பாடல் #1716

பாடல் #1716: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

ஒண்சுட ரோனயன் மால்பிர சாபதி
யொண்சுட ரானவிர வியோ டிந்திரன்
கண்சுட ராகிக் கலந்தெங்குந் தேவர்கள்
தண்சுட ராயெங்குந் தாபர மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒணசுட ரொனயன மாலபிர சாபதி
யொணசுட ரானவிர வியொ டிநதிரன
கணசுட ராகிக கலநதெஙகுந தெவரகள
தணசுட ராயெஙகுந தாபர மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒண் சுடரோன் அயன் மால் பிரசாபதி
ஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன்
கண் சுடர் ஆகி கலந்து எங்கும் தேவர்கள்
தண் சுடர் ஆய் எங்கும் தாபரம் ஆமே.

பதப்பொருள்:

ஒண் (அனைத்திலும் பொருந்தி ஒன்றாகவே இருக்கின்ற) சுடரோன் (ஜோதியான இறைவனே) அயன் (பிரம்மனாகவும்) மால் (திருமாலாகவும்) பிரசா (உயிர்களின்) பதி (தலைவனாகிய உருத்திரனாகவும்)
ஒண் (ஒன்று பட்டு இருக்கின்ற) சுடர் (ஒளி) ஆன (ஆகிய) இரவியோடு (சூரியனாகவும்) இந்திரன் (தேவர்களின் தலைவனாகிய இந்திரனாகவும்)
கண் (அனைத்து உயிர்களின் கண்களில் இருந்து) சுடர் (காண்கின்ற ஒளி) ஆகி (ஆகவே) கலந்து (கலந்து நிற்கின்றவனாகவும்) எங்கும் (அனைத்திலும் இருக்கின்ற) தேவர்கள் (தேவர்களாகவும்)
தண் (குளிர்ந்த) சுடர் (ஒளியைத் தருகின்ற சந்திரன்) ஆய் (ஆகவும்) எங்கும் (எங்கும் பரந்து இருக்கின்றான்) தாபரம் (அவனே இலிங்க வடிவம்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

அனைத்திலும் பொருந்தி ஒன்றாகவே இருக்கின்ற ஜோதியான இறைவனே பிரம்மனாகவும், திருமாலாகவும், உயிர்களின் தலைவனாகிய உருத்திரனாகவும், ஒன்று பட்டு இருக்கின்ற ஒளியாகிய சூரியனாகவும், தேவர்களின் தலைவனாகிய இந்திரனாகவும், அனைத்து உயிர்களின் கண்களில் இருந்து காண்கின்ற ஒளியாகவே கலந்து நிற்கின்றவனாகவும், அனைத்திலும் இருக்கின்ற தேவர்களாகவும், குளிர்ந்த ஒளியைத் தருகின்ற சந்திரனாகவும், எங்கும் பரந்து இருக்கின்றான். அவனே இலிங்க வடிவம் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.