பாடல் #1614

பாடல் #1614: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

இறப்பும் பிறப்பு மிருமையு நீங்கித்
துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பதி காட்டு மமரர் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இறபபும பிறபபு மிருமையு நீஙகித
துறககுந தவஙகணட சொதிப பிரானை
மறபபில ராயநிததம வாயமொழி வாரகட
கறபபதி காடடு மமரர பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கி
துறக்கும் தவம் கண்ட சோதி பிரானை
மறப்பு இலர் ஆய் நித்தம் வாய் மொழிவார்களுக்கு
அற பதி காட்டும் அமரர் பிரானே.

பதப்பொருள்:

இறப்பும் (இறப்பு) பிறப்பும் (பிறப்பு) இருமையும் (ஆகிய இரண்டு விதமான தன்மைகளும்) நீங்கி (நீங்கி விட)
துறக்கும் (அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவாகிய) தவம் (தவ நிலையில்) கண்ட (சாதகர் கண்ட) சோதி (ஜோதி மயமாகிய) பிரானை (இறைவனை)
மறப்பு (மறந்து விடுவதே) இலர் (இல்லாதவர்கள்) ஆய் (ஆக) நித்தம் (எப்போதும்) வாய் (தமது வாயால்) மொழிவார்களுக்கு (சொல்லுவதெல்லாம் இறைவனின் சொல்லாகவே சொல்லுபவர்களுக்கு)
அற (தர்மம் இருக்கின்ற) பதி (இடமாகிய சிவலோகத்தை) காட்டும் (காட்டி அருளுவான்) அமரர் (அமரர்களின்) பிரானே (தலைவனாகிய இறைவன்).

விளக்கம்:

இறைவனின் திருவருளால் பெற்ற ஞானத்தின் மூலம் இறைவனை உணர்ந்து மும்மலங்களையும் அறுத்து இறப்பு பிறப்பு ஆகிய இரண்டு விதமான தன்மைகளும் நீங்கி விட அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவாகிய தவ நிலையில் சாதகர் கண்ட ஜோதி மயமாகிய இறைவனை எப்போதும் மறந்து விடாமல் தமது வாயால் சொல்லுவதெல்லாம் இறைவனின் சொல்லாகவே சொல்லுபவர்களுக்கு தர்மம் இருக்கின்ற இடமாகிய சிவலோகத்தை காட்டி அருளுவான் அமரர்களின் தலைவனாகிய இறைவன்.

பாடல் #1613

பாடல் #1613: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி
பாலித்த முத்திரைப் பற்றுப் பரஞான
மாலித்த நாட்டமே ஞேயம் பகுத்தற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெலைச சொரூபஙகள மூனறு மிகுசததி
பாலிதத முததிரைப பறறுப பரஞான
மாலிதத நாடடமெ ஞெயம பகுததறற
மூலச சொரூபன மொழிஞா துருவனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மேலை சொரூபங்கள் மூன்று மிகு சத்தி
பாலித்த முத்திரை பற்றும் பர ஞானம்
ஆலித்த நாட்டமே ஞேயம் பகுத்து அற்ற
மூல சொரூபன் மொழி ஞாதுருவனே.

பதப்பொருள்:

மேலை (அனைத்திற்கும் மேலே இருக்கின்ற) சொரூபங்கள் (இறைவனின் சொரூபங்கள் ஆக இருக்கின்ற) மூன்று (பார்க்கின்றவன், பார்க்கும் ஞானம், பார்க்கப்படும் பொருள் ஆகிய மூன்று விதமான தத்துவங்களுக்கும்) மிகு (மேலான) சத்தி (சக்தியாகிய இறைவன்)
பாலித்த (தம்முடைய திருவருளால் அருளிய) முத்திரை (இந்த மூன்று திரைகளையும்) பற்றும் (தெரிந்து கொள்ளும்) பர (பரம் பொருளின்) ஞானம் (பேரறிவு ஞானம் கிடைக்கப் பெற்று)
ஆலித்த (தமக்குள் ஆனந்த வடிவாக இருக்கின்ற சிவப் பரம்பொருளை) நாட்டமே (பார்த்து உணர்ந்து) ஞேயம் (அதுவே ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருள் பார்க்கின்றவன்) பகுத்து (என்று தனித்தனியாக பிரிந்து இருக்கின்ற நிலை) அற்ற (இல்லாமல் போய்)
மூல (அனைத்திற்கும் மூலமாகிய) சொரூபன் (இறைவனின் சொரூபமாக) மொழி (இருக்கின்ற பொருள்) ஞாதுருவனே (பார்க்கின்றவனாக இருக்கின்ற தாமே என்பதை உணர்ந்து கொள்ளுவார்கள்).

