பாடல் #1714

பாடல் #1714: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

போகமு முத்தியும் புத்தியுஞ் சித்தியு
மாகமு மாறாறு தத்துவத் தப்பாலா
மேகமு நல்கி யிருக்குஞ் சதாசிவ
மாகம தத்துவா வாற்சிவ மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொகமு முததியும புததியுஞ சிததியு
மாகமு மாறாறு தததுவத தபபாலா
மெகமு நலகி யிருககுஞ சதாசிவ
மாகம தததுவா வாறசிவ மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறு ஆறு தத்துவத்து அப்பால் ஆம்
ஏகமும் நல்கி இருக்கும் சதா சிவம்
ஆகம தத்துவா ஆல் சிவம் ஆமே.

பதப்பொருள்:

போகமும் (வினைகளை அனுபவிப்பதற்கான சூழலையும்) முத்தியும் (அந்த வினைகளை அனுபவித்து முடித்த பிறகு முக்தியையும்) புத்தியும் (இறைவனை அறிவதற்கான ஞானத்தையும்) சித்தியும் (அந்த ஞானத்தினால் கிடைக்கின்ற சித்திகளையும்)
ஆகமும் (உடலையும் மனதையும் இயக்குகின்ற) ஆறு (ஆறும்) ஆறு (ஆறும் பெருக்கி வரும் மொத்தம் முப்பத்தாறு) தத்துவத்து (தத்துவங்களையும்) அப்பால் (கடந்து) ஆம் (இருக்கின்ற)
ஏகமும் (அனைத்தும் தாம் ஒன்றே என்கின்ற நிலையையும்) நல்கி (உயிர்களுக்கு கொடுத்து அருளி) இருக்கும் (இருக்கின்ற பரம் பொருளே) சதா (சதா) சிவம் (சிவமாகும்)
ஆகம (அந்த பரம் பொருளை உணர்ந்து கொள்வதற்கு வழியாக ஆகமங்கள்) தத்துவா (அருளுகின்ற தத்துவங்களாக) ஆல் (இருக்கின்ற இலிங்கமே) சிவம் (சிவம்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

வினைகளை அனுபவிப்பதற்கான சூழலையும், அந்த வினைகளை அனுபவித்து முடித்த பிறகு முக்தியையும், இறைவனை அறிவதற்கான ஞானத்தையும், அந்த ஞானத்தினால் கிடைக்கின்ற சித்திகளையும், உடலையும் மனதையும் இயக்குகின்ற முப்பத்தாறு தத்துவங்களையும் (பாடல் #467 இல் உள்ளபடி) கடந்து இருக்கின்ற அனைத்தும் தாம் ஒன்றே என்கின்ற நிலையையும், உயிர்களுக்கு கொடுத்து அருளுகின்ற பரம் பொருளே சதா சிவமாகும். அந்த பரம் பொருளை உணர்ந்து கொள்வதற்கு வழியாக ஆகமங்கள் அருளுகின்ற தத்துவங்களாக இருக்கின்ற இலிங்கமே சிவம் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.