பாடல் #1693

பாடல் #1693: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

கொள்ளினு நல்ல குருவினைக் கொள்ளுக
வுள்ள பொருளுட லாவி யுடனீய்க
எள்ளத் தனையு மிடைவிடா தேநின்று
தெள்ளி யறியச் சிவபதந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொளளினு நலல குருவினைக கொளளுக
வுளள பொருளுட லாவி யுடனீயக
எளளத தனையு மிடைவிடா தெநினறு
தெளளி யறிய சிவபதந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கொள்ளினும் நல்ல குருவினை கொள்ளுக
உள்ளம் பொருள் உடல் ஆவி உடன் ஈய்க
எள் அத் தனையும் இடை விடாதே நின்று
தெள்ளி அறிய சிவ பதம் தானே.

பதப்பொருள்:

கொள்ளினும் (ஏற்றுக் கொண்டாலும்) நல்ல (ஒரு நல்ல) குருவினை (குருவை) கொள்ளுக (தேடி ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்)
உள்ளம் (உங்களுடைய உள்ளம்) பொருள் (பொருளாகிய ஆன்மா) உடல் (உடல்) ஆவி (ஆவியாகிய உயிர்) உடன் (ஆகிய நான்கும் சேர்ந்து) ஈய்க (குருவிற்கே உடமையாக கொடுத்து சரணாகதியாகி விடுங்கள்)
எள் (எள்) அத் (அதனுடைய சிறிய) தனையும் (அளவிற்கு கூட) இடை (சிறிதளவும் மனம் தவற) விடாதே (விடாமல்) நின்று (குருவிடமே சரணாகதியாக நின்று)
தெள்ளி (குருவின் அருளால் உண்மை ஞானத்தை தெளிவாக) அறிய (அறிந்து கொண்டால்) சிவ (இறைவனின்) பதம் (திருவடியை) தானே (நீங்கள் அடையலாம்).

விளக்கம்:

ஏற்றுக் கொண்டாலும் ஒரு நல்ல குருவை தேடி ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய உள்ளம் பொருளாகிய ஆன்மா உடல் ஆவியாகிய உயிர் ஆகிய நான்கும் சேர்ந்து குருவிற்கே உடமையாக கொடுத்து சரணாகதியாகி விடுங்கள். எள்ளின் அளவிற்கு கூட சிறிதளவும் மனம் தவற விடாமல் குருவிடமே சரணாகதியாக நின்று குருவின் அருளால் உண்மை ஞானத்தை தெளிவாக அறிந்து கொண்டால் இறைவனின் திருவடியை நீங்கள் அடையலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.