினைகளும் நல்ல வினைகளாக மாறி சிவஞானிகளின் அடியவர்களாக ஆகியவுடன் அவர்களின் அருளால் பேரின்பமான சிவபோகத்தை அடைவார்கள்.

பாடல் #530

பாடல் #530: இரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே.

விளக்கம்:

ஞானத்தை அறிந்த பெரியோர்களை மதிக்காத கீழான எண்ணமுடையவர்கள் அப்பெரியோர்களின் உடனிருப்பவர்களையும் வருந்தும்படி கீழ்மையாக பேசுபவர்கள் ஆகிய இவர்கள் ஞானமில்லாமல் கல்வியை மட்டுமே அறிந்தவர்களின் வழியில் சென்று ஞானம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஞானத்தை அடைய முயற்சிப்பார்கள். ஞானத்தை அறிந்த பெரியோர்களால் கிடைக்காத ஞானம் வேறு யாரிடம் கிடைக்கும்?

பாடல் #531

பாடல் #531: இரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை

ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்
பாரிடைக் கிருமியாய்ப் பழகுவர் மண்ணிலே.

விளக்கம்:

ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை சீடனுக்கு உணர்த்திய குருவின் பெருமை குலையும்படி தவறாகப் பேசுகின்ற சீடர்கள் ஊர் சுற்றித் திரியும் நோயுள்ள நாயாகப் பிறந்து பின்னர் ஒரு யுகத்திற்குப் பூமியில் புழுவாக கிடப்பார்கள்.

பாடல் #532

பாடல் #532: இரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடுஞ்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.

விளக்கம்:

இல்லறத்தில் இருக்கும் ஞானிகள் மற்றும் இறை தத்துவத்தை உணர்ந்த ஞானிகளை அவர்களுடைய மனம் வருந்தும்படி தீங்கு செய்தவர்களின் சொத்துக்களும் உயிரும் ஒரே ஆண்டில் அழிந்துவிடும் இது உண்மை இதுவே சதாசிவத்தின் ஆணை.