பாடல் # 823

பாடல் # 823 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

தூர தரிசனஞ் சொல்லுவன் காணலாங்
காராருங் கண்ணி கடைஞான முட்பெய்து
ஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்
பாரா ருலகமும் பகன்முன்ன தாமே.

விளக்கம்:

பாடல் #822 இல் உள்ளபடி அண்ட சராசரங்கள் அனைத்திலும் கலந்திருக்கும் இறை சக்தியைத் தமக்குள் கலந்திருக்கும் பஞ்ச பூதங்களாகக் கண்டு தரிசிக்க முடிந்த யோகியர்கள் ஞானக் கண்ணைப் பெற்று தமக்குள் இருக்கும் இறை சக்தியை தீபத்தில் ஏற்றி வைத்த ஜோதியைப் போல ஒளி உருவமாகக் கண்டு தரிசித்து தமது எண்ணங்களை அதன் மேலேயே வைத்து தியானித்திருந்தால் அண்டசராசரங்கள் அனைத்தையும் தாம் உட்கார்ந்த இடத்தில் இருந்தே முழு சூரிய வெளிச்சத்தில் காணும் பகல் காட்சி போல தெள்ளத் தெளிவாகக் காணலாம்.

பாடல் # 824

பாடல் # 824 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே
பன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும்
நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத்
தன்னெழு கோயில் தலைவனு மாமே.

விளக்கம் :

உடலில் கொப்புழில் இருந்து பன்னிரண்டு விரல் கீழே வேதத்தில் கூறியது போல் பகல் போல் ஓளி இருக்கிறது. கேசரியோகத்தின் மூலம் அந்த ஓளிப் பிழம்பிலிருந்து வெளிப்பட்டு எழுந்து வரும் ஓங்காரத்தை இடைவிடாது சிந்தித்தால் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலாக இவ்வுடல் அமையும்.

பாடல் # 797

பாடல் # 797 : மூன்றாம் தந்திரம் – 17. வார சூலம் (பயணம் செய்ய தவிர்க்க வேண்டிய நாட்களும் திசைகளும்)

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே.

விளக்கம்:

திங்கள் சனிக்கிழமைகளில் கிழக்கே சூலம் ஆகும். செவ்வாய் புதன் கிழமைகளில் வடக்கே சூலம் ஆகும். ஞாயிறு வெள்ளிக் கிழமைகளில் மேற்கே சூலம் ஆகும்.

குறிப்பு: சூரியனின் தீட்சண்யம் குவியும் திசைக்கு சூலம் என்று பெயர் வைத்தார்கள். அந்த திசையில் சூடு அதிகமாக இருக்கும். பயணம் செய்தால் சூட்டினால் உடல் நிலை பாதிக்கும் என்ற காரணத்தால் சூலம் என்று குறிப்பிட்டு அந்த திசையில் பயணிக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.

Share image

பாடல் # 798

பாடல் # 798 : மூன்றாம் தந்திரம் – 17. வார சூலம் (பயணம் செய்ய தவிர்க்க வேண்டிய நாட்களும், திசைகளும்)

தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை
அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வளமுன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே.

விளக்கம்:

வியாழக் கிழமையன்று சூலம் தெற்கு திசையில் அமையும். சூலம் நாம் செல்லும் திசைக்கு இடப் பக்கமாகவோ அல்லது பின்பக்கமாகவோ இருந்தால் நன்மை விளையும். சூலம் நாம் செல்லும் திசைக்கு வலப்பக்கமாகவோ அல்லது முன் பக்கமாகவோ இருந்தால் மேலும் மேலும் தீமை அதிகரிக்கும்.

குறிப்பு: சூரியனின் தீட்சண்யம் குவியும் திசைக்கு சூலம் என்று பெயர் வைத்தார்கள். அந்த திசையில் சூடு அதிகமாக இருக்கும். பயணம் செய்தால் சூட்டினால் உடல் நிலை பாதிக்கும் என்ற காரணத்தால் சூலம் என்று குறிப்பிட்டு அந்த திசையில் பயணிக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.

