பாடல் #1673

பாடல் #1673: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

ஞானிக்குச் சுந்தர வேடமு நல்லவாந்
தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே
ஞானமவ் வேடமருண் ஞான சாதன
மானது மாமொன்று மாகாதவ னுக்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானிககுச சுநதர வெடமு நலலவாந
தானுறற வெடமுந தறசிவ யொகமெ
ஞானமவ வெடமருண ஞான சாதன
மானது மாமொனறு மாகாதவ னுககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானிக்கு சுந்தர வேடமும் நல்ல ஆம்
தான் உற்ற வேடமும் தன் சிவ யோகமே
ஞானம் அவ் வேடம் அருள் ஞான சாதனம்
ஆனதும் ஆம் ஒன்றும் ஆகாது அவனுக்கே.

பதப்பொருள்:

ஞானிக்கு (உண்மையான ஞானிக்கு) சுந்தர (எந்த ஒரு அழகிய) வேடமும் (வேடமும்) நல்ல (நல்லதே) ஆம் (ஆகும்)
தான் (அவர்களுக்கு) உற்ற (தானாகவே அமைந்த) வேடமும் (வேடமும்) தன் (அவர்களின்) சிவ (சிவ) யோகமே (யோகமாகவே இருக்கின்றது)
ஞானம் (உண்மையான ஞானமாகவும்) அவ் (அந்த) வேடம் (வேடமே இருக்கின்றது) அருள் (இறைவனின் திருவருள்) ஞான (ஞானத்தை) சாதனம் (பெறுகின்ற சாதனம்)
ஆனதும் (ஆகவும் அதுவே) ஆம் (இருக்கின்றது) ஒன்றும் (ஆதலால் அந்த வேடத்தினால் எந்த விதமான) ஆகாது (பாதிப்புகளும் ஏற்படுவது இல்லை) அவனுக்கே (உண்மையான ஞானிகளுக்கு).

விளக்கம்:

உண்மையான ஞானிக்கு எந்த ஒரு அழகிய வேடமும் நல்லதே ஆகும். அவர்களுக்கு தானாகவே அமைந்த வேடமும் அவர்களின் சிவ யோகமாகவே இருக்கின்றது. உண்மையான ஞானமாகவும் அந்த வேடமே இருக்கின்றது. இறைவனின் திருவருள் ஞானத்தை பெறுகின்ற சாதனமாகவும் அதுவே இருக்கின்றது. ஆதலால் உண்மையான ஞானிகளுக்கு அந்த வேடத்தினால் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படுவது இல்லை.

பாடல் #1674

பாடல் #1674: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

ஞானத்தி னாற்பத நண்ணுஞ் சிவஞானி
தானத்தில் வைத்தல் தனியாலை யத்தனா
மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனா
மேனைத் தவசி யிவனென லாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானததி னாறபத நணணுஞ சிவஞானி
தானததில வைததல தனியாலை யததனா
மொனதத னாதலின முததனாஞ சிததனா
மெனைத தவசி யிவனென லாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானத்தின் ஆல் பதம் நண்ணும் சிவ ஞானி
தானத்தில் வைத்தல் தனி ஆலையத்தன் ஆம்
மோனத்தன் ஆதலின் முத்தன் ஆம் சித்தன் ஆம்
ஏனை தவசி இவன் எனல் ஆகுமே.

பதப்பொருள்:

ஞானத்தின் (உண்மையான ஞானத்தின்) ஆல் (மூலம்) பதம் (இறைவனது திருவடிகளை) நண்ணும் (அடைந்து) சிவ (சிவ ஞானத்தை பெற்ற) ஞானி (ஞானிகள்)
தானத்தில் (தங்களிடமுள்ள அருளை தம்மை நாடி வருகின்ற தகுதியானவர்களுக்கு) வைத்தல் (கொடுக்கின்றதால்) தனி (அவர்கள் ஒரு தனித்துவம் பெற்ற) ஆலையத்தன் (ஆலயமாகவே) ஆம் (இருக்கின்றார்கள்)
மோனத்தன் (அவர்கள் சொல்லும் செயலும் மனமும் அடங்கிய மோன நிலையிலேயே) ஆதலின் (இருப்பவர்கள் ஆதலால்) முத்தன் (முக்தி நிலையில் வீற்றிருக்கின்ற முக்தர்கள்) ஆம் (ஆகவும்) சித்தன் (சித்தத்தில் எப்போதும் சிவத்தையே நினைக்கின்ற சித்தர்கள்) ஆம் (ஆகவும் இருக்கின்றார்கள்)
ஏனை (மற்ற) தவசி (தவசிகளும்) இவன் (இவர்களைப் போலவே இறைவனது திருவடிகளை மட்டுமே எண்ணிக்கொண்டு மோன நிலையில் இருந்தால் இவர்களுடைய நிலையை அடைய முடியும்) எனல் (என்பது) ஆகுமே (உண்மையே ஆகும்).

