பாடல் #1548

பாடல் #1548: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங்
கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்
சுழிநடக் குந்துய ரம்மது நீக்கிப்
பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வழிநடக குமபரி சொனறுணடு வையங
கழிநடக குணடவர கறபனை கெடபர
சுழிநடக குநது யரமது நீககிப
பழிநடப பாரககுப பரவலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு வையம்
கழி நடக்கு உண்டவர் கற்பனை கேட்பர்
சுழி நடக்கும் துயரம் அது நீக்கி
பழி நடப்பார்க்கு பரவலும் ஆமே.

பதப்பொருள்:

வழி (இறைவனை அடைகின்ற வழியில்) நடக்கும் (நடக்கும் போது) பரிசு (கிடைக்கின்ற பலன்) ஒன்று (ஒன்று) உண்டு (இருக்கின்றது) வையம் (இந்த உலகத்தில்)
கழி (தனது உடலுக்கு உண்டான வினையின் போக்கில்) நடக்கு (செல்பவர்கள்) உண்டவர் (மற்றவர்கள் மாயையால் தமக்கு உண்மை என்று நம்பி கூறுகின்ற) கற்பனை (கற்பனையான விஷயங்களை) கேட்பர் (நம்பி கேட்கிறார்கள்)
சுழி (இவர்கள் தங்களின் வினைகளின் வழியாகவே) நடக்கும் (மற்றவர்கள் சொல்லுவதை உண்மை என்று நம்பி செல்லுவதால்) துயரம் (பல விதமான துன்பங்களை அனுபவிக்கின்றனர்) அது (இதற்கு காரணமாக இருக்கின்ற வினைகளை) நீக்கி (நீக்குவதற்கு)
பழி (உலகத்தில் உள்ளவர்கள் தம் மீது எவ்வளவு பழியை சுமத்தினாலும் அதனால் கவலை படாமல்) நடப்பார்க்கு (இறைவனை அடைகின்ற வழியை விட்டுவிடாமல் நடப்பவர்களுக்கு) பரவலும் (இறைவனை அடைவதற்கான அனைத்து விதமான வழிகளும் அந்த வழிகளில் செல்வதற்கான பக்குவங்களும்) ஆமே (கிடைக்கும்).

விளக்கம்:

இறைவனை அடைகின்ற வழியில் நடக்கும் போது கிடைக்கின்ற பலன் ஒன்று இருக்கின்றது. இந்த உலகத்தில் தனது உடலுக்கு உண்டான வினையின் போக்கில் செல்பவர்கள் மற்றவர்கள் மாயையால் தமக்கு உண்மை என்று நம்பி கூறுகின்ற கற்பனையான விஷயங்களை நம்பி கேட்கிறார்கள். இவர்கள் தங்களின் வினைகளின் வழியாகவே மற்றவர்கள் சொல்லுவதை உண்மை என்று நம்பி செல்லுவதால் பல விதமான துன்பங்களை அனுபவிக்கின்றனர். இதற்கு காரணமாக இருக்கின்ற வினைகளை நீக்குவதற்கு உலகத்தில் உள்ளவர்கள் தம் மீது எவ்வளவு பழியை சுமத்தினாலும் அதனால் கவலை படாமல் இறைவனை அடைகின்ற வழியை விட்டுவிடாமல் நடப்பவர்களுக்கு இறைவனை அடைவதற்கான அனைத்து விதமான வழிகளும் அந்த வழிகளில் செல்வதற்கான பக்குவங்களும் கிடைக்கும்.

பாடல் #1549

பாடல் #1549: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

வழிசென்று மாதவம் வைகின்ற போது
பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே
வழிசெல்லும் வல்வினை யார்திறம் விட்டிட்
டுழிசெல்லி லும்பர் தலைவன்முன் னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வழிசெனறு மாதவம வைகினற பொது
பழிசெலலும வலவினைப பறறறுத தாஙகெ
வழிசெலலும வலவினை யாரதிறம விடடிட
டுழிசெலலி லுமபர தலைவனமுன னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வழி சென்று மா தவம் வைகின்ற போது
பழி செல்லும் வல் வினை பற்று அறுத்து ஆங்கே
வழி செல்லும் வல் வினையார் திறம் விட்டிட்டு
உழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே.

பதப்பொருள்:

வழி (இறைவனை அடைகின்ற வழியில் ஆசைகள் இல்லாமல்) சென்று (சென்று புரிகின்ற) மா (மாபெரும்) தவம் (தவமானது) வைகின்ற (அதன் பயனால் நிலை பெற்று நிற்கின்ற) போது (போது)
பழி (ஞானிகள் பழிக்கின்ற) செல்லும் (உலக வழிகளில் செல்லும் போது) வல் (வலிமையான) வினை (வினைகளினால்) பற்று (கட்டி இருக்கின்ற பற்றை) அறுத்து (அறுத்து விட்டு) ஆங்கே (தாம் இருக்கின்ற இடத்திலேயே)
வழி (இறைவனை நோக்கிய வழியில்) செல்லும் (செல்லுகின்றவர்) வல் (வலிமையான) வினையார் (வினைகளில் ஆட்பட்டு வினை வழியே செல்லுகின்ற உலகத்தவர்களின்) திறம் (உறுதியான பந்த பாசங்களை) விட்டிட்டு (விட்டு விட்டு)
உழி (இறைவன் இருக்கின்ற இடம் நோக்கி) செல்லில் (அவனை அடைகின்ற வழியில் சென்றால்) உம்பர் (தேவர்களுக்கு எல்லாம்) தலைவன் (தலைவனாகிய இறைவனின்) முன் (முன்பு) ஆமே (சென்று நிற்பார்கள்).

விளக்கம்:

இறைவனை அடைகின்ற வழியில் ஆசைகள் இல்லாமல் சென்று புரிகின்ற மாபெரும் தவமானது அதன் பயனால் நிலை பெற்று நிற்கின்ற போது, ஞானிகள் பழிக்கின்ற உலக வழிகளில் செல்லும் போது வலிமையான வினைகளினால் கட்டி இருக்கின்ற பற்றை அறுத்து விட்டு, தாம் இருக்கின்ற இடத்திலேயே இறைவனை நோக்கிய வழியில் செல்லுகின்றவர்கள், வலிமையான வினைகளில் ஆட்பட்டு வினை வழியே செல்லுகின்ற உலகத்தவர்களின் உறுதியான பந்த பாசங்களை விட்டு விட்டு, இறைவன் இருக்கின்ற இடம் நோக்கி அவனை அடைகின்ற வழியில் சென்றால், தேவர்களுக்கு எல்லாம் தலைவனாகிய இறைவனின் முன்பு சென்று நிற்பார்கள்.