மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #24

12-3-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

தெளிவு குருவின் திருமேனி கான்டல் எனத் துவங்கும் அந்நான்கு வரிகள் படித்து நன்றென அவ்வரிகளின் எளிமையை இரசித்தோரும் உண்டு. இருப்பினும் இதன் முழுமையான அர்த்தமும் எவ்விதம் செய்தல் வேண்டும் என்கின்றதும் அறியா நிலையில் உள்ளனர். இதனை யாம் இங்கு எடுத்துரைப்போமாக.

குருவும் தெய்வமும் வேறில்லை என்கின்றதை முதலில் உணர்தல் வேண்டும். நாம் வணங்கும் தெய்வமே குருவின் வடிவில் நம் முன் நிற்கின்றார் என்பதையும் மறப்பது நல்லதல்ல. யாம் வணங்கும் சிவன், கிருஷ்ணன், விஷ்ணு, அம்பிகை என்ற அனைத்தும் குருவுக்குள் அடக்கம் என்பதையும் மறவாது செயல்படுத்துதல் வேண்டும்.

மேலும் குருவை எவ்விதம் வணங்குவது? என்கின்ற ஓர் வினாவும் இங்கு எழும்பிடக் கண்டோம். குருவின் ஆத்மா அவருடய ஆன்மிக சக்தியை நாம் நேசிக்க வேண்டும் என்பதில் எவ்வித குழப்பமும் இல்லை. இவ்விதமிருக்க நாம் குருவாக வேண்டும் குரு நாமாக வேண்டும் என்கின்ற ஐக்கிய மனப்பான்மையை வளர்த்தல் வேண்டும். இதனைச் செய்யும் முன் குரு எவ்விதம் இருக்கின்றாரோ அவ்விதம் நாமும் மாற முயற்சித்தல் வேண்டும். இந்நிலையை எவ்விதம் அடைவது என்றால் குருவை எண்ணித் தியானம் செய்தல் வேண்டும். செய்திடும் முன்னதாக கால் தொட்டு சிரசு வரை அங்கங்களை நாம் தொட்டு அவை குருவின் அங்கங்களாக கருதி வணங்கிட்ட பின் குருவின் செய்கைகள் குருவின் தன்மைகள் அனைத்தும் நன்கென தியானித்து மனமதில் நிறுத்தல் வேண்டும். இவ்விதம் சில மாதங்கள் செய்கின்ற போது நமக்கு மகத்தான முன்னேற்றங்கள் குருவழி கிட்டக்கூடும் என்றும் விளக்கிட்டோமே.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #23

20-12-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இன்று கூறிட விசேஷங்கள் இல்லை. இல்லை என்கின்ற போதிலும் பலதும் உண்டே? இருக்கும் என்பது இல்லாது போகும். இல்லாது என்பது எங்கும் நிறைந்திட இதுவே சத்தியம் என்று கூறுவோம். இப்போது எது நிஜம் என்று நாம் நினைப்பது நிஜமில்லை. அனைத்தும் மாயை என்றாவது ஒரு நாள் இல்லாமல் போகும். எது நம் கண்ணுக்குத் தெரியவில்லையோ ஒன்றுமில்லாமல் இருக்கிறதோ அதுவே தான் இருக்கின்றது. இறைவன் நம் கண்ணுக்குத் தெரியவில்லை ஆனால் அவரே எப்போதும் எங்கும் இருக்கின்றார். இதுவே சத்தியம்.

மறுபிறவி உண்மையா இல்லையா?

