பாடல் #1642

பாடல் #1642: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

ஆற்றிற் கிடந்த முதலைகண் டஞ்சிப்போ
யீற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தனொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆறறிற கிடநத முதலைகண டஞசிபபொ
யீறறுக கரடிக கெதிரபபடட தனொககும
நொறறுத தவஞசெயயார நூலறி யாதவர
சொறறுககு நினறு சுழலகினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆற்றில் கிடந்த முதலை கண்டு அஞ்சி போய்
ஈற்று கரடிக்கு எதிர் பட்ட தன் ஒக்கும்
நோற்று தவம் செய்யார் நூல் அறியாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற ஆறே.

பதப்பொருள்:

ஆற்றில் (ஆற்றில் / ஆறு போன்ற வாழ்க்கையில்) கிடந்த (அசையாமல் கிடக்கும் / ஒன்றும் இல்லாததாகிய) முதலை (முதலையை / துன்பங்களை) கண்டு (கண்டு / எதிர்காலத்தை நினைத்து கற்பனை செய்து) அஞ்சி (பயந்து) போய் (போய்)
ஈற்று (குட்டிகளை ஈன்ற / உலகப் பற்றுக்கள்) கரடிக்கு (கரடியின் / எனும் பெரிய மாயையில்) எதிர் (எதிரில் சென்று) பட்ட (அகப்பட்டுக் / மாட்டிக்) தன் (கொண்டதை) ஒக்கும் (ஒத்து இருக்கின்றது)
நோற்று (இறைவனை அடைய வேண்டும் என்று முறைப் படி) தவம் (தவம்) செய்யார் (செய்யாமல் இருக்கின்றார்கள்) நூல் (ஏனெனில் அதற்கு என்று அருளப்பட்டிருக்கும் ஆகமங்களை) அறியாதவர் (படித்து அறியாதவர்களாக இருக்கின்றார்கள்)
சோற்றுக்கு (இவர்கள் காட்டிற்கு சென்று தவம் செய்கின்றேன் என்று தினம் தோறும் பசிக்கு உணவு) நின்று (வேண்டி நின்று) சுழல்கின்ற (காட்டை சுற்றி வருவது) ஆறே (இருக்கின்றது).

விளக்கம்:

இறைவனை அடைய வேண்டும் என்று முறைப் படி தவம் செய்யாமல் இருக்கின்றார்கள் ஏனெனில் அதற்கு என்று அருளப்பட்டிருக்கும் ஆகமங்களை படித்து அறியாதவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் காட்டிற்கு சென்று தவம் செய்கின்றேன் என்று தினம் தோறும் பசிக்கு உணவு வேண்டி நின்று காட்டை சுற்றி வருவது எப்படி இருக்கின்றது என்றால் ஆற்றில் அசையாமல் கிடக்கும் முதலையை கண்டு பயந்து போய் குட்டிகளை ஈன்ற கரடியின் எதிரில் சென்று அகப்பட்டுக் கொண்டதை ஒத்து இருக்கின்றது.

தத்துவ விளக்கம்:

ஆறு என்கின்ற வாழ்க்கையில் நடப்பவற்றை மிகப் பெரிய துன்பம் என்று நினைத்தும் வரப்போகின்ற எதிர்காலத்தை நினைத்து பயந்தும் குடும்பத்தை விட்டு காட்டிற்கு சென்று தவம் செய்கின்றேன் என்று காட்டிற்கு சென்றாலும் வீட்டில் விட்டு வந்த உற்றார் உறவினர்களையும் சொத்துக்களையும் நினைத்துக் கொண்டே பசிக்கு உணவு தேடி அலைவது சிறிய துன்பத்திற்கு பயந்து மிகப் பெரிய துன்பத்தில் சிக்கிக் கொண்டது போல் ஆகும்.

One thought on “பாடல் #1642

Leave a Reply to ஆனந்தவேல்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.