மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #43

19-3-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்: பகுதி #1

விசுவாசம் என்றால் என்ன?

குருவின் மீது வைக்கும் விசுவாசமானது அனைத்திலும் எப்போதும் இருக்க வேண்டும். பின்பு நமக்கென ஒன்றும் இல்லை என்பதும் அறிந்து கொள்ள வேண்டும். உடல், பொருள், அனைத்தையும் குருவின் திருவடியில் வைத்து விட்டு நமக்கென ஒன்றும் இல்லை என்கிற எண்ணத்துடன் இருந்தால் சரணாகதி என்பது முழுமையாகும். இதுவே விசுவாசத்தின் எல்லை ஆகும். முதலில் குருவின் சுகசௌகர்யங்களையே முதலாகப் பார்க்க வேண்டும். இரண்டாவதே நம்முடையது என உணர்தல் வேண்டும். நம்முடையது அனைத்தும் இறைவனுடையது என்ற உண்மையான எண்ணத்துடன் இருந்தால் அதனை எவ்வாறு உபயோகிப்பது என்பது இறைவன் முடிவு. வீணாக குருநாதரிடம் சென்று என்ன செய்தல் வேண்டும் என கேள்விகள் கேட்பது தவறாகும். ஏனெனில் குருநாதரிடம் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய விடையை நம்மால் கடைபிடிக்க முடியவில்லை என்றால் அது தவறாகும். மனதில் ஒரு முடிவு எடுத்து விட்டு பின்பு அந்த முடிவான பதிலைக் குருநாதர் கூற வேண்டும் என்று இரண்டாவதாக குருநாதரிடம் அபிப்பிராயம் கேட்பது தவறாகும். இதனை தவிர்த்தல் வேண்டும். குருநாதரிடம் கேள்வி கேட்டு அவர் பதில் கூறி விட்டால் அவர் கூறிய பதிலை தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டு செயற்படுதல் வேண்டும். இல்லையென்றால் குருநாதருடன் உள்ள உறவு சீரில்லா உறவாகும். குருநாதர் எது செய்தாலும் அதற்கு ஓர் அர்த்தம் உண்டு காரணம் உண்டு சில கர்ம விதிகளை மாற்றிட சிலவற்றை செய்ய வைக்கின்றார் என்பதை மறக்காமல் செயல்பட வேண்டும்.

வீணாக எதுவும் நடப்பதில்லை என்பது உண்மை என்றால் குருநாதர் சொல்வது அனைத்தும் உண்மையே. இதனை மறக்காமல் மனதில் வைத்துச் செயல்படவேண்டும். வீணாக இதை செய்து கொடு அதை செய்து கொடு என்று கேட்பதும் தவறாகும். ஏனெனில் உமக்கு என்ன வேண்டும் என்பதை குருநாதர் நன்றாக அறிவார். சரியான நேரத்தில் அதை அவர் செய்து கொடுப்பார் என்பதில் கடுகளவு கூட சந்தேகம் வேண்டாம். இந்நிலையில் இவையாவும் செய்திட முடியுமா என முழுமையாகச் சிந்தித்தபின் முடியும் என்றால் குருவை அணுகி ஏற்றுக் கொள்ளுங்கள். இது தான் உண்மையான நிலை. இவ்விதமே வாழ்வோம் என்று முடிவு எடுத்தால் அவர்களே உபதேசம் பெறத் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இல்லையென்றால் வாழ்த்துக்கள் மட்டுமே பெறத் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. வாழ்த்து பெறத் தகுதி பெற்றவர் என்று மட்டும் நினைத்தால் ஆனந்தமாக இருப்பீர்கள். ஏனெனில் எப்பொழுதும் வாழ்த்திக்கொண்டே இருப்பார்கள் இதில் எந்தவித குறையும் இருக்காது ஆசிகள் அருவி போல் கொட்டும். ஆனால் முழுமையாக சரணடைந்துவிட்டால் சமயங்களில் வாய் பேசாது கோலும் பேசும் (சொல்வதை செய்யவில்லையென்றால் தண்டனைகள் கிடைக்கும்) இதையும் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். எனெனில் முதலில் பக்தனாக இருந்தாய் வாழ்த்துக்கள் கிடைத்தது இரண்டாவது நிலையில் சிஷ்யனாகச் செல்கின்றாய் சிஷ்யன் தவறு செய்தால் சிகிச்சை (தண்டனை) உண்டு. இவை அனைத்தையும் மனதில் வைத்து நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள் எவ்விதம் உங்களால் செயல்பட முடியும் என்றெல்லாம் சிந்தித்துப் பின்பு குருநாதரை அணுகுங்கள் இல்லையென்றால் மிகவும் கடினம்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #42

23-1-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நாம் காணும் துக்கங்களுக்கு மூல காரணம் என்ன?

