பாடல் #525: இரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம்
அதோமுக மாமல ராயது கேளும்
அதோமுகத் தாலொரு நூறாய் விரிந்து
அதோமுக மாகிய அந்தமில் சத்தி
அதோமுக மாகி அமர்ந்திருந் தானே.
விளக்கம்:
அதோமுகம் பெரிய தாமரை மலராக மாறிய அதிசயத்தைக் கேளுங்கள். பாடல் 523 ல் உள்ளபடி குண்டலினி சக்தி உயிர்களின் தலையின் உச்சியிலுள்ள சகஸ்ரர தளத்தை அடைந்து நூற்றுக்கணக்கான இதழ்களைக் கொண்ட தாமரை மலராக விரிந்தவுடன் அழிவில்லாத சக்தியாகி அந்த சிவபெருமானே அதோமுகமாகி அமர்ந்திருக்கின்றார்.
