பாடல் #1717

பாடல் #1717: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

தாபரத் துள்நின் றருளவல் லான்சிவன்
மாபரத் துண்மை வழிபடு வாரில்லை
மாபரத் துண்மை வழிபடு வாளர்க்குப்
பூவகத் துண்ணின்ற பொற்கொடி யாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தாபரத துளநின றருளவல லானசிவன
மாபரத துணமை வழிபடு வாரிலலை
மாபரத துணமை வழிபடு வாளரககுப
பூவகத துணணினற பொறகொடி யாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தாபரத்து உள் நின்று அருள வல்லான் சிவன்
மா பரத்து உண்மை வழி படு ஆர் இல்லை
மா பரத்து உண்மை வழி படு ஆளர்க்கும்
பூ அகத்து உள் நின்ற பொன் கொடி ஆகுமே.

பதப்பொருள்:

தாபரத்து (பரம்பொருளாகிய இலிங்க வடிவத்திற்கு) உள் (உள்ளே) நின்று (நின்றும்) அருள (உயிர்களுக்கு அருளும்) வல்லான் (வல்லமை பெற்றவன்) சிவன் (அருள் வடிவான இறைவன்)
மா (அனைத்திற்கும் மேலான) பரத்து (பரம்பொருளாகிய இறைவனின்) உண்மை (உண்மையான தன்மையை உணர்ந்து) வழி (அவனை அடைவதற்கான வழியில்) படு (செல்லுகின்ற) ஆர் (உயிர்கள்) இல்லை (இல்லை)
மா (அனைத்திற்கும் மேலான) பரத்து (பரம்பொருளாகிய இறைவனின்) உண்மை (உண்மையான தன்மையை உணர்ந்து) வழி (அவனை அடைவதற்கான வழியில்) படு (செல்லுகின்ற) ஆளர்க்கும் (உயிர்களுக்கு)
பூ (அவர்களின் தலை உச்சியில் இருக்கின்ற சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரின்) அகத்து (நடுவுக்கு) உள் (உள்ளே) நின்ற (நிற்கின்ற) பொன் (பொன்னாலான) கொடி (கொடி போன்ற சுழுமுனை நாடியின் மூலம் தன்னை அடைவதற்கான வழியில் அவர்களை கொண்டு செல்லுகின்ற சக்தியாக) ஆகுமே (இறைவன் இருப்பான்).

விளக்கம்:

பரம்பொருளாகிய இலிங்க வடிவத்திற்கு உள்ளே நின்றும் உயிர்களுக்கு அருளும் வல்லமை பெற்றவன் அருள் வடிவான இறைவன். அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகிய இறைவனின் உண்மையான தன்மையை உணர்ந்து அவனை அடைவதற்கான வழியில் செல்லுவதற்கு பெரும்பாலான உயிர்கள் முயற்சி செய்வது இல்லை. அவ்வாறு முயற்சி செய்கின்ற உயிர்களுக்கு அவர்களின் தலை உச்சியில் இருக்கின்ற சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரின் நடுவுக்கு உள்ளே நிற்கின்ற பொன்னாலான கொடி போன்ற சுழுமுனை நாடியின் மூலம் தன்னை அடைவதற்கான வழியில் அவர்களை கொண்டு செல்லுகின்ற சக்தியாக இறைவன் இருப்பான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.