பாடல் #1713

பாடல் #1713: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

உலகி லெடுத்தது சத்தி முதலா
யுலகி லெடுத்தது சத்தி வடிவா
யுலகி லெடுத்தது சத்தி குணமா
யுலகி லெடுத்த சதாசிவன் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உலகி லெடுததது சததி முதலா
யுலகி லெடுததது சததி வடிவா
யுலகி லெடுததது சததி குணமா
யுலகி லெடுதத சதாசிவன றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உலகில் எடுத்தது சத்தி முதல் ஆய்
உலகில் எடுத்தது சத்தி வடிவு ஆய்
உலகில் எடுத்தது சத்தி குணம் ஆய்
உலகில் எடுத்த சதா சிவன் தானே.

பதப்பொருள்:

உலகில் (உலகத்தில்) எடுத்தது (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின்) சத்தி (செயலுக்கும்) முதல் (மூல காரணம்) ஆய் (ஆக இருப்பது இலிங்கமாகும்)
உலகில் (உலகத்தில்) எடுத்தது (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின்) சத்தி (செயலுக்கும்) வடிவு (வடிவம்) ஆய் (ஆக இருப்பது இலிங்கமாகும்)
உலகில் (உலகத்தில்) எடுத்தது (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின்) சத்தி (செயலுக்கும்) குணம் (தன்மை) ஆய் (ஆக இருப்பது இலிங்கமாகும்)
உலகில் (உலகத்தில்) எடுத்த (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்துமே) சதா (அசையா சக்தியாகிய) சிவன் (சிவப் பரம்பொருளின்) தானே (அடையாளமாகிய இலிங்கமே ஆகும்).

விளக்கம்:

உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின் செயலுக்கும் மூல காரணமாக இருப்பது இலிங்கமாகும். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின் செயலுக்கும் வடிவமாக இருப்பது இலிங்கமாகும். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின் செயலுக்கும் தன்மையாக இருப்பது இலிங்கமாகும். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்துமே அசையா சக்தியாகிய சிவப் பரம்பொருளின் அடையாளமாகிய இலிங்கமே ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.