விளக்கம்:

உண்மையான ஞானத்தின் மூலம் இறைவனது திருவடிகளை அடைந்து சிவ ஞானத்தை பெற்ற ஞானிகள் தங்களிடமுள்ள அருளை தம்மை நாடி வருகின்ற தகுதியானவர்களுக்கு கொடுக்கின்றதால் அவர்கள் ஒரு தனித்துவம் பெற்ற ஆலயமாகவே இருக்கின்றார்கள். அவர்கள் சொல்லும் செயலும் மனமும் அடங்கிய மோன நிலையிலேயே இருப்பவர்கள் ஆதலால் முக்தி நிலையில் வீற்றிருக்கின்ற முக்தர்களாகவும் சித்தத்தில் எப்போதும் சிவத்தையே நினைத்துக் கொண்டிருப்பதால் சித்தர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்களைப் போலவே மற்ற தவசிகளும் இறைவனது திருவடிகளை மட்டுமே எண்ணிக்கொண்டு மோன நிலையில் இருந்தால் இவர்களுடைய நிலையை அடைய முடியும் என்பது உண்மையே ஆகும்.

பாடல் #1675

பாடல் #1675: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

தானறி தன்மையுந் தானவ னாதலு
மேனைய வச்சிவ மான வியற்கையுந்
தானுறு சாதகர முத்திரை சாத்தலு
மோனமு நந்தி பதமுத்தி பெற்றதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானறி தனமையுந தானவ னாதலு
மெனைய வசசிவ மான வியறகையுந
தானுறு சாதகர முததிரை சாததலு
மொனமு நநதி பதமுததி பெறறதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தான் அறி தன்மையும் தான் அவன் ஆதலும்
ஏனைய அச் சிவம் ஆன இயற்கையும்
தான் உறு சாதகர் முத்திரை சாத்தலும்
மோனமும் நந்தி பத முத்தி பெற்ற அதே.

பதப்பொருள்:

தான் (தான் யார் என்பதை) அறி (அறிந்து கொண்ட) தன்மையும் (தன்மையும்) தான் (தாமே) அவன் (சிவ பரம்பொருளாக) ஆதலும் (ஆகி இருக்கின்ற தன்மையும்)
ஏனைய (தங்களைத் தவிர உலகத்தில் இருக்கின்ற அனைத்தும் மற்றும் நிகழ்கின்ற அனைத்தும்) அச் (அந்த மூலப் பரம்பொருளாகிய) சிவம் (சிவம்) ஆன (ஆகவே இருக்கின்ற) இயற்கையும் (தன்மையும்)
தான் (தாம்) உறு (வீற்றிருக்கின்ற) சாதகர் (சாதகத்தின் நிலையையே) முத்திரை (முத்திரையாக) சாத்தலும் (இறைவனுக்கு அர்ப்பணிக்கின்ற தன்மையும்)
மோனமும் (மனம் பேச்சு செயல் ஆகிய மூன்றும் அடங்கி இருக்கின்ற மோன நிலையில் வீற்றிருக்கின்ற தன்மையும் ஆகிய இவை அனைத்தும்) நந்தி (குரு நாதராக இருக்கின்ற இறைவனின்) பத (திருவடிகளை அடைந்து) முத்தி (முக்தியை) பெற்ற (பெற்ற உண்மையான சிவ ஞானிகளுக்கு) அதே (அடையாளங்கள் ஆகும்).

விளக்கம்:

தான் யார் என்பதை அறிந்து கொண்ட தன்மையும், தாமே சிவ பரம்பொருளாக ஆகி இருக்கின்ற தன்மையும், தங்களைத் தவிர உலகத்தில் இருக்கின்ற அனைத்தும் மற்றும் நிகழ்கின்ற அனைத்தும் அந்த மூலப் பரம்பொருளாகிய சிவம் ஆகவே இருக்கின்ற தன்மையும், தாம் வீற்றிருக்கின்ற சாதகத்தின் நிலையையே முத்திரையாக இறைவனுக்கு அர்ப்பணிக்கின்ற தன்மையும், மனம் பேச்சு செயல் ஆகிய மூன்றும் அடங்கி இருக்கின்ற மோன நிலையில் வீற்றிருக்கின்ற தன்மையும், ஆகிய இவை அனைத்தும் குரு நாதராக இருக்கின்ற இறைவனின் திருவடிகளை அடைந்து முக்தியை பெற்ற உண்மையான சிவ ஞானிகளுக்கு அடையாளங்கள் ஆகும்.