எண்ணற்ற பிறவிகள் மனிதனுக்கு உண்டு. ஒன்று இரண்டு மறுபிறவிகள் உண்டா? என்று கேட்டால் எண்ணற்ற பிறவிகள் உண்டு. இப்பிறவிகள் நம்முடைய கர்மாக்களின் விளைவுகளே. நல்ல கர்மாவானது நம்மைத் தொடர்ந்து வரும். தீயவை அனைத்தும் நல்ல பள்ளத்தில் விடும். எந்த நிலை வேண்டும் என்று நன்கு சிந்திப்பீர். ஏனெனில் சிந்திக்கும் தன்மை மனிதப் பிறவியில் மட்டுமே உள்ளது. மானிடன் சிந்திக்கும் தன்மையை நன்றாகப் பெற்றுக் கொண்டான். வினையின் விளைவுகளை நல் செய்கையால் நீக்கினால் வினையின் தீமைகளை தியானத்தால் நீக்கினால் வினையின் தீமைகளை பக்தியால் நீக்கினால் வினைகளின் தீமைகள் நீங்கிடும். சொர்க்கமும் நரகமும் இங்கேதானப்பா. நல் வினைகள் அது ஆனந்தம் கொடுக்கும். அந்த ஆனந்தமே சொர்க்கம் ஆகும். தீயவை நமக்கு கடினத்தை அளித்திட இக்கடினமே நரகம் ஆகும் என்று கூறுவோமே.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #22

23-11-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

எவ்வழி நல்வழி? யோக வழியா? பூஜை வழியா?

அவரவர் சக்திக்கேற்றார் போல் என யாமும் கூறுகிறோம். இதில் பல அர்த்தமும் உண்டு என்பேன். அவரவர் சக்தி எனக் கூறிட ஒன்று உடல் வலிமையைக் குறிக்கின்றது. இரண்டு காலமதின் நிலையையும் குறிக்கின்றது. அதாவது கடினமானது செய்திட காலம் கிட்டுமோ என்கின்ற வினாவும் இங்கு காணப்படுகின்றது. மூன்றாவது அவரவர் ஜென்மாந்திர நிலையையும் குறிக்கின்றது. இதுவே முக்கியத்துவம் காண்கின்றது என்று இங்கு எடுத்துரைப்போமே. நல்லதோர் நிலையில் செல்வந்தன் ராட்சஸ பறவையில் (விமானம்) அயல் நாடு செல்ல நேரிடும். சாதாரணமானவன் இணைப்புப்பெட்டி (இரயில்) வழியாகவும் செல்ல நேரிடும். இல்லாதோன் பேருந்து வழியாகச் செல்லக்கூடும். அதுவும் இயலாதோன் நடை பயணமாகச் செல்வதும் உண்டு.

இவ்விதமே பூர்வ ஜென்ம நிலையைக் குறித்தும் அவரவர்க்கும் மார்க்கம் அமையும். இதில் நீங்களாக யாதும் தேடுதல் வேண்டாம் என்பதே எமது கருத்தாகின்றது. இருப்பினும் கிட்டும் வழி நல்வழி எனக் கண்டு முழுமையாக ஒன்றில் நின்று சாதனை புரிந்திட வெற்றி, இறைபாதம், ஜெயம் உறுதி என்றும் இங்கு எடுத்துரைக்கின்றோம்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #21

27-10-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இவ்வுலக நிலையில் பொதுவாக மானிடர்களிடம் ஓர் தன்மை உண்டு. அத்தன்மையானது மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது. பொதுவாக மற்றவர்கள் நல்ல நிலையில் இருந்தால் அதைக்கண்டு யாமும் அந்த நிலையை அடைய வேண்டும் என்று எண்ணாது சிறு பொறாமைத் தன்மையையும் வளர்க்கின்றனர். இதனைத் தவிர்த்தல் வேண்டும் என்று இங்கு கூறுகிறோம். பொதுவாக ஒப்பிடுவதை ஓர் நல்வழியில் மாற்றி அமைத்தல் வேண்டும். மற்றொருவரின் நல்குணங்கள் நம்மிடம் உள்ளதா என்று ஆராய்தல் வேண்டும். அவ்விதம் இல்லையேல் அதனை நம் வாழ்வில் அமைக்க முயற்சித்தல் வேண்டும். இது மட்டும் அல்லாது தீயவர்களின் குணங்கள் நம்மிடத்தில் உண்டா என்று எண்ணி அவ்விதம் இருந்தால் அதை நீக்குதல் வேண்டும். இதுவே சீரான ஒப்பிடும் முறை என்று இங்கு கூறுகிறோம். இக்காலத்தில் ஒப்பிடுதல் செல்வம், அறிவு, பதவி என்கின்ற நிலையில் செல்கின்றது. இது ஓர் வருத்தமான காரியமாகின்றது. சிறிது சிறிதாக ஒப்பிடுதலை மாற்றி நம் நன்மைக்கென ஒப்பிட்டுப் பயன் பெறுவீர்களாக.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #20

29-9-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கடவுள் என்று கூறினால் அவர் ஆண்பாலா? பெண்பாலா? அவரை எவ்விதம் வணங்க வேண்டும்?