இந்தக் கேள்விக்கு ஒரே வரியில் எதிர்பார்ப்புகள் என்று பதில் கூறினோம். எவ்விதம் என்றால் எவ்விதமான ஆசைகள், பாசங்கள், விகாரங்கள் ஆகியவை மனதில் தோன்றினாலும் அதற்கு மூல காரணம் தேடிப் பார்த்தால் நமது எதிர்பார்ப்புகள் என்று உணரலாம். எதிர்பார்ப்பின்றி துக்கம் இல்லை. எதிர்பார்ப்பின்றி தோல்வி இல்லை. எதிர்பார்ப்பின்றி மோசம் போவதில்லை. எதிர்பார்ப்பின்றி தீயது எதுவும் நடைபெறுவதில்லை என்பதை எளிதாக உணர முடியும். நாம் உறுதியாக எதிர்பார்ப்பின்றி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்பார்ப்பின்றி என்ன வருகிறதோ என்ன நடக்கின்றதோ அனைத்தும் அவன் செயல் அவன் அருள் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அத்தகைய மனிதன் இறைவனின் திருவடிகளை எளிதாக அடைந்திட முடியும். இது பெரும் சாதனை அல்ல கடினமான சாதனை என்று கூறுகிறோம். எதிர்பார்ப்பின்றி வாழ்கின்றவன் எவன் என்று தேடினால் எளிதாகக் காண்பதில்லை. இத்தகைய மனிதர்கள் எதிர்பார்ப்புகள் வேண்டாம் என எண்ணிக் காடுகளிலும் குகைகளிலும் மறைந்து விடுகின்றனர். மக்கள் மத்தியில் வாழ்கின்றவனுக்கு எதிர்பார்ப்புகள் உறுதியாக இருக்கும். இதில் நல்ல எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு தீய எதிர்பார்ப்புகளை நீக்கி விட்டால் தெய்வ நிலை தெய்வ காட்சிகள் காணக்கூடும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #82

29-10-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

அனைத்தையும் இறைவன் திருவடியில் வைத்து சரணடைந்தால் எவ்வித அச்சமும் வேண்டாம் என்றும் தியானம் சிறப்பாக நிலைத்தால் கிரகங்களுக்கும் மேலான நிலைக்கும் செல்ல கிரகங்கள் நம்மை பாதிக்காது என்கின்ற அறிவுரையும் இங்கும் கூறுகின்றோம்

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #81

5-9-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

எமக்குள் இருக்கும் இறைவா என்று கூறுவது சிலருக்கு கடினமாக இருக்கின்றது. இவ்விதமிருக்க அவரவர் தம் செளகரியத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். உதாரணமாக பெயருக்கு முன்பு ஆத்மா என சேர்த்து அழைக்கலாம். இல்லையேல் இஷ்ட தெய்வத்தை உள்ளிருப்பது போல் பாவனை செய்தும் அத்தெய்வத்தின் பெயருக்கு முன்பு ஆத்மா என்று சேர்த்து அழைக்கலாம். இல்லையேல் எமக்குள் இருக்கும் என்று கூறி தெய்வத்தின் பெயரை சேர்த்திடலாம். இவ்விதம் குழப்பமற்ற நிலையில் அனைத்து கடினங்களும் நீங்கும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #80

12-7-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

அழிவற்ற பொருள் எது? பஞ்சபூதங்களுக்கு அழிவில்லையா?

முதலில் பஞ்சபூதங்களை எடுத்துக் கொள்வோம். பஞ்சபூதங்கள் அனைத்தும் உள்ளடங்கியிருக்கும் வரை அப்பொருள் நிலைக்கிறது. பஞ்சபூதங்கள் மனித உடலில் இருக்கும் வரை உயிர் இருக்கின்றது. இவ்வைந்தும் பிரிந்திட அங்கிருக்கும் பொருள் அழிகின்றது. இருப்பினும் பஞ்சபூதங்கள் ஒன்றை மற்றொன்று அழிக்கும் தன்மையும் கொண்டுள்ளது. குறிப்பாக நீர் அக்னியை அழிக்கின்றது. நீரை அக்னி வற்ற வைக்கின்றது. காற்றால் அக்னி பாதிக்கப்படுகின்றது. வளர்க்கப்படவும் செய்கின்றது. இவ்விதம் ஐந்தும் ஒன்றாக இருக்கும் போது நல் உயிராகவும் பிரிந்தவுடன் அழிவாகிறது. பஞ்சபூதங்கள் ஒன்றை ஒன்று அழிக்கும் தகுதி பெற்றுள்ளது. அழியாப்பொருள் எது என்றால் சந்தேகமின்றி பரம்பொருள் மட்டுமே. பரம்பொருளில் இருந்து எவ்விதம் உயிர்கள் பிரிந்து ஜீவாத்மாக்களாக இருக்கும் பொழுதும் எவ்வித குறையும் இல்லை மேலும் உயிர்கள் அதில் சேரும் பொழுதும் எவ்வதிகரிப்பும் இல்லை. விருப்பு வெருப்பற்ற பரம்பொருளுக்கு எக்காலத்திலும் அழிவில்லை என்பதால் சதாசிவத்தை பரம்பொருள் என்று அழைக்கின்றோம்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #79