பாடல் #1666

பாடல் #1666: ஆறாம் தந்திரம் – 10. திருநீறு (உள்ளுக்குள் உணர்ந்ததை வெளிப்படுத்தும் தவ வேடம்)

கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகிற்
றங்கா வினைகளுஞ் சாருஞ் சிவநெறி
சிங்கார மான திருவடி சேர்வரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கஙகாளன பூசுங கவசத திருநீறறை
மஙகாமற பூசி மகிழவரெ யாமாகிற
றஙகா வினைகளுஞ சாருஞ சிவநெறி
சிஙகார மான திருவடி செரவரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கங்காளன் பூசும் கவச திரு நீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாம் ஆகில்
தங்கா வினைகளும் சாரும் சிவ நெறி
சிங்காரம் ஆன திருவடி சேர்வரே.

பதப்பொருள்:

கங்காளன் (உயிர்களின் எலும்பை மாலையாக அணிந்து இருக்கின்ற இறைவன்) பூசும் (தனது உடலில் பூசுகின்ற) கவச (சாம்பல் கவசமாகிய) திரு (திரு) நீற்றை (நீற்றை)
மங்காமல் (கொஞ்சமும் மங்காமல் பிரகாசமாகத் தெரியும் படி) பூசி (பூசிக் கொண்டு) மகிழ்வரே (மகிழ்ச்சியை அடைபவர்களாக) யாம் (தாங்கள்) ஆகில் (இருந்தால்)
தங்கா (அவர்களிடம் தங்காமல் விலகி ஓடி விடும்) வினைகளும் (அனைத்து வினைகளும்) சாரும் (அவர்களுடன் சேர்ந்தே இருக்கும்) சிவ (சிவப் பரம்பொருளை) நெறி (அடைகின்ற வழி முறை)
சிங்காரம் (பேரழகு) ஆன (ஆக இருக்கின்ற) திருவடி (இறைவனின் திருவடியை) சேர்வரே (அவர்கள் சென்று அடைவார்கள்).

விளக்கம்:

உயிர்களின் எலும்பை மாலையாக அணிந்து இருக்கின்ற இறைவன் தனது உடலில் பூசுகின்ற சாம்பல் கவசமாகிய திரு நீற்றை கொஞ்சமும் மங்காமல் பிரகாசமாகத் தெரியும் படி பூசிக் கொண்டு மகிழ்ச்சியை அடைபவர்களாக தாங்கள் இருந்தால் அனைத்து வினைகளும் அவர்களிடம் தங்காமல் விலகி ஓடி விடும். சிவப் பரம்பொருளை அடைகின்ற வழி முறை அவர்களுடன் சேர்ந்தே இருக்கும். அதன் வழியே சென்று பேரழகாக இருக்கின்ற இறைவனின் திருவடியை அவர்கள் அடைவார்கள்.

பாடல் #1667

பாடல் #1667: ஆறாம் தந்திரம் – 10. திருநீறு (உள்ளுக்குள் உணர்ந்ததை வெளிப்படுத்தும் தவ வேடம்)

அரசுட னாலத்தி யாகுமக் காரம்
விரவு கனலில் வியனுரு மாறி
நிரவிய நின்மலந் தான்பெற்ற நீத
ருருவம் பிரம னுயர்குல மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அரசுட னாலததி யாகுமக காரம
விரவு கனலில வியனுரு மாறி
நிரவிய நினமலந தானபெறற நீத
ருருவம பிரம னுயரகுல மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அரசு உடன் ஆல் அத்தி ஆகும் அக் காரம்
விரவு கனலில் வியன் உரு மாறி
நிரவிய நின் மலம் தான் பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர் குலம் ஆமே.

பதப்பொருள்:

அரசு (அரச மரம்) உடன் (அதனுடன்) ஆல் (ஆல மரம்) அத்தி (அத்தி மரம்) ஆகும் (ஆகிய மூன்று மரங்களின் சுள்ளிகளை) அக் (அந்த) காரம் (சாம்பல்)
விரவு (ஒன்றாக கலந்து) கனலில் (யாகத்தின் நெருப்பில் எரிந்து) வியன் (சிறப்பான) உரு (உருவமாக) மாறி (மாறி வருகின்ற திரு நீற்றை)
நிரவிய (உடல் முழுவதும் பூசிக் கொண்டு தவமிருந்து) நின் (எந்தவிதமான) மலம் (குற்றங்களும் இல்லாத நிலை) தான் (தாங்கள்) பெற்ற (அடையப் பெற்ற) நீதர் (தர்மத்தின் வடிவமாக இருக்கின்ற தவசிகளின்)
உருவம் (உருவமானது) பிரமன் (மனித நிலையை விட மேன்மை பெற்ற தேவர்களின்) உயர் (உயர்ந்த) குலம் (பிறப்பாகவே) ஆமே (ஆகி விடுகின்றது).