ஒவ்வொரு மனிதர்களிலும் ஆண்பால் பெண்பால் உண்டு என்கின்றதை அறிதல் வேண்டும். அமைதி அளிப்பது அசையா நிலையை அளிப்பது ஆண்பால் என்றும் அசையும் சக்தியானது பெண்பால் என்றும் உணர்தல் வேண்டும். சில சமயங்களில் பெண்மையும் சீறி எழுந்து ஆண் செய்யும் தொழில்கள் செய்கின்றதை காண்கின்றோம். இவ்விதமே ஆண்களும் சில சமயங்களில் மௌனம் சாதித்து அழுது ஒதுங்கி விடுகின்றனர். இது உள்ளிருக்கும் பெண்பால் செய்யும் தொழிலாகின்றது என்பதே உண்மையான நிலை. இறைவனைப் பொறுத்த அளவில் அங்கு பால் (ஆண்பால், பெண்பால்) இல்லை. பிரம்மம் என எடுத்துக் கொண்டால் பிரம்மத்திற்குப் பால் (ஆண்பால், பெண்பால்) இல்லை. குணங்கள் இல்லை ஆசைகள் இல்லை பாசங்கள் இல்லை. சுத்தம் முழுமையான சுத்தம் சுத்த சிவம் என்கின்ற பொருளாகின்றது. இவ்விதம் இருக்கையில் நமக்கு ஏன் பெண் ரூபங்கள் ஆண் ரூபங்கள் படைத்து இருக்கின்றான்? இது இறைவனாகப் படைக்கவில்லை. மனிதன் எவ்விதத்தில் இறைவனை வணங்குகின்றானோ அந்த ரூபத்தில் இறைவன் காட்சி அளித்து அருள் பாலிக்கின்றான் என்பதே உண்மையான நிலை.

இவ்விதம் இருக்க சக்தி பெரிதா? சிவன் பெரிதா? என்கின்ற ஓர் பழமையான வினா ஒன்றும் இங்கு காண்கின்றோம். உண்மையாக கூறுகையில் இறைவன் நமக்குள் இருக்கின்றான் இது உண்மை. அவ்விறைவன் எங்கு இருக்கின்றான்? ஆண்பால் பெண்பால் உள்ள தேகத்தில் இருக்கின்றான். அவ்விதம் இருக்கும்போது தாயாகவும் தந்தையாகவும் அவ்வொரு சக்தியே இருக்கின்றது என உணர்தல் வேண்டும். வணங்குவது உங்களது விருப்பமாக இருக்கும். ஏனெனில் எந்த ரூபம் உமக்கு அதிகமாக பிடிக்கின்றதோ அந்த ரூபத்தில் வணங்கிக் கொள்வாய் அந்த ரூபத்தில் இறைவன் காட்சி அளிப்பான். இதில் எவ்வித குழப்பமும் இல்லை. இருப்பினும் இறையருளானது பால் (ஆண்பால், பெண்பால்) அற்றது என்கின்ற நிலையை இங்கு யாம் விளக்கினோம்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #19

2-9-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார் என்பது பழமொழி என்றால் தேக உபத்திரவம் செய்வது நலம்தானா?

இதன் உண்மையான பொருளை அறிந்து கொண்டால் எளிதாகப் புரியும். அடி உதவுவது போல் என்கின்றதை தனியாக எடுத்துக் கொண்டால் கட்டையால் அடிப்பதோ கரங்களால் அடிப்பதோ அல்ல என்றும் இங்கு யாம் பணிவுடன் எடுத்துரைக்கின்றோம். அடி உதவுவது போல் என்றால் திருவடி உதவுவது போல் என்கின்ற பொருளாகின்றது. இறைவனுடைய பாதங்களைச் சரணடைந்தால் அதுவே போதுமானது. இது பெருமளவில் உதவும் உறவினர்களை விட பெரிதாக உதவும் என்பது பொருளாகின்றது.

கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் இதற்கு என்ன பொருள்?

மரத்தில் மறைந்தது மாமத யானை மரத்தை மறைத்தது மாமத யானை. உதாரணமாக கல்லில் ஒரு நாயின் சிலையை வடிவமைத்தால் குழந்தைகள் காண்பது நாயாகும். அவர்களுக்கு அந்த வினாடி கல் மறைந்து விடுகிறது. சிற்பி காண்பது கல்லாகும். சிற்பிக்கு நாய் மறைந்து விடுகிறது என்பதே பொருளாகின்றது. அவரவர் மனப்பான்மைக்கேற்பவே அனைத்தும் தோற்றமளிக்கிறது.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #18

6-8-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

காண்பவனும் அவனே கண்டதும் அவனே இடைவெளியும் அவனே என்ற ஓர் சொல்லுக்குப் பொருள் என்ன?

அனைத்திலும் இறைவன் இருக்கின்றான் என்கின்றதை உணர்த்திடவே இவ்வித சொல்லாகின்றது. அகம் பிரம்மாஸ்மி என்பது ஒரு பக்கமாக யாமும் பிரம்மமும் ஒன்றே என்கின்ற பொருள் அளிக்கின்றது. இது அதற்கும் மேலாக யாம் மட்டுமின்றி அனைத்தும் இறை அருளே அனைத்தும் பரப்பிரம்மமே என்கின்ற பொருளை விளக்குகின்றது. உட்பொருள் என்னவென்றால் இந்நிலையில் அனைத்து உயிர் ஜீவராசிகளின் மேலும் அன்பு செலுத்த வேண்டும். பாசம் செலுத்த வேண்டும். அவர்களையும் இறைவனாக காணுதல் வேண்டும் என்பதே பொருளாகின்றது. கலியுகத்தில் இது சிறிது கடினமானதாகும் என யாம் அறிவோம். இருப்பினும் இயன்ற அளவிற்கு இறைவனை அனைத்திலும் கண்டு தீயவையையும் தீயசெயல்களையும் நல்செயல்களையும் இறைவனின் திருவிளையாட்டாகக் கண்டுகொண்டால் குழப்பம் நீங்குவது மட்டுமல்லாமல் மேன்மையும் அடையக்கூடும் என்பதே பொருள் ஆகின்றது.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #17

9-7-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மழை கொடுப்பது யார் வருணனா?

இதை யாம் சிறிது மறுக்க வேண்டும். நன்றாக சிந்தித்தால், மழை நமக்கு அளிப்பது சூரிய பகவான் ஆவார் என்று அறிதல் வேண்டும். பூமியில் இருக்கும் நீர் தனை ஆவியாக்கி மேல் எடுத்துச் சென்று மேகங்களாக மாற்றி சில இடங்களில் மழை பொழிய வைக்கின்றான். பின்பு இந்நாட்டில் இச்சமயத்தில் இவ்வளவிற்கு வெப்பம் இருந்த போதிலும் மழை ஏன் இல்லை? என்று ஓர் வினாவும் எழும்புகின்றது. இதற்குப் பொருள் எளிது. இம்மழை மேகங்கள் எங்கு தர்மம் நிலை நாட்டுகின்றதோ அங்கு செல்லும் என்பதே பொருள்.

இதற்குச் சிறிதாக உதாரணங்கள் யாம் அளிப்போம். ஆகம ரீதியில் சிறப்பாக இன்றும் ஆலய வழிபாடுகள் நடக்கும் தலம் பரசுராம ஷேத்திரம் என்பதும் அங்கு மழை எப்பொழுதும் பொழியும் என்கின்ற நிலையும் உண்டு. இரண்டாவதாக கர்நாடகா எனும் பிரதேசத்தில் பலப்பல ஆண்டுகளாக ஆலயங்களில் அன்னம் அளிக்கப்படுகின்றது. இது அன்னதான சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது. இதன் வழியாக அங்கும் மழை பொழிகின்றது. ஓர் குறுகிய காலத்திற்கு முன்பாகவே இந்நாட்டிலும் இத்தகைய தானங்கள் மீண்டும் துவங்கியுள்ளார்கள் என்பதும் சிறிது காலமாகவே வழிபாடுகளில் சிரத்தை காட்டுகின்றனர் என்றும் இங்கு எடுத்து உரைத்தோமே. இனி வரும் காலங்களில் இங்கும் நன்றாக மழை பொழியக் காணும் என்றென கூறுகின்றோம்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #16