விளக்கம்:

அனைத்திற்கும் மேலே இருக்கின்ற இறைவனின் சொரூபங்கள் ஆக இருக்கின்ற பார்க்கின்றவன், பார்க்கும் ஞானம், பார்க்கப்படும் பொருள் ஆகிய மூன்று விதமான தத்துவங்களுக்கும் மேலான சக்தியாகிய இறைவன் தம்முடைய திருவருளால் அருளிய இந்த மூன்று திரைகளையும் தெரிந்து கொள்ளும் பரம் பொருளின் பேரறிவு ஞானம் கிடைக்கப் பெறுவார். அந்த ஞானத்தின் மூலம் தமக்குள் ஆனந்த வடிவாக இருக்கின்ற சிவப் பரம்பொருளை பார்த்து உணர்ந்து அதுவே ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருள் பார்க்கின்றவன் என்று தனித்தனியாக பிரிந்து இருக்கின்ற நிலை இல்லாமல் போய் அனைத்திற்கும் மூலமாகிய இறைவனின் சொரூபமாக இருக்கின்ற பொருள் பார்க்கின்றவனாக இருக்கின்ற தாமே என்பதை உணர்ந்து கொள்ளுவார்கள்.

கருத்து:

பார்க்கின்றவனாகிய சாதகர் தமக்குள் இருக்கின்ற பரம்பொருளை பார்ப்பதற்கான ஞானத்தை இறைவனின் திருவருளால் பெற்று தாம் பார்க்கின்ற அந்த மூலப் பரம்பொருளாக தாமே இருப்பதை உணர்ந்து கொள்வார்.

பாடல் #1612

பாடல் #1612: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின்பால்
வைத்த கலைகாலை நான்மடங் கான்மாற்றி
யுய்த்த தவத்தாந்தத் தொண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

முததிரை மூனறின முடிநதது மூனறினபால
வைதத கலைகாலை நானமடங கானமாறறி
யுயதத தவததாநதத தொணகுரு பாதததெ
பெதத மறுததொர பிறநதிற வாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின் பால்
வைத்த கலை காலை நான் மடங்கால் மாற்றி
உய்த்த தவத்து அந்தத்து ஒண் குரு பாதத்தே
பெத்தம் அறுத்தோர் பிறந்து இறவாரே.

பதப்பொருள்:

முத் (மூன்று) திரை (திரைகளாகிய மாயையால் மூடியிருக்கின்ற பார்க்கின்றவன், பார்க்கும் ஞானம், பார்க்கப்படும் பொருள்) மூன்றின் (ஆகிய மூன்றையும் மூடியிருக்கின்ற) முடிந்தது (மாயை முடிந்து விடுவதற்கு) மூன்றின் (இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளின்) பால் (மூலம்)
வைத்த (இறைவன் பிறக்கும் போதே இயல்பாக வைத்து அருளிய) கலை (மூச்சுக்காற்றின்) காலை (போக்குவரத்தை இயல்பான கீழ் நிலையில் இருந்து) நான் (நான்கு) மடங்கால் (விரற்கடை / அங்குலம் அளவிற்கு) மாற்றி (மேல் நோக்கி மாற்றி)
உய்த்த (உச்சியிலிருக்கும் சகஸ்ரரதளத்திற்கு கொண்டு சென்று சேர்த்து) தவத்து (செய்கின்ற தவத்தில்) அந்தத்து (முழுமை பெற்ற நிலையில்) ஒண் (சாதகரோடு ஒன்றி இருக்கின்ற) குரு (குருநாதராகிய இறைவனின்) பாதத்தே (திருவடிகளைப் பெற்று)
பெத்தம் (பிறவிக்கு காரணமாகிய மூன்று மலங்களையும் அதை சார்ந்த அனைத்து பற்றுக்களையும்) அறுத்தோர் (அறுத்து விட்டவர்கள்) பிறந்து (இனி பிறக்கவோ) இறவாரே (இறக்கவோ மாட்டார்கள்).

