பாடல் #1818

பாடல் #1818: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

விளக்கினை யேற்றி வெளியை மறிமின்
விளக்கினின் முன்னே வேதினை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவ தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விளககினை யெறறி வெளியை மறிமின
விளககினின முனனெ வெதினை மாறும
விளககை விளககும விளககுடை யாரகள
விளககில விளஙகும விளககாவ தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விளக்கினை ஏற்றி வெளியை மறிமின்
விளக்கினின் முன்னே வேதினை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு ஆவது ஆமே.

பதப்பொருள்:

விளக்கினை (தமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியின் விளக்கை) ஏற்றி (சுழுமுனை நாடி வழியே மேலேற்றி எடுத்துச் சென்று சகஸ்ரதளத்தில் ஜோதியாக எரியச் செய்து) வெளியை (தமக்கு வெளியில் இருக்கின்ற புற உலகின் மேல் செல்லுகின்ற புலன்களை) மறிமின் (தடுத்து நிறுத்தினால்)
விளக்கினின் (மாபெரும் ஜோதியாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தின்) முன்னே (முன்பே) வேதினை (உலக அறிவு எல்லாம் உண்மை அறிவாக) மாறும் (மாறும்)
விளக்கை (அப்படிப்பட்ட பேரறிவாகிய இறைவனின் ஜோதியை) விளக்கும் (உண்மையாக உணர்ந்து கொள்ளும் படி விளங்க வைக்கும்) விளக்கு (தெளிவு) உடையார்கள் (உடைய ஞானிகள்)
விளக்கில் (எடுத்துரைத்து விளக்கினால்) விளங்கும் (முழுவதும் புரிந்து கொள்ளக் கூடிய) விளக்கு (மாபெரும் ஜோதி) ஆவது (ஆக இருப்பது) ஆமே (பரம்பொருளாகிய இறைவனே ஆகும்).

விளக்கம்:

தமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியின் விளக்கை சாதகத்தின் மூலம் சுழுமுனை நாடி வழியே மேலேற்றி எடுத்துச் சென்று சகஸ்ரதளத்தில் ஜோதியாக எரியச் செய்து தமக்கு வெளியில் இருக்கின்ற புற உலகின் மேல் செல்லுகின்ற புலன்களை தடுத்து நிறுத்தினால் மாபெரும் ஜோதியாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தின் முன்பே உலக அறிவு எல்லாம் உண்மை அறிவாக மாறும். அப்படிப்பட்ட பேரறிவாகிய இறைவனின் ஜோதியை உண்மையாக உணர்ந்து கொள்ளும் படி விளங்க வைக்கும் தெளிவு உடைய ஞானிகள் எடுத்துரைத்து விளக்கினால் முழுவதும் புரிந்து கொள்ளக் கூடிய மாபெரும் ஜோதியாக இருப்பது பரம்பொருளாகிய இறைவனே ஆகும்.

கருத்து:

நமக்குள் இருக்கும் ஜோதியாகிய விளக்கை ஏற்றி மாயையாகிய இருளை அகற்றினால் இறைவனை அறியக் கூடிய தகுதி பெற்றவர்களாக மாறுவோம். அப்போது இறைவனை உணர்ந்த ஞானி நமக்கு வழிகாட்டி இறைவனை பரிபூரணமாக உணர வைப்பார்.

One thought on “பாடல் #1818

Leave a Reply to BalachandranCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.