12-6-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பொதுவாக வெப்பம் அதிகம் என்று பலர் கூறுவதைக் கேட்டோம். மனிதனின் உள்ளிருக்கும் வெப்பத்தை விட இந்த வெப்பம் பெரிதா? என்று யாம் கேட்கிறோம். உள்ளிருக்கும் அனைத்தும் வெப்பம் அளிப்பதாகவே காண்கின்றோம். இவ்வெப்பத்தின் காரணமாக, மனிதனின் சிந்தனை குலைந்து போவதையும் கண்டோம். இவ்வெப்பம் எதனால் உண்டாகுகின்றது என சிந்தித்தல் வேண்டும். வெளியாகக் காணும் வெப்பம் கதிரவனால் என்று உறுதியாக கூற இயலும், உள்ளில் இருக்கும் வெப்பம் எதனால் தோன்றுகிறது என வினாவக் கண்டால், இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஓர் கதிரவன் தானா? பல கதிரவர்கள் உள்ளிருந்து ஆட்டிப் படைக்கின்றனர் என்றும் இங்கு எடுத்தரைப்போம். இதில் முதன்மையான அதிக வெப்பம் அளிக்கும் காரணம் என்ன என வினாவக் கண்டால் இதற்கு மூல காரணமாக யாம் காண்பது தேவையற்ற எதிர்பார்ப்புக்கள் என்று கூறுவோம். எதிர்பார்ப்புகளின் விளைவாக பலப்பல தவறுகள் செய்கின்றனர் மானிடர் என்றும் கூறி இங்கிருக்கும் அனைவரையும் யாம் சுட்டிக் காட்டவில்லை என்றும் அறிதல் வேண்டும். இது ஓர் பொது விளக்கமாக எடுத்துக் கொள்வீர்களாக.

முதலாவதாக ஆண் குழந்தை வேண்டும் என எதிர்பார்ப்பு பெண்ணாக பிறந்தால் ஆ என்ன துக்கம்? ஏன் என்றால் அந்தப் பெண் அனைவரையும் விழுங்கி விடுவதாக எண்ணுகின்றனர். இவ்விதம் இல்லை கலியுகத்தில் பெண்ணே பெரிது என்று கூறுவோம்.

இரண்டாவதாக பெற்றக் குழந்தை இந்தக் கல்வி கற்க வேண்டும் என்பது பெற்றோர்களின் விருப்பம். அக்குழந்தைக்கு என்ன விருப்பம் என்று எவரும் சிந்திப்பதில்லை. அந்த ஆன்மா எந்த நாட்டம் செல்கின்றது என்று எவரும் சிந்திப்பதில்லை. இது ஓர் பெரும் வெப்பமாக யாம் காண்கின்றோம்.

மூன்றாவதாக அக் குழந்தை அவ்வழியே செல்லாது வேறு வழி நாடும் போது ஆ என்ன துயரம் மீண்டும் வருத்தமே இதன் வழியாக எதிர்பார்ப்பு போய் விட்டது என் வாழ்க்கை போய் விட்டது என்று பெற்றோர் கருதுவார்கள். இதுவும் வெப்பத்தை உண்டாக்குகிறது.