15-6-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கர்மத்தின் விளைவுகள் அனைத்தும் என்றால் இறைவன் எதற்கு?

கர்மங்களை இறைவன் செய்வதில்லை. கர்மங்கள் செய்வது மானிடரே என்பதை முதலில் உணர வேண்டும். கர்மத்தின் விளைவுகள் அனுபவிப்பதும் மானிடரே. இவ்விதமிருக்க இறைவன் எதற்கு என்று கேட்டால் முதலில் மனிதன் செய்யும் கர்மவினைகளை மனிதன் சகிக்க வேண்டும். அதன் விளைவுகளையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்ற விதியும் உண்டு. இதற்கு இறைவன் எங்கு நுழைகின்றான் என்று கேட்டால் மனிதன் செய்த பாவங்களை அனுபவிக்கும் போதும் நல்வினைகளை அனுபவிக்கும் போது அனைத்தையும் தாங்கும் சக்தியை இறைவன் தருகின்றான் என்பதே இதற்கு விளக்கம் ஆகின்றது. இதற்காகவே இறைவனை வணங்குதல் வேண்டுமே ஒழிய என் கர்மத்தை ஏற்றுக்கொள் என்று கூறுவதும் மன்னிக்க வேண்டும் என்று கூறுவதும் மானிடர் தன்மையே. இதனை மாற்றி அமைத்தல் வேண்டும். இறைவனை இறைவனாகக் கண்டு இக்கர்மங்களை தீர்த்திட வாய்ப்பு அளித்ததற்கும் நாம் நன்றி கூறுதல் வேண்டும். பாவம் இறைவன் செய்வதில்லை மானிடரே செய்கின்றனர் என்பதை நல்நிலையில் உணர்ந்து செயல்பட்டால் அனைத்து வழிகளிலும் நலம் காண்பீர்கள். மனிதன் செய்யும் தவறுகளை இறைவன் சகித்தல் வேண்டும். செய்யும் பாவங்கள் இறைவன் சகித்தல் வேண்டும் என எண்ணுவது ஒரு நலம் தரும் விஷயமா என்று சிந்திக்க வேண்டும். இரண்டாவதாக நீங்கள் உங்கள் பாவங்களை சகித்தல் வேண்டும் என்றால் உடன் இருப்பவரும் சகித்தல் வேண்டும் என்று பொருள் ஆகின்றது. இதற்கு இறைவன் காரணமாகின்றானா? உமது செயல் உடன் இருப்பவர்களை பாதிக்கின்றதல்லவா பாதிக்கப்பட்டவர்கள் உங்களை சபிக்கும் போது அந்த பாவங்களையும் நீ எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையும் உண்டு. இதையும் தாங்கும் வழியையும் மேலும் சகிக்கும் தன்மையும் இறைவன் அளிக்கின்றான். தவறுகள் செய்கின்றோம் என உணரும் திறனும் அவ்விறைவனே அளிக்கின்றான். இதனை உணர்ந்து செயல் படுதல் வேண்டும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #78

18-5-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீகத்தின் அச்சாணியே சிரத்தை சிரத்தை சிரத்தை இதில் தவறுகள் செய்தால் சோம்பலின் விளைவாக தவறுகள் செய்தல் சரியல்ல. அவ்விதம் யாதேனும் ஓர் நிலை ஏற்ப்பட்டால் ஒதுங்கி விடுவதே மேல். யாமும் செய்கின்றோம் என செய்து தவறுகள் செய்தால் அது பெருங்குற்றமாக மாறக்கூடும். பல ஆண்டுகள் செய்த சில காரியங்கள் பாழாகி விட்டால் அதை சீர்திருத்த குறைந்த அளவில் ஓர் ஆண்டு ஆகும். இதனை மனதில் வைத்து செயல் படுவீர்களாக.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #77

21-4-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீகத்தில் விடுவது பெறுவது முக்கியமானது என கூறுவோறும் உண்டு அது எவ்விதம் விடுவது பெறுவது?

