பாடல் #1625

பாடல் #1625: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

எம்மா ருயிரு மிருநிலத் தோற்றமுஞ்
செம்மா தவத்தின் செயலின் பெருமையு
மம்மாய வனருள் பெற்றதவற் கல்லா
திம்மா தவத்தி னியல்பறி யாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எமமா ருயிரு மிருநிலத தொறறமுஞ
செமமா தவததின செயலின பெருமையு
மமமாய வனருள பெறறதவற கலலா
திமமா தவததி னியலபறி யாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எம் ஆருயிரும் இரு நில தோற்றமும்
செம் மா தவத்தின் செயலின் பெருமையும்
அம் மாயவன் அருள் பெற்ற தவற்கு அல்லாது
இம் மா தவத்தின் இயல்பு அறியாரே.

பதப்பொருள்:

எம் (எமது) ஆருயிரும் (உடல் உயிரோடு சேர்ந்து இருக்கின்ற ஆன்மா) இரு (மற்றும் யாம் இருக்கின்ற உலகம் ஆகிய இரண்டு) நில (இடத்தின்) தோற்றமும் (மூலத்தையும்)
செம் (செம்மையாகிய) மா (மாபெரும்) தவத்தின் (தவத்தினை) செயலின் (செய்கின்ற செயலின்) பெருமையும் (பெருமையையும்)
அம் (அந்த) மாயவன் (மாயவனாக இருக்கின்ற இறைவனின்) அருள் (திருவருளை) பெற்ற (பெற்று) தவற்கு (தவ நிலையில் இருப்பவர்களைத்) அல்லாது (தவிர)
இம் (இந்த) மா (மாபெரும்) தவத்தின் (தவத்தின்) இயல்பு (இயல்பை) அறியாரே (வேறு எவரும் அறிய மாட்டார்கள்).

விளக்கம்:

எமது உடல் உயிரோடு சேர்ந்து இருக்கின்ற ஆன்மா மற்றும் யாம் இருக்கின்ற உலகம் ஆகிய இரண்டு இடத்தின் மூலத்தையும் செம்மையாகிய மாபெரும் தவத்தினை செய்கின்ற செயலின் பெருமையையும் அந்த மாயவனாக இருக்கின்ற இறைவனின் திருவருளை பெற்று தவ நிலையில் இருப்பவர்களைத் தவிர இந்த மாபெரும் தவத்தின் இயல்பை வேறு எவரும் அறிய மாட்டார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.