பாடல் #1724

பாடல் #1724: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

போது புனைகழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியு ளீசனுடல் விசும்பாய் நிற்கு
மாதியுற நின்றது அப்பரி சாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொது புனைகழல பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியு ளீசனுடல விசுமபாய நிறகு
மாதியுற நினறது அபபரி சாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

போது புனை கழல் பூமி அது ஆவது
மாது புனை முடி வானகம் ஆவது
நீதி உள் ஈசன் உடல் விசும்பு ஆய் நிற்கும்
ஆதி உற நின்றது அப் பரிசு ஆமே.

பதப்பொருள்:

போது (மலர்கள்) புனை (சூடிய) கழல் (இறைவனின் திருவடிகள்) பூமி (உலகம்) அது (அது) ஆவது (ஆக இருக்கின்றது)
மாது (இறைவனின் சரிபாதியாக இருக்கின்ற இறைவியானவள்) புனை (கங்கை நீராக அமர்ந்து இருக்கின்ற) முடி (இறைவனின் திருமுடி) வானகம் (ஆகாயம்) ஆவது (ஆக இருக்கின்றது)
நீதி (தர்மத்தின்) உள் (வடிவமாக உள்ள) ஈசன் (இறைவனின்) உடல் (திருமேனியானது) விசும்பு (அண்ட சராசரங்கள்) ஆய் (ஆக) நிற்கும் (நிற்கின்றது)
ஆதி (ஆதி மூலமாகிய இறைவனுக்கு) உற (ஏற்ற வகையில்) நின்றது (நின்றது) அப் (அவன் அருளிய) பரிசு (பரிசாகிய) ஆமே (இலிங்கமே ஆகும்).

விளக்கம்:

மலர்கள் சூடிய இறைவனின் திருவடிகள் உலகமாக இருக்கின்றது. இறைவனின் சரிபாதியாக இருக்கின்ற இறைவியானவள் கங்கை நீராக அமர்ந்து இருக்கின்ற இறைவனின் திருமுடி ஆகாயமாக இருக்கின்றது. தர்மத்தின் வடிவமாக உள்ள இறைவனின் திருமேனியானது அண்ட சராசரங்களாக நிற்கின்றது. ஆதி மூலமாகிய இறைவனுக்கு ஏற்ற வகையில் நின்றது அவன் அருளிய பரிசாகிய இலிங்கமே ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.