பாடல் #1715

பாடல் #1715: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

ஏத்தின ரெண்ணிலி தேவரெம் மீசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தெண்ணல் வள்ளலென்
றார்த்தன ரண்டங் கடந்தப்புற நின்று
காத்தன னவனின் கருத்தறி யாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எததின ரெணணிலி தெவரெம மீசனை
வாழததினர வாசப பசுநதெணணல வளளலென
றாரததன ரணடங கடநதபபுற நினறு
காததன னவனின கருததறி யாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏத்தினர் எண் இலி தேவர் எம் ஈசனை
வாழ்த்தினர் வாச பசும் தெண்ணல் வள்ளல் என்று
ஆர்த்தனர் அண்டம் கடந்து அப்புறம் நின்று
காத்தனன் அவனின் கருத்து அறியாரே.

பதப்பொருள்:

ஏத்தினர் (போற்றி வணங்குகின்றார்கள்) எண் (எண்ணிக்கை) இலி (இல்லாத) தேவர் (தேவர்கள்) எம் (எம்பெருமானாகிய) ஈசனை (இறைவனை)
வாழ்த்தினர் (வாழ்த்துகின்றார்கள்) வாச (நறுமணமாக இருப்பவன் என்றும்) பசும் (பசுமையாக இருப்பவன் என்றும்) தெண்ணல் (மாசு மருவில்லாத பேரழகோடு இருப்பவன் என்றும்) வள்ளல் (பெருங் கருணை கொண்ட வள்ளல்) என்று (என்றும்)
ஆர்த்தனர் (கூவி அழைத்து வழிபடுகின்றார்கள்) அண்டம் (ஆயினும் அண்ட சராசரங்களாகவும் அவற்றை எல்லாம்) கடந்து (கடந்து) அப்புறம் (அதற்கு அப்பாலும்) நின்று (நின்று)
காத்தனன் (அனைத்தையும் காத்து அருளுகின்றவனாகிய) அவனின் (அந்த இறைவனின்) கருத்து (உண்மையான தன்மையை) அறியாரே (அவர்கள் அறிவது இல்லை).

விளக்கம்:

எண்ணிக்கை இல்லாத தேவர்கள் எம்பெருமானாகிய இறைவனை நறுமணமாக இருப்பவன் என்றும், பசுமையாக இருப்பவன் என்றும், மாசு மருவில்லாத பேரழகோடு இருப்பவன் என்றும், பெருங் கருணை கொண்ட வள்ளல் என்றும் போற்றி வணங்கி வாழ்த்தி கூவி அழைத்து வழிபடுகின்றார்கள். ஆயினும் அண்ட சராசரங்களாகவும் அவற்றை எல்லாம் கடந்து அதற்கு அப்பாலும் நின்று அனைத்தையும் காத்து அருளுகின்றவனாகிய அந்த இறைவனின் உண்மையான தன்மையை அவர்கள் அறிவது இல்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.