விளக்கம்:

மூன்று திரைகளாகிய மாயையால் மூடியிருக்கின்ற பார்க்கின்றவன், பார்க்கும் ஞானம், பார்க்கப்படும் பொருள் ஆகிய மூன்றையும் மூடியிருக்கின்ற மாயை முடிந்து விடுவதற்கு இடகலை பிங்கலை சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளின் மூலம் இறைவன் பிறக்கும் போதே இயல்பாக வைத்து அருளிய மூச்சுக்காற்றின் போக்குவரத்தை இயல்பான கீழ் நிலையில் இருந்து நான்கு விரற்கடை அளவிற்கு மேல் நோக்கி மாற்றி உச்சியிலிருக்கும் சகஸ்ரரதளத்திற்கு கொண்டு சென்று சேர்த்து செய்கின்ற தவத்தில் முழுமை பெற்ற நிலையில் சாதகரோடு ஒன்றி இருக்கின்ற குருநாதராகிய இறைவனின் திருவடிகளைப் பெற்று பிறவிக்கு காரணமாகிய மூன்று மலங்களையும் அதை சார்ந்த அனைத்து பற்றுக்களையும் அறுத்து விட்டவர்கள் இனி பிறக்கவோ இறக்கவோ மாட்டார்கள்.

பாடல் #1611

பாடல் #1611: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

மோனங்கை வந்தோர்க்கு முத்தியுங் கைகூடு
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியு முன்னிற்கு
மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமு முன்னுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மொனஙகை வநதொரககு முததியுங கைகூடு
மொனஙகை வநதொரககுச சிததியு முனனிறகு
மொனஙகை வநதூமை யாமொழி முறறுஙகாண
மொனஙகை வநதைங கருமமு முனனுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மோனம் கை வந்தோர்க்கு முத்தியும் கை கூடும்
மோனம் கை வந்தோர்க்கு சித்தியும் உன் நிற்கும்
மோனம் கை வந்து ஊமையாம் மொழி முற்றும் காண்
மோனம் கை வந்து ஐங் கருமமும் உன்னுமே.

பதப்பொருள்:

மோனம் (பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை) கை (கைகூடும் படி) வந்தோர்க்கு (அடைந்தவர்களுக்கு) முத்தியும் (முக்தி நிலையும்) கை (கை) கூடும் (கூடும்)
மோனம் (பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை) கை (கைகூடும் படி) வந்தோர்க்கு (அடைந்தவர்களுக்கு) சித்தியும் (அனைத்து விதமான சித்திகளும்) உன் (அவர்களுக்குள்) நிற்கும் (நிலைத்து நிற்கும்)
மோனம் (பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை) கை (கைகூடும் படி) வந்து (அடைந்த பிறகு) ஊமையாம் (உடல் அசைவுகளால்) மொழி (பேசுகின்ற மொழி) முற்றும் (முழுவதும் நீங்கி விடுவதை) காண் (காணலாம்)
மோனம் (பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை) கை (கைகூடும் படி) வந்து (அடைந்த பிறகு) ஐங் (உலகத்தில் இறைவன் செய்கின்ற ஐந்து விதமான) கருமமும் (தொழில்களையும்) உன்னுமே (தமக்குள்ளேயே அவர்களால் உணர முடியும்).

விளக்கம்:

பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை கைகூடும் படி அடைந்தவர்களுக்கு முக்தி நிலையும் கை கூடும். அனைத்து விதமான சித்திகளும் அவர்களுக்குள் நிலைத்து நிற்கும். உடல் அசைவுகளால் பேசுகின்ற மொழி கூட அவர்களை விட்டு முழுவதும் நீங்கி விடுவதை அவர்கள் காணலாம். உலகத்தில் இறைவன் செய்கின்ற படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்து விதமான தொழில்களையும் தமக்குள்ளேயே அவர்களால் உணர முடியும்.