பாடல் #115: முதல் தந்திரம் – 1. உபதேசம்
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல்பசு பாசம் அநாதி
பதியினை சென்றணு காப்பசு பாசம்
பதியணு கில்பசு பாசம் நிலாவே.
விளக்கம்:
ஆன்மாக்களின் தலைவன் இறைவன் பதி. ஆன்மாவாகிய உயிர்கள் பசு. உயிர்களைப் பிடித்திருக்கும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களும் பாசம். இந்த மூவரும் யாரென்று சொல்லப் போனால் என்றும் நிலைத்து நிற்கும் பழமைவாய்ந்த இறைவனைப் போலவே ஆன்மாக்களும் அவற்றை பிடித்திருக்கும் மும்மலங்களும் நித்தியமானவையே. மும்மலங்களால் கட்டுண்டு கிடக்கும் ஆன்மாக்கள் தங்களின் தலைவனாகிய இறைவனைத் தேடிச் சென்று அடைவதில்லை. இறைவன் யாரென்று தெரிந்து கொள்ள முயன்று அவனைப் பலவித வழிகளில் தேடிச்சென்று அடைந்தால் ஆன்மாக்களிடமிருந்து மும்மலங்களும் விலகிவிடும்.