ஆன்மீகத்தில் விடுதல் என கூறினால் முதன்மையில் தீயவை யாவையும் விடுதல் வேண்டும் என்கின்ற சட்டம் உண்டு. இதில் எவ்வித விதிவிலக்கும் இல்லை. இரண்டாவதாக சர்வ ஆசைகளையும் விடுதல் வேண்டும். இதற்கு விதிவிலக்கு ஒன்று இறை நாட்டம். மூன்றாவது ஐம்புலன்களினால் நேரிடக்கூடிய கோபதாபங்கள் எண்ணங்கள் என்பதெல்லாம் விடுதல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. இதற்கு விதிவிலக்கு சிறு அளவு ஆகாரமும் நீரும் ஆகும். பெறுதல் என்பது என்ன என்பதில் எவ்வித குழப்பமும் இல்லை. முதன்மையில் அறிவு, அறிவை தொடர்வது ஞானம், ஞானத்தை தொடர்வது அருள், அருளை தொடர்வது முக்தி என்கின்ற வரிசையில் செல்லும் மனதில் முன்கூறிய விடுதல்கள் எற்பட அந்த உடலில் இடம் வெறுமையாக இருக்க அந்த வெறுமையான இடத்தில் பெறுதலுக்கூறிய நற்குணங்கள் சென்று நிரம்பிட உடலில் ஓர் விசேஷ ஆனந்தம் காணக்கூடும். இப்பேரானந்தம் அடைந்திட பொலிவு என்கின்ற அத்தேஜசை அடையலாம். மனம் ஓர் நிலைப்பட்டு என்றும் ஆனந்த நிலையில் இருக்கும் இது தான் விடுதல் பெறுதல்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #76

25-3-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பல மகான்களின் அருள் கிடைத்தும் ஏன் கடினங்கள் பல வருகின்றன?

துக்கங்கள் துயரங்கள் என தனியாக எடுத்துக் கொண்டால் கொண்டால் இது கர்ம விதிகளாகும் இதனை தீர்த்தல் வேண்டும். மகான் என்கின்ற போதிலும் அவரின் கர்மங்களை அவர் தீர்த்தாக வேண்டும் என்பது விதி. இது மட்டுமல்லாமல் நாட்டின் கர்மங்கள் என்று ஒன்றும் உண்டு இதன் விளைவாக நாட்டில் சேதங்கள், துக்கங்கள், துயரங்கள், இயற்கையின் சீற்றங்கள், மனிதர்களின் கொடுமைகள் என்பதெல்லாம் காணக்கூடும். இதுவே இக்காலத்தில் நடைபெறுகின்றது. இந்நாட்டின் குறிப்பினை கண்டு கொண்டால் இந்நாடு தன் கர்மநிலைகளை தீர்த்துக் கொள்கின்றது. இத்தகைய நிலையில் அங்காங்கு வருங்காலங்களில் நாடுகள் சீர்கெட்டு மறைந்து விடும் என்கின்ற நிலைகளும் உண்டு. இவை அனைத்தும் கர்ம நிலைகளே. இதற்கும் மேலாக யுகத்தின் கர்மம் என்று ஓன்றும் உண்டு. இதுவும் சீராக மீண்டும் சத்திய யுகத்திற்கும் செல்லக்கூடும். இத்தகைய நலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் இயன்றளவு நல்லதே செய்தல் வேண்டும். இயன்றளவு கெடுதல் செய்யாது இருத்தல் வேண்டும். இதுவே நாம் கடைபிடிக்க வேண்டியது.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #75

27-2-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

தெய்வங்களை பெருமளவில் நம்பிட காரியங்கள் தடையாகி வீணாக சங்கடம் தருவதேன்?

தெய்வத்தின் கருணை பெரியதாம். சமயங்களில் நாம் ஏற்படுத்திக்கொண்ட ஏற்பாடுகள் நமக்கு தகாததாகவும் சங்கடப் படுத்துவதாகவும் பிற்காலத்தில் துன்பத்தை விளைவிக்க கூடியதாகவும் இருக்க இதனை தவிர்த்தடவே இறைவன் கருணையால் தற்காலிக வருத்தம் தந்தும் பிற்காலம் சிறப்பாக அமைக்கவும் வழி வகுக்கின்றான். மாறாக சிலருக்கு பல வகையில் வாய்ப்புகள் அளித்த போதிலும் அதனை சீராக உபயோகிக்காமல் தாம் நினைப்பதே நடத்தல் வேண்டும் என்கின்ற மனப்பான்மை நிலைத்திட பெரும் வருத்தத்திற்கு ஆளாகின்றனர். இத்தகைய நிலையில் எது நடந்த போதிலும் அது இறையருள் என்று எடுத்துக் கொண்டால் சிறப்பாகவே அனைத்தும் நடைபெறும்.