பாடல் #1722

பாடல் #1722: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

அதுவுணர்ந் தேனொரு தன்மையை நாடி
யெதுவுணரா வகை நின்றன னீசன்
புதுவுணர் வான புவனங்க ளெட்டு
மிதுவுணர்ந் தென்னுடல் கோயில் கொண்டானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அதுவுணரந தெனொரு தனமையை நாடி
யெதுவுணரா வகை நினறன னீசன
புதுவுணர வான புவனஙக ளெடடு
மிதுவுணரந தெனனுடல கொயில கொணடானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அது உணர்ந்தேன் ஒரு தன்மையை நாடி
எது உணரா வகை நின்றனன் ஈசன்
புது உணர்வு ஆன புவனங்கள் எட்டும்
இது உணர்ந்த என் உடல் கோயில் கொண்டானே.

பதப்பொருள்:

அது (அனைத்திலும் இருக்கின்ற பரம்பொருளை) உணர்ந்தேன் (உணர்ந்து கொண்டேன்) ஒரு (ஒரு) தன்மையை (ஜோதியின் தன்மையில் உள்ள இலிங்க வடிவத்தில்) நாடி (தேடுவதன் மூலம்)
எது (எந்த முறையினாலும்) உணரா (உணர்ந்து கொள்ள முடியாத) வகை (வகையில்) நின்றனன் (நிற்கின்ற) ஈசன் (இறைவனை)
புது (ஒளி பொருந்திய இலிங்கத்தின் மூலம் உணரும் போது இது வரை யாம் உணராத ஒரு புதுவிதமான) உணர்வு (உணர்வு) ஆன (ஆக) புவனங்கள் (அனைத்து உலகங்களையும் சென்று) எட்டும் (அடைகின்ற தன்மையை)
இது (எமக்குள்) உணர்ந்த (உணர்ந்த போது) என் (அவன் எமது) உடல் (உடலையே) கோயில் (தமக்கு விருப்பமான கோயிலாக) கொண்டானே (ஆட்கொண்டு வீற்றிருந்தான்).

விளக்கம்:

அனைத்திலும் இருக்கின்ற பரம்பொருளை ஒரு ஜோதியின் தன்மையில் உள்ள இலிங்க வடிவத்தில் தேடுவதன் மூலம் உணர்ந்து கொண்டேன். எந்த முறையினாலும் உணர்ந்து கொள்ள முடியாத வகையில் நிற்கின்ற இறைவனை ஒளி பொருந்திய இலிங்கத்தின் மூலம் உணரும் போது, இது வரை யாம் உணராத ஒரு புதுவிதமான உணர்வாக அனைத்து உலகங்களையும் சென்று அடைகின்ற தன்மையை எமக்குள் உணர்ந்த போது, அவன் எமது உடலையே தமக்கு விருப்பமான கோயிலாக ஆட்கொண்டு வீற்றிருந்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.