பாடல் #1115

பாடல் #1115: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

இயைந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
அயன்தனை ஓரும் பதமது பற்றும்
பெயர்ந்தனள் மற்றும் பிதற்றறுத் தாளே.

விளக்கம்:

பாடல் #1114 இல் உள்ளபடி எம்மோடு சேர்ந்திருந்து அனைத்தையும் செய்வித்த இறைவியானவள் மிகவும் அழகிய ஆபரணங்களை சூடிக்கொண்டிருக்கிறாள். அவள் எமது உள்ளம் முழுவதும் பரவி நின்று மகிழ்ச்சியோடு அங்கேயே வீற்றிருந்து எம்மை ‘நமசிவ’ எனும் மந்திரத்தை தியானிக்க வைத்து அதன் பயனால் பிரம்மனும் ஆராய்ந்து அறிய முடியாத இறைவனின் மாபெரும் திருவடிகளை உறுதியாக பற்றிக் கொள்ள வைத்து அவனைத் தவிர மற்ற அனைத்து பற்றுக்களையும் வேறு வீணான எண்ணங்களையும் பேச்சுக்களையும் எம்மிடமிருந்து நீக்கி அருளினாள்.