பாடல் #1719

பாடல் #1719: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

முத்துடன் மாணிக்க மொய்த்த பவளமுங்
கொத்து மக்கொம்பு சிலைநீறு கோமள
மத்தன்றன் னாகம மன்ன மரிசியா
முத்தத்தின் சாதனம் பூமண லிங்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

முததுடன மாணிகக மொயதத பவளமுங
கொதது மககொமபு சிலைநீறு கொமள
மததனறன னாகம மனன மரிசியா
முததததின சாதனம பூமண லிஙகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

முத்துடன் மாணிக்கம் ஒய்த்த பவளமும்
கொத்தும் அக் கொம்பு சிலை நீறு கோமளம்
அத்தன் தன் ஆகமம் அன்னம் அரிசி ஆம்
உத்தத்தின் சாதனம் பூ மண இலிங்கமே.

பதப்பொருள்:

முத்துடன் (முத்துக் கல்லும்) மாணிக்கம் (மாணிக்கம் கல்லும்) ஒய்த்த (அவற்றுக்கு ஈடான) பவளமும் (பவளக் கல்லும்)
கொத்தும் (கொத்துகின்ற உளியும்) அக் (அதை தட்ட உதவுகின்ற) கொம்பு (சுத்தியும் போன்ற ஆயுதங்களால் செதுக்கப் பட்ட) சிலை (சிலையில்) நீறு (திரு நீறும்) கோமளம் (கோமேதகக் கல்லும் அணிவித்து)
அத்தன் (அனைத்திற்கும் தந்தையான இறைவன்) தன் (தனது உயிர்களுக்கு அருளிய) ஆகமம் (சிவ ஆகமத்தில் உள்ளபடி) அன்னம் (சமைக்கப் பட்ட உணவும்) அரிசி (சமைக்கப் படாத அரிசியும்) ஆம் (படையலாக வைத்து)
உத்தத்தின் (மனதை ஒருமுகப் படுத்துகின்ற) சாதனம் (கருவியாக) பூ (அணிவித்த பூமாலையில் இருந்து வருகின்ற) மண (நறுமணமும் சேர்ந்து அமைக்கப் பட்டதே) இலிங்கமே (பரிபூரணமான சிவ இலிங்கம் ஆகும்).

விளக்கம்:

முத்துக் கல்லும், மாணிக்கம் கல்லும், அவற்றுக்கு ஈடான பவளக் கல்லும், கொத்துகின்ற உளியும் அதை தட்ட உதவுகின்ற சுத்தியும் போன்ற ஆயுதங்களால் செதுக்கப் பட்ட சிலையில், திரு நீறும், கோமேதகக் கல்லும் அணிவித்து, அனைத்திற்கும் தந்தையான இறைவன் தனது உயிர்களுக்கு அருளிய சிவ ஆகமத்தில் உள்ளபடி சமைக்கப் பட்ட உணவும், சமைக்கப் படாத அரிசியும் படையலாக வைத்து, மனதை ஒருமுகப் படுத்துகின்ற கருவியாக அணிவித்த பூமாலையில் இருந்து வருகின்ற நறுமணமும் சேர்ந்து அமைக்கப் பட்டதே பரிபூரணமான சிவ இலிங்கம் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.