பாடல் # 790

பாடல் # 790 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.

விளக்கம் :

வெள்ளி திங்கள் புதன் கிழமைகளில் இட நாடி வழியாக மூச்சு இயங்க வேண்டும். சனி ஞாயிறு செவ்வாய்க் கிழமைகளில் வல நாடி வழியே மூச்சு இயங்க வேண்டும். வளர்பிறை வியாழக் கிழமைகளில் இடநாடியிலும் தேய்பிறை வியாழக் கிழமைகளில் வலது நாடியிலும் மூச்சு இயங்க வேண்டும். இவ்வாறு இயங்குவது உடல் நலத்திற்கு ஏற்ற இயற்கையான பிராண இயக்கமாகும்.

பாடல் # 791

பாடல் # 791 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே.

விளக்கம் :

இயல்பாகவோ அல்லது பயிற்சியினாலோ திங்கள் புதன் வெள்ளிக் கிழமைகளில் மூச்சு இடைகலை வழியாக நடைபெற்றால் ஞானத்தைப் பெறுதற்கு வாயிலாகிய உடம்பிற்கு எந்த ஒரு குறையும் அழிவும் உண்டாகாது என்று அருள் வள்ளலாகிய நந்தி பெருமான் அனைவருக்கும் மகிழ்ந்து அருளினார்.

280 Har Har Mahadev Full HD Photos 1080p Wallpapers Download Free Images (202

பாடல் # 792

பாடல் # 792 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

செவ்வாய் வியாழன் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்
டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே.

விளக்கம் :

செவ்வாய்க் கிழமை தேய்பிறை வியாழக்கிழமை சனிக் கிழமை ஞாயிற்றுக் கிழமை ஆகிய நாட்களில் மூச்சை வலப்பக்க நாடி வழியே அறிந்து கொள்ளும் யோகி இறைவன் ஆவான். இந்த நாட்களில் மூச்சு இட நாடியில் நடந்தால் அதை மாற்றி வல நாடியில் புரிய வேண்டும். அப்போது ஆனந்தம் கூடும்.

பாடல் # 793

பாடல் # 793 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

மாறி வருமிரு பான்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேயுயி ருக்கிரம்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே.

விளக்கம் :

சந்திரனும் சூரியனும், இடகலை பிங்கலை நாடிகளில் மாறி மாறி இயங்கும். இடகலை வழியே ஏறிப் பிங்கலை வழியே இறங்கும். பிங்கலை வழியே ஏறி இடகலை வழியே இறங்கும். நடு நாடியில் மூச்சு ஊர்ந்து போகும். நாசிகள் வழியே இயங்கும் மூச்சில் சிவம் உள்ளது என்பதை அறிந்து தெளியலாம்.

Om Namah Shivay — Shiva lingam

பாடல் # 794

பாடல் # 794 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும்
உதித்தது வேமிக யோடிடு மாகில்
உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே.

விளக்கம் :

பிராணன் வலப்பக்கம் தோன்றி இடப்பக்கம் ஓடும் போது ஒரு பக்கம் கனமாகவும் ஒரு பக்கம் மெல்லியதாகவும் இருக்கும். இரு பக்கமும் கணமாகவும் மெல்லியதாகவும் மாறி மாறி பிராணன் ஒடுவது இயற்கையாக உள்ளது என்பதை உணர்ந்து அறிந்துகொள்ளலாம்.

பாடல் # 795

பாடல் # 795 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.

விளக்கம் :

மூச்சுக்காற்று நடுநாடியாகிய சுழுமுனையில் நிற்காமல் இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும் மாறி மாறி இயங்குகின்ற போது உலகியல் வாழ்க்கையில் கிடந்து வருத்தப்பட நேரிடும். யோகியானவன் மூச்சுக்காற்றை நாடிகள் கூடுகின்ற நடுநாடியின் சுழுமுனையில் குண்டலினியோடு சேர்க்க நடுநாடியின் உச்சியில் தீபத்தின் ஒளி தோன்றும் என்று நந்தி அருளினான்.