விளக்கம்:

அரச மரத்துடன் ஆல மரம் மற்றும் அத்தி மரம் ஆகிய மூன்று மரங்களின் சுள்ளிகளை ஒன்றாக கலந்து யாகத்தின் நெருப்பில் எரிந்து சிறப்பான உருவமாக மாறி வருகின்ற சாம்பலாகிய திரு நீற்றை உடல் முழுவதும் பூசிக் கொண்டு தவமிருந்து எந்தவிதமான குற்றங்களும் இல்லாத நிலையை அடையப் பெற்ற தர்மத்தின் வடிவமாக இருக்கின்ற தவசிகளின் உருவமானது மனித நிலையை விட மேன்மை பெற்ற தேவர்களின் உயர்ந்த பிறப்பாகவே ஆகி விடுகின்றது.

பாடல் #1665

பாடல் #1665: ஆறாம் தந்திரம் – 9. தவ வேடம் (அகத் தவத்தின் தன்மையை புற வேடத்தில் காட்டுவது)

நூலுஞ் சிகையு முணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்று மந்தணர் பாப்பார் பரமுயி
ரோரொன் றிரண்டெனி லோங்கார மோதிலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நூலுஞ சிகையு முணராரநின மூடரகள
நூலது வெதாநதம நுணசிகை ஞானமாம
பாலொனறு மநதணர பாபபார பரமுயி
ரொரொன றிரணடெனி லொஙகார மொதிலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள்
நூல் அது வேத அந்தம் நுண் சிகை ஞானம் ஆம்
பால் ஒன்றும் அந்தணர் பாப்பார் பரம் உயிர்
ஓர் ஒன்று இரண்டு எனில் ஓங்காரம் ஓதிலே.

பதப்பொருள்:

நூலும் (பூணூலுக்கும்) சிகையும் (குடுமிக்கும்) உணரார் (உள்ள உட் பொருளை உணராதவர்கள்) நின் (முழு) மூடர்கள் (மூடர்களாக இருக்கின்றார்கள்)
நூல் (பூணூல்) அது (என்பது) வேத (வேதத்தை) அந்தம் (முழுதும் அறிந்து உணர்ந்ததை குறிப்பதாகும்) நுண் (தலை உச்சியில் இருக்கும்) சிகை (குடுமி என்பது) ஞானம் (உண்மை ஞானத்தை) ஆம் (உணர்ந்ததை குறிப்பதாகும்)
பால் (வேதப் பொருளாகிய இறைவனை உணர்ந்து அவனோடு) ஒன்றும் (ஒன்றி இருக்கின்ற) அந்தணர் (அந்தணர்களே) பாப்பார் (தமக்குள் பார்க்கின்றார்கள்) பரம் (பரம்பொருளாகிய இறைவனே) உயிர் (தமது உயிராகவும் இருப்பதை)
ஓர் (ஒரே பொருளாக) ஒன்று (ஒன்று பட்டு இருக்கின்ற) இரண்டு (இறைவன் ஆன்மா ஆகிய இரண்டும்) எனில் (என்று உணர்ந்தால் அது) ஓங்காரம் (ஓங்காரத்தை) ஓதிலே (ஓதியே உணர்ந்தது ஆகும்).

விளக்கம்:

பூணூலுக்கும் குடுமிக்கும் உள்ள உட் பொருளை உணராதவர்கள் முழு மூடர்களாக இருக்கின்றார்கள். பூணூல் என்பது வேதத்தை முழுதும் அறிந்து உணர்ந்ததை குறிப்பதாகும். தலை உச்சியில் இருக்கும் குடுமி என்பது உண்மை ஞானத்தை உணர்ந்ததை குறிப்பதாகும். வேதப் பொருளாகிய இறைவனை உணர்ந்து அவனோடு ஒன்றி இருக்கின்ற அந்தணர்களே பரம்பொருளாகிய இறைவனே தமது உயிராகவும் இருப்பதை தமக்குள் பார்க்கின்றார்கள். ஒன்று பட்டு இருக்கின்ற இறைவன் ஆன்மா ஆகிய இரண்டும் ஒரே பொருளே என்பதை ஓங்காரத்தை ஓதியே அவர்கள் உணர்ந்தார்கள்.

குறிப்பு:

சுவடிகளில் இந்தப் பாடல் “தவ வேடம்” தலைப்பிலேயே உள்ளது. ஆனால் சில புத்தகங்களில் அடுத்து வருகின்ற “திரு நீறு” தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் பொருள் தவ வேடத்திற்கே பொருத்தமாக இருக்கின்றது.

திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை – பகுதி 3

“திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை – பகுதி 3” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 25-12-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.