பாடல் #1691

பாடல் #1691: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

பதைத் தொழிந்தேன் பரமாவுன்னை நாடி
யதைத் தெழுந்தேற் றினியாரோடுங் கூடேன்
சிதைத் தடியேன் வினை சிந்தனைதீர
வுதைத் துடையா யுகந்தாண்டரு ளாயே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பதைத தொழிநதென பரமாவுனனை நாடி
யதைத தெழுநதெற றினியாரொடுங கூடென
சிதைத தடியென வினை சிநதனைதீர
வுதைத துடையா யுகநதாணடரு ளாயெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பதைத்து ஒழிந்தேன் பரமா உன்னை நாடி
அதைத்து எழுந்து ஏற்றி இனி யாரோடும் கூடேன்
சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர
உதைத்து உடையாய் உகந்து ஆண்டு அருளாயே.

பதப்பொருள்:

பதைத்து (உன்னை எப்போது அடைவேன் என்ற துடிதுடிப்பில்) ஒழிந்தேன் (உன்னை அடைவதற்கு தடையாக இருக்கின்ற ஆசைகளை ஒழித்தேன்) பரமா (பரம்பொருளே) உன்னை (உன்னை) நாடி (தேடி)
அதைத்து (அலைந்து திரிந்து) எழுந்து (நீ எழுந்தருளிய இடத்திற்கெல்லாம் சென்று) ஏற்றி (உன்னை போற்றி வணங்கி அடைந்தேன்) இனி (இனி) யாரோடும் (வேறு யாரோடும்) கூடேன் (சேர மாட்டேன். உன்னிடம் மட்டுமே சேருவேன்)
சிதைத்து (நீ கருணை கொண்டு சிதைத்து) அடியேன் (அடியேனுடைய) வினை (நல் வினை தீ வினை ஆகிய இரு வினைகளையும் அழித்து) சிந்தனை (உன்னைத் தவிர வேறு எதிலும் எனது சிந்தனை போகாத படி) தீர (மற்ற அனைத்து சிந்தனைகளும் தீர்ந்து போகும் படி)
உதைத்து (உதைத்து) உடையாய் (அவற்றை உடைந்து போகும் படி செய்ய மாட்டாயா?) உகந்து (அடியேனை மனமுவந்து) ஆண்டு (உன் தொண்டனாக ஆட்கொண்டு) அருளாயே (அருள மாட்டாயா?).

விளக்கம்:

உன்னை எப்போது அடைவேன் என்ற துடிதுடிப்பில் உன்னை அடைவதற்கு தடையாக இருக்கின்ற ஆசைகளை ஒழித்தேன். பரம்பொருளே உன்னை தேடி அலைந்து திரிந்து நீ எழுந்தருளிய இடத்திற்கெல்லாம் சென்று உன்னை போற்றி வணங்கி அடைந்தேன். இனி வேறு யாரோடும் சேர மாட்டேன். உன்னிடம் மட்டுமே சேருவேன். நீ கருணை கொண்டு அடியேனுடைய நல் வினை தீ வினை ஆகிய இரு வினைகளையும் சிதைத்து அழித்து உன்னைத் தவிர வேறு எதிலும் எனது சிந்தனை போகாத படி மற்ற அனைத்து சிந்தனைகளும் தீர்ந்து போகும் படி உதைத்து அவற்றை உடைந்து போகும் படி செய்ய மாட்டாயா? அடியேனை மனமுவந்து உன் தொண்டனாக ஆட்கொண்டு அருள மாட்டாயா?

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.