நான்காவதாக இன்னாரைத்தான் நீ திருமணம் புரிதல் வேண்டும் என்று எதிர்பார்கின்றனர். எனக்கு அவரைப் பிடிக்கவில்லை என குழந்தை கூறுகிறது பிடிக்காவிட்டால் என்ன சொத்து இருக்கின்றது என்று கூறுகின்றனர். இவ்விதம் பல வகையான சச்சரவுகள் அகம் தனில் வீண் விவாதங்கள் அனைத்தும் நடந்து ஓர் உஷ்ணமே உண்டாக்குகின்றது. விளைவு பூகம்பம் அமைதி போய் விட்டது. இதற்கு ஆண்டவனை ஓர் வழி கேட்போம். என்ன கேட்கப் போகின்றீர்கள்? நாம் உனக்கு அபிஷேகம் செய்கின்றோம் எனக்கு அமைதியைக் கொடு என்று உடனடியாக இங்கு ஓர் ஒப்பந்தம் ஓர் வியாபாரம் நடைபெறுகின்றது. உனது அபிஷேகம் ஆண்டவனுக்கு எதற்கு ஐயா? என பூசாரி வினாவுவான் என எதிர்பார்கின்றோம் ஆனால் அதுவும் அவ்விதம் இல்லை ஓர் இருநூறு ரூபாய் தட்சணையாக நீ வைத்து விடு அனைத்தும் சிறப்பாக ஆண்டவன் மன்னிப்பான் என்று கூறுகின்றனர். பணம் செலுத்தி செலுத்தி மனிதனின் வாழ்க்கையே வியாபாரமாகி விட்டது. இவ்விதம் அனைத்தும் வியாபார ரீதியில் நீ இது தருகிறாயா நான் அது தருகிறேன் என்பது சாதாரண ஓர் காரியமாகி விட்டது.

மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கருத்துக்கள் #15

16-5-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

எல்லாம் வல்ல இறைவனாம், அனைத்தும் படைத்தவனாம், நல் எண்ணம் படைத்தவனாம், என்றெல்லாம் புகழ்த்தும் போது, ஏன் நலத்துடன் தீயதும் படைத்தான் என வினாவக் கண்டோம்.
இதற்கான விடை தீயது இல்லையேல் நலமறிய இயலாது என்பதேயாகும். நிழலின் அருமை தெரிதல் வேண்டுமென்றால் வெயிலின் கொடுமையும் காணுதல் வேண்டும் அறிதல் வேண்டும் என்றும் கூறுவோம். உங்களுக்கு யாம் ஒரு நாணயம் அளித்தோம் என்றால், அதில் இரு பக்கம் இருத்தல் வேண்டும் என்பது இயற்கையின் விதியாகின்றது. இவ்விதம் இருக்க, நல்லது எனக் கூறிக்கொண்டால் தீமையும் இருத்தல் வேண்டும். தீமையே இல்லாவிடின் தீயவன் இல்லாவிடின் எவனை நல்லவன் என அழைப்பீர்கள்?

இத்தகைய நிலையில் ஒருவனுக்குச் சர்வாங்க சூலத்தால் (உடல் முழுவதும் சூலத்தால் குத்துவது போன்ற வலி) பாதிக்கப்பாட்டால் அது இல்லா நிலையில் ஆனந்தம் கொள்ள இயலாது. இது இறைவனின் விதியாகின்றது. இவ்விதம் இருக்க நலம் இருந்தால் தீமையும் காணும் தீமையை அறிந்து அதிலிருந்து விலகி வருதல் வேண்டும் என்பது மனிதனின் சுய அறிவு ஆற்றலின் விளைவாகின்றது. இத்தகைய நிலையில் நமக்குத் துன்பம் தரும் அனைத்தும் நாம் விட்டு நீங்குகின்றோம். உதாரணமாக, அக்னியில் கையை விடுவதில்லை ஏனெனில், அது சுட்டு விடும். துன்பம் தரும் காரியங்களில் ஈடுபடுவதில்லை ஏனெனில் அது துன்பத்தை தரும். இவ்விதம் இவற்றையெல்லாம் விட்டு நீங்குகின்றோம். ஆயினும் ஆனந்தம் கொடுக்கும் பலவற்றை விட நாம் எண்ணுவதில்லை. அதுபோல் இதுவும் தீமையென தீயவற்றை உணர்ந்து படிப்படியாக இவைகளிலிருந்து விடுதலை பெற நல்வழியில் முன்னேற்றம் காண்பீர்கள்.