பாடல் #309: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)
வைத்துஉணர்ந் தான்மனத் தோடும் வாய்பேசி
ஒத்துஉணர்ந் தானுரு ஒன்றொடொன் றொவ்வா
தச்சுழன் றாணி கலங்கினும் ஆதியை
நச்சுஉணர்ந் தார்க்கே நணுகலு மாமே.
விளக்கம் :
இறைவனை உள்ளத்தில் வைத்து மனதோடு ஒன்றி தான் வேறு இல்லை இறைவன் வேறு இல்லை என்று உணர்ந்தவர்களும் தன் வாயிலிருந்து பேசும் வார்த்தைகள் அனைத்தும் இறைவனின் வார்த்தையாக உணர்ந்தவர்களுக்கும் அசையும் பொருள் அசையாபொருள் என உருவங்கள் பலவாக இருந்தாலும் அனைத்து உருவங்களிலும் இருப்பவன் இறைவன் ஒருவனே என்று உணர்ந்தவர்களும் உடம்பு என்னும் அச்சிலிருந்து உயிர் என்னும் ஆணி கழன்று விழும் போது ஆதியான சிவபெருமானை விரும்பி உணர்ந்தவர்களுக்கே அவனை அணுகி அடைய முடியும்.
